Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Friday, July 17, 2015

வெறும் கணக்கு



விகடனில், எஸ்.ராவின் ‘வெறும் கணக்கு’ சிறுகதை எனக்குள் பல
நினைவலைகளையும், நெகிழ்ச்சியையும் உண்டாக்கிவிட்டது.
பண விஷயத்தில், யாராலும் நம்பப்படாத ஒருவர், தன்னை நம்பிய ஒருவரின் மரணச் செலவை பைசா சுத்தமாக அவரது மகனிடம்
ஒப்படைக்கும் நிகழ்வை இத்தனை அற்புதமாக, நுட்பமாக எழுதி எஸ்.ரா எப்போதும்போல் நம் மனதில் தனக்கான சிம்மாசனத்தை இன்னும் பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில், எத்தனை பேர் அன்றாடச் செலவுகளை பைசா சுத்தமாக கணக்கு எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் பெரும்பாலும் எழுதி எக்ஸலில் பதிவு செய்துவிடுவேன். அது பல விதங்களில் உதவியிருக்கிறது. அதனை நான் சந்திக்கும், பயிற்றுவிக்கும் அனைவருக்கும் சொல்லி வருகிறேன்.
ஏனெனில் செலவில் நமக்கிருக்கும் விழிப்புணர்வே நமது வருமானத்தைப் பற்றிய அறிவை அதிகமாக்கும் என்பது எனது எண்ணம். அதைப் பின்பற்றும் பலரும் கிடைத்த மகிழ்ச்சியையோ, கவன உணர்வையோ பகிர்ந்துகொள்ளும்பொழுது இன்னும் பெருமையாக இருக்கும்.
இந்தக் கணக்கெழுதும் விஷயத்தில் எனது தந்தைதான் எனக்கு
முன்னோடி.எத்தனை அதிக வேலைப்பளு இருந்தாலும், அன்றாட செலவுக்கணக்கை மிகச்சரியாக எழுதிவைத்துவிட்டுத்தான் தூங்கப்போவார்.
மிகக்குறைவான
வருமானத்தில்கூட, அதனை தவறாமல் செய்து வந்து, இன்றும் அந்தக் கணக்கெழுதும் வழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
எத்தனையோ தருணங்களில், அவரது கணக்கு நோட்டின் மூலம், முன் ஆண்டுகளில் புதுக்கோட்டை -
சென்னை பேருந்துக் கட்டணம் 55ரூபாய் ,
வசந்தவிஹார் சாப்பாடு 5ரூபாய்,
ஒரு சீப்பு வாழைப்பழம் 1ரூபாய் ,
சாரதாஸில் வாங்கிய சட்டை 44 ரூபாய்,
திண்ணை பூச கொத்தனாருக்குக் கொடுத்த நாள் கூலி 10 ரூபாய் என்று பல நிகழ்வுகள், பொருட்களின் விலைவாசியைத் தெரிந்துகொள்ளும்போது பொருளியலே படித்த அளவுக்கு சிந்தனை விரிந்திருக்கிறது.
ஒரு திருமண நிகழ்வு மாதிரியான குடும்ப விழாக்களில் அதன் மொத்தச் செலவையும் எழுதி வைத்து, பின்னர் எடுத்துப் பார்க்கும்போதோ, அந்தச் செலவுக்குப் பிறகு , மிச்சமிருக்கும் தொகை சரியாக இருக்கும்போதோ கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதேபோல் அந்த விழா வீட்டினர் , நம்மிடம் கொடுத்த தொகைக்கு சரியான இரசீதுகளுடன் கணக்குக் கொடுத்துவிட்டு, நிமிர்ந்து நடக்கும் பெருமை அதைவிட அலாதி!
பொதுவாக இப்போது நம்மில் எத்தனை பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னால், எல்லா வீடுகளிலும் ஒரு கணக்கு நோட்டு இருந்திருக்கும்.
இந்த நினைவுகள் அனைத்தையும் தூண்டி , நெகிழவும் மகிழவும் வைத்த எஸ்.ராவுக்கு அழைத்துப் பேசியபின்னரும் மீதமிருக்கிறது உணர்வின் மிச்சம்!
நன்றி எஸ்.ரா , இப்படிப்பட்ட உணர்வுகளைப் பதிவு செய்தமைக்கு! நீங்கள் எங்கள் பொக்கிஷம்!

Saturday, May 23, 2015

அருகாமை!

தஞ்சையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது,
அவர் ஒரு ஸ்க்ரீன் பிரிண்ட்டிங் பிரஸ் வைத்திருந்தார். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்றை வாங்கி அதற்குத் தவணை முறையில் பணம் கட்டி வந்தார். அவரிடமிருந்து ஒரு மாதமாக தவணை வரவில்லை என்று வசூலிக்கும் நபர் காட்ட, அவரைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் கிளை நிர்வாகியான எனக்கு வந்துவிட்டது.

அன்று மாலை 4 மணி இருக்கும். சென்றபோது நல்ல உயரமான நபர் ஒருவர் தாடி வைத்துக்கொண்டு, பெரிய கண்களுடன் நின்றிருந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பேச ஆரம்பித்தேன். கொஞ்சம் உடம்பு சரியில்லை. இந்த வாரம் வந்துரும் . மொத்தமா குடுத்துர்றேன் கவலைப்படாதீங்க..! வேணும்னா நாளைக்கு சாயங்காலம் ஒரு தொகை வரவேண்டியிருக்கு ! அதையே தந்துர்றேன். நீங்க வாங்களேன். என்றார். சரி சார் ! என்று சொல்லிவிட்டுக் கிளம்பும்போது, அவர் மேசையில் இருந்த புத்தகங்களும், சிற்றிதழ்களும் என்னைக் கவர்ந்தன. ஏனெனில் நானும் எனது நண்பன் எழிலரசுவுடன் சேர்ந்து “விடியல்” என்ற சிற்றிதழ் நடத்திக்கொண்டிருந்தேன்.

            அந்த ஆர்வத்தில் , அவரிடம் பேச ஆரம்பித்தேன். அவரும் குழந்தை போல் இலக்கியம் குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டார். அவர் நடத்தும் பத்திரிக்கை பற்றியும் சொன்னார். பேசிவிட்டுக் கிளம்பும்போது, தெற்கு வீதியில் ஒரு கடை மாடியைச் சொல்லி, அங்குதான் இலக்கியக் கூட்டம் நடக்கும். வாங்களேன். அங்கேயே வந்து பணம் வாங்கிக்குங்க என்று சொன்னார்.

      அதேபோல் அங்கு போய்ப் பார்த்தால், நிறையப் பேர் வந்திருந்தார்கள். காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இவர் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். தாடியைத் தடவி விட்டுக்கொண்டே சட்டைப்பையிலிருந்து ஒரு கவரை எடுத்தார். பணத்தை வாங்கிக்கொண்டு நானும் ரசீது போட்டுக் கொடுத்தேன். உடனே, என்னை அந்தக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். “ஒரு சிற்றிதழ் நடத்துறார்” என்று சொல்லி ஆரம்பித்தார்.

      நிறையப் பேசினார்கள். கேட்டுக்கொண்டிருந்தேன். கடைசியில் அவரிடம் விடைபெறும்போது, நான்கைந்து புத்தகங்களை எடுத்து கையில் கொடுத்து, நிதானமா படிச்சுட்டு சொல்லுங்க! ஒருநாள் இந்தப் புத்தகத்தைப்பத்தின உங்க கருத்துக்களைப் பாத்துரலாம் என்று உற்சாகமாகச் சொல்லி வழியனுப்பினார்.

அதற்குப்பிறகு பல கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர் பெயர் தெரிந்து, அவரும் ஒரு எழுத்தாளர் என்று அறிந்து, அவரது நூல்களையே ஆழமாகப் படித்து, புரிந்துகொள்ளமுடியாமல் சில இடங்களில் தடுமாறி , “தப்பா நினைச்சுக்காதீங்க. எனக்குப் புரியலை” என்று நான் சொல்லி, அவரே அதற்கு விளக்கமும் அளித்து , ஆதுரமாகப் பேசி அனுப்புவார். இசை , கலை, இலக்கியம், வரலாறு, மராட்டிய மன்னர்கள், தஞ்சையின் பாரம்பரியம் என்று அவர் தொடாத விஷயங்களே இருக்காது. அனைத்தையும் ஆழமாக அலசுவார். துவக்க காலங்களில் நான் படித்த பின் நவீனத்துவ இலக்கியங்களை எனக்கு அறிமுகப்படுத்தியதே அவர்தான்.!

அவர் வீட்டில் ஒரு பெரிய நாய் வளர்த்துவந்தார். விபரம் தெரிந்து நான் பார்த்த முதல் மிகப்பெரிய நாய் அதுதான்.

நான் வேலையை விட்டுவிட்டு வெளிநாடு போகும்போது சொல்லிவிட்டுச் சென்றேன்.

பிறகு தொடர்பே இல்லை. சில ஆண்டுகள் கழித்து திரும்ப தஞ்சை செல்லும்போது விசாரித்தேன்.

இறந்துவிட்டார் என்றார்கள்.

அவரது நிறுவனத்தின் பெயர் GML Screen Pirinting என்று தெரியும்.

பழகத் தொடங்கி அவரை பல காலம் “GML பிரகாஷ்’ என்றுதான் நினைவு வைத்திருந்தேன்.

அவர்தான் எழுத்தாளர் “தஞ்சை பிரகாஷ்” என்று பின்னர்தான் தெரியும்.







இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...