Showing posts with label வேலைத் தகுதி. Show all posts
Showing posts with label வேலைத் தகுதி. Show all posts

Monday, April 14, 2014

திறமை இடைவெளி





இந்தியாவின் அடுத்த அரசு செய்யவேண்டியது , போர்க்கால அடிப்படைச் செயல்பாடுகள் பற்றி ‘நீயா நானா’வில் விவாதிக்கப்பட்டது.

நான் நீண்ட நாட்களாக, பல்வேறு இடங்களில் சொல்லிவருவதை இருவேறு கோணங்களில் Badri Seshadri அவர்களும், அழகேசன் அவர்களும் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.

ஆம்..

இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய தேவை...

இந்திய இளைஞர்களின் வேலைத்திறன் மேம்பாட்டை அதிகப்படுத்துவதுதான்.

படித்தால் போதும்... எல்லா நிறுவனமும் எனக்கு வேலை தந்துவிட வேண்டும் என்ற நினைப்பிலிருந்து துவங்குகிறது இந்த Skill gap..

வேலை கிடைத்தால் போதும். பிறகு சிரமப்பட வேண்டியதில்லை ...எதுவும் கற்றுக்கொள்ளவேண்டியதில்லை என்ற நினைப்பில் நிலை கொள்கிறது இந்த Skill gap.

இரண்டு ஆண்டு ஓட்டினால் போதும். பிறகு அடுத்துவருபவர்களை அடிமைப்படுத்தியே ஓட்டிவிடலாம். நிறுவனத்தைக் குற்றம் சொல்லி சாதித்துவிடலாம் என்ற நினைப்பில் வேர் பிடிக்கிறது இந்த Skill gap.

கிடைத்த வேலையில் , ஓட்டிக்கொண்டே ,வேறு நிறுவனத்துக்கு வலைவீசலாம். இருக்கும் நிறுவனத்தில் என்னை, யாராவது ஏதாவது சொன்னால், தாங்கிக்கொள்ளவே முடியாது என்பதில் துளிர்விட்டு வளர்கிறது இந்த Skill gap.

எவ்வளவுதான் சம்பளம் கிடைத்தாலும், அதற்காக நான் எவ்வளவு உழைத்தேன் என்று நினைக்காமல், CONTRIBUTION என்ற வார்த்தையை ஏதோ நன்கொடையாக, நிறுவனங்களுக்கு - அரசு நிறுவனங்களும் சேர்த்துத்தான் - செய்வதாக நினைக்கும் நினைப்பில் பிரம்மாண்டமாகிறது இந்த SKILL GAP.

உண்மையில் நியாயமாக , திறமையாக வேலை பார்க்கும் 2 பேரின் தலையில் 18 பேர் சவாரி செய்துகொண்டு, கற்றுக்கொள்ளும் கதவை மூடிவிட்டு, குறைகளும், காரணங்களும் சொல்ல வாயை மட்டும் அகலமாக திறந்துவைப்பதில் அடுத்த விதையை உற்பத்தி செய்வதில் பெருகுகிறது இந்த skill gap.

இதற்கு சமீபத்திய முன் தலைமுறைக்குக் கிடைத்த 

போய் காய்கறி வாங்கிட்டு வா, 

ரேஷன் கடையில் வரிசையில் நில்லு..
 
இ.பி பில் கட்டிட்டு வா... 

உன் துணியை நீயே துவை!

பெரியப்பா வீட்டுக்குபோய் பத்திரிகை வச்சுட்டு வா, 

எங்களால முடியாது. நீ போய் காதுகுத்து அட்டெண்ட் பண்ணிட்டு மொய் வச்சுட்டு வா! ,

பாத்த சினிமாவின் கதையைச் சொல்லு!

மொளகா மல்லி அரச்சுட்டு வா!

லைப்ரரியில் போய் புக் மாத்திட்டு வா!

பால் கறந்து வை!

இன்னிக்கு தலைப்புச்செய்தி என்ன? பேப்பரில் என்ன படிச்ச?

கோதுமையைக் காய வை!

திருவிழாவுக்கு வா! கிராமத்துக்குப் போகலாம்.

லெட்டரை ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் பண்ணு!

அடி பைப்பில் தண்ணி பிடி!

விடுகதைக்கு பதில் சொல்லு!

ராத்திரி 8 மணிக்கு வந்துரு ...சேந்து சாப்பிடலாம்.

ரோட்டில் ஒழுங்கா, சிக்னலை மதிச்சு நடந்துக்க..

நீயே டிடி எடுத்து, அப்ளை பண்ணு.. அப்பா கையெழுத்து மட்டும் போடுறேன்.

போன்ற (SOCIAL EXPOSURE )சமூக வெளிப்பாடும் ....



சைக்கிள் பயணம்

பேருந்து கசகசப்பு

வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும்

ஒரு கேசட், 16 பாட்டு

கபடி , 

பல்லாங்குழி,
 
தாயக்கட்டை, 

செஸ்,

ஐஸ் பாய்

மேலும் பலப்பல

வாழ்வியல் சாதாரணங்கள் கிடைக்காமல் பார்த்துக்கொண்டதுதான் நம்மை அறியாமல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் அடைந்த மிச்சம்.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை..

இன்றைய பள்ளி இறுதி மாணவர்களிலிருந்து வேலைக்குச் சேரும் இளைஞர்கள் வரை இவற்றைச் சொல்லிக்கொடுத்தால் போதும். வேலைத்தகுதிக்குத் தேவையான,

Communication
Leadership
Team Skills
Creativity
Decision Making
Problem Solving
Time Management
Entrepreneurial Mind

ஆகியவை வந்துவிடும்..அப்புறம் கலக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஏனெனில் இந்திய மூளை என்றுமே மிகவும் ஆச்சர்யங்களும், ஆற்றலும் நிறைந்தது.

# வாங்க பாஸ் !! நம்ம சொல்லிக்குடுப்போம், நம்ம புள்ளைங்களுக்கு!

அடுத்து ஒன்று இருக்கிறது... விவசாயம்... அதை இன்னொரு நாள் பேசலாம். 

Wednesday, December 19, 2012

வேலைத்தகுதி வேட்டை



       வேலையில்லாத் திண்டாட்டம் என்பது ஒரு காலகட்டத்தில் நம்மை அச்சுறுத்தியது. இப்போது வேலைக்கு ஆளில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. அதாவது, வேலைக்குத் தகுதியான ஆட்கள் இல்லாமல், நிறுவனங்களும் , சிறு முதலாளிகளும் தவிக்கிறார்கள்.

      ஒரு பெரிய கணிப்பொறி நிறுவன மேலதிகாரியும், ஒரு அச்சக உரிமையாளரும் ஒரே மாதிரிதான் புலம்புகிறார்கள்.

     “இந்தக்காலத்துப் பசங்களுக்கு, வேலை பாக்கணும்கிற எண்ணமே இல்லை சார்.! அதுவும் நேர்மை, நாணயம், உழைப்புல எல்லாம் நம்பிக்கையே இல்லை. பொறுப்பே இல்லாம ஏதாவது வேலை கிடைக்குமான்னு பாக்குறாங்க! பொறுப்புகளை எப்படி தட்டிக்கழிக்கிறதுன்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க..! நாங்கள்லாம் எங்க மேலதிகாரிக்கும், முதலாளிக்கும் பயந்தோம். இப்போ நாங்கதான் எங்க ஊழியர்களுக்கு பயப்படுறோம்..!

     எங்கே தவறு நிகழ்ந்தது என்று ஆராய இப்போது நேரமே இல்லை. நடந்த தவறை உணரும் தருணத்தில் இருக்கிறோம். ஏனெனில் இன்றைய உயர்கல்வி மாணவர்களுக்கு அத்தகைய வேலைத்தகுதி மிகவும் குறைவாக இருக்கிறது என்பதையே அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

     ஆனால், உண்மை அப்பட்டமாக வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகளில் 17 சதவீதத்தினர் மட்டுமே வேலைக்குத் தகுதியானவர்கள். மற்ற பட்டதாரிகளில் 23 சதவீதத்தினர் மட்டும் தகுதியானவர்கள். இதுதான் நிலைமை. ஆனாலும் , தகுதியற்ற 70-80 சதவீதத்தினரை வைத்துத்தான் நிறுவனங்கள் ஓட்டிக்கொண்டிருக்கின்றன.

    இந்த அடிப்படையில், சமீபத்தில் ஒரு பொறியியல் கல்லூரியில் வேலைத்தகுதி ஆய்வு ஒன்று நடத்தினோம்.. இளைஞர்களின் கவனிக்கும் திறன், தகவல் தொடர்பு, குழு மேலாண்மை, நேர நிர்வாகம், சூழல் அறிவு , கற்பனைத்திறன் ஆகியவற்றில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று சோதித்ததில்..மிகவும் அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இதில் அவர்களது கல்வி அறிவை சோதிக்கவே இல்லை என்பது தனி !

     மொத்தம் 230 மாணவர்கள் பங்கேற்ற ஆய்வில் , நிறுவனங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தகுதியுள்ள மாணவர்கள் 12 பேர்தான்…!! இதுதான் இந்தியா முழுமைக்குமான நிலை…

அவர்களது கவனிக்கும் திறன் மிகவும் குறைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதில் ஒரு கேள்வி :

ரமேஷின் அப்பாவுக்கு மூன்று மகன்கள். அவருக்கு கார்கள் என்றால் மிகவும் பிரியம். ஆகவே முதல் மகனுக்கு மாருதி என்றும் இரண்டாவது மகனுக்கு ஃபியட் என்றும் பெயர் வைத்தார். மூன்றாவது மகனுக்கு என்ன பெயர் வைத்திருப்பார்..?

96% மாணவர்கள் ஏதாவது ஒரு கார் கம்பெனியின் பெயரைத்தான் எழுதியிருந்தார்கள்.

4% பேர் மட்டும்தான்.. ரமேஷ் என்ற சரியான பதிலை எழுதியிருந்தார்கள். பொதுவாக, இப்படித்தான் எல்லாக் கேள்விகளுக்கான பதில்களும் இருந்தன.

புத்திசாலித்தனத்தை விட , பொறியியல் கல்வியின் மதிப்பெண்கள் மேல்தான் அவர்களது கவனம் அதிகமாகியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பாடத்தில் திறமையை நிரூபிக்க, அந்தப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஒரு ஏரோநாட்டிக்கல் மாணவனிடம் கைரோஸ்கோப் என்றால் என்ன ? அது எப்படி வேலை செய்கிறது என்று கேட்டேன். மூன்றாம் வகுப்பு மாணவனிடம், மோர்ஸ் விதி கேட்டதுபோல் விழிக்கிறான்.

     அவர்களுக்கான களம் தவறாக இருக்கிறது அல்லது சமூகச் சூழல் அவர்களைக் கற்றலிலிருந்து தள்ளி வைக்கிறது. நட்பு, ஊடகம் என்று பல்வேறு பாதிப்புகளும் சாதகமாக இல்லை. எது எப்படியோ, அவர்களை வேலைக்குத் தகுதியில்லாதவர்களாக நாமும் மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

     இது  ஒரு சோறுதான்..!! மொத்த இந்தியாவின் நிலையும் இதுதான் என்பது அடுத்த ஆபத்து.. ! ஏனெனில், இந்தியாவில் 2020ம் ஆண்டு, 20 கோடி வேலை வாய்ப்புகள் இருக்கப்போகிறது. அப்போது இதேபோல் இளைஞர்கள் இருந்தால், நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து வேலையாட்களைக் கொண்டுவரப்போவது நிச்சயம்.

     இப்போதே ஒரு கட்டிட நிறுவனம், பிலிப்பைன்ஸிலிருந்து  300 தொழிலாளர்கள், பொறியாளர்களை இறக்குமதி செய்திருக்கிறது.


முன்னால்..

வேலை இல்லாதவந்தான் வேலை தெரிஞ்சவந்தான் வீரமான வேலைக்காரன்..

ஆனால் இப்போது

வேலை உள்ளவந்தான், வேலை தெரியாதவந்தான் விவகாரமான வேலைக்காரன்.!
    
     கல்லூரிகளும், பெற்றோரும் விழித்துக்கொள்ளவேண்டிய நேரம் இது..!!


இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...