Tuesday, February 16, 2010

எதிர்(ரி)வினை!

நண்பர்கள் வட்டத்தின் ஆரத்தை அதிகப்படுத்தி அதன் சுற்றளவைப் பெரிதாக்குவதில் பதிவுலகை விட மிகச்சிறந்த அமைப்பு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.

ஆனால், அத்தகைய நட்பு தரும் பதிவுலகில் நாம் எந்த அளவுக்கு நன்மையை விதைத்திருக்கிறோம் என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருந்துகொண்டே இருக்கிறது. மாபெரும் பதிவர்கள் என்று போற்றப்பட்டவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்துக்கொள்வதும், ஒரு காலகட்டத்தில் அயர்ச்சியால் பதிவே எழுதாமல் இருப்பதும் நடந்தேறி வருகிறது.

இதற்கு என்ன காரணமென்று பார்த்தால், ஏதோவொரு சர்ச்சை அவர்களது எழுத்தை முடக்கியிருக்கும். அல்லது இன்னொரு சர்ச்சையின் விளைவு அவர்களுக்கு ஆயாசத்தை ஏற்படுத்தி , நமக்கும் இது நடக்கலாம் என்ற பயம் கிளம்பியிருக்கும்.

அதைவிட மேலாக, இதை எழுதினால்..இவருக்குப்பிடிக்காது. அதை எழுதினால், அவருக்குப்பிடிக்காது என்று - எந்த எழுத்தால் நட்பு வளர்ந்ததோ - அந்த எழுத்தை நசுக்க வேண்டியிருக்கும்.

தொடர்பில்லாமல் பத்துப்பதிவுகளை எடுத்துப்பார்த்தால், குறைந்தபட்சம் ஆறு பதிவுகள் ஏதாவதொன்றின் எதிர்வினையாக அமைந்துவிடுகிறது. அது ஒன்றும் தவறில்லை. எதிர்வினைகள் தொடர்கதையாக மாறி அந்தச்சங்கிலி இறுகி சம்பந்தப்பட்டவர்களின் நட்புச்சங்கிலியை அறுக்கும்வரை!

வலையுலகின் மிகப்பிரபலமான, இன்று நாம் எழுதும் கட்டமைப்பு வசதிகளுக்கு ஆதாரமாக இருந்த, இருக்கும் ஒரு தளத்துக்கு நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் ஒரு அன்பான பதிவரை சமீபத்தில் சந்தித்தேன். ஏன் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் அப்படியே மேற்சொன்ன கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. எதிர்வினைகள் அதிகமாகிவிட்டன என்றார்.

உண்மைதான். நீங்கள் ஒரு விஷயத்தைப்பார்க்கிறீர்கள். உங்கள் கோணத்தில் பதிக்கிறீர்கள். அது மற்றொரு நண்பருக்கு தவறாகப்படுகிறதென்றால், உங்களுக்கு பின்னூட்டமிடலாம். அல்லது தன் மாற்றுக்கருத்தை தனது தளத்தில் தாராளமாகப்பதியலாம். அத்துடன் அது நின்றுவிட்டால், எதிர்வினைகள் தொடர்ச்சியாகி, வன்மம் வளர்ந்து, அந்தப்பதிவர் எதிரியாகவே பாதிக்கப்பட்டு, பதிவுலகில் நுழைவதே ஒரு வருத்தமான விஷயமாய் ஆகாது.

ஆனால், விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று முன்னவரும், அந்த விளக்கத்தை உடைக்கிறேன் என்று பின்னவரும் கச்சை கட்டிக்கொண்டு இறங்கும்போது நட்பு தன் பலத்தை இழந்து, விளக்கங்களும், தர்க்கங்களும் கோலோச்ச ஆரம்பிக்கின்றன. பின்னர் இந்தப்பக்கம் நாலுபேர் , அந்தப்பக்கம் நாலுபேர். அதற்குப்பிறகு பதிவுலகம், தன் கையில் தயாராக வைத்திருக்கும் பெயிண்ட் டப்பாவிலிருந்து ஒவ்வொரு தரப்பிற்கும் தகுந்த வண்ணங்களை அடித்து அனுப்பிவிடுகிறது.ஆக..எதிர்வினைகளின் தொடக்கம் விளக்கம் சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.

ஒன்று மட்டும் நிச்சயம்!

நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை!
நம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை!


அழகான சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு, வெற்றி பெறுவோம்.

போட்டுக்கொடுத்த பொடிப்பையன்



கலியாப்பட்டியிலிருந்து தினசரி மலையடிப்பட்டிக்கு பள்ளி செல்லும் நான் ஏதாவது கற்றுக்கொண்டே ஆகவேண்டுமென்று நினைத்தேனா.. வீட்டுக்கு வந்தவுடன் என்னடா சொல்லிக்குடுத்தார்கள் என்று வீட்டில் கேட்கும் கேள்விக்கு பயந்தேனா.. என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு அந்த ஆசிரியரின் மீது கடுப்பு அதிகரித்துக்கொண்டே இருந்திருக்கவேண்டும். ஏனெனில் அவர் எனக்கென்று எதுவுமே சொல்லிக்கொடுக்கவில்லை. ஒரே கைவீசம்மா கைவீசு, நிலா நிலா ஓடிவாவும், ஒரு சிங்கம் நாலு மாடு கதையும் எனக்கு அலுப்புத்தட்டியிருக்கவேண்டும். அவரைப்பொறுத்தவரைக்கும் நான் லிஸ்ட்டிலேயே வராத பையன். ச்சும்மானாச்சுக்கும் பள்ளி வந்து செல்பவன். முக்கியமாக கிராம சேவக் மகன்! அவர் கொடுத்த மரியாதை, சக மாணவர்களிடத்திலிருந்தும் எனக்குக்கிட்டிய மமதையில் நான் திரிந்துகொண்டிருந்தேன்.

இப்படியாகப்பட்ட காலத்தில்தான், அந்த நாளில் பள்ளிக்கு Inspection என்ற பெயரில் ஒரு அதிகாரி வந்தார். அவரும் எல்லோரிடத்திலும் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தார். என்னிடத்தில் என்ன கேட்டார் என்று நினைவில்லை. ஆனால் நான் சொன்ன பதில்தான் இங்கே முக்கியம்..!

' சார்! இந்த வாத்தியார் தினமும் வரார். நல்லா தூங்குறார். பாட்டுக்கேக்குறார். குறட்டை விடுறார். ஆனா எந்தப்பாடமும் எனக்கு சொல்லித்தரமாட்டேங்குறார் ' என்று குற்றப்பத்திரிக்கையை குள்ளநரித்தனமாக வாசிக்க, அதற்குப்பிறகு நடந்ததை இன்று வரை என் பெற்றோர் சொல்கிறார்கள்.

அன்றே அவர் என்னைப்பற்றி விசாரிக்க, சக மாணவர்கள் விபரம் சொல்ல... அன்று மாலை நான் ஒன்றுமே நடவாதது போல் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும்போது , ஒரு பையில் பிஸ்கெட் , பழங்கள் வாங்கிக்கொண்டு அந்த அதிகாரி வீட்டுக்கே வந்துவிட்டார். அப்போதுதான் அப்பாவும் வீட்டுக்கு வர, எனக்கு உதற.. அவர் என்னைப்பற்றி மிகவும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார்.

'சார்! பையன் ரொம்ப போல்டா பேசுறான். ஸ்கூல்ல ஆசிரியரைப்பத்தி தைரியமா புகார் சொன்னான். இப்படித்தான் சார் இருக்கணும். ஏன்னா, எல்லா இடங்களிலும் வாத்தியாரே பசங்களை Inspectionக்கு தயாரா வச்சிருப்பாங்க! இப்படியே வளருங்க!! அதுதான் நல்லது! என்று ஏத்திவிட்டுவிட்டு சென்றுவிட்டார்.

அடுத்த அரைமணி நேரத்தில், பாதிக்கப்பட்ட ஆசிரியரும் வீட்டுக்கு வந்து ' ஹி..ஹி.. பையன் ரொம்ப தைரியமா இருக்கான் சார். இருந்தாலும் என்னைப்பத்தி, டி இ ஓ க்கிட்ட தப்பா சொல்லிட்டாப்புல. இப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்போறாங்கன்னே தெரியலை..! பையன் இப்படித்தான் ஏதாவது சொல்லுவான்னு டி இ ஓக்கிட்ட கொஞ்சம் சொல்லுங்க சார்! என்று தர்மசங்கடமாகச் சொல்ல...

அப்பா அவர் சாப்பிட பிஸ்கட் கொடுத்துக்கொண்டே சொன்னார். இந்தாங்க பிஸ்கட் சாப்பிடுங்க! டி இ ஓ குடுத்தது! இனிமே நீங்க கொஞ்சம் நல்லா, வேலையை மட்டும் பாருங்க! பையன் ஒண்ணும் தப்பா சொல்லியிருக்க மாட்டான். !

இப்படி...இன்றுவரை என்மேல் நம்பிக்கை வைத்திருக்கும் அப்பாவுக்கு... நன்றி..!

Monday, February 15, 2010

கலியாப்பட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக்கு அருகில் கிள்ளுக்கோட்டை எனும் ஊருக்குச் செல்லும் சாலையின் உள்ளே 2 கிலோமீட்டரில் உள்ள மிக மிகச் சிறிய கிராமம்.

கலியாப்பட்டி ஒரு ஒற்றைச்சாலை கிராமம். மெயின் ரோட்டிலிருந்து வரும் கிளைச்சாலை நேரே சென்று ஊர்க்கோடியில் உள்ள நல்லாண்டவர் கோயிலில் போய் முடியும். அந்தச்சாலையின் இருபக்கமும் வீடுகள் கொண்டதுதான் ஊர்! இடையில் சிறு சிறு தெருக்கள். ஊர்ப்பெரியவர், வண்டியோட்டிகள் ,பூசாரி, பயமுறுத்திக் கிழவி என பரந்த மனம் கொண்ட மனிதர்களால் நிறைந்த கிராமம்..!

என் அப்பா ஒரு கிராம நல அலுவலர்! அவருக்கு வாடகைக்குத் தருவதற்கு அங்கு வீடு இல்லை. ஆகவே ஊர்ப்பெரியவர் தன் களத்துமேட்டில் சிறிது இடம் கொடுக்க.. அப்பாவே செங்கலும் செம்மண்ணும் வாங்கிக்கொடுக்க..மாரியய்யா என்ற அந்த அன்பு அண்ணன் விறுவிறுவென்று கட்டிய அந்தக் கூரைக் கோட்டைதான் எங்கள் வீடு! வீட்டில் ஒரே ஒரு பெரிய அறை! ( 10க்கு 15 இருக்கலாம்) வாசலில் கல்லுக்கால் ஊன்றி அதே அளவு வராண்டா...! வாசல் தரைக்கு செம்மண்ணும் , சாணிக்கரைசலும்தான் flooring..! உள்ளே கொஞ்சம் தரமாக சிமெண்ட் தரை! வாசலில் களத்துமேட்டுக்கு வரும் மாடுகள் குடிக்க ஒரு கழுநீர்த்தொட்டி..! கருவை மரங்களும், கம்மாக்கரையும் நிறைந்த ஊரில்..ரசிக்கிறோம் என்றே தெரியாமல் இயற்கையை ரசித்த வயது அது! ..

ஊருக்குள் பாம்புகள் சர்வசாதாரணம்.! எங்கள் வீட்டு வெங்காயக்கூடையில் அழகாகச்சுருட்டிக்கொண்டு படுத்திருந்த நல்ல பாம்பு ! என் தங்கையின் தூளியின் கயிற்றில் இறங்க எத்தனித்து , தூளி ஆட்டிக்கொண்டிருந்த லச்சுமி அக்கா மேல் விழுந்த ஓலைப்பாம்பு என.. இன்றும் பாம்புகள் மேல் பெரிய வெறுப்பு ஏற்படா வண்ணம் சகஜமாகப்பழகின. :)

நாங்கள் சரியாகச்சாப்பிடவில்லையென்றால், அம்மாவால் பயமுறுத்தப்பயன்படும் பயமுறுத்திக்கிழவியை இன்று நினைத்தாலும் டர்ராகும். ஆனால் அவள் மகள் ஏதோவொரு காரணத்தால் அரளி குடித்து இறந்தபோது..அவள் கதறியதைப்பார்த்த பின்தான் அவளும் மனுஷிதானோ என்று எண்ணத்தோன்றியது.

அங்கு பல வீட்டில் நல்லைய்யா என்ற பெயர் சகஜம். ஏனெனில் நல்லாண்டவர்தான் காவல்தெய்வம். அந்தக்கோவில் திருவிழாவில் கொடுக்கப்படும் பாதாம் இலையில் வைத்துத்தரும் சர்க்கரைப்பொங்கல் வாசனை இன்னும் போகவில்லை.

எனக்கு அங்கு ஒரு நண்பன் இருந்தான். ஊர்ப்பெரியவர் மகன்! ஆனால் படுபாவி.! அவனுக்கு என் அப்பா பெயர்! அதனால் சத்தம்போட்டுக்கூப்பிடவோ, திட்டவோ முடியாது. அது எனக்குமட்டும் தர்மசங்கடம் இல்லை. அந்த ஊர்க்காரர்களுக்கும்தான்..! ஆக..அவனுக்கு ஊரே சேர்ந்து 'தம்பி ' என்று பெயர் வைத்தது. அவனோடுதான் சுற்றுவேன். அப்போதே புரிந்தும் புரியாமலும் பல தகிடுதித்தங்களை பழகிக்கொடுத்த குரு அவன்!

அருகிலிருக்கும் மலையடிப்பட்டியில் ஒரு தொடக்கப்பள்ளி. அதில் அட்டெண்டென்ஸில் பெயரே சேர்க்காமல் நான்கு வயதில் கொண்டுபோய் விட்டுவிட்டார்கள். (அந்த அளவுக்கு வீட்டில் ரவுசு !)

பள்ளிக்கு எப்போதும் நடந்து செல்லவேண்டும். இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். மெயின்ரோட்டுக்கு வந்துவிட்டால், தொற்றிக்கொள்ள மாட்டுவண்டி கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.! அப்பா வாங்கிக்கொடுத்த இண்டாலியம் பெட்டியில் 'டப டப' என தட்டிக்கொண்டே மாட்டுவண்டிக்காரரிடம் ஏதாவது பேசிச்செல்வதும், அதன் பின்பக்கம் நீட்டிக்கொண்டிருக்கும் குறுக்குக்கட்டையில் தொங்கிக்கொண்டே அதனுடன் நகர்வதும் ஆஹா...அனுபவிக்கணும் பாஸ்!

அது ஒற்றை ஆசிரியர் கொண்ட பள்ளி..முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை அவர்தான் கிளாஸ் எடுப்பார். அவர் எடுக்கும் வகுப்பையே எல்லோரும் பார்த்துக்கொண்டிருப்போம். வெகு நாட்களில் அவர் வந்து, வேட்டியின் நுனியை முறுக்கி..மூக்கில் விட்டு ' ஹச் ' எனத்தும்மிவிட்டு... ஒரு குச்சியை விட்டு காது குடைந்து கொண்டே தூங்குவார். அல்லது கையில் வைத்திருக்கும் பாக்கெட் ரேடியோவில் ஏதோ ஒன்று கேட்டுக்கொண்டிருப்பார். இப்படியாகப் போய்க்கொண்டிருந்த அவரது இன்பமயமான வாழ்க்கையில் நான் இழுத்துவிட்ட சிக்கல் ஒன்று....

(தொடரும் போடாம சுரேகா பதிவான்னு கேக்குறாங்கப்பா!

..அதனால்..தொடரும்.!)

ஓடுமீன் ஓட...

ஒரு நல்ல களம்....
முழுமையாக ஏழு நாட்கள்.
நீங்கள் எது எழுதினாலும் முகப்பில் வரும்.
கொஞ்சம் அதிகமாக பதிவர்களின் கவனம் பெறும்.
உங்கள் எழுத்தின் பிம்பம் பெரிதாகவோ சிறிதாகவோ ஆகும்.
இப்படி படிப்படியான காரணங்களுடன் தமிழ்மண நட்சத்திர வாய்ப்பு!

நண்பர்களும், நலம்விரும்பிகளும், இமாலய திறமைசாலிகளும், பரந்துபட்ட வாசிப்பு தாகம் மிக்கவர்களும் நிறைந்த சபையில் ஒரு ஓரமாகக் கைகட்டி நிற்கும் எனக்கு திடீரென்று மேடையில் தோன்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஏற்படும் உதறலுடன் தான் இதை அணுகுகிறேன்.

சில விஷயங்களை எழுதவேண்டும் என நினைப்பேன்.
இல்லை..இதை தமிழ்மண நட்சத்திர வாரத்தில் எழுதிக்கொள்ளலாம் என சேர்த்துவைப்பேன்.
( ஒரு அசட்டு நம்பிக்கைதான்....என்னையும் நட்சத்திரமாக்கிடுவாங்கன்னு! ) :-)

எழுதத்தூண்டிய இயற்கைக்கும், சமூகத்துக்கும், நட்புக்கும், தமிழ்மணத்துக்கும் நன்றியுடன்....
உறுமீனுக்காக வாடி நின்றிருந்து... எழுத நினைத்த பதிவுகளை எழுதுகிறேன்.
(ரொம்ப பெரிசா எதிர்பார்க்காதீங்க! சட்டியில இருக்குறதுதான் வரும் :) )

ஒரு முன்னோட்டமாக.. இந்தவாரம் வரப்போகும் பதிவுகள் !

கலியாப்பட்டி !
போட்டுக்கொடுத்த பொடிப்பையன்!
எதிர்(ரி)வினை
கறம்பக்குடி!
மறைக்கிறான் சார்!
சாராள் இல்லம்
இலுப்பூர்!
கைகொடுக்கும் கை
ஞானாலயா
அறந்தாங்கி!
தென்காசி!
புதுக்கோட்டை!



உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்களுக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்!

Wednesday, February 10, 2010

ஆணாதிக்க மிச்சம்!



பட்டுப்பாவாடையுடன்
விளையாடிய போதும்,
தாவணியில்
தாவி வந்த போதும்,
கணவனின் கைப்பிடித்து
சுற்றி வந்த போதும்
ஆனந்தமாய்ப்
பார்த்துக்கொண்டு
அங்கேயே நின்றாய்!
அவன் போய்ச்
சேர்ந்ததற்கும்,
அடுத்தடுத்து
நடந்ததற்கும்
நானும் வந்து
உன்னுடன்
அடுத்த தூணில்
நின்றிருக்கலாம்!

இது ஆணாதிக்க உச்சம்!
நான் அதன் மிச்சம்!

டிஸ்கி: இது நான் நேற்று ஒரு பிரபலமான கோவிலில் எடுத்த புகைப்படம்.
அந்தப் பாட்டியின் முகத்தை மறைக்கலாமென்று பார்த்தேன். ஆனால்
செய்யவில்லை.இதைப்பார்த்து யாரவது அவள் சந்ததியிடம் சொல்லி, இனியாவது அவளை இயல்பான பெண்ணாக ஆக்குவார்கள் என்ற நப்பாசையுடன்...

Monday, February 8, 2010

மீண்டும் நரி!



காலையிலிருந்து
கிடைக்காத
உணவுக்காக
காடெங்கும் தேடிவிட்டு
நிழலுக்கு நின்றிருந்த
மரத்துக்கு
காகமொன்று வந்தது.

வாயினில் வடை!
பாடச்சொல்லி நான் கேட்க,
வடை எனக்கு அருகில்விழ,
தயவு செய்து கொடுத்துவிடு!
கேட்ட காகத்திடம்
வந்து எடுத்துக்கொள் என்றேன்.
கீழே வந்த காகத்தை
வினாடி பிசகாமல்
அடித்து உண்டேன்.
எவன் தின்பான் வடையை?
அதுவும் காகத்தின் எச்சிலை!

டிஸ்கி:
கொஞ்ச நாளைக்கு முன்னாடி கதையா அரைச்ச மாவை,
கவிதையா அரைச்சுப்பாத்தேன்...ஹி..ஹி..

Tuesday, February 2, 2010

பரிசலுக்கும்...கேபிளுக்கும்....!!

சூப்பரா ஆரம்பிச்சிருக்கு பிப்ரவரி!
எனக்கு பல வித மகிழ்ச்சிகள்!
அதுக்கு பல காரணங்கள்!


முதல் காரணம், !
நண்பர்கள் இருவரின் புத்தகங்கள் 'காதலர் தினமன்று' ரிலீஸ்!


இதுதான் புத்தகங்கள்!









மற்ற விபரங்களுக்கு....இங்கே போய் கட்டாயம் பாருங்க!

புத்தக ஆசிரியர்கள் பரிசல் மற்றும் கேபிளுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

இது..
பரிசலுக்கும்..கேபிளுக்கும் எல்லோரும் வாழ்த்துச்சொல்லும் நேரம்!
கூட்டம் போடாம வரிசையா வந்து வாழ்த்திட்டுப்போங்க! :)

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...