Friday, February 19, 2010

சாராள் இல்லம்

அன்று குழந்தைகள் தினம்..! நண்பர் ஒருவர் அழைப்பு விடுத்தார்.

புதுக்கோட்டையில் இருக்கீங்களா?

ஆமாம்!

அப்ப மாலை ஒரு நிகழ்ச்சி இருக்கு வரமுடியுமா? பள்ளி மாணவர்கள் முன்னிலையில் ஒரு தன்னம்பிக்கை நிகழ்ச்சி வழங்கணும்!

சரி! பண்ணிட்டா போச்சு!

*************************************************

தினசரி அப்பா, அம்மாவுக்கிடையில் சண்டை! அதைப்பார்த்தே வளர்ந்தார்கள் அந்த ஐந்து குழந்தைகளும்! ஒரு நாள் சண்டை முற்றி, இனிமேல் உன்னோடு வாழ்வதில்லை என்று முடிவெடுத்து அவர்கள் விவாகரத்தும் செய்துகொண்டார்கள். அப்பாவிடம் மூன்று குழந்தைகள், அம்மாவிடம் இரண்டு குழந்தைகள் என குழந்தைகள் பிரிக்கப்பட...

அம்மா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென்று தன்னிடம் இருக்கும் இரண்டு ஆண்பிள்ளைகளையும் ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்து விட்டு கண்காணாமல் சென்றுவிட்டார். அந்த இருவரில் மூத்தவனுக்கு வயது நான்கு, இளையவனுக்கு வயது ஒன்று! தன்னுடன் இருக்கும் ஒரே சொந்தம் தம்பிதானென்று இவனுக்குத்தெரியும். ஆனால் தம்பிக்கு அதுவும் தெரியாது. அந்தச்சிறு பிள்ளையை எப்படித்தூக்குவது என்றுகூடத்தெரியாமல், எல்லா சொந்தங்களும் இருந்தும், அனாதை வாழ்வை ஏற்கத்தொடங்கியிருக்கிறார்கள் அந்தச்சிறுவர்கள்.

எப்படியோ பாடுபட்டு வளர்ந்து, ஒரு நிலையில் தான் தம்பியை நன்கு வளர்க்க வேண்டுமென்று நினைத்து வேலைக்குச்செல்கிறான் மூத்தவன். அது ஒரு எடுபிடி வேலை! ஒரு நாள் அந்த ஊர் தியேட்டரில் வெடிகுண்டு வைத்திருக்கிறார்கள் என்று தகவல் வர, அங்கிருந்த போலீஸ்காரர்களும், தியேட்டர் முதலாளியும் 'அனாதைதானே செத்தாலும் குற்றமில்லை' என்று வெடிகுண்டு இருப்பதைக்கண்டுபிடிக்க இவனைப்பயன்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல் 'தீ' என்று எழுதியிருக்கும் வாளியில் வெடிகுண்டு உண்மையிலேயே இருந்திருக்கிறது. அதை இவன் கண்டுபிடித்துத் தூக்கிப்போடும்போது வெடித்து, வீசப்பட்டு நினைவிழந்து போயிருக்கிறான்.

இவன் நிலை பார்த்த ஒரு பாட்டி இவனைத்தூக்கிச்சென்று சிகிச்சை அளித்து, இவன் எழும்போது மூன்று மாதங்கள் ஓடிப்போய்விட்டன. தான் வளர்த்த தம்பி எங்கிருக்கிறான் என்பதும் தெரியாமல், சூனியமான வாழ்க்கையில் சிரமப்பட்டு வேலைகள் பார்த்து, பல ஆண்டுகள் கழித்து, தன் குடும்பத்தினர் அப்பா, அம்மா, அண்ணன்கள், தம்பி என ஒவ்வொருவராய்க் கண்டுபிடித்திருக்கிறான். அவர்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கும்போது, இவன் மட்டும் அன்றாடங்காய்ச்சியாய் ஆகிப்போனான். இவனைப்பார்த்த மகிழ்ச்சியில், குடும்பத்தினர் சேர்ந்து இருக்க வற்புறுத்தியபோது சொன்னான்!

'எல்லாம் இருந்த என்னையே அனாதையாக்கி அழகுபாத்தீங்களே! யாருமே இல்லாத எத்தனையோ பிள்ளைங்க உண்மையிலேயே எவ்வளவு கதறிக்கிட்டிருக்கும்! நான் அவுங்களுக்கு சொந்தமாப் போறேன். என்னைய விட்டுருங்க! இந்த எண்ணம் வரவைச்ச கடவுளுக்கும், அனாதை இல்லத்தில் சேத்த அம்மாவுக்கும் நன்றி!' என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.

***************************************************************************

அன்று மாலை நாங்கள் சென்ற இடம் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் அரசு ஐடிஐ இருக்கும் பகுதிக்கு எதிரில் உள்ள ஒரு வாடகை வீடு! அதன் பெயர் 'சாராள் இல்லம்'.

அதனை நிர்வகிப்பவர் திரு.டைசன்! அவர்தான் மேலே சொன்ன வாழ்க்கைக்கு உரியவர்!

மொத்தம் ஐம்பத்திரண்டு குழந்தைகள்! ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கதை! நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று மீண்டும் மீண்டும் எண்ணவைத்த கொடுமையான வாழ்க்கைகள்!

டைசனும், அவர் மனைவி -அவரைப்போலவே வாழ்வில் சிரமப்பட்ட ஈழத்துப்பெண் - வளர்மதியும் சேர்ந்து இந்த இல்லத்தை நடத்துகிறார்கள். குழந்தைகள் பல்வேறு வகுப்புகளில், பல்வேறு அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தன் பிள்ளைகளாகவே வளர்க்கிறார்கள் இந்தத்தம்பதியினர்! பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிப்போய் இருக்கிறார்கள். வருமானம் எதுவும் கிடையாது. நன்கொடைகள் திரட்டவும் வழியில்லை. தினம் தினம் யாராவது தரும் சிறு தொகைகளை வைத்து மிகமிகச்சிரமப்பட்டு ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகம், பேனாக்கள் வாங்கக்கூட கடன் சொல்லித்தான் ஓட்டவேண்டியிருக்கிறது என்று கண்ணீர் உகுக்கிறார். முகூர்த்த நாட்களில் பல இடங்களிலிருந்து உணவுகள் அளவுக்கு மிஞ்சி வந்துவிடுகின்றன. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் என்ன செய்வதென்று தெரியவில்லை என்று மறுகுகிறார். அவருக்கு என்னால் இயன்ற உதவிகளைச்செய்துவருகிறேன்.
நான் சொன்னவுடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிப்பொறுப்பாளர் திரு.நடராஜன் (சுப்ரா என அறியப்பட்டவர்) அவர்கள் உதவிகள் செய்திருக்கிறார்.

நம் பதிவர் சமூகத்தால் முடியாதது எதுவும் இல்லை.என் நோக்கமெல்லாம்...நாம் ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளவேண்டும். நம்மால் ஆன கல்வி, உணவு , உடை உதவிகளைச்செய்யவேண்டும். இது நம் நிலைக்கும் மிகச்சிறு தொகையாகத்தான் இருக்கும். இதை நாம் கூட்டாகவும் செய்யலாம். இரண்டு,மூன்று பதிவர்கள் சேர்ந்து ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம். ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவை கொடுத்துவிட்டால், ஒரு குழந்தை தன் வாழ்வை உங்கள் பெயரால் வாழும். வாருங்கள் வடம் பிடிப்போம்.!

மற்ற விபரங்களுக்கு...

97894 97531 - சுரேகா

கை கொடுக்கும் கை!

இலுப்பூர் பள்ளியில் என்னால் முடிந்தவரை படித்து இரண்டாவது அல்லது முதல் ரேங்க் எடுத்துக்கொண்டு ஓட்டிக்கொண்டிருக்கும்போது, ( ஆமாம்ப்பா ரொம்ப நல்லவன்ன்! னு ஓட்டப்புடாது! எனக்கு முதல் ரேங்க் குடுக்குறாங்கன்னா, கூட இருந்த பயபுள்ளைக எந்த லட்சணத்துல படிச்சிருக்குனு பாருங்க! ) எனக்கு அறிமுகமான நண்பன் சந்திரன். கெச்சலாக என்னைப்போலவே கொஞ்சம் டகால்ட்டி பேர்வழியாக இருந்ததால் ஒட்டிக்கொண்டோம்.

இருவரும், சேர்ந்தே திரிவோம். பள்ளி நாட்களில் வீட்டிலிருந்து தூக்குச்சட்டியில் சாப்பாடு கொண்டுவந்துவிடுவேன். அவன் வீடு அருகில் இருந்தாலும், எனக்காக அவனும் சோறு கட்டிக்கொண்டு வருவான். நல்ல பேச்சாளன். மதிய உணவு சாப்பிட்டுவிட்டு இருவரும் ஊர்க்கடைசியில் உள்ள ஊரணிக்கு சென்று சரி ஆட்டம் போட்டுவிட்டுபள்ளிக்குத் திரும்புவோம். சட்டையை மட்டும் கழட்டிவிட்டு குளிப்பதால்,டவுசர் ஈரம் நடந்து வரும்போதே காய்ந்துவிடும்.
அவர்களுக்கு பெரிய கல்லுப்பட்டறை இருந்தது. அங்கு சென்று அவன் முதலாளியாக நடந்துகொள்வதிலும், சின்ன முதலாளியின் நண்பனாக நான் நடந்துகொள்வதிலும் அல்ப சந்தோஷம் இருந்தது. அவனிடம்தான் செயற்கை வைரம் பட்டைதீட்டும் ரவை, உருட்டு, அரக்கு, குச்சி, போன்றவற்றின் மகத்துவத்தை அறிந்துகொண்டேன்.
அவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான். அவன் எங்களைவிட இரண்டு வகுப்பு பெரியவன். பெயர் சூரியன். அவன் ஒருநாள் பள்ளிக்கு வந்துவிட்டு, பையை வைத்துவிட்டு எங்கோ ஊர் சுற்றப்போய்விட்டான். அதை ஒரு வீட்டுத்தகராறில் சந்திரன் அவன் அப்பாவிடம் போட்டுக்கொடுத்துவிட்டான். அண்ணனுக்கு சரியான மாத்து!

அன்று சுதந்திர தினம். காலையில் கொடியேற்றி , சிறு கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்துவிட்டு, நேரம் பார்த்தால் மணி 10. அப்போது சூரியன் அண்ணன், எங்களைப்பார்த்து,

' டேய்! 'கை கொடுக்கும் கை 'காலைக்காட்சி போவோமா?

"இல்லை! நாங்க வரலை!" - இது சந்திரன்

ஏண்டா இப்படிச்சொல்ற? அண்ணனே கூப்புடுது! - நான்!

சும்மா இரு! ஏதாவது வெவகாரம் இருக்கும்!

நீயா பயந்துக்காதடா! அண்ணன் ரொம்ப நல்லவரு!

போடா போ! அவன் எப்பேர்ப்பட்டவன்னு எனக்குத்தான் தெரியும்!

என்னடா! நீ பாட்டுக்கும் பேசிக்கிட்டே போற? நான் எந்த பிரச்னையும் பண்ணலை! ரஜினி படமாச்சே ! வரீங்களான்னு கேட்டேன். - இது சூரியன்.

ரஜினி என்ற தீனியை மாட்டிய தூண்டிலில், (என் தூண்டுதலில்) மீன்கள் வசமாகச் சிக்கிக்கொண்டது.

சரி வரோம் என்றேன் நான்!

கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கி, மூவரும் அருகருகே அமர்ந்தோம். ஓரத்து கருப்புத்திரைகளெல்லாம் இழுத்துவிட்டவுடன்... சூரியன்,

' டேய் வயிறு வலிக்குது! இருங்க போய்ட்டு வந்துர்றேன்''

படம் பார்க்கும் ஆர்வத்தில் ...ம்...ம்.. போய்ட்டு வாங்க என்றோம்.

படம் போட ஆரம்பித்து, ரஜினியைப்பார்த்து நாங்கள் லயித்திருந்த நேர்த்தில், ஓரத்து திரை விலக்க,
தியேட்டருக்குள் வெளிச்சம் பரவ,
வாசலில் சூரியன் அண்ணனுடன் அவர்கள் அம்மா! ..கையில் விளக்குமாறுடன்.!

அவர்களால் இழுத்து வரப்பட்டு,
சந்திரன் அடிவாங்க,
நான் அறிவுரை வாங்க....
சூரியன் அண்ணன் ஒரு நக்கல் சிரிப்புடன், சந்தோஷம் வாங்க....

'அப்பவே சொன்னேன்ல! இவன் வில்லத்தனம் பண்றான்னு! ஏமாந்துட்டியேடா!' என்று சொல்லிக்கொண்டே அழாமல் இருந்தான் சந்திரன். எனக்கு அழுகை பீறிட்டு வந்தது. படத்தை பாதியில் விட்டுவிட்டுப்போகிறோமே என்று! :)

இப்போது சூரியன் ஒரு பிரபல தொழிலதிபர்!
சந்திரன் ஒரு பிரபல அரசியல்வாதி!

Thursday, February 18, 2010

இலுப்பூர்

புதுக்கோட்டையிலிருந்து 29 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஊர்! இதுவும் நான் பள்ளிப்பருவத்தில் பார்த்த ஊர்! அப்போது தேர்வுநிலை பேரூராட்சி. இப்போது தாலுக்கா! (என்னமோ நம்ப வந்துட்டுப்போனாலே தாலுக்காவாக்கிடுறாங்க! :-) )

புதுக்கோட்டை, அன்னவாசல் வழியே ஊருக்குள் நுழையும்போது அரசு மருத்துவமனை, வலதுபுறம் அரசு மேல்நிலைப்பள்ளி, பின்னர் கடைவீதி. அதைத்தாண்டி இரண்டு ' ட ' வளைவுகளுக்குப்பிறகு நேரே சென்றால் விராலிமலை செல்லும் சாலையில் சிறிய பேருந்து நிலையம். அதன் பின்புறம் மிக நீளமான உடமான் குளம். பேருந்துநிலையம் தாண்டி கொஞ்சதூரம் சென்றால் ஊரின் கடைசி ஏரியாவான கோட்டைத்தெரு. அதை அடுத்து பிடாரி அம்மன் கோவில். அப்படியே சாலை மேடேறி விராலிமலை நோக்கிச் சென்றுவிடும்.

இலுப்பூரில் பள்ளிப்படிப்பு 3ம் வகுப்பிலிருந்து 6ம் வகுப்பு வரை... அந்த நான்கு ஆண்டுகளும் மிகச்சிறந்த படிமங்களை ஞாபக அடுக்குகளில் விட்டுச்சென்றிருக்கின்றன. ஏனெனில் எனக்கு நூலகம் அறிமுகமானது அப்போதுதான்.!

ஊரின் மிக முக்கியத்தொழில் செயற்கை வைரம் பட்டை தீட்டுவது...! 80களில் இலுப்பூர் இந்தத்தொழிலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது. என் பல நண்பர்கள் பள்ளி முடிந்ததும் கல் உருட்டச் செல்கிறேன் என்பார்கள். பகலில் வீதிகளில் சென்றால் டக்சடக், டக்சடக் என்ற உருட்டு எந்திரத்தின் சத்தமும் , இடையிடையே கீச்ச்ச்ச் என்ற கல்லை சாணையில் வைக்கும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். அவர்களது பொழுது போக்கே ரேடியோவும், டேப் ரிக்கார்டரில் ஒலிச்சித்திரமும் கேட்பதுதான். 'விதி' திரைப்படத்தின் அனைத்து வசனங்களும் இன்று கேட்டாலும் எனக்கு அத்துப்படி. அவ்வளவு முறை அதை விடுமுறை நாட்களில் கல்லுப்பட்டறைகளில் அமர்ந்து கேட்டிருக்கிறேன்.

நாங்கள் இருந்தது ஊர்க்கடைசியிலுள்ள கோட்டைத்தெருவில்..எந்த ஊர் செல்வதானாலும் வாசலில் ஓடிவந்து பஸ் ஏறலாம். எதிர் சாரியில் ஒரு மளிகைக்கடையும், டீக்கடையும் மட்டும்தான். எங்கள் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு அற்புதமான பள்ளி உண்டு. (ஏன்னா அது நான் படிச்ச பள்ளி ! ஹி..ஹி) ஆர்.சி. நடுநிலைப்பள்ளி. அந்தப்பள்ளியின் மதர் சுப்பீரியரிலிருந்து எல்லா சிஸ்டரும் அன்பொழுகப் பாடம் நடத்துவார்கள். கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளி! படிப்பிலும் நற்பெயரைச் சம்பாதித்து வைத்திருந்தது. நல்லொழுக்கப்பாடம் (Moral Studies) என்ற பாடமும் அதனடிப்படையில் மதிப்பெண்களும் வழங்கும் வழக்கம் அந்தப்பள்ளியில் இருந்தது. இப்பெல்லாம் அது இருக்கா? கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்க பாஸு!

அங்குதான் நான் மேடைப்பேச்சு பழகினேன். சந்தியாகு டீச்சர், ரத்னாபாய் டீச்சர், கஸ்தூரி டீச்சர், மங்களா டீச்சர், டெய்ஸி சிஸ்டர், மரியம் சிஸ்டர் என்று பல அன்பான ஆசிரியைகள், எங்களுக்கு அழகாக மேக்கப் போட்டு, அந்தக்காலகட்டத்திலேயே மிகவும் சரியாக உடைகளைத்தேர்வு செய்து பல நாடகங்களை கர்ம சிரத்தையாக எங்களை வைத்து அரங்கேற்றுவார்கள். ஓதேல்லோ, ஷைலாக் என ஆங்கிலத்தில் பேசிய நாடகங்களும், சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன், கோலியாத், என தமிழில் பேசிய நாடகங்களும், பாடப்புத்தகத்தை மீறி கற்றுக்கொள்ள வெளியில் நிறைய இருக்கிறது என்ற படிப்பினையை எனக்கு வழங்கின. இந்த டீச்சர்களில் ஒருவருக்கு திருமணம் ஆன அன்று உலகமே இடிந்து விழுந்ததுபோல் உணர்ந்தேன். கொஞ்சம் வெய்ட் பண்ணியிருந்தா நாம் கல்யாணம் பண்ணியிருக்கலாமே என்று மறுகினேன்.

என் அம்மாவுக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது. ஒரு ஊருக்குப்போனவுடன் அவர்கள் செய்யும் முதல் செயல் அந்த ஊரின் நூலகத்தில் உறுப்பினராவதுதான். அப்படித்தான் அங்கும் ஆனார்கள். அவர்கள் எடுக்கச்சொல்லும் புத்தகத்தை கொண்டுவந்து தரும் பணியில் நான்!

அப்படி எடுக்கச்செல்லும்போது சின்னச்சின்ன சிறுவர் பத்திரிகைக்களைப்படிக்கும் பழக்கம், பின்னர் அம்மா படிக்கும் ஆனந்தவிகடன், கல்கண்டு, குங்குமம், தாய் என வளர்ந்து லஷ்மி, சிவசங்கரி,அனுராதா ரமணன், தி.ஜானகிராமன், ஜாவர், சாவி, கல்கி, சுஜாதா, பாலகுமாரன்,என படர்ந்தது. பின்னர் படமில்லாத பத்திரிக்கைகளும் கவர ஆரம்பித்தன.

மஞ்சரி, குண்டூசி, அமுதசுரபி போன்றவற்றில் வெளிவரும் புரிந்தும் புரியாமலிருந்த கதைகளை வலியப்படித்த வயது அது! பின்னர் எனக்கும் சேர்த்து புத்தகம் எடுக்க ஆரம்பித்தேன். இது நடக்கும்போது நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எந்த உள்நோக்கமுமில்லாத தாகம் இருந்தது. வாசிக்கும் எல்லைகள் விரிந்துகொண்டே சென்றன.

அந்த விதை, பத்தாம் வகுப்பு படிக்கும்போது,திருட்டுத்தனமாக கிரைம் நாவல், நாவல் லீடர், உங்கள் ஜூனியர் ஆகிவற்றை ஐம்பது பைசாவுக்கு பழைய புத்தகமாக, வாங்கிப்படித்துவிட்டு தூக்கிப்போடும் வரைக்கும் விருட்சமானது. அப்படித்தூக்கிப்போட்ட நாவல்களை வைத்தே ஒரு லெண்டிங் லைப்ரேரி வச்சுப்பொழச்சிருக்கலாம்.

அங்குதான் எனக்கு ஒரு நண்பன் கிடைத்தான். கூடவே அவன் வில்லத்தனமிக்க அண்ணனும்...என்ன ஆச்சுன்னா....

(தொடரும்)

ஞானாலயா

புதுக்கோட்டையில் எனக்குத்தெரிந்த நண்பரின் நண்பர் கூப்பிட்டு, நான் சொல்லும் முகவரிக்கு வாருங்கள். கொஞ்சம் கம்ப்யூட்டர் வேலை இருக்கிறது என்றார். நானும் என் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி இருக்கும் அந்த வீட்டுக்குப்போனபின், பிரமித்துப்போனேன். அந்த வீடு முழுவதும் புத்தகங்கள்! வரிசைக்கிரமமாக அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு ஒரு நூலகம்போல் இருந்தது. அப்புறம்தான் உறைத்தது.




அது ஞானாலயா! தமிழகத்தின் தனிச்சிறப்பு மிக்க தனியார் நூலகம்.! புதுக்கோட்டையின் பெருமைகளில் முக்கியமானது! இன்றைய தமிழ் அறிஞர்களும், எழுத்தாளர்களும் வந்துபோகும் கோவில்! அந்த நூலகம் எங்கள் பகுதியில்தான் இருக்கிறது என்று எனக்குத்தெரியும். ஆனால் அப்புறம் போய்க்கொள்ளலாம் என்று மூன்று ஆண்டுகளை ஓட்டிவிட்டேன். ( அதற்காக இன்றும் வருந்திக்கொண்டிருக்கிறேன் ). ஆனால் இப்போது நான் ஞானாலயாவின் செல்லப்பிள்ளை! :)



அதன் நிறுவனர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் டோரதி கிருஷ்ணமூர்த்தி தம்பதியர். அவர் பள்ளி தலைமை ஆசிரியராய் இருந்தவர். திருமதி டோரதி அவர்கள் கல்லூரி முதல்வராய் இருந்தவர். இருவரும் பணி ஓய்வு பெற்றுவிட்டு ஞானாலயாவை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள்.

திரு,கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உடலாலும், அறிவாலும், உள்ளத்தாலும்அளவிடமுடியா உயரமானவர்! மனிதர்களை நேசிப்பவர். நேர்மையை சுவாசிப்பவர். ஒரு செய்தியின் அடி ஆழம்வரை சென்று அலசுபவர்! அங்கு வரும் ஆர்வலர்களுக்கு முகம் கோணாமல் விபரங்களை அள்ளித்தருபவர். அவர் விளக்கம் சொல்லாமல் ஒரு புத்தகத்தை படிப்பது உப்பில்லாப்பண்டம் உண்பதைப்போல! அவர் ஒரு நூலகர் அல்ல.! நல்ல வாசகர்! நீங்கள் எந்த தமிழ்ப்புத்தகம் தேடிக்கொண்டிருந்தாலும் இங்கு இருக்கும் சாத்தியம் அதிகம்! மேலும் அதைப்பற்றிய பின்னணித் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.

திருமதி.டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அன்பான தாய் மற்றும் அறிவுசால் ஆசான்! கணவரின் எல்லாச்செயல்களிலும் துணை நின்று ஒரு நல்ல ஆலோசகராகவும் திகழ்பவர்! மிகவும் அற்புதமாகச் சமைப்பார். (நம்மல்லாம் படிக்க போகச்சொன்னா தின்னுப்புட்டு வர்ற கூட்டம்! என்ன பண்றது? ) தவிர..மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்! அவர் எழுதி பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் மலேசியாவிலும், ஐரோப்பாவிலும் கௌரவப்படுத்தப்பட்டு, விருதுகள் பெற்றிருக்கிறார்கள். ஆனால் நம் மத்திய, மாநில அரசுகளோ...ம்ஹூம்.. !



இங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. தமிழில் அரிய நூல்கள் அனைத்தும் இருக்கின்றன. நான் ஒரு எழுத்தாளர் பற்றியோ, படைப்புகள் பற்றியோ தெரிந்துகொள்ள விரும்பினால், அடுத்து போய் விழும் இடம் அதுதான். இங்கு எல்லா சிற்றிதழ்களும் ஆரம்பம் முதல் உள்ளன. இன்றும் வந்துகொண்டிருக்கின்றன. வட அமெரிக்க FETNA வின் தென்றல் இதழைக்கூட நான் படித்திருக்கிறேன்.டெல்லியிலிருந்து வெளிவரும் வடக்கு வாசல் இங்கு வருகிறது.பல நாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி மாணவர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த அறிவுப்பெட்டகத்துக்கு ஒரு மாதம் அந்துருண்டை வாங்கவே அவர்களுக்கு ஒரு தொகை செலவாகிறது. மேலும் இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல கணிணி மயமாக்குவதும், புத்தகங்கள் அனைத்தையும் மின்புத்தகமாக மாற்றுவதும், அதை இணைய நூலகமாக்கி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த வைப்பதும் காலத்தின் கட்டாயம்.! . இவர்கள் இன்றுவரை தங்கள் சொந்த ஓய்வூதியத்தையும், சேமிப்பையும் வைத்தே நூலகத்தை பராமரித்து வருகிறார்கள். ஆர்வலர்கள் நிறைய புத்தகங்களைத் தந்து குவிக்கிறார்கள். ஆனால் பொருளுதவிக்காக இப்போதுதான் மத்திய, மாநில அரசுகளிடம் திட்ட முன்வரைவு வைக்கப்பட்டுள்ளது.

நாம் ஏதாவது இந்த நூலகத்துக்குச்செய்யவேண்டும்.! என்ன செய்யலாம்?

ஏதாவது ஒரு நல்ல நோக்கத்தோடோ, பாராட்டவோ, அவரைத்தொடர்பு கொள்ள விரும்பினால்.. +91 99656 33140

Wednesday, February 17, 2010

எனக்கு ஏன் இந்த தண்டனை?






சுக்ரீவ ராசா ரொம்ப கவலையா இருக்காரு! அவரு சம்சாரம் அவுக அண்ணன் வூட்டுலயே இருந்துக்கிச்சாம்.

அதுவா இருந்துக்கிச்சா? அவரு புடிச்சு வச்சுக்கிட்டாரா?

அதுவும் தெரியலை..மொத்தத்துல ராசா ரொம்ப கவலையோடவே திரியிறாரு!

சரி..சரி..நீ இருக்குற வாழத்தாருல கொஞ்சத்தை எடுத்து தின்னுப்புட்டு போ..தோலை வாசல்லயே போட்டுறாத.. புள்ள வழுக்கி வுழுந்துட்டான்.

நான் ஏதாவது ரோசனைல இருந்திருப்பேன்.நீயாவது எடுத்து வீசியிருக்கலாமுல்ல.! சரி நம்ம சோட்டான் எங்க போனான். ?

அதான் பத்து வயசுக்கு மேல உள்ள புள்ளைங்களுக்கெல்லாம் சண்ட கத்துத் தராகளாமுல்ல ! அதான் போயிருக்கான். ஒங்க ராசா பொண்டாட்டிய மீக்க, ஏம்புள்ளய சண்டைக்கு அனுப்ப வேண்டியிருக்கு!

அடியே சத்தம்போட்டு பேசாதடீ! யாரு காதுலயாவது வுழுந்துடப்போவுது!

சரி..சரி பாத்து போ..வாலை மிதிச்சுப்புடாத!

ஒதுங்கி ஒக்காராம..பாதைல ஒக்காந்துக்கிட்டு அளும்பு பண்றியா?

கோவுச்சுக்காதய்யா..என் ம்ம்முத ராசா!

இப்புடி பாசமான பொஞ்சாதிக்காக என்னவேணும்னாலும் பண்ணலாம்டீ!

அது சரி..எனக்காக நீ என்னவேணும்னாலும் பண்ணலாம். ஒரு கூட்டத்தையே சங்கடப்படுத்தினா நல்லா இல்லைல்ல!

ஏய்..இப்ப என்ன சொல்ல வர்ற?

இல்ல...நம்ம சுக்ரீவ ராசா..பொஞ்சாதிய காப்பாத்த அந்த வாலி ராசாவோட சண்ட போட ஒங்களையெல்லாம் தயார்ப்படுத்துறாரேன்னுதான் பயமா இருக்கு!

அதுக்கு என்ன பண்றது..நாம எந்தப்பக்கம் இருக்கோமோ, அந்தப்பக்கம் நியாயம் இருக்கறதா நெனச்சுக்க வேண்டியதுதான்.!

சரி. பாத்து பத்தரமா போய்ட்டு வா! என்னிக்கு சண்டைன்னு சொல்லு! நான் சின்னப்புள்ளய கூட்டிக்கிட்டு காட்டுக்குள்ள வேற எடத்துல போய் உக்காந்துக்குறேன்.

கவலப்படாதடீ..எல்லாம் நல்லபடியா நடக்கும்.

வூட்டவுட்டு கெளம்பி பக்கத்து மரத்துல இருந்த சொம்பானோட காட்டுக்குள்ள மத்த ஆளுகளையும் பாத்து கூப்புட்டுக்கிட்டே போனோம்.நாங்க எல்லாரும் கவலையோடவே ராசா ஒளிஞ்சிருக்கிற எடத்துக்கு போனோம். எதுத்தாப்புல அனுமாரு சந்தோசமா , வாலே இல்லாத லச்சணமா இருந்த ரெண்டு ஆளுகளோட பேசிக்கிட்டு வந்தாரு.! ஒருத்தரு கையில பெரிய வில்ல வச்சிருந்தாரு. இன்னொருத்தரு அவரு தம்பி போல.. ரெண்டுபேரும் மூஞ்சிய உம் முன்னு வச்சிக்கிட்டு அனுமாருக்கிட்ட என்னமோ பதில் சொல்லிக்கிட்டு வந்தாக.. பாவம் அவுகளுக்கு என்ன கவலயோ?

ராத்திரி வூட்டுக்கு வந்தேன்.


மத்தாயி ! ஒரு விசயம் தெரியுமா?

என்னய்யா!

இன்னிக்கு ரெண்டு மனுசங்க நம்ம காட்டுக்கு வந்தாக!

சரி..அதுக்கென்ன?

அவுங்கள்ல ஒருத்தர் பேரு ராமனாம். பெரிய வில் வித்தைக்காரராம்.

ம்

இன்னொருத்தர் லச்சுமணனாம். அவரும் பெரிய வீரராம்.

சரி.

அவுங்களால நமக்கு ஒரு விடிவு காலம் பொறக்கப்போவுது!

என்ன விடிவுகாலம்.. நமக்கெல்லாம் வூடு கட்டி குடுக்கப்போறாராமா?

இல்லடீ! அத வுட நல்ல விசயம்!
அந்த ராமரு..வாலி மகாராசாவை கொல்லப்போறாராம். !

தனியாவா?

ஆமாங்குறேன்.

மவராசன்.நல்லா இருக்கணும்.! எங்க நீங்கள்லாம் புத்திகெட்டு அந்த வாலி ராசாவோட சண்டைக்கு போய் தோத்து...இல்ல உனக்கு எதாவது ஆகி..நான், புள்ளைகள்லாம் திண்டாடிப்போயிருவோமோன்னு நெனச்சேன்.

களுத..நீ ஏன் கவலப்படுற? அதான் நல்லது நடக்கப்போவுதுல்ல!

ஆமா..எப்புடி கொல்லப்போறாராம்.?

அதெல்லாம் திட்டம் தீட்டிட்டாங்க.. அந்த வெவரமெல்லாம் மேல் அதிகாரிகளுக்கே தெரியல.. நான் ஒரு சாதாரண சிப்பாய்! எனக்கு எப்புடி தெரியும்?

சிப்பாயா? யோவ்..நீ பாட்டுக்கும் காட்டு வேலை பாத்துக்கிட்டிருந்த! மொத வாட்டி நடந்த சண்டைல எல்லா சிப்பாய் கூட்டத்தையும் சாகக்குடுத்துட்டு ராசா ஆளெடுத்ததுல இப்பத்தானே சிப்பாயா ஆகியிருக்க? பெருசா பீத்திக்கிற?

அது கெடக்கு! நீ ஏன் ரொம்ப கவலைப்படுற!

சொல்லுவய்யா சொல்லுவ..! உன்னய வெளில அனுப்பிட்டு , சின்னப்புள்ளய வயித்துல கட்டிக்கிட்டு , அடுத்து என்ன நடக்குமோன்னு திக்கு திக்குன்னு நானுல்ல அலையுறேன்.

சரிடா கண்ணு! நான் என்ன பண்றது சொல்லு! இனிமே சண்டை வராதுன்னு நினைக்கிறேன். சந்தோஷமா தூங்கு.!








அடுத்த நாளே அந்த நல்ல சேதி வந்துருச்சு! ராமரு எங்கயோ மறைஞ்சு நின்னு சுக்ரீவ ராசா குடுத்த சமிக்ஞை மூலமா வாலி ராசாவை கொன்னுட்டாராம். எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசம். எந்த ஒரு போரும் இல்லாம, ஒரேடியா வேலை முடிஞ்சு போச்சேன்னு! அன்னிக்கு எல்லாருக்கும் நெறைய வாழத்தாரு..தேங்கா, பழங்க ன்னு சுக்ரீவ ராசா வாரி எறைச்சாரு.


வூட்டுக்கு சந்தோசமா வந்தேன்.


அடியே..! இப்ப பாத்தியா? உன் நல்ல மனசுக்கு ஒரு கொறையும் இல்லாம, எல்லாம் சுமுகமா முடிஞ்சிருச்சு!

எல்லாம் அந்த நல்ல மனுசன் ராமன் பண்ணுன வேலை! உங்க எல்லாராலயும் சாதிக்க முடியாதத ஒத்த ஆளா சாதிச்சிருக்காரு.! நம்ம சுக்ரீவ ராசா பொண்டாட்டிய காப்பாத்தறதுக்குன்னே வந்திருக்காரு போல!

ஆமாங்குறேன்.

அடுத்த நாள் அந்த இடி மாதிரி சேதிய அந்த சொம்பான் பய வந்து சொன்னான். அந்த ராமரோட பொண்டாட்டிய ராவணனன்னு ஒரு அசுர ராசா தூக்கிட்டு போய்ட்டானாம். அந்த அம்மாவ மீக்க எல்லாரும் படையெடுத்து போவணுமாம். அதுவும் இந்த காட்டுல இல்லயாம். வேற ஏதோ லங்காபுரியாம். ரொம்ப தூரம் தள்ளி இருக்காம். எனக்கு பக்குன்னு இருந்துச்சு.! என்னடா இது ! இப்பதான் சண்டை சச்சரவு இல்லாம பண்ணினாரேன்னு சந்தோசமா புள்ளக்குட்டிகளோட இருக்கலாமுன்னு நெனச்சோம். இப்புடி ஒரு சோதனையா?

அவக்கிட்ட போய் சொல்றதுக்குள்ள...அளுது தீத்துப்புட்டா!

கவலப்படாதடீ ! சின்ன சண்டயாத்தான் இருக்கும். சீக்கிரம் திரும்பி வந்துரலாம். காட்டை சுக்ரீவ ராசாவுக்கு மீட்டுக்குடுக்கறதா ராமரு ஒத்துக்கிட்டதே நம்ம ஆளுக அவருக்காக லங்காபுரிக்கு சண்டைக்கு வருவோம்னுட்டுதானாம். அது முன்னாடியே அனுமாரு பேசி முடிச்சிட்டாராம்.

அது எப்புடி பேசுவாக! எனக்கு ராமரோட நாயமே புரியல! அவரு மனுசருதானே.! ராவண ராசாவை பல தடவ தொம்சம் பண்ணின வாலி ராசாவையே ஒத்த ஆளா கொன்னவரால..அவரு பொண்டாட்டிய மீக்க முடியலயா? என்ன கெரகம் இது?
அவுங்கள்லாம் அரக்கருங்களாமுல்ல! அவுகள்ட்ட இந்த மூஞ்சியையும் வாலையும் வச்சுக்கிட்டு எப்புடி நீங்கள்லாம் சண்ட போடப்போறீக? யோவ்! ஒனக்கு எதாவது ஆச்சு, நானும் புள்ளைங்களும் அடுத்த நிமிசம் செத்துருவோம் ஆமா!

ஏண்டி இப்புடி பொலம்புற? நாம எந்த பாவமும் செய்யல..அப்பறம் ஏன் கவலப்படுற?

அதான்ய்யா கேக்குறேன். நாம எந்த பாவமும் செய்யல! அப்புறம் ஏன்யா நம்மள சுத்தி சுத்தி அடுத்தவன் பொண்டாட்டிய காப்பாத்த இழுத்து வுடுறாங்க!

கவலப்படாதடீ செல்லம்.! எனக்கும் ஓன் நியாயம் புரியுது! இருந்தாலும் நாம ராச உத்தரவுக்கு கட்டுப்பட்டுத்தானே ஆவணும்.

எனக்கென்னமோ பயமா இருக்குய்யா!

அன்னிக்கு அவள சமாதானப்படுத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு! ஒரு வழியா போருக்கு கெளம்பியாச்சு ! எல்லாரையும் வரிசையா நடக்க வுட்டாங்க! கடல்ல கல்லெல்லாம் அடுக்கி பாலமா மாத்தி அந்த லங்காபுரி தீவ போய் சேர்றதுக்குள்ள அசந்து போச்சு! போனவுடனேயே சண்டையப்போடுங்கன்னுட்டாங்க!

எதிரி ஒவ்வொருத்தனும் மலை மாதிரி இருக்கான். அவனுங்களை கொல்லணும்கிற நெனப்ப விட எப்பிடியாவது இவனுங்ககிட்ட தப்பிக்கணுமேன்னுதான் தோணுச்சு! நானும் ஒரு வழியா ரெண்டு நாள ஓட்டிட்டேன். அன்னிக்கு சண்டை கொஞ்சம் உக்கிரமா இருந்துச்சு. ஒரு அரக்கனை அடிக்க ஓடினேன். அவன் கையில வச்சிருந்த ஆயுதத்த இதுவரைக்கும் நான் பாத்ததே இல்ல! என்ன நோக்கி ஓடி வந்தான். நான் தப்பிக்க நெனக்கிறதுக்குள்ள வயித்துல நல்லா குத்திக்கீறிட்டான். அப்புறமா என் வாலைப்புடிச்சு தூக்கி என்னைய தரையில அடிச்சுப்புட்டான். தலை ரொம்ப வலிச்சுது. தொட்டுப்பாத்தேன் ஈரமா இருந்தது. ரத்தம்..வயித்துலேருந்து கொடல் வெளில வந்துருச்சு ! எல்லாம் மங்கலா தெரிய ஆரம்பிச்சது! தூரத்துல ராமரு
ராவணனைப்பாத்து என்னமோ சொல்லிக்கிட்டிருந்தாரு..! உன்னிச்சு கேட்டேன்..'இன்று போய் நாளை வா' ! கண்ணெல்லாம் இருட்டிருச்சு...அனேகமா செத்துருவேன்னுதான் நெனக்கிறேன்.ஐய்யோ..! என் பொண்டாட்டி ,புள்ளைங்க கதி?

என்ன ராமரே.! நீங்க பாட்டுக்கும் கையில கிடைச்ச ராவணராசாவை வுட்டுப்புட்டு...நாளைக்கு வரச்சொல்றீஙக.! நாளைக்கு இன்னும் என் கூட்டாளிக எத்தனை பேரு சாவப்போறாங்களோ..உங்களுக்கு உங்க நியாயம் நிக்கணும்..ஆனா,

நான் என்ன தப்பு செஞ்சேன்?


டிஸ்கி : நட்சத்திர வாரத்தில் மினிமம் ஒருஅட்வைஸ் பதிவு, ஒரு மீள்பதிவு போடணுமாம்.! இவற்றை மீறி... 2008ல் படிச்சவுங்க லூஸுல வுட்றுங்க! :)




மறைக்கிறான் சார்!

கறம்பக்குடி டி இ எல் சி தொடக்கப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ரேடியோவில், காலை 11.40க்கு கல்வி ஒலிபரப்பில் ஒவ்வொரு வகுப்புக்கும் பாடம் எடுப்பார்கள். அந்தப்பாடத்தை , அந்தந்த வகுப்புக்கு போட்டுக்காட்டுவதில், எங்கள் தலைமை ஆசிரியருக்கு அலாதி விருப்பம். அந்த கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சி இன்றுவரை ரேடியோவில் வந்துகொண்டிருக்கிறது. யார் கேட்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் நானே பலமுறை அந்த ஆளில்லாத கடையில் டீ ஆத்தியிருக்கிறேன்.

ரேடியோ இருந்தது தலைமை ஆசிரியர் அறையில். அது ஒரு மரப்பெட்டிபோல் இருக்கும் வால்வு ரேடியோ! தலைமை ஆசிரியர் அறை வாசலில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்திருப்பார்கள். எந்த வகுப்புக்கு ரேடியோவில் பாடம் வருகிறதோ, அந்த வகுப்பு 11:30 மணிக்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குப்பின்னால் அமர வேண்டும். அவர்களில் ஒரு பெரிய மாணவன் தான் சட்டாம்பிள்ளை.!

ரேடியோ மெதுவாக தன் முனகலை ஆரம்பித்து...கனைத்து.. ' ஆல் இண்டியா ரேடியோ' என்று ஆரம்பிக்கும்போது நாங்கள் ஹோ வென்று கூச்சல் போட்டு எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம். என்னமோ எங்களுக்காகவே ரேடியோவுக்குள் ஒரு ஆள் இருந்துகொண்டு பாடம் நடத்துவதாக நினைப்பு!

இப்படியாக, ஒருநாள் எங்கள் வகுப்புக்கான கல்வி ஒலிபரப்பு அறிவிக்கப்பட்டது. எங்கள் வகுப்பிலிருந்து வரிசையாகச் சென்று ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குப்பின்னால் அமர்ந்தோம். பேசாம அஞ்சாம் வகுப்புப்பையனா பொறந்திருக்கலாம். டெய்லி ரேடியோ முன்னாடி உக்காரும் சான்ஸ் கிடைக்குது! என்கிறபடியாக நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.அன்று எங்களுக்கெல்லாம் சட்டாம்பிள்ளையாக தலைமை ஆசிரியரே வந்திருந்தார். ஆள்காட்டி விரலை வாய்க்குக்குறுக்கே வைத்துக்காட்டிக்கொண்டே இருந்தார். அவர் சொன்னதுபோலவே செய்துகொண்டே உதடுகளை மூடிக்கொண்டு நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அதில் இரண்டு பேர்,

டேய்! இதுக்குள்ளேருந்து எப்படிடா பேசுறாங்க!

நம்மள மாதிரி இல்லாம குள்ள மனுசங்க இருக்காங்களாம். அவுகளை வாத்தியர் வேலைக்குச் சேத்துப்புட்டு - பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினா நம்மள விட குள்ளமா இருக்குறதால நம்மளையெல்லாம் அவுகளால அடக்க முடியாதுன்னு - ரேடியோக்குள்ள அனுப்பிருவாகளாம். அவுங்கதான் நமக்கு பாடம் எடுக்குறாங்க! - எங்க அப்பத்தா சொன்னுச்சு!

அப்புடியா? அடேயப்பா...நம்ம கிளாஸுலேயே நீதான்டா வெவரமான ஆளு!

இது என்ன பெரிய விசயம்.. போனவாட்டி இங்க வந்திருந்தோமுல்ல... அப்ப அந்த வலை மாதிரி இருக்குற துணில ஒரு ஓட்டை இருக்குல்ல...! ரேடியாக்குள்ளேருந்து அந்த வாத்தியாரு நம்மள்ல யார் யாரு பேசுறாங்கன்னு பாக்குறதை நான் பாத்தேன். அப்படியே பயந்துட்டேன். அதுலேருந்து நான் பேசுறதே இல்லை! என்று வாயில் விரல் வைத்து பேசிக்கொண்டிருந்தான்
இந்த சம்பாஷணை போய்க்கொண்டிருக்கும்போதே....மேசையின் மீதிருந்த ரேடியோ பேச ஆரம்பித்தது. "ஆல் இண்டியா ரேடியோ....."

அனைவரும் விரைப்பானோம். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் உயரம். அதில் ஒருவன் கொஞ்சம் மிதமிஞ்சிய உயரம். மொத்தத்தில் இரண்டாம் வகுப்பு கோஷ்டி எல்லாருமே அவர்களைவிட குள்ளம்தான். ஆக.. மெதுவாக உட்கார்ந்திருந்த எங்களில் சிறு சலசலப்பு தோன்றி, எங்களில் சிலர் முட்டிக்கால் போட்டுக்கொண்டு ரேடியோவைப்பார்க்க ஆரம்பித்தோம்.

அப்போதுதான் ரேடியோவுக்குள் வாத்தியார் இருப்பதாகச்சொன்னவன், தலைமை ஆசிரியரைப்பார்த்து கத்தினான்.

"சார்! ரொம்ப நேரமா பாத்துக்கிட்டிருக்கேன். முன்னாடி இருக்குறவன் ரேடியாவை மறைக்கிறான் சார். என்னால பாடத்தை கவனிக்கவே முடியலை! உள்ள இருக்குற வாத்தியாரு என்னைப்பத்தி என்ன நினைப்பாரு?"

தலைமை ஆசிரியரும் ஓடி வந்தார். அவனுக்கு முன்னால் இருப்பவனை குச்சியால் அடித்துக்கொண்டே கேள்வியின் அபத்தம் புரியாமல் சொன்னார்.

"ஏண்டா ரேடியாவை மறைக்கிற? உக்கார்றா!!

இப்படித்தாங்க நானெல்லாம் ரேடியா பாத்து வளந்தேன்.!

கறம்பக்குடி

புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர்! விவசாயத்தை மட்டும் நம்பியிருக்கும் தேர்வுநிலைப்பேரூராட்சியாக இருந்து, இப்போது தாலுகா தலைமையிடமாக மாறியிருக்கிறது.

புதுக்கோட்டையிலிருந்து செல்லும் சாலையில் ஊருக்குள் நுழையும்போதே பெரியாறு (காவிரியின் ஏகப்பட்ட கிளை நதிகளில் இதுவும் ஒன்று! இப்போது வெறும் மணலாறு) பாலத்தைக்கடந்தால்,இன்னும்

சிறிய நரியாற்றுப்பாலம்! அதற்குப்பிறகு ஊரின் காவல் தெய்வம் முத்துக்கருப்பையா கோவில்! இதில் பரம்பரைப்பூசாரிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டு இரண்டாவது முத்துக்கருப்பையாவை உருவாக்கி, அவருக்கும் கோவில்! அவர் பெயர் சின்னக்கருப்பர்!

இந்த இருகோயில்களுக்கும் பின்னால் 16ம் நூற்றாண்டு சிவன் கோவில்! அதற்கு எதிரில் உள்ள குளத்துக்கு சிவன் குளம் என்று பெயர் இருந்திருந்தால் அது நியாயம். ஆனால் அதன் பெயர் கருப்பர் குளம்.!

புதுக்கோட்டை சாலை இன்னும் நீளும்போது வரிசையாக ரேஷன் கடை, கால்நடை மருத்துவமனை, பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், அதற்கு எதிரில் யூனியன் ஆபீஸ் க்வார்ட்டர்ஸ் அதற்குப்பின்னால் தெருக்கள் என, ஊர் ஆரம்பிக்கும். அந்த யூனியன் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தருகில்தான் எங்கள் வீடு இருந்தது.

ஊரின் மையப்பகுதியாக இருக்கும் அந்த நான்கு ரோடு சந்திப்பிற்கு அரசாங்கம் என்ன பெயர் வைத்திருக்கிறதென்று தெரியவில்லை. ஆனால் இன்றுவரை அதன் பெயர் - சீனிகடை முக்கம்! புதுக்கோட்டையிலிருந்து ஒரு சாலை ஊருக்குள் செல்லும். பட்டுக்கோட்டையிலிருந்து திருவோணம் வழியே ஒரு சாலை , புதுக்கோட்டை சாலையை இந்த சீனிகடை முக்கில்தான் சந்திக்கும். பட்டுக்கோட்டையிலிருந்து இடையாத்தி வழியாக இன்னொரு சாலையும் இந்த முக்கில்தான் சந்திக்கும். இவை மூன்றும் சேர்ந்து நான்காவது திசையில் பேருந்து நிலையம் நோக்கி பயணிக்கும்.

ஊர்க்கடைசியில் பேருந்து நிலையம். அதன் எதிரிலேயே காவல் நிலையம். அதன் அருகிலேயே அரசினர் மேல்நிலைப்பள்ளி. பள்ளிக்கு மிகப்பெரிய விளையாட்டு மைதானம்! சீனிகடை முக்கம்தான் மாலை வேளைகளில் மக்கள் சங்கமிக்கும் இடம். ஊரின் ஒரே தியேட்டரான முருகனில் என்ன படம் ஓடுகிறதென்பதை சீனிகடை முக்கத்திலுள்ள மிகப்பெரிய போஸ்டர் சொல்லும். கோட்டைப்பட்டினத்தார் கடை, முல்லை மெஸ் , முருகன் டீஸ்டால், வேலு மிக்ஸர் கடை , தனுஷ்கோடி கடை என பல்வேறு கடைகள்! நெய்வேலி கிராமத்தின் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையில், தெக்கிக்காடு இருக்கிறது. அந்தப்பகுதிக்காரர்தான் நம்ம தெக்கிக்காட்டான் அவர்கள்! பிறகு நமது தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சுந்தரவடிவேலும் இந்த ஊர்தானுங்க!

ஊருக்குள் பல்வேறு லேண்ட் மார்க்குகள் இருக்கின்றன. 1980 களிலேயே ஊருக்குள் த.சு.லூ.தி (தமிழ்நாடு சுவிசேஷ லூத்திரன் திருச்சபை - TELC) பள்ளி செயல்பட்டு வந்தது. அந்தப்பகுதியிலேயே வள்ளுவர் திடல். பெரிய பேச்சரங்கங்கள், பொதுக்கூட்டங்கள் இங்குதான் நடக்கும். அதற்குப்பின்னால் பங்களா குளம்! பிறகு ஒரு அரசாங்கத் தொடக்கப்பள்ளி. ஆனால் அதை சிறப்பாக நடத்திய ஆசிரியர் திரு.செங்கமலம் என்பவரது பெயரால் செங்கமலம் ஸ்கூல் என்றே வழங்கப்பட்டு வந்தது.

சின்ன வயதில் ' செங்கமலம் சிரிக்கிது! டிஇஎல்சி அழுவுது'! என்று பாடித்திரிந்ததுண்டு!

அந்த ஊரில்தான் TELC பள்ளியின், முதல் வகுப்பில் என்னை சேர்த்துவிட்டார்கள். அப்போது பெற்றோர் கலியாப்பட்டியிலேயே இருந்தனர். நானும், என் அத்தை மகனும் தாத்தா, பாட்டியுடன் இருந்தோம்.

அந்தப்பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும்போதுதான் அது நடந்தது.


(தொடரும்)

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...