Showing posts with label BOOK FAIR. Show all posts
Showing posts with label BOOK FAIR. Show all posts

Monday, January 21, 2013

புத்தகக் காட்சி - தரிசனங்கள்



பொங்கலுக்கு புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டதால், புத்தகக் காட்சியின் முதல் நாளிலிருந்து செல்ல முடியவில்லை. ஒய் எம் சி ஏ வில் நுழையும்போதே, பார்க்கிங்குக்கும், கண்காட்சிக்கும் இருக்கும் தூரம் கொஞ்சம் அதிகம்தான் என்று தெரிந்தது. எப்பொழுதும்போல், தனியாக ஒரு முறை சுற்றிவர ஆரம்பித்தேன்.

இந்த முறை குழந்தைகளுக்கான புத்தகங்களும், கற்பிக்கும் கருவிகளும் அதிகம் பங்கெடுத்திருக்கிறது. உலகப் புகழ்பெற்ற GROLIER நிறுவனம் குழந்தைகளின் அறிவூக்கம் செய்யும் பேக்கேஜைப் பற்றி பொறுமையாக விளக்குகிறார்கள். உண்மையிலேயே பயனுள்ள கல்விப் பொருட்கள்தான். ஆனால் விலை மிகமிக அதிகம். 9 வயதுச் சிறுவனுக்கான கற்றல் கருவிகள் அடங்கிய  செட் 36000 ரூபாய் சொல்கிறார்கள். எங்க ஊர்ல ஒரு வருஷ ஸ்கூல் ஃபீஸே அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு வந்தேன். (சதி லீலாவதியில், கோவை சரளா ஹேண்ட் பேக் வாங்கும் காட்சி நினைவுக்கு வந்தது. ஏனுங்…இந்த பேக்கு  மாட்டுத்தோல்லதானே பண்ணது.. ஆமா!   எம்புட்டு? ஜஸ்ட் ..4000 .. ….எங்கூர்ல மாடே அவ்வளவுதாங்க!)

  சில பதிப்பகங்களின் இடங்களையும், வாங்கவேண்டிய புத்தகங்களையும் குறிப்பெடுத்துக்கொண்டபின், மதி நிலையத்தின் ஸ்டால் எண்: 34க்கு வந்து, ‘தலைவா வா!’ புத்தகத்தின் வரவேற்பைப் பற்றித் தெரிந்து கொண்டேன். ‘இப்பதான் சார் ஒருத்தர் நண்பர்களுக்கு பரிசளிக்கணும்னு 4 புக் வாங்கிட்டுப்போறார்’ என்று விற்பனையாளர் சந்தோஷமாகச் சொன்னது, கொஞ்சம் புளகாங்கிதமாக இருந்தது. (நமக்காகச் சொல்லியிருப்பாரோ என்றும் சிந்தித்தது மனது.. இருந்தாலும் சுகமாகவே இருந்தது )

அப்படியே நான்கு அடி எடுத்துவைத்தால் டிஸ்கவரி புக் பேலஸின் ஸ்டால். வேடியப்பன் மிகவும் பிஸியாக இருந்தார். பேசிக்கொண்டே திரும்பிப் பார்த்தால், நாகரத்னா பதிப்பகத்தின் குகன் ஒரு பேனர் வைத்திருந்தார். அதில் நாகரத்னா பதிப்பகத்தின் புத்தகங்களின் படங்களும் , எழுத்தாளர்கள் பெயரும் இருந்தது. அதில் முதலில்..மக்கள் தொலைக்காட்சி புகழ், சுரேகா எழுதிய நீங்கதான் சாவி.. என்று என்னை கலாய்த்திருந்தார். J

மீண்டும் ஒரு சுற்று போய்விட்டு தேர் நிலைக்கு வருவதைப்போல், டிஸ்கவரி ஸ்டாலுக்கு வந்தால், கேபிளும், கே.ஆர்.பியும் இருந்தார்கள்.  அளவளாவ ஆரம்பித்தால், அதிஷா வந்தார். பட்டர்ஃப்ளை சூர்யா அண்ணனும் அங்கு இருக்க, அவருடன் பேசும்போது, அண்ணனைப் பற்றிய ஒரு பெரிய உண்மை தெரிந்தது. (அவர் அனுமதியின்றி சொல்லமுடியாது.) உண்மைத்தமிழன் அண்ணாச்சி மிகவும் டிப் டாப்பாக (அண்ணாச்சி..கவனிக்கவும்..டாப்பாக) வந்திருந்தார். கடை வாசலில் கூடிய கூட்டத்தால் வியாபாரம் பாதிக்குமோ என்று வேடியப்பன் பார்த்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட உண்மையும் அதுதான். பதிவர்கள் கூட்டத்தைப் பார்த்துவிட்டு, புதிதாக அந்த ஸ்டால் பக்கம் வருபவர்கள். கடை கூட்டமா இருக்கு! அடுத்த கடையில் வாங்கிக்கலாம் என்று சென்றுவிடும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. டிஸ்கவரியின் ஓரத்தில் இருக்கும் சந்தில் சங்கத்தைக் கூட்டும் முயற்சியை எடுக்கவேண்டும்.

  அவ்வழியே வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கேபிளை வணங்கியோ, நலம் விசாரித்தோ சென்றார்கள். பிரபலமனாலே ப்ராப்ளம்தான் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாரு வந்தார். அவருடன் நின்று ஸ்டால் பெயருடன், போட்டோ எடுத்தே ஆகவேண்டுமென்று வேடியப்பன் அடம் பிடிக்க, கே.ஆர்.பி க்ளிக்கினார். அட்டாச்மெண்ட்டாக நானும், கேபிளும் நின்றோம். இன்னும் சில நண்பர்கள் வந்தார்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அப்படியே அப்பீட்டினேன்.

வெளியில் வரும்போது, கலெக்டர் திரு. சகாயம் அவர்கள் லஞ்சமில்லா வேலையைப்பற்றி சிறப்பாகப் பேசி முடித்துக்கொண்டிருந்தார். அடுத்து இரயில்வே ஐஜி. திரு.ஆறுமுகம் பேசினார். ஒரு ஒற்றுமை என்னவென்றால், இருவருமே புதுக்கோட்டை மாவட்டத்துக்காரர்கள்.

பார்க்கிங் நோக்கி நடையைக் கட்டினேன். வழியில் பலவிதமான வஸ்துக்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். இரண்டுபேர் சத்தமாக பேசிக்கொண்டு சென்றார்கள்.

”வருஷா வருஷம் வந்திருவேன். குறைந்தபட்சம் 100 புக் வாங்கலைன்னா தூக்கமே வராது.”

”அடேயப்பா… !!  பொதுவா எந்த எழுத்தாளர் ரொம்பப் பிடிக்கும்…?”

” மனுஷ்யபுத்திரன்னு ஒரு எழுத்தாளர் இருக்கார். ‘துணையெழுத்து’ னு ஒரு நாவல் எழுதியிருப்பாரு…அசத்திட்டாரு மனுஷன்..!! அதைப்படிச்சதுக்கப்புறம்தான் எனக்கு புத்தகம் படிக்கிற பழக்கமே அதிகமாச்சு! நம்ப கிழக்கு பதிப்பகம்தான் போட்டிருக்காங்க! ”

மனுஷ்யபுத்திரன் – துணையெழுத்து – நாவல் – கிழக்கு … குட் காம்பினேஷன்….!!

Wednesday, January 18, 2012

புத்தகக் காட்சி – நேற்று அப்படம் கடைசி






     நேற்று (ஜனவரி 17) மதியம் சென்னை வந்து சேர்ந்ததால், புத்தகக் காட்சியின் கடைசி நாளை தரிசிக்கலாம் என்று முடிவெடுத்து, மாலை சென்று, பச்சையப்பன் கல்லூரி வாசலில் இருந்த பழைய புத்தகக் கடைகளை நோண்ட ஆரம்பித்தேன். முன்னரே நிறையபேர் நோண்டியிருப்பார்கள் போலிருக்கிறது. பெரிதாக ஒன்றும் சிக்கவில்லை. இருந்தாலும், முயற்சியைக் கைவிடாமல் தேடியதில்,
குஷ்வந்த்சிங் ஜோக்ஸ் – Rs.10
One Night @ call Center – Rs.20
பொதுக் கட்டுரைகள் – Rs.10
Tamil Nadu – A photographical Journey (Raghubir Singh) – Rs.150
அப்பாலுக்கு அப்பால் (நாவல்) – Rs.10
ஆகியவற்றை அள்ளிக்கொண்டு பு.காட்சிக்குள் நுழைந்தேன்.

நிறைவு நாள் என்ற பிரக்ஞையுடன் கூட்டம் அதிகமாக வந்திருந்தது. தமிழினியில் சிறிது நேரம் மேய்ந்துவிட்டு, ஞானபானு சென்றேன். அங்கு ஞானி அமர்ந்திருந்தார். அரைநிமிடப் பேச்சுக்குப்பின் அங்கிருந்த கூடங்குளம் பற்றிய புத்தகத்தை வாங்கிக்கொண்டு, பாதை பதிப்பகத்தின், ரணம் சுகம், நியான் நகரம் ஆகிய ஒலி நாவல்களைப் பார்த்து, கேட்டுவிட்டு அப்படியே நமது பதிவர் பஸ் ஸ்டாண்டான டிஸ்கவரி புக் பேலஸ் - 334ஐ அடைந்தேன்.

     கேபிள் ,கே.ஆர்.பி, ஷங்கர் ,அவரது நண்பர் ஆகியோருடன் அரட்டை ஆரம்பித்தது. பின்னர் ஷங்கர் & கோ விடைபெற, பேசிக்கொண்டே சில காட்சியரங்குகளுக்கு (ஸ்டால் என்பதன் நல்ல தமிழ்ப்பதம் இதுதானாம்) சென்றோம்.

     பாஸ்கர் சக்தி கடந்து சென்றார். தேனம்மை லட்சுமணன் அவர்கள் வந்திருந்தார். சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர், புத்தக விற்பனை  மற்றும் அதனைச் சந்தைப்படுத்துதல் பற்றி கேபிள் விளக்கம் தந்தார். எட்டரை மணிக்கெல்லாம் சந்தை களையிழக்க ஆரம்பித்தது. ஒரு ஆள் அவசர அவசரமாக எல்லா அரங்குகளையும் அலசிக்கொண்டிருந்தார். அம்மாவுடன் வந்திருந்த ஒரு பெண், கடைசி நிமிடத்தில் புத்தகங்களை அள்ளிக்கொண்டிருந்தாள். ஒரு பாட்டி தமிழ்ப்புத்தகம் பற்றி ஆங்கிலத்தில் விசாரித்துக்கொண்டிருந்தார். அப்படியே நாங்களும் ஒரு டீயைக் குடித்துவிட்டு வெளியேற எத்தனித்தோம். சென்ற வாரம் படப்பிடிப்புத் தளத்தில் தொலைந்து போன எனது ‘யூதர்கள்’ புத்தகத்தை மீண்டும் வாங்க கிழக்கு சென்றோம். அப்படியே இந்த ஆண்டு புத்தகக் காட்சியை இனிதே நிறைவு செய்து அரங்கிலிருந்து வெளியேறினோம்.

     அரங்குக்கு வெளியில், லக்கி, அதிஷா, மாமல்லன், காமிக்ஸ் விஷ்வா என ஜமாவில் ஐக்கியமாகி, பேசிக்கொண்டிருந்தோம். காமிக்ஸ் வேட்கை அதிகரித்திருப்பதாக விஷ்வா சொன்னார். கண்காட்சியின் இடையில் அச்சிடப்பட்ட அனைத்து காமிக்ஸுகளும் விற்றுவிட்டதாகச் சொன்னார். நான் எனக்கான லயன் காமிக்ஸ் COME BACK ஐ அவரிடம் கேட்டிருக்கிறேன். சிலபல சிரிப்பு வெடிகளுடன் சங்கத்தைக் கலைத்து கிளம்பினோம்.

சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள்

புத்தகக் காட்சியில் சுமார் 6.5 லட்சம் புத்தகங்கள் விற்றிருக்கின்றன.

4 லட்சம் பார்வையாளர்கள் வந்து சென்றிருக்கிறார்கள்.

முதல்முறையாக, ஒரு முன்னாள் குடியரசுத்தலைவர் வந்துசென்றிருக்கிறார்.

வெளியூரிலிருந்து குறைந்தபட்சம் 1 லட்சம் வாசகர்கள் வந்து சென்றிருக்கிறார்கள்.

சிறுவர் புத்தகங்கள் அதிகம் விற்றிருக்கின்றன.

எப்போதும்போல், சுயமுன்னேற்றம், சுஜாதா சூடான விற்பனை

கவிதைப் புத்தகங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. நா. முத்துக்குமாரின் கவிதைகள் மட்டும் விதிவிலக்கு.!அவரது புத்தகங்கள் சென்ற ஆண்டைவிட அதிகம் விற்றிருக்கிறது.

புதிதாக 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அரங்கிலேயே வெளியிடப்பட்டிருக்கின்றன.


காமிக்ஸ் உலகம் விரிவடைந்திருக்கிறது. முதல்முறையாக அரங்கு வைக்கப்பட்டாலும், காமிக்ஸ் புத்தகங்கள் அனைத்தும் விற்று கல்லாப்பெட்டியை மட்டும் திரும்பக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
இப்படியாக புத்தகக் காட்சி 2012 குதூகலமாக நிறைவடைந்திருக்கிறது.
     
         இரவு உணவை வெளியில் சாப்பிட்டுவிடலாம் என்று கே ஆர் பி உசுப்பேத்த, நானும் பொறுப்பாக தங்கமணியிடம் போன்செய்து , ‘நான் சாப்பிட வரலை! என்று சொல்லிவிட்டு உணவகம் நோக்கிக் கிளம்பினோம். பொங்கல் சார்ந்த விடுமுறை என்பதால் அந்த நெடுஞ்சாலையில் ஒரு உணவகம் கூட திறக்கவில்லை. ஆற்காடு மெஸ் அழுத்தமாகப் பூட்டியிருந்தது. மீண்டும் அவரவர் வீட்டுக்கே சென்று சாப்பிடுவது என்று சங்கம் தீர்மானித்தது. ’இது என்னடா சோதனை?’ என்ற ரீதியில் மேலதிகாரியிடம் பாட்டுவாங்கும் பவ்யத்தோடு , தங்கமணிக்கு மீண்டும் போன் அடித்தேன்.

     ’தூங்கிட்டியாம்மா..! இல்லை! வெளில சாப்பிடலை! வீட்டுக்கே வந்துடுறேன்..!

     ’ஏன்…கடையெல்லாம் மூடியிருக்கா?

     ஹி..ஹி.. ஆமா!

     அதான் தெரியுமே! சவுடாலா வெளில சாப்புடுறேன்னு சொல்லும்போதே நினைச்சேன்.! சரி தானா வரும்னு விட்டுட்டேன்..!

     இப்ப என்னம்மா பண்றது!

     என்ன பண்றது..? வாங்க! உங்க லச்சணம் தெரிஞ்சு ஏற்கனவே தோசை செஞ்சு வச்சிருக்கேன்.

     ரொம்ப தேங்க்ஸ்ம்மா!

     ம்க்கும்!

இவ்ளோ புத்தகம் படிக்கிறோம்.. இந்த ஒரு ம்க்கும்க்கு அர்த்தம் தெரியலையே?






Tuesday, January 10, 2012

நான்காம் நாள் நடப்புகள் – புத்தகக் காட்சி






பத்தொன்பது நிமிடங்களாக, பச்சை விளக்கே போடாமல் பாம்புபோல் வாகனக்கூட்டத்தை நிற்கவைத்த, பச்சையப்பா கல்லூரிக்கருகிலேயே யோசித்திருக்கவேண்டும். இன்று அப்துல் கலாம் அவர்கள் வருகிறாரே உள்ளே நுழைவதற்குள் நாக்கு,பேக்கு என அனைத்து உறுப்புகளும் தள்ளிவிடும் என்று! வாகனத்தை உறுமிக்கொண்டே நின்று, நின்று, சென்று சென்று விருகம்பாக்கத்திலிருந்து, புத்தகச்சந்தையில் சென்று வாகனம் யதாஸ்தானத்தை அடைவதற்குள் 1 மணி நேரம் 42 நிமிடங்கள் ஆகியிருந்தது. மொத்த தூரம் 6.8 கிலோமீட்டர் என்று கூகிள் சொல்கிறது. இதே நேரத்தில் பைக்கில், புதுகையிலிருந்து மதுரை (109கி.மீ)சென்று விடலாம்.!! வாழ்க சென்னைப் போக்குவரத்து…!! 

     உள்ளே நுழைந்தவுடன் மீண்டும் புத்தகப் பட்டியல் எடுக்க ஆரம்பித்தேன். நேற்று விட்ட இடத்திலிருந்து தொடங்கினேன். மீண்டும் நான்கு வரிசைகள்! அப்போது பலாபட்டரை ஷங்கர் அவர்கள் வந்து லந்தினார்.  நான் நேற்று எழுதியிருந்த கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் புத்தகம் வாங்கவேண்டும் என்றார். அதை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அந்த நூலின் ஆசிரியர் திரு.முத்துக்கிருஷ்ணன் அவர்களே எதிரில் வந்தார். நான் ஓடிச்சென்று அவரை மனம் நிறைந்து பாராட்டினேன். ஏனெனில் அந்தப் புத்தகம் எனக்கு பல அதிர்ச்சிகளை அளித்திருந்தது. தூத்துக்குடி மக்கள் மட்டும் பாவம் என்று நினைத்திருந்திருப்போம். அது தவறு ! நாமும் பாவம்! ஏனெனில் கூடங்குளத்தினால் நாமும் பாதிக்கப்படப்போகிறோம் என்ற உண்மையை அந்த நூல் உணர்த்தியிருந்தது. அதை அவருடன் பகிர்ந்துகொண்டேன். அவரும் மிகவும் ஈடுபாட்டுடன் பேசினார். பின்னர் ஷங்கரும் நானும் சென்று, அவருக்கான அந்த நூலை வாங்கினோம்.


தேனம்மை லட்சுமணன் அவர்களின் ’சாதனை அரசிகள்’ நூல் வெளியீட்டுக்கு அழைத்திருந்தார்கள். டிஸ்கவரியின் ஸ்டாலுக்குச் சென்றேன். அங்கு பல சாதனைப் பெண்கள் அமர்ந்தும், உலவிக்கொண்டும், உரையாடிக்கொண்டும் இருந்தார்கள். நான் இயக்குநர் நந்தினியுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு, அவர்களது குட்டிப்பாப்பாவுடன் விளையாடினேன்.

 பின்னர் பெருந்தலைகளெல்லாம் திரளாக வர ஆர்மபித்தார்கள். தேனம்மை லட்சுமணன், அவர்களின் புத்தக வெளியீட்டுவிழாவுக்கான முஸ்தீபுகளில் இருந்தார். அப்போது அண்ணன் அப்துல்லா கையில் பையும், பை நிறைய காமிக்ஸுமாக வந்தார்.  டெல்லியில் டேரா அடித்துவிட்டு வந்திருந்தார். அரட்டையை ஆரம்பித்தோம். டிஸ்கவரி வாசலில் ஒரு மினி பொதுக்கூட்ட அளவில் நான் கேபிள், கே ஆர் பி, லக்கி, MSK, ரோமியோ, இயக்குநர் நவீன், இன்னும் சில பதிவர்கள் என்று கச்சேரி களை கட்டியது. புத்தக வெளியீடு தாமதமானதால் கொஞ்சம் சுற்றிவிட்டு வருவோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினோம். அடுத்த வரிசை செல்லும்போது, திரு.பாரதி மணி அவர்கள் எதிரில் டிஸ்கவரி ஸ்டாலை தேடிக்கொண்டு வந்தார். நாங்கள் அவரைப்பார்த்து வரவேற்று, கடையை நோக்கி கூட்டிச்சென்றோம். புத்தக வெளியீட்டு விழா இனிதே நடந்தது. இந்திகழ்ச்சியை ஒரு தொலைக்காட்சிக்குழு ஒளிப்பதிவு செய்து, பேட்டிகளெல்லாம் எடுத்தது.


பின்னர் சங்கம் கலைக்கப்பட்டு, நான் தனியனாக மீண்டும் என் வேட்டையைத் தொடர்ந்தேன். நண்பர் செல்வக்குமார் இணைந்தார். அவருடன் ஸ்டால் எண்: 99 க்கு சென்றோம். அங்கு அஜயன் பாலாவின் குழந்தைகளுக்கான திரைப்பட புத்தகம் வெளியீடு நடந்து முடிந்திருந்தது. அப்படியே மீண்டும் பிரிந்து நான் விசில் ஊதும் வரை வேட்டையைத் தொடர்ந்தேன்.


வெளியில் வந்து கேபிள்,யுவகிருஷ்ணா,கே ஆர் பி, அவரது நண்பர் என ஒரு ஒதுக்குப்புறத்தில் அமர்ந்து பேசிவிட்டு , பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆற்காடு மெஸ்ஸில்,லக்கி தவிர மற்றவர்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்


வாசிக்க நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள்
1.   பிரமிள் கவிதைகள் – விலை 165.00 -அடையாளம்- கடை எண்: 323
2.   கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்- அ.முத்துக்கிருஷ்ணன் – ரூ.15 – பூவுலகின் நண்பர்கள் – கடை எண்: 71
3.   வெள்ளை மொழி – விலை 200 – அடையாளம் – 323
4.   சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் – ப.முருகன் – ரூ.60 –அடையாளம் - 323
5.   நியான் நகரம் – ஷம்மீர் - ரூ.200 - பாதை – கடை எண் 318
6.   இந்தியா ஒரே நாடா ?-பெரியார் – ரூ. 5 – எதிர் – கடை எண்: 222
7.   மார்லன் பிராண்டோ – அஜயன் பாலா- பரிசல் -கடை எண் – 123
8.   பூமி மூழ்கிக்கொண்டிருக்கிறது –விஞ்ஞானி பொன்முடி –ரூ.70- நியூ செஞ்சுரி – கடை எண்: F53
9. ஒரு தலைமுறை தெலுங்குச் சிறுகதைகள் – தொகுப்பு : டி.ராமலிங்கம் – பூ.அ. துரைராஜ் - ரூ.80 (உண்மை விலை: 160)- சாகித்ய அகாடெமி –கடை எண்: 166
10. மலையாளச் சிறுகதைகள் –புஷ்பவேணி கோவி – ரூ.35 (உ.விலை: 70)- சாகித்ய அகாடெமி
தெர்மோகோல் தேவதைகளும், கூடங்குளமும் படித்தாயிற்று…பார்வை விரைவில்..

அனேகமாய் இனி புத்தகக்காட்சி செல்ல இயலாது என்று எண்ணுகிறேன். பார்ப்போம்.





     

Sunday, January 8, 2012

மூன்றாம் நாள் புத்தகக் காட்சி




உண்மைத் தமிழன் அண்ணாச்சியுடன் உள்ளே நுழையும்போது மணி 6 ஆகிவிட்டிருந்தது. முரட்டுக் கூட்டம்..! உள்ளே சென்றதும் ,நேராக கிழக்கில் கால்கள் நின்றன. அப்புறம்தான் தெரிந்தது. பாரா இருக்கிறார். அவருடன் பேச ஆரம்பித்தால், பல்வேறு தகவல்கள் தந்தார். அப்போது ட்விட்டர் புகழ் சுப்புடுவும் வந்தார். Samsung, iPhone தொழில்நுட்ப சுவாரஸ்யங்கள் பகிர்ந்துகொண்டோம்.

     அப்படியே ஒவ்வொரு கடையாக மேய ஆரம்பித்தேன். சில புத்தகங்களின்மீது நாட்டம் ஏற்பட்டபோது தலைப்பு-ஆசிரியர்-பதிப்பகம்-கடை எண்ணை எழுதிக்கொண்டேன். பொறுமையாக ஒரு பகல் நேரத்தில் வந்து தேவையான புத்தகங்களை வாங்க உத்தேசம்..! முன்னோட்டமாக எல்லாக்கடைகளையும் வரிசையாக பார்வையிடும் நோக்கம்! முழுமையாக பார்த்துமுடித்தபின் நாளை புத்தகப் பட்டியல் பதிவிடலாம் என்று இருக்கிறேன்.

     இந்த புத்தகக் காட்சியின் மிகப்பெரிய ஆச்சர்யமாக, தொடங்கி மூன்றே நாட்களில் , காமிக்ஸ் விற்பனைசெய்துவந்த கடையில், எல்லா காமிக்ஸும் விற்றுத்தீர்ந்துவிட்டது. விஷ்வாவும், ரகுவும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். உண்மையில் இவ்வளவு காமிக்ஸ் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வரும் மார்ச் மாதத்தில் அச்சிடவேண்டிய காமிக்ஸ்களை, இப்போதே அச்சிடுவதற்காக லயன்ஸ் காமிக்ஸின் திரு.அசோகன் இரவே சிவகாசிக்கு ரயிலேறுகிறார் என்று ரகு சொன்னார். இது ஒரு சாதனைதான்..!!

     எல்லாக் கடைகளையும் யாரையும் கூட்டுச் சேர்க்காமல், தனியனாக மேய்ந்தேன். சாகித்ய அகாதெமியில் உண்மையிலேயே மலிவுவிலையில் பல்வேறு படைப்புகள் கிடைக்கின்றன. மதி நிலையம் பாராவின் குற்றியலுலகம் என்ற கீச்சுத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. தேடலில் பொறுமையாக 50 நிமிடங்கள் கழிந்தன. மூன்று வரிசைகள்தான் முடிக்க முடிந்தது. பட்டியலில் 24 புத்தகங்கள் சேர்ந்தன. ( எதுவும் வாங்கவில்லை.!.)  

அப்புறம், பூவுலகின் நண்பர்கள் கடைக்கருகில் பதிவர் காவேரி கணேஷ், அன்பழகன் வீரப்பன் ஆகியோர் சந்தித்துப் பேச ஆரம்பித்தோம். ஒரு வார்த்தை கூட வெட்டியாகச் செலவழிக்காமல், உண்மையான சமூக, பதிவுலக அக்கறையுடன் உரையாடல் அற்புதமாக நீண்டது. அப்போது பூவுலகின் நண்பர்கள் குழுவின் திரு.ரமேஷ் கருப்பையா வந்தார்.நிறைய சுற்றுச்சூழல் தகவல்கள் சொன்னார். அவர் கொடுத்த ஒரு மரம் வளர்ப்பு விழிப்புணர்வுத் தாளில் இருந்த கீழ்க்கண்ட படம் என்னை மிகவும் கவர்ந்தது.





கூடங்குளம் அணுமின் நிலைய ஆபத்தை மக்களிடையே பரவலாக எடுத்துச்செல்லும் திரு.முத்துக்கிருஷ்ணன் வந்திருந்தார். பூவுலகின் நண்பர்கள் குழு உண்மையான அக்கறையுடன் செயல்பட்டுவருகிறார்கள்.    

அந்தக்குழுவில் அனைவரும் தன்னார்வலர்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு தளங்களில் இயங்கு பவர்கள். புவிகாக்கும் நோக்கத் துக்காக ஒன்றிணைந்திருக்கிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை பற்றி சிந்தையைத் தூண்டும் ஒரு சிறந்த 64 பக்க விளக்கப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள். விலை: ரூ15.மட்டுமே! 



 
மிகக்குறைந்த விலையில், நம் அடுத்த தலைமுறைக்கு , ஓரளவு கெடாத பூமியை விட்டுச்செல்லும் அத்துனை உண்மைகளையும் சிறு சிறு நூல்களாக்கி வழங்குகிறார்கள். அவர்கள் கடைக்கு மறக்காமல் செல்லுங்கள்.!

பக்கத்திலேயே, ஆல் இந்தியா ரேடியோவின் கடை இருந்தது. என்னத்தைச் சொல்ல? போய்ப் பாருங்கள்! என்ன விற்கிறார்கள் என்று தெரியும்.

கடைசியாக, டிஸ்கவரி வாசலில்..(கடை எண்:334) கேபிள், கே.ஆர்.பி.செந்தில், ஓ.ஆர்.பி ராஜா அண்ணன், பிலாஸபி பிரபாகரன், மெட்ராஸ்பவன் சிவக்குமார், மேலும் பாண்டியிலிருந்து கேபிளைச் சந்திப்பதற்காகவே வந்திருந்த வாசகர் என்று ஜமாவில் சங்கமித்தேன். பதிவுலகின் பலம் குறித்து பேசிக்கொண்டிருந்துவிட்டு சங்கத்தைக் கலைத்தோம்.




Saturday, January 7, 2012

சென்னை புத்தகக் கண்காட்சி நாள் # 2




முதல் நாள் கட்டுரையைத் தேடாதீர்கள். நான் போகவில்லை. புத்தகக் கண்காட்சியின் நாள்தான் தலைப்பு ! எனக்கு, இன்றுதான் முதல் நாள்!

உள்ளே நுழையும்போதே…..பார்க்கிங்கில் நாம் டென்ஷனில் reflect ஆகக்கூடாதென்று, தானே reflect ஆகும் உடை அணிந்து ஏழெட்டு ஆட்கள் வண்டிகளை நிறுத்தி வலுக்கட்டாயமாக சீட்டு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஏற்கனவே கேபிள் எழுதியதைப் படித்திருந்ததால், பத்தை எடுத்து நீட்டி ‘இங்கயும் ஆரம்பிச்சுட்டீங்களா உங்க அராஜகத்தை’ என்று சொல்லி, அவன் முறைப்பை சோடியம் விளக்கொளிக்கு தின்னக் கொடுத்துவிட்டு வண்டியை நிறுத்தினேன்.

வாசலை நோக்கி நடக்கத்தொடங்கிய வினாடி, என்னைக் கடந்து சென்ற பைக்கை ஓட்டியவர் ’மஜக்’கென்று சென்றுகொண்டிருந்தார். அட..! இது நம்ப மாமல்லன் சாராச்சே என்று நினைத்து.. உள்ளேஏஏஏ செல்லும்வரை நடைத்துணைக்கு வேண்டுமே என்று அவருக்காக நின்று, பேசிக்கொண்டே உள்நுழைந்தோம். பேராசிரியர் ஞானசம்பந்தன் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்தார். ‘நிலவு சொல்கிறது..ஏ..! மனிதா!’ என்று ஆரம்பித்தார். அடுத்த நொடி மாமல்லன் சார் ஒரு கமெண்ட் அடித்தார் பாருங்கள்..!! குபீர்ச் சிரிப்பிவிட்டேன். கமெண்ட் மட்டுறுத்தல் செய்யப்படுகிறது.

     நுழைவுச்சீட்டினை எனக்கும் சேர்த்து அவரே எடுத்தார். உள்ளே அவருடன்  கிழக்கு பதிப்பகம் வரை வந்தேன். அங்கு ஹரன் பிரசன்னாவுடன் சந்திப்பு..! பேசிக்கொண்டே.. நான் நம்ப மக்களைத் தேடிப் போறேன் சார் ! என்று அவரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அவரும்..நான் சுத்திக்கிட்டிருப்பேன். நீங்க போங்க! என்றார். அவருடன் வயிறுவலிக்க அளவளாவிய சென்ற ஆண்டு நிகழ்வை நினைத்துக்கொண்டே நகர்ந்தேன்.

     எதிரில் எஸ்.ரா வந்துகொண்டிருந்தார். அவரிடம் நலம் விசாரித்துவிட்டு பின்னர் 334ம் எண் கடையான வேடியப்பனின் டிஸ்கவரி புக் பேலஸில்  ஜாகை..! கேபிள் இருந்தார். பேசிக்கொண்டிருந்தோம்.  திரு.பாஸ்கர் சக்தி வந்தார். அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேச்சு..! பின்னர் முகப்புத்தக நண்பர் ராகுல் செந்தில் வந்தார். புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. பின்னர் என் ஆவலான மலிவுவிலை சுஜாதா கதைகளும், காமிக்ஸும் பார்க்கச் செல்கிறேன் என்று சொல்லி, நான் அங்கிருந்து கூடாரத்தைத் தூக்கினேன். அப்போது விருபா.குமரேசன்அவர்கள் அழைத்தார். அவரது ஸ்டால் எண்: 149ல் நிறைய புதிய புத்தகங்கள் உள்ளதாகச் சொன்னார். நாளை போகவேண்டும்.

     அடுத்து, மீனாட்சி பதிப்பகம் வந்தால், அழிக்கப்பிறந்தவனை ஆக்கியவரும்..அவர் இணைபிரியாதவரும் நின்றுகொண்டிருந்தார்கள். மொத்தமாக சுஜாதாவை அள்ளிக்கொண்டிருந்தார் அதிர்ஷ்டக்கார லக்கி! J நானும் கொஞ்சம் தேற்றி ரூபாய் 115க்கு 5 புத்தகங்கள்! பின்னர் லக்கியிடமே காமிக்ஸ் விற்குமிடம் கேட்டேன். எதிர்சாரிக் கடையைக் காட்டினார்.

     காமிக்ஸ் கடையில் நுழைந்தேன். ஆஹா..!! 7ம் வகுப்புப் படிக்கும்போது இனிக்க இனிக்கப் படித்த காமிக்ஸ் ஹீரோக்கள் வரிசைகட்டி நின்றார்கள். அப்போதெல்லாம் வீட்டுக்குப் பயந்து ஒளித்துவைத்துப் படித்த மாடஸ்டி ப்ளைஸியும், இரும்புக்கை மாயாவியும், மந்திரவாதி மாண்ட்ரேக்கும்..வாடா! என்ன ரொம்ப நாளா ஆளையே காணும்? என்று வரவேற்றார்கள். ஒவ்வொரு புத்தகமாய் ஆசையாய்ப் பார்த்தேன். (காமிக்ஸ் உலகம் பற்றி ஒரு பதிவு போடணும் என்று நினைத்துக்கொண்டேன்) ராணி காமிக்ஸில் வந்த ஜேம்ஸ்பாண்டை மட்டும் காணவே இல்லை.! டிடெக்டிவ் காமிக்ஸ், இரும்புக்கை மாயாவி போன்ற காமிக்ஸ்களின் 28 புத்தகங்கள் ரூபாய் 150ரூபாய்க்கு வாங்கினேன்.

   அப்போதுதான் அன்புடன் அறிமுகமானாரகள் திரு.ரகுவும், திரு.விஷ்வாவும்…!! இருவருக்கும் காமிக்ஸை வாழ வைப்பதுதான் வேலை போலிருக்கிறது. காமிக்ஸின் மறுவாழ்வுக்காக ஒரு இயக்கம்போல் செயல்படுகிறார்கள். அடடா..! நான் சிறுவயதில் படிக்க ஆரம்பித்து பாதியில் விட்ட ஒரு ஸ்பைடர்மேன் காமிக்ஸ் பற்றி சொல்ல ஆரம்பித்ததும் அதன் தலைப்பைச் சொல்லி அசத்தினார்கள். ஒவ்வொரு காமிக்ஸைப் பற்றியும் குட்டிப்பசங்களைப் போல் ஆர்வமாக, ஆச்சர்யமாக, உற்சாகமாக, குதூகலமாகப் பேசிக்கொண்டிருந்தோம். அந்தக்கடையில் அமர்ந்திருந்த பெரியவர் ஒரு சுவாரஸ்யர்..! அவர் லயன்ஸ் காமிக்ஸ் ஆரம்பித்த நாளிலிருந்து அங்கு வேலை பார்க்கிறாராம். பிரமிப்பாக இருந்தது. பின்னர் விசில் ஊதி கடையை அடைக்கும்வரை அங்கு நின்று அளவளாவிக்கொண்டிருந்தோம். கேபிளும் அங்கு வர பேசிக்கொண்டே ஜூட் விட்டால், வாசலில் காவல்கோட்டம் வெங்கடேசனும், நாஞ்சில் நாடன் அய்யாவும் நின்றுகொண்டிருந்தார்கள். பாராட்டு,சந்தோஷக் கைகுலுக்கல்கள், நலவிசாரிப்புகளுடன் வெளியேறினோம்.

     எப்படித்தான் நிகழ்வுக்கு நிகழ்வு யோசித்து எழுதினாலும்.உண்மைத்தமிழன் அண்ணாச்சி லெவலுக்கு  வரமுடியவில்லை.  இப்பதான் நினைவுக்கு வருது! நான் ,சுகுமார் சுவாமிநாதன், கேபிள் ஆகியோர் உ.த அண்ணாச்சியுடன் வாஆஆசலில் அளவளாவினோம். அப்போது ஒரு குண்டைப் போட்டார். அந்த பிரபல ஈரோட்டு நிகழ்வுப் பதிவு அவர் அடித்தபடி, முழுமையாக வலையேற்றவில்லையாம்.  நாம் சிரமப்படுவோமே என்று அவரால் பாதியாகச் சுருக்கப்பட்டதாம். படிக்கிற உங்களுக்கே ’பக்’ குங்குதே!  கேட்ட எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? J


வுடு ஜூட்!! 





இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...