Showing posts with label கேட்டால் கிடைக்கும். Show all posts
Showing posts with label கேட்டால் கிடைக்கும். Show all posts

Friday, December 18, 2015

வாயுள்ள பிள்ளை Ver. 2.0


இந்த மாத பில் மழை !

ஏர்டெல் பிராண்ட்பேண்ட் பில் வந்தது... 

சென்னையில் ஒன்றுமே நடக்காததுபோல், முழு வாடகையும் போட்டு சத்தமில்லாமல் 100 ரூபாய் அதிக பில்லும் ஆக்கி அனுப்பியிருந்தார்கள்.

உடனே..
1ம் தேதி முதல் 10 தேதி வரை உங்கள் சேவையே இல்லாதபோது எப்படி முழு பில்லும் அனுப்பியிருக்கிறீர்கள்? என்று கேட்டு ஒரு மெயில் அனுப்பினேன்.
சில மணி நேரங்களில் ஒருவர் பேசினார்.

ஓக்கே சார் ! உங்களுக்கான 10 நாட்களுக்கான பில் தொகையை கழித்துவிடுகிறோம் என்றார். அதேபோல் கழித்து SMS வந்தது.

மகிழ்ச்சி.. !! அதே நேரத்தில் மொத்தத் தொகைக்கு போட்டிருக்கும் சர்வீஸ் டேக்ஸையும் சரியாகக் கழித்து பில் போடுங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.

ஏனெனில்..உங்களுக்கு 1299 ரூபாய் வாடகை எனில் 14.5% சேவை வரி சேர்த்துப் போடுவார்கள் . அதாவது 188.35. ஆக நீங்கள் கட்டவேண்டிய தொகை 1487.35. ஆனால், நீங்கள் கழிக்கச் சொல்லி கேட்டதும். திறமையாக 1299/30 = 43.3... அதை 10 நாட்களுக்கு சேர்த்து 433 கழித்து உங்களை குஷிப்படுத்துவார்கள். 

ஆனால், 1299- 433 = 866 அதற்கு சேவை வரி 125.57 தான்... அதற்குப் பதிலாக நாம் சேவை வரி 188.35 கட்டுவோம். அதில் 63 ரூபாயை அடிப்பதில் அவர்களுக்கு ஒரு குரூர வியாபார தந்திரம்.. அதை உடைக்கத்தான் மீண்டும் மெயில் போட்டிருக்கிறேன். 

இவங்க செய்யும் பாவத்துக்குத்தான் நம்பளும் அனுபவிக்கிறோம்.. ! 


UPDATE : இன்று (18.12.2015) காலை 63 ரூபாயும் கழித்து, மின்னஞ்சல் வந்துவிட்டது. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் Ver.2.0 !! 


Sunday, November 29, 2015

ஏமாற்டெல்!


இந்த மாத ஏர்டெல் பில் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது...!
கொஞ்சம் நோண்டலாம் என்று பார்த்தால்..
பெரிய டகால்ட்டி வேலை நடந்திருக்கிறது.

நான் பேசியது 14 மணி நேரம் 13 நிமிடங்கள் : அப்படியெனில் 853 நிமிடங்கள்தான் எனக்கு பில் செய்திருக்கவேண்டும். ஆனால், கொஞ்சம் தள்ளி அதனை யுனிட்டாக மாற்றுகிறேன் என்று சொல்லி 950 ஆக மாற்றியிருக்கிறார்கள். இதைக் கணக்கு செய்தால்.. 97 நிமிடங்கள் அதிகம் : அதன் படி ஒரு நிமிடத்துக்கு 40 பைசா வீதம் என்னிடம் 38.80 அதிகமாக பில் செய்திருக்கிறார்கள்.


இதைக் குறிப்பிட்டு ஒரு விரிவான மெயில் அனுப்பினேன்.

அது அப்படி இல்லை.. இப்படி என்று ஒரு மொக்கை கால்குலேஷன் சொல்லி மெயில் வந்தது.

அதற்கும் கேள்வி கேட்டு, யூனிட் என்றால் என்ன நிமிடம் என்றால் என்ன.. ஒரு நிமிடத்துக்கு எத்தனை யூனிட்? அதனை நான் இணைப்பு வாங்கும்போது ஏன் சொல்லவில்லை.. ஆக, இத்தனை ஆண்டுகளாக என்னை இப்படித்தான் ஏமாற்றுகிறார்களா என்று கேட்டு அடுத்த மெயில் போட்டேன்.

இப்போது ஒரு நபர் அழைத்து.. உங்கள் கணக்கில் 38 ரூபாய் கழித்துவிட்டோம் என்றார்... அதற்கான வரியையும் சேர்த்து 44.42 வருது.. அதனையும் கழியுங்கள் என்றேன். உடனே ஏதோ கணக்குப்போட்டு, என் கேள்விகளுக்கு பதிலும் சொல்லமுடியாமல், 42 ரூபாயை கழித்துவிட்டார்.

ஆக..
நேரடியாகக் கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்தால், இவனிடம் இப்படி காசை அடி என்று ஒரு நிர்வாகமே செயல்படுகிறது !!

இந்த 43 ரூபாய்க்கு இத்தனை நேர விரயமா? இந்த நேரத்தில் உங்கள் வேலையில் 1000 ரூபாய் சம்பாதித்திருக்கலாம் என்று குதர்க்கமாகத் தோன்றும் !!

இப்படி 43 ரூபாய்களாக கொள்ளை கொடுக்காமல் இருந்தாலே போதும். இவர்களுக்கும் கொடுக்க சேர்த்து சம்பாதிக்க வேண்டியிருக்காது. !!

யார் நம்மிடம் கொள்ளை அடித்தாலும் என்ன பெரிய விஷயம் என்று நினைப்பதால்தான்.. நாமும் யாரிடமும் கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணம் எல்லா இடத்திலும் புரையோடிப்போயிருக்கிறது.

200 ரூபாய் கொடுத்தா குறைஞ்சா போயிடுவீங்கன்னு கேட்பவர்கள் அதிகமானதுக்குக் காரணம்.. எங்கெங்கு நோக்கிலும் இதுபோன்ற அடாவடி அல்லது அறிவாளித் திருடர்கள் அதிகரித்தால்தான்!

விலைவாசி எப்படி ஏறுகிறது என்று இப்போது புரியும் என்று நினைக்கிறேன். வேறு யாரும் ஏற்றவில்லை. நாம் கேள்வி கேட்கவிடாமல் வாங்குகிறோம். கேள்வி கேட்காமல் கொடுக்கிறோம்.

மீண்டும் செல்வேந்திரன்தான் நினைவுக்கு வருகிறார் !

“கண்டக்டரிடம் ஒரு ரூபாய்க்குச் சண்டை போடுபவனை ஏளனமாகப் பார்க்காதீர்கள்.. பாவம்! உழைத்துச் சம்பாதித்தவனாய் இருப்பான்!” என்ற ரீதியில் எழுதியிருப்பார்.

கொஞ்சம் விழிப்புணர்வுடன் கேட்போம்..!! நம் பிள்ளைகள் நம்மைப் பார்த்துதான் வளர்கின்றன ! ‪#‎கேட்டால்கிடைக்கும்‬

Sunday, April 27, 2014

Veள்ளி Black Colour ஜுவல்லரி


     அன்று நெருங்கிய நண்பரிடமிருந்து அழைப்பு…
     
இன்று மாலை தி.நகரில் இருக்கும் VBC ஜுவல்லரிக்கு வர முடியுமா? ஒரு பிரச்னை என்றார்.
     
விபரம் கேட்டேன்.

சொன்னார்.
     
அவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருந்தது. அதுசமயம், அவரது மனைவி வீட்டில் அந்த ஜுவல்லரியில் வெள்ளிச் சொம்பு, தட்டு, விளக்கு, குங்குமச்சிமிழ் உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப் பொருட்கள் வாங்கியிருக்கிறார்கள். திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் வந்தபின் , வாங்கிய வெள்ளிப்பொருட்களை அட்டைப்பெட்டியிலிருந்து பிரித்துப் பார்த்தபோது, கன்னங்கரேர் என்று இருந்திருக்கிறது. உடனே பயந்துபோய், எடுத்துக்கொண்டு அந்த ஜுவல்லரிக்குச் சென்றிருக்கிறார்கள். கடையில்,  அதைப்பற்றி எதுவும் அலட்டிக்கொள்ளாமல், உப்புக் காற்றுப் பட்டால் வெள்ளி கறுத்துப்போவது சகஜம்தான் என்று நண்பரை பல்வேறு காரணங்கள் சொல்லி, சமாதானப்படுத்தி, மீண்டும் பாலீஷ் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

     அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப்போய் 2 நாட்களில் மீண்டும் அனைத்து வெள்ளிப்பொருட்களும் வேகமாகக் கறுக்கத் துவங்கி, ஒரு வாரத்தில் மீண்டும் முழுக்கருமையை அடைந்திருக்கிறது. மீண்டும் கடைக்குப் படையெடுத்திருக்கிறார். மீண்டும் சமாதானம் …மீண்டும் பாலீஷ்..!! மீண்டும் நடந்தால் என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார். அதெல்லாம் நடக்காது நடந்தால் நாங்கள் மாற்றித் தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

     அது நடந்து மூன்றாவது முறை, நான்கே நாட்களில் மீண்டும் அனைத்துப்பொருட்களும் கருப்பாகவே, அதற்குப்பிறகுதான் என்னை அழைத்திருக்கிறார். அந்த வெள்ளிப் பொருட்களைப் பார்த்து அதிர்ந்தே போனேன். கருப்பு கிரானைட்டில் செய்யப்பட்டதைப்போல் இருந்தது.



     நான் அவரிடம், உங்களுக்கு வேறு வெள்ளிப்பொருட்கள்   வேண்டுமா? அல்லது என்ன செய்யலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்…

     இல்லை. அந்த ஜுவல்லரி மேல் நம்பிக்கை போய்விட்டது. எனக்கு வெள்ளிப்பொருட்கள் வேண்டாம். அவற்றை திரும்பக்கொடுத்து, என் பணம் திரும்ப வேண்டும் என்று கேட்டார்.

     ஆகவே, அன்று மாலையே அந்த ஜுவல்லரியை அடைந்தோம்.
     நண்பர் அனைத்து வெள்ளிப்பொருட்களையும் கொண்டு வந்திருந்தார். ஏற்கனவே அவர் சந்தித்த, வெள்ளி செக்‌ஷன் பொறுப்பாளரைச் சென்று பார்த்தோம்.
     சார்! மறுபடியும் எல்லா வெள்ளிச் சாமானும் கருத்துப்போச்சு! என்று நண்பர் துவங்க..
     ஆமா சார்! நாந்தான் முன்னாடியே சொன்னேனே… வெள்ளின்னாலே கருத்துத் தானே போகும்..!! குடுங்க உடனே உங்களுக்கு பாலீஷ் போட்டுத்தரச் சொல்றேன். என்றார்.
     இல்லை.. இவ்வளவு மோசமா எந்த வெள்ளிப் பாத்திரமும் கருத்துப்போய் நான் பாத்ததில்லை. என்று நண்பர் சொல்ல,

அவரும் சளைக்காமல், அது உங்க ஏரியா காத்து, சூழ்நிலையை பொறுத்து இருக்கு.. என்று வாதாட ஆரம்பித்தார்.

அப்போது நண்பர் அவர் ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தி வரும் ஒரு வெள்ளிக் கும்பாவையும், ஒரு குத்துவிளக்கையும் எடுத்துக் காட்டினார். அது கருக்காமல் அப்படியே இருந்தது.

     அப்ப..இது மட்டும் ஏன் இப்படி இருக்கு சொல்லுங்க ! என்றதற்கு..

     அது பழைய காலத்து வெள்ளி …இப்படித்தான் இருக்கும்… இப்பல்லாம் வெள்ளி இப்படி இருக்கிறதில்ல.. என்று சமாளித்தார்.

     நான் என்னையும், “கேட்டால் கிடைக்கும்’ அமைப்பைப் பற்றியும், அறிமுகப்படுத்திக்கொண்டு , பேச்சினுள் நுழைந்தேன்.

     அப்போ… இதுல எதை நான் வெள்ளின்னு சொல்றது? அதைச் சொல்லுங்க ? என்றேன்.

     ரெண்டுமே வெள்ளிதான்..  இப்பல்லாம், மக்கள் ரொம்ப பளபளன்னு இருக்கணும்னு விரும்புறதால, கொஞ்சம் கெமிக்கல் கலந்திருப்பாங்க அவ்வளவுதான் என்றார்.

     அப்போ, இது தரமான வெள்ளி இல்லைன்னு நீங்களே சொல்றீங்களா? என்றேன்.

     அப்படியில்லை.. இதோ பாருங்களேன். எங்க கடையில் இருக்கும் அத்தனை வெள்ளிப்பொருளும் அப்படியே பளபளன்னுதானே இருக்கு ? என்று கேட்டார்.

     அப்போதுதான், அந்த டிஸ்ப்ளேயில் இருக்கும் வெள்ளிப்பொருட்களை நான் நுட்பமாக கவனித்தேன். அவை அனைத்துமே ஒரு ப்ளாஸ்டிக் கவரால் லேமினேட் செய்யப்பட்டு முழுமையாக மூடி வைக்கப்பட்டிருந்தன.

     அதை அப்படியே அவரிடம் சொல்லி.. அந்த பிளாஸ்டிக் கவரெல்லாம் நீக்கிட்டு நீங்க டிஸ்ப்ளேல காமிச்சா நான் நம்புவேன். என்றேன்.

     அதற்கு..இல்லை..தூசி படிஞ்சிரும் அதான் என்று சமாளித்தார்.

சரி..உங்கள் கடையின் வெள்ளி தரமானதாகவே இருந்துட்டுப் போகட்டும். எங்களுக்கு..இப்படிக் கறுத்துப்போகும் வெள்ளிப்பொருட்கள் வேண்டாம். எங்கள் பணத்தைக் குடுத்துருங்க! என்று கேட்டேன்.

     அதுக்கு முதலாளியைத்தான் நீங்க கேட்கணும். என்றார்.

நான் வாங்கும்போது முதலாளியைக் கேட்டா என்னிடம் வித்தீங்க…? அப்படிக் கேட்கணும்னா, நீங்களே கேட்டுட்டு வாங்க என்று நான் கொஞ்சம் குரலை உயர்த்த.

     அவரே கீழிறங்கி, முதலாளியைப் பார்த்துவிட்டு சிறிது நேரத்துக்குப்பிறகு வந்தார்.

     உங்க பிரச்னையையும், நீங்க யாருன்னும் முதலாளிக்கிட்ட சொன்னேன். நீங்க விரும்புறதால, உங்க பணத்தைத் திரும்பக் கொடுக்கச் சொல்லிட்டாரு.. என்று சொல்லி, தொகையைக் கணக்கிட ஆரம்பித்தார்.

     நான். இதில் கணக்குப் போட என்னங்க இருக்கு? வாங்கின தொகையை அப்படியே திரும்பிக் கொடுத்திருங்க! வெள்ளியை வேணும்னா எடை போட்டுப் பாத்துக்குங்க! அதில் ஏதாவது குறைஞ்சா கழிக்கலாம் என்றேன்.

     சரி என்று சொல்லிவிட்டு, நண்பர் பெயரில் செக் போட்டு எடுத்துக்கொண்டு வந்தார். அதைப்பார்த்ததும் எங்களுக்கு மீண்டும் ஒரு ஷாக்! சுமார் 94703 ரூபாய்க்கான பில்லுக்கு 1 சதவீதம் வரி 947 ரூபாய் கழித்திருந்தார்கள்.

     நண்பர் சூடாகிவிட்டார்.

உங்க பொருளைப்பயன்படுத்தவே முடியலைன்னு நான் திருப்பிக் கொடுக்கிறேன். அதற்கான பில்லும் என்கிட்ட இருக்கு! அதுவும் திருப்பித்தரேன். பில்லைக் கேன்ஸல் செய்வதுதானே முறை? அப்புறம் ஏன் வரி பிடிக்கிறீங்க என்று கத்த,

     பொறுப்பாளர், எங்களை முதலாளியிடம் அழைத்துச் சென்றார்.

முதலாளி, பதட்டத்துடன் காணப்பட்டார்.

     நான் பொறுமையாக எங்கள் நியாயத்தை எடுத்துச் சொன்னேன்.

அதெல்லாம் முடியாது. உங்களுக்காகத்தான் பணமே திருப்பித்தரேன்னு ஒத்துக்கிட்டேன். கட்டின வரியை நான் திருப்பி வாங்க முடியாது. இந்த பில்லுக்கான வரியை யார் கட்டுறது? இதுல என்ன 1000 ரூபாய்க்குக் கணக்குப் பாக்குறீங்க? குடுக்குறதை வாங்கிக்கிட்டு போங்க! என்று சீறினார்.

     ஆமா..உங்க கடையை நம்பி வந்து வாங்கி, கல்யாணச்சீரா வச்சு, கருத்துப்போன வெள்ளியை வச்சுட்டீங்கன்னு சம்பந்திக்குள்ள சண்டை வந்து , குடும்பமே நாறினாலும் பரவால்ல..!! மேலும் நம்பி வந்த வாடிக்கையாளரை துச்சமா மதிச்சு மூணு வாட்டி அலைய விட்டு, வெள்ளியே இல்லாத ஒண்ணை தலையில் கட்டுவீங்க அதுவும் பரவால்ல.. ஆயிரம் ரூபாய்க்கு நாங்க கணக்குப் பாக்கக்கூடாது. ஆனால், நீங்க மட்டும் விக்காத பொருளுக்கு எங்களிடம் வாட் வசூல் பண்ணுவீங்களா? அப்படியே வாங்குற எல்லா வாட்டையும் நேர்மையா வணிகவரி அலுவலகத்தில் கட்டுறீங்களா? செக் செஞ்சுருவோமா? கேன்ஸல் பில்லைத் திருப்பிக் கொடுத்தா, அந்த வாட் கழிச்சுக்கலாம்னு சாதாரண பி.காம் பட்டதாரிக்குக் கூட தெரியும். உங்கள்ட்ட வாங்குற வரைக்கும் வாடிக்கையாளர் புத்திசாலி, உங்க தப்பை கண்டுபிடிச்சிட்டா அவன் ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்படும்  பிச்சைக்காரன்..கிறுக்கனா? என்று ஒரு எகிறு எகிறினேன்.

அடுத்த நிமிடம் பழைய செக் கிழிக்கப்பட்டு, வாங்கிய அதே ரூ.94703 க்கான செக் கைக்கு வந்தது.

ஜுவல்லரி வைத்திருப்பவர்கள் எல்லாரும் பெரிய முதலாளிகள். அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று நாமாகவே நினைத்துக்கொண்டிருக்கிறோம். நம்மிடம் ஏதோ ஒரு விதத்தில் கறப்பதுதான் அவர்களது நோக்கம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் செய்யும் அத்துனை தகிடுதத்தங்களையும் நாம் தட்டிக்கேட்காத வரைதான் அவர்களால் ஆட முடியும். கொஞ்சம் எதிர்த்துக் கேட்க ஆரம்பித்தால் போதும். எல்லாம் சரியாகி விடும்.

நம்புவோம்.


கேட்டால்… கிடைக்கும்! 

Wednesday, February 26, 2014

ஆட்டோ மீட்டர் - கேட்டால் கிடைக்கும்






குற்றாலத்திலிருந்து தனியார் பேருந்தில் வந்து, சென்னை வடபழனியில் இறங்கும்போது காலை 6:20 ஆகியிருந்தது.

     கதவு திறந்தவுடன் வரவேற்கக் காத்திருந்தவர்கள்போல், ஆட்டோ டிரைவர்களின் கூட்டம் மொய்த்தது. இறங்கி,

விருகம்பாக்கம் போகணும். ஆனா மீட்டர் போட்டாத்தான் வருவேன்

என்று நான் சொல்லி , நாக்கை மடித்து உள்ளே வைப்பதற்குள் கூட்டம் காலி…!! என்னை விட்டுவிட்டு அடுத்த பயணியைத் தேடிச் சென்றுவிட்டார்கள்.

நான் விடவில்லை. அந்த வரிசையில் இருந்த சுமார் 15 ஆட்டோக்களிலும் வரிசையாகக் கேட்டேன். அனைவரது பதில்களும் இப்படி இருந்தன..

100 ரூபா ஆகும் சார்!

டேய்! சாருக்கு மீட்டர் போடணுமாம்.

வராது சார்!

என் மீட்டர் ரிப்பேர்.

சார் மீட்டர் போட்டாத்தான் வருவாராம்..நீ போறியா?

இப்போ இன்னாத்துக்கு சார் மீட்டரு 60 ரூவா வரும். 10 ரூபா சேத்து 75(!) ஆ குடுத்துருங்க!

மீட்டரெல்லாம் சும்மா சார்… அதெல்லாம் கட்டுப்படியாவாது.

பேப்பர்ல படிச்சுட்டு வராதீங்க சார்! சென்னைல எங்கயும் மீட்டர் போடுறதில்லை.

மீட்டர் போடுறேன். ஆனா, 80 ரூவா தரியா?

பக்கத்து ஏரியாக்கெல்லாம் மீட்டர் போடமுடியாது சார்!

கம்ப்ளெயிண்ட் செய்யலாமா என்று கேட்டதற்கும்.. பண்ணிக்க சார்! என்று அடாவடியாக ஒருவர் லந்தடித்தார்.

     வடபழனி போலீஸ் ஸ்டேஷன் பக்கம் திரும்பி நடந்தால், அங்கு ஷேர் ஆட்டோ கிடைக்கும். 10 ரூபாய்க்கு சென்று சேர்ந்துவிடலாம். ஆனால், என்னால் அப்படிச் செல்ல முடியவில்லை. நேராக வடபழனி காவல் நிலையம் சென்றேன். வாசலிலேயே ஒரு பேட்ரல் வண்டியில் ஒரு போக்குவரத்துக் காவலரும், சார்ஜெண்ட்டும் இருந்தார்கள். அவர்களிடம் சென்று விபரம் சொன்னேன்.

     உடனே இறங்கினார்கள். சார்ஜெண்ட் என்னிடம் வந்தார்.

“சார்.. நீங்க மறுபடியும் போய் மீட்டர் போடச்சொல்லுங்க…மாட்டேன்னு சொன்னான்னா , சரின்னு ஒத்துக்கிட்டு ஆட்டோவில் ஏறி இந்தப்பக்கம் வாங்க பிடிச்சுக்கிறேன். என்றார்.

அந்த வரிசையில் இருக்கும் எல்லா ஆட்டோவும் இதே தப்பைத்தான் செய்யுறாங்க … கேள்வியே வேண்டாம் எல்லாரையுமே பிடிக்கலாம் என்றேன்.

இருந்தாலும், நீங்க கையும் களவுமா பிடிச்சாத்தான் சார் நாங்க கேஸ் போடமுடியும் என்றார். சரி என்று ஒத்துக்கொண்டு, நானும், மீண்டும் அந்தச் சாலையில் நடந்தேன்.

ஏற்கனவே என்னிடம் தெனாவெட்டாக பதில் சொன்ன ஒரு டிரைவரிடம் சென்று, மீட்டர் போட்டு, விருகம்பாக்கத்துக்கு வரீங்களா என்றேன்.
அதற்கு..அந்த இளைஞன்.

இன்னா சார்.. யாருமே மீட்டர் போடலையா? அதான் சொன்னேன்ல.. சரி 100ரூபா குடுங்க.. மீட்டரெல்லாம் ஓடாது . என் மீட்டர் ரிப்பேர் என்றான்.

நான் அவன் கையைப் பிடித்துக்கொண்டேன். சார்ஜெண்ட் கூப்பிடு தூரத்தில் நின்று கொண்டிருந்தார்.

ஸார்…………..வாங்க! என்று கத்தினேன்.

அவர் அருகில் வரவும், மீட்டர் ரிப்பேராம். ரிப்பேரான மீட்டருடன் வண்டியை ஓட்டிக்கிட்டிருக்கார் . பாருங்க ! என்றேன்.

அதை அந்த இளைஞன் எதிர்பார்க்கவில்லை.

சார்ஜெண்ட்டும் விரைந்து வந்து, கூடவே வந்த காவலரிடம்..
இவனை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப்போங்க என்று சொல்லி, அவனிடமிருந்து ஆட்டோ சாவியை வாங்கினார்.

அதற்குள் ஆறேழு ஆட்டோ ஓட்டுனர்கள் கூடிவிட்டனர்.

சார்ஜெண்ட் சொன்னார்.

என்னய்யா.. ஒருத்தனும் மீட்டர் போட்டு ஓட்டமாட்டேங்கிறீங்களாம்..!! சார் வந்து கம்ப்ளெய்ண்ட் பண்றாரு!

என்கிட்ட கேக்கலையே சார்! நான் மீட்டர் போட்டு ஓட்டுவேனே என்று கூசாமல் பொய் சொன்னார் ஒருவர்.

நான் பிடித்துக்கொண்டேன்.
அப்படியா…? உடனே வாங்க ..மீட்டர் போடுங்க..விருகம்பாக்கம் போகணும். என்று சொல்லிக்கொண்டே அவரது ஆட்டோவில் எனது லக்கேஜை வைத்தேன்.

ஆனால், ஆட்டோவில் ஏறுவதற்கு முன்.. அங்கு வந்து நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கிய ஒரு தம்பதி மற்றும் சிலரிடம் சத்தமாகச் சொன்னேன்.

இங்க உள்ள ஆட்டோ எல்லாருமே நல்லவங்க…மீட்டர் போட்டுத்தான் ஓட்டுவாங்க.. எல்லாரும் ஏறிக்கிங்க…பேரமே பேசவேண்டாம்.என்று சொல்லி மூன்றுபேரை ஏற்றிவிட்டேன்.

சார்ஜெண்ட்டை நோக்கி மற்ற ஆட்டோக்காரர்கள் வந்தார்கள். அவர் அவர்களைத் திட்டிக்கொண்டிருந்தார். “ஏண்டா இப்படி பப்ளிக்கிட்ட அநியாயம் பண்றீங்க?”

நான், லக்கேஜை வைத்த ஆட்டோவில் ஏறி, ஆட்டோவை எடுக்கச் சொன்னேன்.

ஆட்டோ 20 அடி நகர்ந்திருக்கும். போக்குவரத்துக் காவலர்.. நான் முதலில் பிடித்துக்கொடுத்த இளைஞனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“காலங்காத்தால மீட்டர் போடலைன்னு வந்து எங்க உயிரை எடுக்குறான்” என்றார்.

உடனே ஆட்டோவிலிருந்து இறங்கி.. அவரை நோக்கிச் சென்றேன்.

யாரு சார் உங்க உயிரை எடுத்தது? போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துலேயே இருந்துக்கிட்டு தைரியமா மீட்டர் போடாம அடாவடி பண்றாங்கன்னா நீங்கதான் பப்ளிக் உயிரை எடுக்கிறீங்க..  இந்த அநியாயத்துக்கு நீங்கதான் காரணம்.. உங்களை வந்து பாத்த எனக்கு..உங்க உயரதிகாரியப் பாக்க எவ்வளவு நேரமாகும்? போய்ப் பாக்கவா? தட்டிக்கேக்க நேரம் ஒதுக்காத ஆள் நான் கிடையாது. இப்போ நீங்களும் சேந்து மாட்டுறீங்க! என்றேன். கடைசியாக என் ஊடக அடையாளத்தையும் சொன்னேன்.

அதிர்ந்தார்..

“சார் அதான் எங்கயோ பாத்தமாதிரி இருக்கேன்னு நினைச்சேன் என்று வழிந்துவிட்டு.....சார்! நான் உங்களைச் சொல்லலை .. டிரைவரைத்தான் சொன்னேன். பிரச்னையை பெருசு பண்ணாதீங்க சார்! என்று சொல்லி நான் ஏறிய ஆட்டோ டிரைவரிடம்..


சாரை பத்திரமா விட்டுட்டு வாய்யா ! என்று சொல்லி என்னை அனுப்ப யத்தனித்தார்.

இந்த ஸ்டாண்டில் யார் வந்து இறங்கினாலும், ஆட்டோவில் மீட்டர் போட வைங்க சார்! அப்போதான் கவர்மெண்ட்டுல வாங்குற சம்பளம் ஒட்டும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

அதுவரை இறங்கிய பயணிகளாகட்டும்.. அந்தப்பக்கம் ஆட்டோவில் பேரம்பேசி ஏறிக்கொண்டிருந்தவர்களாகட்டும்.. ஒருவராவது கவனிக்கவேண்டுமே… ம்ஹூம்..


தட்டிக் கேட்காதவரை எந்த டேஷையும் யாராலும் சரிசெய்யமுடியாது என்பதை உணர்ந்த பிறகு…இந்தியாவை புரட்டுவது பற்றிப் பேசலாம்.



Friday, May 24, 2013

குமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .


     



     சூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மாலை 6:10 ஆகியிருந்தது. அருகில் என்ன தியேட்டர் இருக்கிறது என்று பார்த்தால், குமரன் என்று போஸ்டர் ஒட்டியிருந்தது. உடனே அதே சாலையில் சென்று குமரனை அடைந்தேன்.

     டிக்கெட்டில் இருக்கை எண் எல்லாம் போட்டு கொடுத்தார்கள். அட! என்று எண்ணிக்கொண்டே உள்ளே சென்றால், வாங்கிய 80 ரூபாய்க்கு, தியேட்டர் ஓரளவு சுத்தமாகவே இருந்தது. மால் அளவு எதிர்பார்க்காமல் இருந்தால், நல்ல தியேட்டர்தான். இடைவேளையில், தண்ணீர் தாகமெடுக்க, குடிநீர் எங்காவது வைத்திருக்கிறார்களா என்று தேடினேன். இல்லை. தண்ணீர் பாட்டில் வாங்கலாம் என்று கேண்ட்டீனை அணுகினால், 25 ரூபாய் சொன்னார்.

     நான், அதன் MRP 20 தான். நீங்கள் அந்த விலைக்குத்தான் கொடுக்கவேண்டும். என்று சொன்னவுடன்,

’MRPன்னா…என்ன?’ ‘அதெல்லாம் தியேட்டருக்குக் கிடையாது.’ என்று அந்த ஆள் திமிராகச் சொல்ல,

’ஏன் தியேட்டர் என்ன எத்தியோப்பியாலயா இருக்கு! மொத்த இந்தியாவுக்கும் ஒரே சட்டம்தான் . நீங்க அதிகபட்ச சில்லறை விலைக்குத்தான் கொடுக்கணும்’ என்றேன்.

’இல்லை சார்! அதெல்லாம் தர முடியாது… கொஞ்சம் நகருங்க!’ என்று வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார். அதுவும் பல புரட்சியாளர்கள் அவர்கள் சொன்ன விலைக்கு வாங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.

எனக்கு தண்ணீர் தாகம் வேறு.. ஆனால், அ.சி.வி (அதிகபட்ச சில்லறை விலை) விட ஒரு ரூபாய்கூட அதிகம் கொடுத்து வாங்குவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். மீண்டும் அவரை சத்தமாகக் கேட்டேன். என்னைக் கண்டுகொள்வதாகவே இல்லை.

சுற்றுமுற்றும் பார்த்தால், மேலாளர் அறை அருகிலேயே இருந்தது. அங்கு சென்றேன். அது கண்ணாடிக்கதவு. நான்கைந்து பேர் உள்ளே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் நான் வெளியில் நிற்பதைப் பார்த்துவிட்டு, கதவைத்திறந்துகொண்டு வந்தார்.

மேனேஜரைப் பார்க்கணும் என்றேன்.

உள்ள ஓனர் உக்காந்திருக்காரு! என்ன விஷயம்?  என்றார்.

“சார்! நான் வாட்டர் பாட்டில் வாங்க வந்தேன். 20 ரூபாய் பாட்டிலை 25 ரூபாய்க்கு விக்கிறாங்க! அது சட்டப்படி குற்றம். அ.சி.வி க்கு மேல் விற்கப்படும் அனைத்துப் பொருட்களையும் என்னால் பறிமுதல் செய்ய வைக்க முடியும். நீங்கள் சொந்தமாக பாக்கெட் போட்டு விற்கும் பொருளுக்கு என்ன விலை வைத்தாலும் அது உங்கள் பொறுப்பு. ஆனால், விலை அச்சிடப்பட்டுள்ள பொருளில் அதைவிட அதிகமாக விற்கக்கூடாது.” என்றேன்.

ஒரு நிமிஷம் இருங்க! என்றுவிட்டு உள்ளே சென்றார்.

மீண்டும் வெளியில் வந்தார். நேராகக் கேண்ட்டீன் சென்றார். விற்பனையாளரிடம் ஏதோ பேசினார். ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தார். என்னிடம் வந்தார். கொடுத்தார்.

நான்  20 ரூபாய் பணம் கொடுத்தேன். 

அதெல்லாம் வேண்டாம் சார்! என்றார்.

நான் உங்களிடம் சும்மா கேக்கலை. அதிக விலை வைத்து விக்காதீங்கன்னேன். இதுக்கான விலையை வாங்கிக்குங்க என்று பணத்தை நீட்டினேன். வாங்கி கடைக்காரரிடம் கொடுத்தார். கேட்டால் கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.

இதை எவ்வளவுக்கு விக்கிறீங்க என்றார்…

25 என்றான் இன்னொரு விற்பனையாள இளைஞன்.

ஏண்டா இவ்ளோ ஜாஸ்தியாக்கிட்டீங்க… என்று கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்துவிட்டார்.


     எல்லாப் பொருட்களுமே திரையரங்க கேண்ட்டீன்களில் விலை அதிகமாகத்தான் இருக்கின்றன. இதை யாரும் கேட்பதும் இல்லை. வாடிக்கையாளர் குறைவு..! முழுநேரக் கடை இல்லை.. என்ற பல காரணங்கள் சொல்லலாம். ஆனால், உங்கள் திரையரங்கில் நுழைந்த ஒரு காரணத்துக்காகவே வந்தவனின் டவுசரை உருவுவது எந்தவிதமான வியாபார நோக்கம் என்று புரியவில்லை.

       ஆனால், இதில் நான் முழுமையாகக் குற்றம் சாட்ட விரும்புவது பொதுமக்களைத்தான். நான் அவ்வளவு நேரம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன்.  யாரும் கண்டுகொள்ளக்கூட இல்லை. குறைந்தபட்சம்  15 பாட்டில்கள் விற்பனை ஆகியிருந்தன.  ஒரு சிறு எதிர்ப்பைக் கூட தெரிவிக்காமல், தனக்கான தீனியில் மையம் கொண்டிருந்தார்கள். இவர்களால்தான் தவறு செய்பவர்களுக்கு தைரியம் வருகிறது. 

    தனக்கு முன்னால் நடக்கும் சிறு தவறைக்கூட தட்டிக்கேட்க திராணியற்ற கூட்டத்துக்கு , தன் இனத்துக்கு நடக்கும் மிகப்பெரிய துரோகங்களை தட்டிக்கேட்க எங்கிருந்து திராணி வரும்..?





Friday, February 8, 2013

கேட்டால் கிடைக்கும் - கூட்டம்


    
  

   சமூகத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளைக் கண்டு கூட சீற்றம் கொள்ளாதவர்களால் , இந்த தேசத்தின் நடக்கும் எந்த ஒரு பெரிய அநியாயத்தையும் கண்டு பொங்கவே முடியாது  என்பது எனது ஆணித்தரமான நம்பிக்கை.! இன்றைய காலகட்டத்தில் நம்மைச்சுற்றி அதிக அநியாயங்கள் நடப்பதற்கும் நாம்தான் காரணம்.! பல்வேறு இடங்களில் நடக்கும் சிறு சிறு அநீதிகளைத் தட்டிக்கேட்கத் தொடங்கினாலே போதும்! மாற்றம் நிச்சயம்!

கேட்டால் கிடைக்கும் என்ற முகநூல் குழுமத்தை நானும், நண்பர் கேபிள் சங்கரும் தொடங்குவதற்குக் காரணமே அடிப்படையில் எங்களுக்கு இருந்த தட்டிக்கேட்கும் குணம்தான்..! குழுமத்தைத் தொடங்கி, எங்கள் அனுபவங்களை எழுத ஆரம்பிக்கவும், ஒத்த குணம் கொண்டவர்களும், இதுபோல் நாமும் தட்டிக்கேட்க வேண்டும் என்று நினைத்தவர்களும் சேரத்துவங்கினார்கள்.

எங்களது சொந்தப் பிரச்னைகள் தவிர, பல்வேறு நண்பர்களின் பிரச்னைகள் எங்களிடமே வந்து, நாங்களும் அவற்றை முறையாகத் தட்டிக்கேட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். குழுமத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 3000த்தைத்  தாண்டியிருக்கிறது. எனவே, இந்தக் குழுமத்தை முழுமையான பதிவுசெய்யப்பட்ட இயக்கமாக மாற்றலாம் என்று முடிவுக்கு வந்து, அதற்கான முயற்சிகளை எடுக்கத் தொடங்கியாகிவிட்டது.

இந்நிலையில் சென்ற 2.2.2013 சனிக்கிழமை அன்று கேட்டால் கிடக்கும் குழுமத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதற்கு முகநூலில் குழுமப் பக்கத்தில் ஒரு நிலைத்தகவல் மட்டும்தான் போட்டிருந்தோம். அதை வைத்து கூட்டத்துக்கு வந்தவர்கள் உண்மையில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.

அவர்களையே பதிவுசெய்யப்படும் இயக்கத்தில் நிர்வாகிகளாகப் போடலாம் என்று முடிவெடுத்துள்ளோம்.

அன்றைய கூட்டத்தில் ,  மிகச்சிறப்பாக அனைவரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

டிஸ்கவ்ரி புக் பேலஸின் வேடியப்பன் , ஏர் டெல்லில் இருந்து 4800 ரூபாயைத் திரும்பப் பெற்றிருக்கிறார்.

சுதர்சன் என்ற முகநூல் நண்பர், உணவகத்தில் சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் அநியாயமாக அதிகரித்துப் போடப்பட்ட தொகையை கழிக்க வைத்திருக்கிறார். அவரைப் பார்த்து அருகிலிருந்த ஒரு நண்பர்கள் கூட்டமும் அதிகமான தொகையை திரும்பப்பெற்றிருக்கிறார்கள்.

நாராயணன் என்ற நண்பர், பி.எஸ்.என்.எல்லுடன் போராடி நியாயம் கிடைத்திருக்கிறது. மேலும் சில பிரச்னைகளுக்காக, இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார்.

கோபிநாத் என்ற முகநூல் நண்பர், இந்தக் குழுமத்தில் சேர்ந்த்பிறகு தட்டிக்கேட்க வேண்டும் என்ற தைரியம் வந்திருப்பதாக அழுத்திச் சொன்னார்.

பதிவர் பிரதீப்குமார், கேட்டால் கிடைக்கும் என்ற தைரியம் தனக்குள் வந்திருப்பது பற்றிச் சொன்னார். கேபிள் சங்கரிடம் அவர் வைத்த வாதங்கள் சுவாரஸ்யமானவை!

பதிவர் மெட்ராஸ்பவன் சிவக்குமார், கேட்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இந்தக்குழுமம் விதைத்திருப்பதையும், சத்யம் தியேட்டரில் கோக் விற்பனையில் நடைபெறும் கோக்குமாக்கையும் விரிவாகச் சொன்னார்.

கேபிள் சங்கர், அவர் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள் பற்றியும் அதனை அவர் அணுகும் விதம் பற்றியும் தெளிவாக எடுத்துச்சொன்னார். போலீஸ், உணவகங்கள், டாஸ்மாக், தியேட்டர் என்று பல்வேறு இடங்களில் நடந்த பிரச்னைகள் பற்றி விளக்கமாகச் சொன்னார்.

கேட்டால் கிடைக்கும் குழுமம் தொடங்கியதிலிருந்து , பிப்ரவரி 2ம் தேதிவரை, பல்வேறு நண்பர்கள் மற்றும் குழும உறுப்பினர்களிடமிருந்து வந்த பிரச்னைகள் பலப்பல..! அவற்றில் பெரும்பான்மையானவை நேரடியாக நான் தலையிட்டுப் பேசியதன் மூலம் தீர்வுக்கு வந்திருக்கிறது. அவ்வாறு இந்த ஒரு ஆண்டில் 53 பிரச்னைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன என்று சொன்னேன்.

அதில், பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், வீட்டு உபயோகப் பொருள் விற்பனையாளர்கள், பார்சல் நிறுவனங்கள், கார் விற்பனையாளர்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள், வங்கிகள், உணவகங்கள், திரையரங்கங்கள், ஒரு பத்திரிக்கை நிறுவனம், கல்வி நிறுவனங்கள், கணிப்பொறி பயிற்சி நிலையங்கள் என்று வெவ்வேறு இடங்கள் அடக்கம். இவை அனைத்திலும் நாம் நமக்கு என்ன தேவை என்பதையும், அரசின் சட்டங்களையும் முன்னிறுத்தி கொஞ்சம் அழுத்தமாக, தெளிவாகப் பேசியதன் மூலம் பிரச்னைகள் முடிவுக்கு வந்தன.

மேலும், சந்திப்பிற்கு, கே.ஆர்.பி செந்தில், காவேரி கணேஷ் ,சுகுமார் சுவாமிநாதன்,  ஜெயக்குமார் ஆகியோர் வந்திருந்து தனது கருத்துக்களை மிகவும் தெளிவாகவும், பயனுள்ளவகையிலும் பகிர்ந்துகொண்டனர்.

விரைவில் கேட்டால் கிடைக்கும் என்ற இயக்கம் சென்னையில் பதிவு செய்யப்பட இருக்கிறது.

செல்வேந்திரனின் ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
      பொது இடங்களில்
ஒரு ரூபாய்க்குச்
சண்டைபோட்டுக்கொண்டிருப்பவனை
ஏளனமாகப் பார்க்காதீர்கள்.
பாவம்..
உழைத்துச்
சம்பாதிப்பவனாய் இருப்பான்!

கூட்டத்துக்கு அஞ்சாமல் செயல்படத்துவங்கினாலே போதும்…கேட்டால்.கிடைக்கும்!



Saturday, December 15, 2012

நானோ சர்வீஸ்..கேட்டால் கிடைக்கும்



     





     நானோ கார் வாங்கும்போதே, சர்வீஸுக்கான புத்தகமும் கொடுத்தார்கள். அதில் முதல் இலவச சர்வீஸுக்கு – 1500 கிலோமீட்டர் அல்லது மூன்று மாதங்கள் – இதில் எது முதலில் வருகிறதோ, அதில் பயன்படுத்திக்கொள்ளவும் என்று போட்டிருந்தார்கள். நானும் முதல் மூன்றுமாதம் கழித்து பார்த்தால், 750 கிலோமீட்டர்தான் ஓடியிருந்தது. (அந்தக்காலகட்டத்தில் நான் நிறைய வெளி மாநிலங்களில் சுற்றிக்கொண்டிருந்ததால், காரைப் பயன்படுத்த வாய்ப்பே  கிடைக்கவில்லை) இன்னும் கொஞ்சம் ஓட்டிவிட்டுக்கொடுத்தால்தானே வண்டி சர்வீஸ் விட்டதற்கு அர்த்தம் இருக்கும் என்று நானும் பொறுமையாக இருந்தேன்.

அப்புறம் கொஞ்ச நாட்கள் சென்னைக்குள் ஓட்டிக்கொண்டிருந்துவிட்டு, ஒரு திருப்பதி பயணம், சென்று வந்தால், 1400 என்று காட்டியது. ஓக்கே இந்தவாரம் சென்றுவிடலாம் என்று நினைக்கும்ப்போது ஒரு திடீர் திருச்சி பயணம்… போய்விட்டு வந்து பார்த்தால் 2200 கிலோமீட்டர் ஓடிவிட்டது என்று போட்டிருந்தது. ஆஹா…சர்வீஸ் செய்யவேண்டிய கட்டத்தை கடந்திருக்கிறதே என்று உடனே நானோவின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்ட்டருக்கு ஓட்டிச்சென்றேன்..
அங்குதான் ஆரம்பமானது கச்சேரி !

     நல்ல இன்முகத்துடன் வரவேற்று , சர்வீஸ் ஷீட் எல்லாம் போட்டவர்கள். கிலோமீட்டர் ரீடிங்கைப் பார்த்தவுடன்,
ஸாரி ஸார்..! இந்த வண்டிக்கு இலவச சர்வீஸ் செய்யமுடியாது..! எங்க சர்வீஸ் லிமிட்டை விட 700 கிலோமீட்டர் அதிகமா ஓடியிருக்கு.. நீங்க 650 ரூபாய் கட்டவேண்டியிருக்கும் என்றார்கள்.

நானும், அதே இன்முகத்துடன்..

 1400 கிலோமீட்டர் ரீடிங் காட்டும்போது அர்ஜெண்ட்டா திருச்சி போறேன்.. திண்டிவனத்துக்கிட்ட 1500 காட்டுது… அங்கயே அப்படியே நிறுத்திட்டு, சர்வீஸ் செஞ்சுதான் நான் வண்டியை எடுத்திருக்கணுமா என்றேன்.


அது தெரியாது சார்… வேணும்னா டாட்டா மோட்டார்ஸ் காரங்ககிட்ட நேரா பேசிக்குங்க என்றார்.

முதலில் டோல் ஃப்ரீ எண்ணுக்கு அழைத்து விபரம் சொன்னேன். அந்த இளைஞர் ,
அது ஒண்ணும் பிரச்னையே இல்லை சார்.. முதல் சர்வீஸ் 1500 கிலோமீட்டர்க்குள்ள நீங்க செஞ்சிருக்கணும்.. விட்டுட்டீங்க.. இப்போ, இரண்டாவது இலவச சர்வீஸுக்கான ஸ்லிப்பைக் கொடுத்து, இந்த சர்வீஸை இலவசமா செஞ்சுக்குங்க என்று ஆலோசனை சொன்னார்.

இது பரவாயில்லையே என்று எண்ணிக்கொண்டே, இரண்டாவது இலவச சர்வீஸ் ஸ்லிப்பைப் பார்த்தேன். 10000 கிலோமீட்டர் அல்லது ஒரு ஆண்டு என்று போட்டிருந்தது. அதாவது 2200 கிலோமீட்டர் ஓட்டியிருந்த நான் 10000 கிலோமீட்டர் ஓட்டினால் செய்துகொள்ளவேண்டிய சர்வீஸை பயன்படுத்திக்கொள்ளலாமாம்.

சுர்ரென்று ஏறியது..

சர்வீஸ் ஸ்டேஷனில்..
நீங்க சர்வீஸ் செஞ்சு வச்சாலும், இல்லைன்னாலும் இந்தப் பிரச்னை தீராமல் நான் காரை திரும்ப எடுக்கப்போவதில்லை என்று சொன்னேன்.

அவர்களும்..
நாங்க சர்வீஸ் செஞ்சு வச்சுடுறோம் சார். டாட்டாவிலிருந்து உங்களுக்கு இலவச சர்வீஸ் செய்யச்சொல்லி ஒரு மெசேஜ் வந்தா போதும் என்றதுடன், டாட்டாவின் தமிழக டிவிஷன் மேனேஜரின் மெயில் ஐடியும் தந்தார்கள்.

வீட்டுக்கு வந்தேன்.

அவருக்கு ஒரு மெயில் அடித்தேன். அதன் சாராம்சம் இதுதான்..!!

    1500  கிலோமீட்டர் அல்லது 3 மாதம் என்று போட்டிருக்கிறீர்கள். அவசர வேலையாகச் செல்லும்போது மீட்டர் ரீடிங் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. 700 கிலோமீட்டர் வித்தியாசத்தில் சர்வீஸ் செய்ய முடியாது என்று சொல்லும் உங்கள் சட்டம்,  7800 கிலோமீட்டர் வித்தியாசத்தில்  10000 கிலோமீட்டருக்கான இரண்டாவது சர்வீஸை இப்போதே செய்துகொள்ள எப்படி ஒத்துக்கொள்கிறது.?

   சர்வீஸ் செய்யாமல் ஓட்டி, அதனால், வண்டி ஏதேனும் பழுதாகியிருக்கும் பட்சத்தில், நான் முன்னரே சர்வீஸ் செய்யாததால்தான் இது நேரிட்டது என்று ஒத்துக்கொள்வேன். அப்போது நான் இலவச சர்வீஸ் கேட்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால், வண்டி நன்றாக இருக்கிறது. நீங்கள் செய்யவேண்டிய சர்வீஸைத்தான் கேட்கிறேன். அதற்கு சட்டதிட்டங்களைக் காரணம் காட்டுவது மிகவும் வருத்தமாக உள்ளது.

நிறுவனம்,  இதயமுள்ள மனிதர்களால் அமையவேண்டுமே அன்றி இற்றுப்போன சட்டங்களால் அல்ல!


  நான் டாட்டா மீது நம்பிக்கையும், பற்றும் வைத்திருப்பதால்தான் நானோ வாகனத்தை வாங்கினேன். இதுபோன்ற சம்பவங்கள் ஒரு வாடிக்கையாளரை உங்களை விட்டு விலகவைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.


இவ்வாறு அனுப்பிய மெயிலுக்கு பதிலாக, அடுத்த நாளே அந்த மேலாளர் நேரடியாக தொலைபேசினார். முதலில், எதுவும் செய்யமுடியாது என்பதுபோல் ஆரம்பித்தார். மீண்டும் , அவரிடம் சூழலைச் சொன்னேன். அவரும்.. எங்கள் நிறுவன விதிப்படி.. மூன்று மாதத்துக்குள் இந்த சர்வீஸை முடித்திருக்க வேண்டும். இருந்தாலும், உங்கள் மெயிலில் இருந்த நியாயத்தைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கு இலவச சர்வீஸ் செய்ய அனுமதி அளித்திருக்கிறோம்.  என்று சொன்னார்.

சிறிது நேரத்தில், சர்வீஸ் ஸ்டேஷன் மேலாளர் அழைத்து

” நீங்க நேரடியா கம்பெனியை தொடர்புகொண்டு பிரச்னையை முடிச்சுக்கிட்டீங்க சார்..! ஆனா நிறைய கஸ்டமர் நேரா எங்களைத் திட்டிட்டு , பணத்தையும் கட்டிட்டு போறாங்க சார்.. மற்றபடி, உங்கள் கார் ரெடி சார்! எடுத்துச் செல்லுங்கள்!!! என்றார்.

சென்றேன் . எடுத்தேன். வந்தேன்..!!

அதனால்தான் அழுத்திச் சொல்கிறோம். கேட்டால் கிடைக்கும்!



Friday, August 24, 2012

இரண்டு பஸ்களும் ஒரே தீர்வும் !



சென்ற ஜூலை முதல் வாரத்தில், கேட்டால் கிடைக்கும் குழும உறுப்பினர் சண்முகம் அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதன் சாராம்சம் இதுதான்:



   கடந்த ஜூலை 1ம் தேதி இரவு அவர் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் ஏறவேண்டும். ஆகவே அன்று காலையில் புறப்பட்டு சேலத்திலிருந்து சென்னை வருவதற்காக Redbus.com ல் பஸ்ஸில் வர டிக்கெட் முன்பதிவு செய்கிறார். அதன்படி பஸ் காலை 11 மணிக்கு கிளம்பும் என்று தெளிவாகப் போட்டிருக்கிறது. அவரும் பத்து மணிக்கெல்லாம் கிளம்பி ஏறவேண்டிய இடத்துக்கு வந்து நின்றுகொண்டு, பஸ் கம்பெனிக்கு போன் செய்கிறார். அவர்களும் 11 மணிக்கு வந்துவிடும் காத்திருங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் 11 மணி தாண்டியும் வண்டி வந்த பாடில்லை. மீண்டும் கம்பெனிக்கு போன் அடித்து , நான் காத்திருக்கிறேன் பஸ் வரவில்லையே என்கிறார். அப்போதுதான் அவர்கள் அந்த குண்டைப் போடுகிறார்கள். நீங்கள் செல்லவேண்டிய பஸ் இரவு 11 மணிக்குத்தான் கிளம்புகிறது. இப்போது ஏன் காத்திருக்கிறீர்கள்?. அதிர்ச்சியடைகிறார். மீண்டும் ரெட்பஸ்ஸின் டிக்கெட்டைப் பார்க்கிறார். தெளிவாக 11AM என்று போட்டிருக்கிறது. ரெட்பஸ்ஸுக்கு போன் செய்து விசாரிக்கிறார். அவர்களிடம் சரியான பதிலில்லை. தனக்கு நேரமாகிவிட்டது என்று உடனே ஒரு டாக்ஸி பிடித்து 6000 ரூபாய் கொடுத்து சென்னை வந்து சேர்கிறார்.

அவர் அமெரிக்கா சென்றபின் , இதை எனக்கு ஜூலை 4 அன்று மின்னஞ்சல் அனுப்புகிறார்.

நானும், அவரிடம் தேவையான ஆவணங்களை வாங்கிக்கொண்டு, ரெட்பஸ்ஸின்  support@redbus.in  க்கு ஒரு மின்னஞ்சல் ஜூலை  5ல்  அனுப்பினேன்.

முழு விபரத்தையும், சுருக்கமாகச் சொல்லி, தவறான தகவலுடன் டிக்கெட் புக் செய்தது உங்கள் தவறு.! அவரது பயணச்செலவுக்கு நீங்கள்தான் பொறுப்பு.! இந்த விஷயத்தை உடனடியாக தீர்க்கவில்லையெனில்… ரெட்பஸ்ஸுக்கு எதிராக சுமார் 1500 மின்னஞ்சல்கள் ஒரே நாளில் வரும் என்றும்.. இது சம்பந்தமாக சட்டப்படி அணுகுவதற்குமுன் ஒரு நல்ல முடிவை எடுங்கள் என்று ஒரு நுகர்வோரின் சார்பாகவும், ஒரு குழுமத்தின் நிர்வாகியாகவும் எழுதியிருந்தேன்.

ஜூலை  10 ம்தேதி அன்று ரெட்பஸ்ஸின் Alok Goel - Chief Product Officer, சண்முகம் அவர்கள் செலவழித்த தொகை அனைத்தையும் திரும்பத்தருவதாகச் சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டார். அதாவது ரூபாய் 6000 +700 = 6700.

கேட்டால் கிடைக்கும் என்று போராடியதால்தான் சாதிக்க முடிந்தது என்று சண்முகம் மிகவும் மகிழ்ச்சிப்பெருக்குடன் நன்றி சொல்லி மின்னஞ்சலிட்டார்.

முடிந்தது.

அடுத்து..


மயில்சாமி அவர்கள் கடந்த ஆகஸ்டு 12ம் தேதி திருச்சியிலிருந்து சென்னை வர அபி&அபி ட்ராவல்ஸ் பஸ்ஸுக்காக, MAKEMYTRIP.COMல் நான்கு டிக்கெட்கள் புக் செய்திருக்கிறார். அவர்களுக்கான பஸ்ஸில் ஏறும்போதுதான் தெரியவருகிறது. அவர்களது சீட்டில் வேறு சிலர் அமர்ந்திருப்பது…! அதை அபி & அபியிடம்  கேட்டபோது, ‘இந்தப்பயணிகள்தான் எங்களிடம் புக் செய்தவர்கள்’ நீங்கள் வைத்திருக்கும் டிக்கெட் எங்கள் டேட்டாபேஸில் ஆகஸ்ட் 22ம் தேதிக்கானது. நீங்கள் சொல்லும் MAKEMYTRIP.COMக்கும் எங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். இந்தப் பிரச்னை இவர்கள் 4 பேருக்கு மட்டுமல்ல. இதேபோல் 15 பேர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், இரக்கப்பட்டு, அபி&அபி மீண்டும் பணம் வாங்கிக்கொண்டு ஒரு சிறப்பு(!) பேருந்தை சென்னைக்கு இயக்கியிருக்கிறார்கள். மிச்ச டிக்கெட்டை பஸ் ஸ்டாண்டில் சென்று நிரப்பிய கதை தனி! ஆக.. மிகவும் போராடி சென்னை வந்து சேர்ந்திருக்கிறார். மேலும், மேக் மை ட்ரிப்பை அணுகி பேசியபோது சரியான பதில் சொல்ல ஆள் இல்லை. அல்லது இதோ அதோ என்று இழுத்திருக்கிறார்கள். பின்னர் ஆகஸ்டு 18 அன்று என்னிடம் பேசினார்.
இது முழுக்க முழுக்க MAKE MY TRIP ன் தவறுதான். அவர்கள்தான் நஷ்டத்தை ஏற்கவேண்டும் என்றேன். மேக் மை ட்ரிப்புக்கும் தனக்கும் எந்த ஒரு நேரடித் தொடர்பும் இல்லை என்று அபி& அபியிடம் ஒரு மின்னஞ்சலும் வாங்கியாயிற்று.!
அதன்படி அந்த அனைத்து ஆதாரங்களையும் இணைத்து,  அவரும் ஒரு மின்னஞ்சல் அனுப்ப, நானும் ஆகஸ்டு 21ம் தேதி காலையில் busservice@makemytrip.comக்கு எப்பவும்போல, விளக்கம்சொல்லி, நுகர்வோரின் பலம் சொல்லி, மேக் மை ட்ரிப்புக்கு எதிராக ஆன்லைனில் போராட்டம் நடத்தப்படும் என்று லைட்ட்ட்டாக மிரட்டி, .ஒரு மின்னஞ்சல் அனுப்ப..

அடுத்த நாளே மயில்சாமி போன் செய்தார்.

”தேங்க்யூ சுரேகா! மேக் மை ட்ரிப்பிலிருந்து எங்கள் டிக்கட் பணத்தை திரும்பத் தருவதாக மெயில் வந்திருக்கிறது.” என்றார்.

இதுவும் முடிந்தது.


     
       நானும், கேபிளும் எதேச்சையாக செய்யும் விஷயத்தை எல்லோரும் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டதன் விளைவு இன்று பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்பதை நினைக்கும்போது பெருமையாய் இருக்கிறது.

   நமது தனிமனித தட்டிக்கேட்கும் குணம் குறைந்து போயிருப்பதால்தான் இதுபோன்ற அமைப்புக்கள் தேவைப்படுகின்றன என்று நினைக்கும்போது வெட்கமாகவும் இருக்கிறது.

  எங்கள் ஊரில் மிகப்பெரிய அன்னதானக்கூடம் இருக்கிறது 1 லட்சம் பேர் தினமும் சாப்பிடுகிறார்கள் என்று சொன்னால் அது பெருமை இல்லை. 1 லட்சம் பேர் பட்டினியாக இருந்திருக்கிறார்கள் என்றும் அர்த்தப்படும். எனினும்..

  தொடர்ந்து போராடுவோம். நம் ஊரின் சாக்கடை நாற்றத்துக்கு செண்ட் அடிக்கமுடியாது. இறங்கித்தான் அள்ளவேண்டும்.

கை கோர்ப்பவர்களுக்கு மீண்டும் நன்றி!


இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...