Showing posts with label ஊர். Show all posts
Showing posts with label ஊர். Show all posts

Sunday, November 22, 2015

சென்னைப் பிழை!


 பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை விட
பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் ஆபத்து !!
அப்படியொன்றும் செய்துவிடமுடியாது என்று அறைந்துவிட்டுச் செல்கிறது இயற்கை!





சென்னை வெள்ளக்காடாகிவிட்டது என்று எல்லா இடங்களிலும் புலம்பி, அலம்பி , சலம்பித் தீர்த்துவருகிறோம். எவ்வளவுதான் மூட்டை மூட்டையாக எழுதினாலும் தண்ணீரை அடைக்கவோ, வடிக்கவோ அது போதுமானதாக இல்லை. அவ்வளவு எழுத்தும் மண்ணாக இருந்தால்கூட ஏதாவது சாத்தியப்பட்டிருக்கும்.

இந்த சூழலில், நமக்கு மொத்தமாக இருக்கும் ஆத்திரம், ஆதங்கம், வருத்தம், கோபம், ஆற்றாமை, எல்லாவற்றையும் திட்டி பதிவு போட்டோ, சென்னையை கேவலமாகக் கிண்டல் அடித்தோ வடித்துக்கொள்கிறோம்.

ஆனால், ஒரு நிதர்சனமான உண்மைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டுதான் இத்தனையும் செய்கிறோம் என்று புரிந்துகொள்ளவேண்டும்.

நாம் யாருமே சென்னையை நேசிக்கவில்லை.. சும்மா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் ஊரில், மழை பெய்தால் இப்படித்தான் வெள்ளமாகும். உடனே அப்பா ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லுவார், எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் வாய்க்காலை வெட்டிவிடுவார். எங்கள் வீட்டில் தண்ணீர் தங்காமல் காண்வாய்க்கால் வழியாக வழிந்து ஓடுகிறதா என்று பார்ப்பார். பிறகு பக்கத்துவிட்டு அண்ணனும் வெளியில் வந்திருப்பார். அவரும் அதையே செய்ய.. மொத்தத் தெருவின் தண்ணீரும் பெத்தாரி என்றழைக்கப்பட்ட பெத்த ஏரிக்குச் சென்றுவிடும். நாங்கள் அந்த வாய்க்கால் நீரில் கப்பல் விடுவோம். மிதந்துவரும் இலைகளை வேடிக்கை பார்ப்போம். அப்போதுகூட சிறுவர்களுக்கு ஒரு வேலை கொடுப்பார்கள். அதில் செத்தைகள் மெதந்துவந்தா எடுத்து வெளில போடுங்கடா... !!  சந்தோஷமாக அதைச் செய்வோம். ஊரில் வேறு எங்காவது தண்ணீர் தேங்குகிறது , உடைப்பு என்று தெரிந்தால்.. மொத்தக்கூட்டமும் ஓடும்.

தங்களால் முடிந்த ஏதாவது ஒன்றைச் செய்து உடைப்பை அடைத்துவிடும். 84ல் ஏற்பட்ட வெள்ளத்தில், நரியாற்றுப்பாலம் உடைந்தபோது.. மக்களே ஒரு ஏற்பாட்டை உருவாக்கினார்கள். கரைக்கு அந்தப்பக்கம் வரை எம்.ஜி.ஆர் வந்துசென்றது மசமசவென்று நினைவாடுகிறது.

எந்த தொழில்நுட்ப முன்னேற்றமும் இல்லாதபோது ஏதாவது ஒன்று செய்து கிராமத்தைக் காக்கவேண்டும் என்று அவர்கள் நினைத்ததற்குக் காரணம்... தான் வாழும் மண்ணை நேசித்தார்கள்.
 
ஊருக்குள் ஒருவர் வீட்டில் பிரச்னை என்றால் ஓடிப்போய் உதவினார்கள்.
ஒரு வீட்டில் தீப்பிடித்தது என்றால்... ஆளுக்கொரு வாளி நீருடன் ஓடினார்கள்.


இங்கு?

இதோ பாருங்கள்.. பாதாளச்சாக்கடை திறந்திருக்கிறது என்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்த நேரத்தில் இறங்கி மூட மனமில்லை!

சென்னைவாசிகள் என்றுதான் நம்மில் பலருக்கு உபபெயர்!  சென்னைக்காரர்கள் என்று இல்லை!! 
சந்தித்து மூன்றாவது நிமிடம்.. நமக்கு சொந்த ஊரு எது? என்று கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். ”எங்க ஊர்ல எல்லாம் இப்படி இல்லை” என்று பல முறை சொல்லி வருகிறோம். அப்படியானால், இந்த ஊர்?
 
இந்த மண்ணின் மீது மனதளவில் அந்நியப்பட்டு, இங்கிருக்கும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்தவேண்டும். ஆனால், அதற்கு எதுவும் நம்மால் ஆனதைச் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

சாதாரணமாக, ஒரு சாலை விபத்து நடந்தால்கூட ஓடிவந்து காப்பது சென்னைக்காரனாகத்தான் இருப்பான்.  சென்னைவாசியாக இருக்காது!

டிராஃபிக் ஜாம் ஆனால், வழி ஏற்படுத்திக் கொடுப்பது சென்னைக்காரனாகத்தான் இருப்பான். சென்னை வாசி.. ஹாரன் அடித்துக்கொண்டிருப்பான்.!

இந்த தண்ணீர் தேசமாகிவிட்ட நிலையில், அறைக்குள் அமர்ந்துகொண்டு, இந்தியாவின் வெனிஸ்... !! என்று வியாக்கியானமாக எழுதுபவன் சென்னைவாசியாகத்தான் இருப்பான்!
தெருவில் இறங்கி வேலை பார்த்துக்கொண்டிருப்பான் சென்னைக்காரன் !

சென்னையின் மொத்த மக்கள் தொகையில் 8% பேர்தான் சென்னைக்காரர்கள் !! 92% பேர் சென்னைவாசிகள்தான் !! வந்தேறிகளான நாம் வந்துதான் இந்த நகரம் இவ்வளவு வளர்ந்தது என்று பிரமாதமாக வாதிட்டாலும், இவ்வளவு மோசமானதும் நம்மால்தான் என்பதை கொஞ்சம் கண்ணாடி பார்த்து ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இது சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நேரம் !!  இங்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவலத்துக்கு நாமும் ஒரு காரணம்.. இல்லை. நாம்தான் முதல் காரணம் என்று  உணர்ந்துகொள்வோம்.

ஏரியாக இருந்தால் என்ன? அதெல்லாம் பில்டர் காசுகொடுத்து அப்ரூவல் வாங்கியிருப்பார். அதனால், எப்படியாவது வீடுவாங்கவேண்டும் என்றோ, என் வீட்டு முன்னால், தண்ணீர் தேங்காமல் இருக்க மொத்தமாக சிமெண்ட் போட்டு பூசுவேன் என்றோ, குப்பையை யாருக்கும் தெரியாமல், ரோட்டில் கொட்ட நினைக்காமல், இந்த அவலமான காலகட்டத்தை முழுமையாக மனதில் வைத்துச் செயல்படுவோம். 

நாம், இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால், அக்கறை அதிகமான மனிதர்கள் இந்த நகரத்தில் இருப்பதை, அரசும் புரிந்துகொண்டு, அதற்கேற்றார்ப்போல் செயல்படும்.

இங்கு புலம்புபவர்கள்தான் அதிகம்! ஆனால்,  புரிந்து செயல்படுபவர்கள்தான் தேவை!

இந்த நகரத்தை நம்பித்தான், நாம் வந்திருக்கிறோம். இந்த நகரத்தை பயன்படுத்தித்தான் சம்பாதிக்கிறோம். ஆனால், நாந்தான் வரி கட்டுறேனே?.. நகரத்தின் தேவைகளையெல்லாம் அரசுதான் செய்யவேண்டும் என்று பேசுவதற்கு முன்னால் , நாம் வாழும் பகுதியில் இதுபோன்ற இடர் நிகழாமல் இருக்க, என்ன முயற்சி எடுத்தோம் என்று கொஞ்சம் சிந்திக்கலாம். அப்புறம் அப்படிச் சிந்திப்பவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அரசைக் கேள்வி கேட்கலாம். அப்போது சரியான பதில் கிடைக்கும்.

சென்னை ஒரு அற்புதமான நகரம்..!! அதைச் சிதைத்துவிட்டு.. அதைக்குறை சொல்வது மிகவும் வலி ஏற்படுத்துகிறது.

வாழ்ந்துகெட்ட மாளிகைக்குள் வந்ததைப்போல் உறுத்துகிறது.

இனியாவது நம்மால் இப்படி ஒரு அநியாயம் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம்.

இந்த ஊரை நேசிப்போம்.  சென்னை வாசி என்பதிலிருந்து.. சென்னைக்காரனாக முடிவெடுப்போம்!


பின் குறிப்பு : இவ்வளவு எழுதுறியே ? நீ என்ன செஞ்ச ? என்று நினைப்பவர்களுக்காக ....

இதை உணர்ந்ததால், ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, எங்கள் பகுதி மாநகராட்சி உறுப்பினரைத் தொடர்பு கொண்டு, பிரச்னை உள்ள பகுதி மனிதர்களை ஒருங்கிணைத்து, தேவைப்பட்ட உதவிகளைச் செய்துகொண்டு, அவர்களுக்கு ஏதாவது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டு,  நான் வசிக்கும் கட்டிடத்திலும் முடிந்தவரை தண்ணீர் வெளியேற வழிசெய்துவிட்டுத்தான் எழுதுகிறேன்.
நன்றி !

Sunday, February 21, 2010

புதுக்கோட்டை

புதுக்கோட்டையைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால், வாழ்ந்து கெட்ட ஊர்! கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைப்பெயர்களுடன் சதுரமாக, ராஜ வீதிகள்! அதன் உள்ளே பழைய அரண்மனை மற்றும் கோவில்! ஒவ்வொரு ராஜவீதிப்பக்கமும், 4 தொடர் வீதிகள். ஒவ்வொரு வீதியும் ஒன்றையொன்று சந்திக்குமாறு அமைந்த தெருக்கள். அந்தக்காலத்திலேயே கழிவுநீர் வாய்க்கால் வசதி மிகச்சிறப்பாக மன்னராட்சி நடந்த பகுதி இப்போது நாடாளுமன்றத்தொகுதி அந்தஸ்து கூட இல்லாமல் தடுமாறுகிறது. இங்கே மீதி விபரங்கள்

மற்றபடி கலைகளில் ஆர்வமும், ஆச்சர்ய மனிதர்களும் நிறைந்த அற்புதமான ஊர்! வடிவமைத்து நிர்மாணிக்கப்பட்ட மிகச்சில இந்திய நகரங்களில்
இதுவும் ஒன்று!

இங்கு பார்ப்பதற்கும் பழகுவதற்கும் ஏராளமான அற்புத நபர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இந்த நகரத்தையும், மாவட்டமும் சார்ந்த நமது புதுகைத்தென்றல், அப்துல்லா, புதுகைச்சாரல், பாண்டியன், தெக்கிக்காட்டான், சுந்தரவடிவேல் போன்ற பதிவுலக நண்பர்களும் அடக்கம்!

நேர்மையைப் பிரதிபலிக்கும் நாமக்கல் கலெக்டர் திரு.சகாயம் அவர்கள் ,மகசேசே விருது வாங்கியிருக்கும் அடையாறு கேன்ஸர் இன்ஸ்ட்டிட்யூட்டின் டாக்டர் சாந்தா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்துக்காரர்கள்.

பி.யு.சின்னப்பா, ஜெமினி, ஏவிஎம் ராஜன், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி என இன்னும் புதுக்கோட்டையின் பிரபலமானவர்களைப்பற்றி இணையம் நிறையச்சொல்லும்.

நட்சத்திரவாரத்தை மனதில் கொண்டு நான் எடுத்த புகைப்படங்கள் சில..
புதுகையின் பெருமைக்காக!





மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்



பேருந்து நிலையம்!. எம் ஜி ஆர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்று!



கீழ ராஜ வீதி.


புதிய அரண்மனை. இங்குதான் இப்போது அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கலெக்டர் அலுவலகம் இதற்குப்பின்னால்....


புதிய அரண்மனையின் மேலிருந்து...



நகராட்சிக்கட்டிடம்.

யான்பு அல் சினைய்யா

ஊர்களும் மனிதர்களும் என்னைச்செதுக்கியவர்களென்றால்...அது மிகையில்லை. கடல்கடந்த ஒரு தேசத்தில், அதன் கலாச்சாரம், மொழி, உணவுவகைகள் என்று எதுவுமே தெரியாமல் நான் போய் இறங்கிய ஊர்தான் யான்பு அல் சினைய்யா. சௌதி அரேபியாவின் மிகச்சிறந்த கடற்கரை நகரங்களில் இதுவும் ஒன்று.!

சௌதி அரேபியாவின் பல கடற்கரை நகரங்கள் அரபிக்கடலில் அமைந்திருந்தாலும்..யான்பு என்ற அந்த நகரம் செங்கடல் ஓரத்தில் அமைந்திருக்கிறது. அதாவது தேசத்தின் மேற்கு எல்லையில்..! ஊருக்குக்கிளம்பும் முன்னால், சௌதியைப்பற்றி பல்வேறு வதந்திகளை சுற்றியுள்ளவர்கள் கிளப்பியிருந்தாலும், ஊர்களும், மனிதர்களும் தரும் போதையில் நான் ஆட்பட்டிருந்ததால், அவர்கள் சொல்லியவற்றை காதில் வாங்காமல், மனதை வெள்ளைக்காகிதமாய் வைத்துக்கொண்டு , எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் சென்று இறங்கினேன்.

அதற்கு பங்கம் வைக்காமல், ஒரு அழகான, சக மனிதர்களை மதிக்கும், உழைப்பை நம்புபவர்களுக்கு உயர்வளிக்கும், கட்டுப்பாடான வாழ்க்கையை வலியுறுத்தும், ஒழுங்கைக் கடைபிடிக்கும்,கடவுளை நம்பும் ஒரு அற்புத தேசம் என்னை வரவேற்றது.

சௌதி அரேபிய மன்னராட்சி, இரண்டு நகரங்களை தொழில் வளர்ச்சிக்கென்றே நிறுவியிருக்கிறது. அவை ஜுபைல் மற்றும் யான்பு..அப்படி 1970களின் இறுதியில் நிர்மானிக்கப்பட்ட யான்புவில்தான் நான் குடியேறினேன். யான்பு அல் பஹார் என்பது நகரத்தின் பெயர். அதாவது கடற்கரையிலுள்ள யான்பு அல்லது துறைமுக யான்பு! அங்கிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் மதினா செல்லும் சாலையில் கட்டமைக்கப்பட்ட நகரத்தின் பெயர்தான் யான்பு அல் சினைய்யா! அதாவது தொழிற்பூங்கா யான்பு!

சாலைகளும், கட்டிடங்களும் எனக்கு பிரமிப்பூட்டின. இப்படி ஒழுங்காக இருக்கமுடியுமா என்று ஏங்க வைத்தன. யான்புவிலிருந்து கிளம்பும் சாலையில் மனித நடமாட்டமே இல்லாத பகுதிகளிலும், சாலை முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது. யான்பு அல்சினைய்யா. இரண்டு பெரிய பகுதிகளை உள்ளடக்கியது. Yanbu Light Industries Park, Yanbu Industrial College. LIP யில்தான் அனைத்து தொழிற்சாலைகளும், இதில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமும், கடல்நீரைக்குடிநீராக்கும் நிறுவனமும் அமெரிக்க நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை இங்குதான் உள்ளது. மணல் மாபியா என்று தூத்துக்குடி பக்கம் டாட்டாவுக்கும், இன்னொரு .....ராஜன் (பெயர் நினைவில்லை) என்பவருக்கும் முட்டிக்கொண்டு பிரச்னையானதே , அந்த டைட்டானியம் டை ஆக்ஸைடுதான்!

மக்களில் பாதிக்குப்பாதி வெளிநாட்டவர்கள். ! இந்தியா,இலங்கை , வங்கதேசம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மக்கள்தான் அதிகம். அதிலும் பெரும்பான்மையானவர்கள் தன் குடும்பத்தை விட்டுவிட்டு தனியாளாக வந்து வேலைபார்க்கும் ஆண்கள்தான்.! சொற்ப அளவிலான பெண்கள் தாதிகளாகவும், வீட்டு வேலைக்கும் வந்திறங்கியிருப்பார்கள்.

அவர்கள் தேசத்திலும், ஆண்டாண்டு காலம் வாழ்ந்தவர்களை ஒதுக்கிவிட்டு, வந்தேறிகள் ஆட்சிசெய்யும் ஒரு அவல நிலை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது பெரிய அளவில் வெளிவரவில்லை. காரணம், மன்னராட்சி..சுமுகமாக, மக்களுக்கு எல்லாம் கிடைக்கும் வண்ணம் நடந்துகொண்டிருப்பது.!ஆதி அரேபியர்களை பதூ.. என்று அழைப்பார்கள். அவர்கள் பெரும்பான்மையாக விவசாயம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒட்டகம் வளர்த்துக்கொண்டிருப்பார்கள்.

மக்களைப்பொறுத்தவரை, வெளிநாட்டவரைப் புகழ்வதும் இல்லை . இகழ்வதும் இல்லை. சமமாகத்தான் பாவிக்கிறார்கள். நம் ஆட்கள் செய்யும் சேட்டைதான் அவர்களை கோபப்பட வைத்துவிடுகிறது.

மக்கள் அனைவரும், சட்டதிட்டத்துக்கு கட்டுப்பட்டுவிடுவார்கள். ஆளில்லா சாலையில் கூட சிக்னலை மீறும் சௌதிக்கள் மிகக்குறைவு. எல்லா விஷயங்களிலும் ஒரு ஒழுங்கை இங்குதான் நான் கற்றுக்கொண்டேன். வேலை செய்யும் நேரம் காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிக்கு முடிந்ததும் இங்குதான்.

பெரிய அதிகாரிகளை நேரடியாகப் பெயர்சொல்லி அழைக்கலாம். தவறில்லை என்று கற்றுக்கொண்டதும் இங்குதான். (நமக்குத்தான் சார்..சார்.. என்றே கூப்பிட்டுப்பழகிவிடுகிறது)
அதிவேகமாகக் கார் ஓட்டி முன்னூறு கிலோமீட்டர் தூரத்தை இரண்டு மணிநேரத்தில் கடந்ததும் இங்குதான்!
யான்புவில்தான் நான், பில்லியர்ட்ஸ் ஆடக்கற்றுக்கொண்டேன். செஸ்ஸில் பல உயரங்களை எட்டினேன். பிலிப்பினோ மாஸ்டர் திரு. மெலிட்டன் டெலா க்ரூஸிடம் கராத்தே கற்றுக்கொண்டேன்.

நிறைய வாசித்தேன். அதைவிட நிறைய நிறைய படம் பார்த்தேன். நிறைய நண்பர்களைப்பெற்றேன். மலையாளம், உருது, அரேபிய மொழிகளும், வங்காள , பிலிப்பினோ மொழிகளில் கொஞ்சமும் கற்றுக்கொண்டேன்.

விடுமுறையில், கெய்ரோ, அலெக்ஸாண்ட்ரியா என்று எகிப்திய நகரங்களைச் சுற்றிவந்தேன். கெய்ரோ விமான நிலையத்தில் நடந்த நிகழ்வு ஒன்று....இன்று நான் தொடர்ந்து குருதிக்கொடை கொடுப்பதற்கு அடிப்படைக்காரணமாக அமைந்தது.(அது இன்னொரு சமயம்..)

என் வாழ்வின் 3 ஆண்டுகளைக் கழித்த இந்த நகரம், என் வாழ்வின் 10 ஆண்டுகளுக்கான அனுபவத்தை அள்ளித்தந்தது.

பொதுவாக சௌதிக்கள் ஆழ்ந்து சிந்திப்பதில்லை என்று ஒரு எண்ணமுண்டு. சில நேரங்களில் அது உண்மையென்பதை நானே கண்டிருக்கிறேன். அப்படி ஒருமுறை முட்டாள்தனம் செய்த ஒரு சௌதி நண்பனிடம் பேசிக்கொண்டே காரில் சென்று கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நான் கேட்டேன்.

ஏண்டா..நீங்க கொஞ்சம் மந்தமாவே இருக்கீங்க? சில சமயங்களில் அடி முட்டாளா இருக்கீங்க?

அதற்கு அவன் சொன்னான்.

நாங்க முட்டாளா இல்லைன்னா, உங்களை இங்க வந்து வேலை பாக்க வர விட்டிருப்போமா? உங்க பொழைப்பு நாறியிருக்கும்...!

வாஸ்தவமான பேச்சு! :)





அறந்தாங்கி

என் பட்டியலில் உள்ள ஊர்களைப்பற்றி நட்சத்திர வாரம் தாண்டியும் எழுதலாம் போலிருக்கிறது. :)

என் வாழ்வில் கல்லூரி ஆண்டுகளைக்கழித்த ஊர். அறந்தாங்கி! புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் செல்லும் வழியில் இருக்கும் ஒரு தாலுக்கா தலைமையகம்! (இந்த ஊர் மட்டும் நான் போகும்போதே தாலுக்கா) சிறிதாகத்தெரியும் பெரிய ஊர்!

காரைக்குடியிலிருந்து ஒரு சாலையும், புதுக்கோட்டையிலிருந்து மற்றொன்றும் வந்து செக்போஸ்டில் சந்தித்து வி.எஸ் தியேட்டர் , எம் ஜி ஆர் சிலை வழியாக ஊருக்குள் போகும்.
அடுத்த சாலை ஆவுடையார்கோவிலிலிருந்து வந்து கோட்டை வழியாக எம் ஜி ஆர் சிலை வரும். அது இரண்டும் சேர்ந்து கட்டுமாவடியிலிருந்து வரும் சாலையோடு சேர்ந்துகொண்டு ஊருக்குள் பஸ்ஸ்டாண்ட் நோக்கி பயணிக்கும். மற்றபடி எதிர்த்திசையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சாலைகளும் பேருந்து நிலையத்தில் முட்டும்.

நான் இருந்தது கோட்டைப்பகுதி! அந்தக்கோட்டையின் ஒரு பகுதியில் உயரத்தில் ஒரே ஒரு சிற்பம் இருக்கும். அதுவும் படு அடல்ட்ஸ் ஒன்லி ஐட்டம்! வெளியூரிலிருந்து நம்மைப்பார்க்க வரும் நண்பர்களிடத்தில் அதைக்காட்டி டெம்ப்ட் ஆக்குவதில் அலாதி மகிழ்ச்சி!

வாணி தியேட்டர் - காலைக்காட்சிகளும், டிவி டெக்கெடுத்துப்பார்த்த படங்களும், நண்பர்களின் காதல்களும், பல்வேறு மோதல்களும் என சூப்பராகப்போன வாழ்க்கை அது! வாழ்க்கை பற்றிய பயத்துடன் படித்ததால், ஆழமாக ஆட்டம் போட முடியவில்லை. ஆனாலும் எங்கள் ரூமில் இரண்டு பேருக்கு வாடகை கொடுத்துவிட்டு தினமும் பத்து பேர் நெருக்கியடித்துத்தூங்கிய சுகம்...ஆஹா..!

பாண்டியன், முருகேஷ்குமார், அப்துல்லா, கருணாநிதி, பார்த்திபன், எழிலரசு, ரெங்கராஜன்,பேரின்பநாதன்...என ஒரு ஜமா! இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியலை! எழிலரசு மட்டும் இன்னும் தொடர்பில் இருக்கிறான்.

எங்களுக்கு ஒரு சீனியர் இருந்தார். அமைதியாக இருப்பார். தஞ்சாவூர்க்காரர் என்பார்கள். கவிதைகளெல்லாம் எழுதுவார். ராகிங் பண்ணமாட்டார். ஜூனியர்களைப்பார்த்து சினேகமாகச்சிரிப்பார்.
பல ஆண்டுகளுக்குப்பிறகு அவரை ஊடகத்திலும், அவர் கவிதைகளைப்பாடலாகவும் பார்த்தேன். அவர்....கவிஞர் யுகபாரதி!

Monday, February 15, 2010

கலியாப்பட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக்கு அருகில் கிள்ளுக்கோட்டை எனும் ஊருக்குச் செல்லும் சாலையின் உள்ளே 2 கிலோமீட்டரில் உள்ள மிக மிகச் சிறிய கிராமம்.

கலியாப்பட்டி ஒரு ஒற்றைச்சாலை கிராமம். மெயின் ரோட்டிலிருந்து வரும் கிளைச்சாலை நேரே சென்று ஊர்க்கோடியில் உள்ள நல்லாண்டவர் கோயிலில் போய் முடியும். அந்தச்சாலையின் இருபக்கமும் வீடுகள் கொண்டதுதான் ஊர்! இடையில் சிறு சிறு தெருக்கள். ஊர்ப்பெரியவர், வண்டியோட்டிகள் ,பூசாரி, பயமுறுத்திக் கிழவி என பரந்த மனம் கொண்ட மனிதர்களால் நிறைந்த கிராமம்..!

என் அப்பா ஒரு கிராம நல அலுவலர்! அவருக்கு வாடகைக்குத் தருவதற்கு அங்கு வீடு இல்லை. ஆகவே ஊர்ப்பெரியவர் தன் களத்துமேட்டில் சிறிது இடம் கொடுக்க.. அப்பாவே செங்கலும் செம்மண்ணும் வாங்கிக்கொடுக்க..மாரியய்யா என்ற அந்த அன்பு அண்ணன் விறுவிறுவென்று கட்டிய அந்தக் கூரைக் கோட்டைதான் எங்கள் வீடு! வீட்டில் ஒரே ஒரு பெரிய அறை! ( 10க்கு 15 இருக்கலாம்) வாசலில் கல்லுக்கால் ஊன்றி அதே அளவு வராண்டா...! வாசல் தரைக்கு செம்மண்ணும் , சாணிக்கரைசலும்தான் flooring..! உள்ளே கொஞ்சம் தரமாக சிமெண்ட் தரை! வாசலில் களத்துமேட்டுக்கு வரும் மாடுகள் குடிக்க ஒரு கழுநீர்த்தொட்டி..! கருவை மரங்களும், கம்மாக்கரையும் நிறைந்த ஊரில்..ரசிக்கிறோம் என்றே தெரியாமல் இயற்கையை ரசித்த வயது அது! ..

ஊருக்குள் பாம்புகள் சர்வசாதாரணம்.! எங்கள் வீட்டு வெங்காயக்கூடையில் அழகாகச்சுருட்டிக்கொண்டு படுத்திருந்த நல்ல பாம்பு ! என் தங்கையின் தூளியின் கயிற்றில் இறங்க எத்தனித்து , தூளி ஆட்டிக்கொண்டிருந்த லச்சுமி அக்கா மேல் விழுந்த ஓலைப்பாம்பு என.. இன்றும் பாம்புகள் மேல் பெரிய வெறுப்பு ஏற்படா வண்ணம் சகஜமாகப்பழகின. :)

நாங்கள் சரியாகச்சாப்பிடவில்லையென்றால், அம்மாவால் பயமுறுத்தப்பயன்படும் பயமுறுத்திக்கிழவியை இன்று நினைத்தாலும் டர்ராகும். ஆனால் அவள் மகள் ஏதோவொரு காரணத்தால் அரளி குடித்து இறந்தபோது..அவள் கதறியதைப்பார்த்த பின்தான் அவளும் மனுஷிதானோ என்று எண்ணத்தோன்றியது.

அங்கு பல வீட்டில் நல்லைய்யா என்ற பெயர் சகஜம். ஏனெனில் நல்லாண்டவர்தான் காவல்தெய்வம். அந்தக்கோவில் திருவிழாவில் கொடுக்கப்படும் பாதாம் இலையில் வைத்துத்தரும் சர்க்கரைப்பொங்கல் வாசனை இன்னும் போகவில்லை.

எனக்கு அங்கு ஒரு நண்பன் இருந்தான். ஊர்ப்பெரியவர் மகன்! ஆனால் படுபாவி.! அவனுக்கு என் அப்பா பெயர்! அதனால் சத்தம்போட்டுக்கூப்பிடவோ, திட்டவோ முடியாது. அது எனக்குமட்டும் தர்மசங்கடம் இல்லை. அந்த ஊர்க்காரர்களுக்கும்தான்..! ஆக..அவனுக்கு ஊரே சேர்ந்து 'தம்பி ' என்று பெயர் வைத்தது. அவனோடுதான் சுற்றுவேன். அப்போதே புரிந்தும் புரியாமலும் பல தகிடுதித்தங்களை பழகிக்கொடுத்த குரு அவன்!

அருகிலிருக்கும் மலையடிப்பட்டியில் ஒரு தொடக்கப்பள்ளி. அதில் அட்டெண்டென்ஸில் பெயரே சேர்க்காமல் நான்கு வயதில் கொண்டுபோய் விட்டுவிட்டார்கள். (அந்த அளவுக்கு வீட்டில் ரவுசு !)

பள்ளிக்கு எப்போதும் நடந்து செல்லவேண்டும். இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். மெயின்ரோட்டுக்கு வந்துவிட்டால், தொற்றிக்கொள்ள மாட்டுவண்டி கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.! அப்பா வாங்கிக்கொடுத்த இண்டாலியம் பெட்டியில் 'டப டப' என தட்டிக்கொண்டே மாட்டுவண்டிக்காரரிடம் ஏதாவது பேசிச்செல்வதும், அதன் பின்பக்கம் நீட்டிக்கொண்டிருக்கும் குறுக்குக்கட்டையில் தொங்கிக்கொண்டே அதனுடன் நகர்வதும் ஆஹா...அனுபவிக்கணும் பாஸ்!

அது ஒற்றை ஆசிரியர் கொண்ட பள்ளி..முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை அவர்தான் கிளாஸ் எடுப்பார். அவர் எடுக்கும் வகுப்பையே எல்லோரும் பார்த்துக்கொண்டிருப்போம். வெகு நாட்களில் அவர் வந்து, வேட்டியின் நுனியை முறுக்கி..மூக்கில் விட்டு ' ஹச் ' எனத்தும்மிவிட்டு... ஒரு குச்சியை விட்டு காது குடைந்து கொண்டே தூங்குவார். அல்லது கையில் வைத்திருக்கும் பாக்கெட் ரேடியோவில் ஏதோ ஒன்று கேட்டுக்கொண்டிருப்பார். இப்படியாகப் போய்க்கொண்டிருந்த அவரது இன்பமயமான வாழ்க்கையில் நான் இழுத்துவிட்ட சிக்கல் ஒன்று....

(தொடரும் போடாம சுரேகா பதிவான்னு கேக்குறாங்கப்பா!

..அதனால்..தொடரும்.!)

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...