Saturday, April 16, 2011

குறையொன்றுமில்லை...!






    என் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இந்தப்பதிவு! முன்னுரை தேவைப்படாத சில பகிர்தல்கள் இருக்கின்றன. அத்தகையதில் இதை சேர்க்கலாம்.  பதிவின் நீளம் சம்பவங்களால் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.

      நர்சிம்.

      இந்தப்பெயரில்தான் எத்தனை வசீகரம்! தெளிவான முகமும், பார்த்தவுடன் ’பச்சக்’ என்று ஒட்டிக்கொள்ளும் நட்பும், இத்தனையும் மீறி,எவ்வளவு பெரிய நிறுவனத்தில் மிகப்பெரும் பதவியில் இருப்பவர் என்ற  மமதை இன்றி இறங்கிப்பழகும் குணமும் பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை.

      பதிவுகளில் அறிமுகம் இருந்தாலும், அவரை முதலில் பார்த்தது சென்னை புத்தகக்காட்சியில், தனது அய்யனார் கம்மா புத்தகத்தின் விற்பனை பற்றியும் அதன் வீச்சு பற்றியும் அக்கறையுடன் இருந்ததும், ஓடிச்சென்று தனது ஹோண்டா சிட்டி காரிலிருந்து கையிலிருந்த புத்தகங்களைக்கொண்டு கடைகளில் சேர்த்ததும், ஏன் உங்கள் நிறுவன காரை பயன்படுத்தவில்லை என்று நான் கேட்டபோது, பிற நிறுவனங்களின் காரை ஓட்டிப்பார்த்தால்தான் நமது நிறை குறைகள் தெரியும் என்று சொன்னதில் இருந்த நியாயத்தில் வியந்ததில் ஆச்சர்யம் இல்லை.

 பிப்ரவரி 14 ,2010ல் கேபிள் மற்றும் பரிசலின் புத்தகவெளியீட்டு விழாவில்.. வேட்டி கட்டிக்கொண்டு வந்து, அனைவரையும் எளிமையால் கவர்ந்து , அமைதியாக ஒரு ஓரத்தில் போய் அமர்ந்து, தன்னை முன்னிருத்திக்கொள்ளாத தன்மை பிடித்திருந்ததில் ஆச்சர்யம் இல்லை.

      பின்னர், அன்றைய விழாவில் எனது நிகழ்ச்சித் தொகுப்பைப்பற்றி அவர் பாராட்டி எழுத, அதற்காக நன்றி கூற ஒரு அழைப்பு என்று அட! ஒரு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறாரே .. இந்த பதிவுலகம் எத்தனை பிரம்மாண்டமானது , அதன் நட்பு வட்டம் எத்தனை விஸ்தாரணமானது என்று எண்ணி வியந்ததிலும் ஆச்சர்யமில்லை.

 பின்னர் ஏப்ரல் 19ம்தேதியன்று அவர் அழைக்கிறார்.
      
அண்ணா ! உங்க கிட்ட ஒரு உதவி! வேற யார்க்கிட்டயும் கேட்க தோணலை!
      
என்ன சொல்லுங்க!
      
ஒரு பிஸினஸ் டீல் முடிக்கவேண்டியிருக்கு! உங்களால எனக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ண முடியும்! மே ஒண்ணாந்தேதி எனக்கு சம்பளம் கிரெடிட் ஆனவுடனே நெக்ஸ்ட் செகண்ட் வாங்கிக்கலாம்.

ஆச்சர்யமாக இருந்தது.
      
( இந்நிலையில், என்னிடம் பேங்க்கில் இருந்தது 1,41,479.00. ஆகவே ஒருலட்சம் தரமுடியும் என்று சொன்னேன். அதுவும் 12 நாட்களில் திரும்பி வரப்போகும் பணம்தானே என்ற நம்பிக்கையுடன். ஏனெனில்,  ஜூன் மாதம் சென்னையில் ஒரு வீடு வாடகைக்கு பிடிக்கும்  எண்ணத்தில் இருந்தேன். அதற்கு குறைந்தபட்சம் 50-70 ஆயிரம் வரை தேவைப்படும், - மேலும் வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க 40 ஆயிரம் வரை ஆகும் - என்பதால்தான் அந்தத்தொகையில் நானே கை வைக்காமல் இருந்தேன் )
      
அதுக்கென்ன செஞ்சாப்போச்சு! ஒரு லட்சம் தரலாம்!
     
அடடா! கரெக்டா எனக்கும் ஒரு லட்சம்தான் தேவைப்படுது! ரொம்ப தேங்ஸ்ண்ணா!
      
      அன்று நான் ஊரில் இல்லை. ஆனால், அவசரத்தேவைக்காக, வீட்டில் ஒரு செக் கொடுத்துவைத்திருப்பேன். அதை என் நிறுவன ஊழியரிடம் தரச்சொல்லி, ஐசிஐசிஐ வங்கியில் உடனே போடச்சொன்னேன்.
     






         22ம் தேதி தாய்லாந்து கிளம்பிச்சென்றுவிட்டு, 30ம் தேதிதான் வந்தேன். பின்னர் மே 5 தேதி வரை அவரை தொந்தரவே செய்யவில்லை. பின்னர் நான் போன் செய்தபோது எடுக்கவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் அவரே போன் செய்து நான் பேக்டரியில் இருந்தேன். அதனால் எடுக்கமுடியவில்லை. நாளை உங்கள் அக்கவுண்ட்டில் போட்டுவிடுகிறேன். என்றார். உடனே என் அக்கவுண்ட் நம்பரைத்தந்துவிட்டு காத்திருந்தேன்.
      
       இந்தக்காலகட்டத்தில் அஸ்லாம் எனக்கு அறிமுகமானான். மிகுந்த அமைதியான, கனிவான, எல்லோரும் நலமாக இருக்கவேண்டும் என்று எண்ணும் அற்புதமான, மின்னியலில் பொறியியல் பட்டம் பெற்ற இளைஞன். அவனுடைய தந்தையின் அகால மரணம் மற்றும் அன்னையின் பாதுகாப்பின்மை காரணமாக வயது 29 ஆகியும், ஒரு சரியான வேலையில் சேரமுடியாமல் அல்லாடிக்கொண்டிருந்தான். குடும்ப வருமானம் அம்மாவின் பென்ஷன் ரூபாய் 3500ல் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. நான் சிறிய அளவில் வேலைவாய்ப்புகளை வாங்கித்தந்துகொண்டிருந்ததால், என்னை அணுகினான். இதற்கிடையில் அவனுக்கு திருமணமும் முடிவாகியிருந்தது. மாப்பிள்ளை சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு நல்ல வேலையில் இருந்தால், உடனே திருமணத்தை முடித்துவிடலாம் என்று பெண் வீட்டில் சொல்லிவிட்டார்கள். சந்தித்த நாளே என்னிடம் அத்தனையும் சொல்லிவிட்டான். நானும் ஏதோ நம்பிக்கையாய் உளறிவைக்க, அவன் அன்று இரவு மிகவும் மகிழ்வாக இருப்பதாகக் கூறிச்சென்றான்.
      
     மனம், தொடர்புள்ள பெரிய மனிதர்களையும், நிறுவனங்களையும் பற்றி சிந்திக்க ஆரம்பித்தது. முதலில் வந்துவிழுந்த முகம் இவருடையது. உடனே கூப்பிட்டேன். ஒரு வேலை வாங்கித்தரமுடியுமா என்று கேட்டேன். கட்டாயம்ணா! அதுக்கென்ன உடனே செஞ்சாப்போச்சு! நீங்க ரெஸ்யூம் அனுப்புங்க என் டேபிள்லேருந்துதான் போகணும்! அடுத்தமாசம் ஜாயின் பண்ணிரலாம் என்றவுடன், அடுத்த வினாடி அவனது ரெஸ்யூமை அனுப்பிவிட்டு நானே அஸ்லாமாகி கண்ணில் நீர் கோர்க்க நன்றி சொன்னேன்.
      
    இந்த செய்தியை சொன்னவுடன் அந்தக்குடும்பம், நாகூர் தர்கா சென்றுவந்தது. சொந்தபந்தங்களுக்கு பிரியாணி செய்து போட்டது. என்னவோ நான் தான் வேலை கொடுத்ததுபோல் என்னைக் கொண்டாடியது. அதற்கு நான் உரியவனில்லை. அதைச்செய்தது போர்டு நிறுவனத்தில் வைஸ் பிரஸிடெண்ட்டாக இருக்கும் என் நண்பர்தான் என்று சொன்னதும் அவருக்காவும் துஆ செய்ய ஆரம்பித்தது.
      
    ஆயிற்று. ஒருமாதத்துக்குப்பிறகு நான் அவருக்கு போன் செய்தவுடன் தன் டேபிளிலிருந்து அன்றே அனுப்பிவிட்டதாகவும், வேலைப்பளுவில் HR ல் தாமதித்திருப்பார்கள் எனவும், ஒரு கண் துடைப்பு நேர்முகத்தேர்வு இருக்கும். அதற்கான கடிதம் எப்போதுவேண்டுமானாலும் வரும் என்றும் நம்பிக்கையுடன் கூறினார்.
      
    என் தொகையைப்பற்றிக் கேட்டபோது, உடனே செய்துவிடுகிறேன். கையில் பணத்தை வைத்திருக்கிறேன். பேங்கில் போட நேரமில்லை. என்றவுடன், நமக்கு இப்போது என்ன தேவை ஏன் இப்படி சில்லித்தனமாக நடந்துகொள்கிறோம் என்று நினைத்துக்கொண்டே, ஒரு திக்கற்றவனுக்கு தன் நிறுவனத்தில் வேலை வாங்கிக்கொடுத்து வாழ்க்கையே கொடுக்கிறார் இவரிடம் இப்போது ஏன் பணத்தை கேட்டு தொந்தரவு செய்யவேண்டும் என்று நான் கேட்பதை விட்டுவிட்டேன். அடுத்த ஒரு மாதம் அவர் பணமும் போடவில்லை. வேலைக்கும் ஏதாவது ஒரு காரணம் சொல்லிக்கொண்டிருந்தார்.
      
    ஜூலை 2010 ஆயிற்று. நான் சென்னையில் வீடு பார்த்துவிட்டேன். வாடகை 10ஆயிரம், அதை இரு நண்பர்கள் பகிர்ந்துகொள்வதால் மாதம் 5000 எனவும், 10 மாத அட்வான்ஸான என் பங்கு 50000 எனவும் முடிவானது. அதுதான் அவரிடம் பேங்க் போல இருக்கிறதே என்று போன் செய்து கேட்டேன். இதோ நாளை போட்டுவிடுகிறேன் என்றார். இல்லை. அடுத்தநாள் போன் செய்தால் இதோ உடனே போட்டுவிடுகிறேன். இல்லை. மீண்டும் எஸ் எம் எஸ் அனுப்பினால், வேலையில் மறந்துவிட்டதாகவும், உடனே செய்துவிடுவதாகவும் பதில் வருகிறது. ஆறு நாட்கள் நரக வேதனை. ஏழாம் நாள் தான் ஒரு செக் போட்டதாகவும் அது மதுரையில் பவுன்ஸ் ஆகிவிட்டதால் பிரச்சனை ஆகிவிட்டதாகவும் திங்கட்கிழமை போட்டுவிடுவதாகவும் சொல்ல, இங்கு வீட்டுக்காரருக்கு முன்பணம் கொடுக்க வேண்டியிருக்க, வெளியில், 50ஆயிரம் 3.5 சதவீத மாத வட்டிக்கு கடன் வாங்கினேன்.

      ஆகஸ்டில் , மன உளைச்சல் தொடங்கியது. உடனே கொஞ்சம் அழுத்தமாக கேட்க ஆரம்பித்ததும் ரூபாய் 25000த்தை கணக்கில் போட்டார். பின்னர் 15 நாட்கள் கொடுத்த தொந்தரவில், காலை 6:30க்கு காந்திசிலை முன் ரூ 12000 கொடுத்தார். அப்போதும் ஏ டி எம்மில் பணம் இல்லை என்று சொன்னதை நான் ரசிக்கவில்லை. அன்று கூட இருந்த நண்பரிடன் நான் அறிமுகப்படுத்தி வைக்கும்போது போர்டில் பெரிய பதவியில் இருக்கிறார் என்றேன். மேலும் அப்போது என்னவாக இருக்கிறீர்கள் என்றபோது ஏ வி பி என்றார். அப்படியென்றால் அசோசியேட் வைஸ் பிரசிடெண்ட் என்றும் சொன்னார். அன்றும் அஸ்லாம் பற்றி மிகவும் கவலையுடன் விசாரித்தேன். விரைவில் ஆகிவிடும் கவலையே வேண்டாம்! என்றார். வேறு எங்காவது முயற்சிக்கலாமா என்றபோது அடுத்தமாதம் அவன் ஃபோர்டு எம்ப்ளாயி ! அப்புறம் உங்க இஷ்டம் என்றார்.

ஆச்சர்யம் அதிகமானது.

      இந்நிலையில், அஸ்லாமுக்கு முடிவு செய்யப்பட்டிருந்த பெண்வீட்டார் அவசரப்பட்டு வேறு இடத்தில் திருமணம் நிச்சயித்துவிட்டார்கள். அதில் அவன் மிகவும் உடைந்து அழ ஆரம்பிக்க, நான் சமாதானப்படுத்தி ,இவரிடம் பேச, உடனே கிளம்பி சென்னை வரச்சொன்னார். அவனும் மிகுந்த நம்பிக்கையுடன் வந்தான். இவரது கார் நிறுவனத்தில்தான் நேர்முகத்தேர்வு என்று நான் நினைத்திருக்க, இவரோ, தான் ஆரம்பித்திருக்கும் தனிப்பட்ட கார் வாடகை நிறுவனத்துக்கு வரச்சொல்லி நம்பிக்கையுடன் அடுத்தமாதமே உன் வீட்டிற்கு வேலை உத்தரவு வரும் என்று பேசியிருக்கிறார். அப்போதும் நான் நம்பினேன். அஸ்லாம் மிகவும் உற்சாகத்துடன், ஒரு நிறுவனத்தின் துணைத்தலைவர் இவ்வளவு எளிமையானவராக இருக்கிறாரே என்று மிகவும் மகிழ்ந்து போனான். அதில் அவன் வந்துசென்ற செலவான ஆயிரமும் அமிழ்ந்துபோனது.

  அடுத்து, இரண்டு மாதமானது. நான் எனக்கான கடனை வட்டியுடன் அடைக்க ஆரம்பித்தேன். மீண்டும் பணத்துக்கும் , அஸ்லாமுக்கும் அவர் சொன்ன காரணங்கள் அபத்தமானவைகளாக இருக்க, சந்தேகம் உருவானது. ஒரு முறை என் கணக்கில் செக் போட்டிருப்பதாகச் சொன்னார். அடுத்த நாள் அது பவுன்ஸ் ஆகிவிட்டதாகச் சொன்னார். என் கணக்கில் போடப்பட்ட செக் , பவுன்ஸ் ஆனால் என்னிடம் பணம் பிடிக்கவேண்டுமே? அது என் கணக்கில் காட்டப்படுமே என்று என் சிறிய மூளை சிந்திக்க ஆரம்பிக்க, விசாரணையைப்போட்டேன். அப்போது வந்த செய்திகள் எதுவுமே நம்பிக்கையானதாக இல்லை. ஆகவே, கொஞ்சம் அழுத்தமாகவும், கடுமை கலந்தும் நான் கேட்க ஆரம்பித்ததும் அக்டோபர் மாதம் 6ம் தேதி என் தொகையை தந்துவிட்டார்.

அன்று, ஒரு பதிவரிடம், ஒரு பெரிய மானப்பிரச்னை என்றும், அதற்காக 50ஆயிரம் வேண்டுமென்றும் கேட்டு வாங்கி, அதைத்தான் எனக்குக் கொடுத்ததும், அடுத்த விநாடியே எனக்குத்தெரிந்துவிட்டது. அந்தப்பதிவருக்கு உடனே திருப்பித்தரவேண்டுமே என்று நான் கவலைப்பட ஆரம்பித்துவிட்டேன். அன்று 5 ஆயிரம் ரூபாய் அதிகம் போட்டிருந்தார். அதையும் அன்றே திருப்பி அனுப்பிவிட்டேன். அதற்கு நன்றி சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினார். இப்படியாக 11 நாளில் தருவதாகச் சொன்ன என் பணம் முழுமையாக 170 நாட்களுக்குப்பிறகு கிடைத்தது.

அதையும் ஒரு சிறு மூலதனமாக வைத்து அவர் நிறுவனத்தை நடத்த, நான் வட்டிக்கு வாங்கி வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன் # இனிமே உண்மையாவே யாரும் கஷ்டத்துக்கு கேட்டாலும் கடன் குடுப்ப?

பிறகு அஸ்லாம் பற்றி ஒரு மாதம் தொடர்ந்து நான் கேட்க ஆரம்பித்தேன். இதைப்பற்றி பெருமையுடன் நான் பகிர்ந்துகொண்ட பதிவர்கள் சொன்ன செய்திகள் அனைத்தும் என்னை அதிர்ச்சியூட்டின. இருந்தாலும் நட்பு என்ற விஷயத்தில் அதீத நம்பிக்கை உள்ளவன் என்பதால், முதன்முதலில் அனைத்து விஷயங்களைப்பற்றியும் நேரடியாக அவரிடமே கேட்டு, 21. 11. 2010 அன்று இப்படியாக ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்.


// 

அன்பு நர்சிம்ஜி!

வணக்கம்!

நான் தங்களை பல முறை அழைத்தும், குறுஞ்செய்தி அனுப்பியும் எந்த பதிலும் இல்லாததால் இந்த மின்னஞ்சல்..!


அஸ்லாம் விஷயம் எந்த நிலையில் உள்ளது. உடனே செய்துவிடலாம் என்று நீங்கள் சொன்னதால்தான் நானும் நம்பிக்கையுடன் இருந்தேன்.
ஆனால் 7 மாதங்களாகியும் ஒன்றும் நடைபெறாதது வருத்தமாக உள்ளது. மேலும் நீங்கள் இதோ நடந்துவிடும் , அதோ நடந்துவிடும் என்று கூறியதால், அவன் வேறு எந்த முயற்சியும் செய்யாமல் இருந்துவிட்டான். அவனுக்கும் அவனது குடும்பத்துக்கும் உறுதி அளித்தவன் என்ற முறையில் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அவர்களது கவலை என்னையும் தொற்றியுள்ளது. உங்கள் நிறுவனத்தில் வேலை கிடைக்க வைக்கமுடியுமா என்ற என் கேள்விக்கு யோசிக்காமல் நீங்கள் கூறிய கட்டாயம்ணா என்ற பதில் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. ஆனால் அது 7 மாதங்களானதில் வடிந்துவிட்டது.

எனக்கு சில தகவல்களும் கேள்விகளும் உங்களிடம் கேட்பதற்கு உள்ளன. ( உண்மையான அக்கறையில் கூறுகிறேன் . உங்கள் நலனுக்காக)

1. பதிவுலகில் நீங்கள் உங்கள் நிறுவனத்தில் துணைத்தலைவர் என்று கூறியிருக்கிறீர்கள்.

2. என்னிடத்தில் அன்று உதவித்துணைத்தலைவர் என்று கூறினீர்கள்.

3. கிழக்கு பதிப்பகத்தின் புத்தகத்தில், மேலாளர் என்று உள்ளது.  அதையே பதிவர்களும் வழிமொழிகிறார்கள்.

நீங்கள் எந்தப்பதவியில் இருந்தாலும், சக மனிதனாக அன்பாக மதிக்கும் ஒரு சமூகத்தில் ஏன் இந்த முரண்பட்ட தகவல்கள்? இதில் எது உண்மை?


1. பதிவர் செந்தில்நாதனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக பலரும் தங்கள் கணக்குக்கு அனுப்பிய தொகைக்காக நீங்கள் இதுவரை முறையான கணக்குக்காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு உலவுகிறது என்பது உங்களுக்குத்தெரியுமா

எவ்வளவு வேலை இருந்தாலும், இன்னொருவர் உடல்நலனுக்காக  நம்பி ஒப்படைத்திருக்கும் செயலுக்கு, உடனடி பதிலளித்தால்தான்
 தங்கள் வெளிப்படைத்தன்மை நிற்கும். அதை உடனடியாகச் செய்துவிடவும்.


2. என்னைப்போலவே இன்னொரு பதிவருக்கும், அவரது உற்றாருக்கு ஃபோர்டில் வேலை வாங்கித்தருவதாக வாக்குக்கொடுத்து, நீண்ட நாட்கள் கிடப்பில் போட்டு ,,,பின்னர் அவர் உங்களைக் கேட்பதையே விட்டுவிட்டார் என்பது உண்மையா?

அப்படியெனில்..நான் இன்னொருவனாக இருப்பதை நினைத்து மிகவும் வருந்துகிறேன். ஒருவர் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயத்தில், ஏதோ ஒரு கௌரவத்துக்காக.. வாக்களிப்பது மிகவும் தவறான செயல்.!  அது.................பாவமும் கூட!!

3. இதொ பேசுகிறேன் என்று கூறிவிட்டு, அவர்களை அழைக்காமல் இருப்பது , உங்கள் வேலைப்பளுவின் நிலையாக இருக்கலாம். ஆனால், அவர்களும் வேறு ஒரு தளத்தில் வேலைப்பளு மிக்கவர்கள்தான் என்பதை அறியவும். மேலும் , அடுத்தவர்கள் இதை உங்கள் தீய குணமாகப் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா

பல்வேறு பதிவர்கள் உங்களிடம் நேரில் சிரித்துப்பேசிவிட்டு, உங்களைப்பற்றி பின்னால் இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள். அதில் உண்மை இருக்குமோ என்று நம்பவைத்துவிடுகிறீர்கள்.


4. குறிப்பிட்ட பதிவர்களிடம் பணம் வாங்கிவிட்டு நீங்கள் சொன்ன தேதியைவிட மிகமிகத் தாமதமாகத் திருப்பித் தந்துள்ளீர்கள்.  அவர்கள்பரவாயில்லைஎன்று சொல்லிவிட்டு உங்களை விட்டுப்பிடித்திருக்கலாம். ஆனால், உங்களைப்பற்றிய ஒரு அபிப்பிராயத்தை அவர்களிடம் விதைத்துவிட்டீர்கள்.

     (எனக்கே ஒரு முறை செக் போட்டுவிட்டேன். அக்கவுண்ட் டிரான்ஸ்பர் செய்துவிட்டேன். செக் பவுன்ஸ் என்று சொன்னதெல்லாம், விளையாட்டாகப்பட்டது. )


இவையெல்லாம், தானாக என் காதில் விழுந்த தகவல்கள். ‘ யார் சொல்லியிருப்பார்கள்?’ என்ற ரீதியில் சிந்திக்கத்தொடங்கினால், உங்கள் வளர்ச்சியில் அக்கறையுடன் நான் கூறுவதின் நோக்கம் பாழ்பட்டுப்போய்விடும்.  இவை உண்மையெனில் சரி செய்துகொள்ளுங்கள். தவறு எனில் என்னிடம் கூறுங்கள். ஏனெனில் , நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளி! நல்ல நட்புக்குரியவர்!  இதுபோன்ற சின்னச்சின்ன குறைகள் உங்களை வேறு ஒரு தளத்துக்கு இட்டுச்செல்வதிலிருந்து தடைப்படுத்தும். மேலும், உங்கள் முன்னால், உங்கள் படைப்பை பாராட்டுபவர்கள், பின்னால், உங்களை விமர்சிப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இதுவரை இந்த விஷயங்களை யாரேனும் உங்களிடம் சொல்லாமலிருந்தால் அது துரதிருஷ்டமே!


முழுக்க முழுக்க உங்கள் மீதுள்ள அக்கறையில் இந்த மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். இதில்..என்மேல் தாங்கள் குறை கண்டாலும், அதில் எனக்கு எந்த இழப்பும் இல்லை. ஏனெனில் என் நோக்கம் உங்களை வருத்தப்படுத்துவதில்லை. உங்களிடம் நற்பெயர் வாங்கவேண்டுமென்பதும் இல்லை. நம் நட்புக்கு நான் செய்யும் நேர்மையான மரியாதை இது!

உங்களுக்குத்தெரியாததில்லை.

இடிப்பா ரில்லாத ஏமறா மன்னன் 
கெடுப்பா ரில்லானும் கெடும்.




அன்புடன்,
நட்புடன்..
சுரேகா
/ SUREKAA http://surekaa.blogspot.com

// 


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 

கெடுப்பா ரிலானுங் கெடும்.

என்ற குறளை தவறாக அடித்து அனுப்பிவிட்டு, ஆஹா…தவறாகிவிட்டதே என்று யோசித்துக்கொண்டிருந்தேன். மின்னஞ்சல் அனுப்பி 20 நிமிடத்தில் அழைத்தார். தன்னைப்பற்றி அவதூறு கிளப்பப்பட்டிருப்பதாகவும், இது மிகப்பெரும் அபாண்டம் என்றும், தன் ஐடி எண்ணை வேண்டுமானாலும் சொல்கிறேன் எனவும், (அதே சமயம் வேறு ஒரு நிறுவனத்தின் பெயரையும் சொன்னார்.) செந்தில்நாதன் பணத்தை அப்போதே ஜோசப்பிடம் அனுப்பிவிட்டதாகவும், ஒரு பைசாகூட தன்னிடத்தில் இல்லையென்றும், கணக்கை வீசிவிட்டதாகவும், என்னிடத்திலும், இன்னொரு பதிவரிடத்திலும் மட்டுமே பணம் வாங்கியிருப்பதாகவும், மற்றபடி பலர் அவரிடம் பணம் வாங்கியிருப்பதாகவும், பலருக்கு அவர் வேலை வாங்கிக்கொடுத்திருப்பதாகவும், தன் புகழ் பிடிக்காத யாரோ கிளப்பும் வதந்தி என்றும், இன்னொரு பதிவரின் மனைவியாகப்போகிறவரை தன் நிறுவனத்தில்,வேலைக்கு சேர்க்காததற்குக் காரணம் அவருக்கு பேசும் அளவுக்கு ஆங்கில அறிவு இல்லை என்றும் சொன்னார். (உண்மையில் அந்தத்தகவல் எனக்கு மிகவும் புதிது.! லிஸ்டிலேயே இல்லாதது! )

      அதில் நான் எதிர்பார்த்தது போலவே தற்காப்பு நடவடிக்கையிலும், செய்திகளை யார் சொன்னது என்ற விஷயத்திலும் ஆர்வம் காட்டினாரே ஒழிய, தன் தவறுகளை உண்மையில் ஒத்துக்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை என்பதை உளவியல் படித்தவன் என்ற வகையில் தீர்மானமாக அறிந்துகொள்ள அன்றிரவே அவர் அனுப்பிய இந்தக்குறுஞ்செய்தி உதவியது.

      You should’t not have send such a nasty mail rather you could have spoke to me. I did nothing wrong in life except coming in to blog world.

      மீண்டும் மீண்டும் அஸ்லாம் விஷயத்தில் நான் விடாப்பிடியாக இருக்க, அவ்ன் பேப்பர் FREEZ ல் இருப்பதாகவும், இப்போதைக்கு ஒன்றும் முடியாதென்றும், அவனை வேண்டுமானாலும் வரச்சொல்லுங்கள்..! இடைக்கால வேலை வாங்கித்தருகிறேன் என்றும் சொன்னார். நானும் அவனை வரச்சொன்னேன். அப்போது அவர் அஸ்லாமுக்குக்கொடுத்த வேலை….. கேபிள் சங்கர் தனது பதிவில் ஒரு வெப் டிசைனிங் கம்பெனியில் மார்க்கெட்டிங் காலியிடம் இருப்பதாகவும் வேலை வேண்டுமென்றால் உடனே அணுகச்சொல்லியிருந்த ஒரு நிறுவனத்திடம்…!!

      எனக்கு முதல்முறையாகக்கோபம் வந்தது அன்றுதான்..! ஏனெனில், அஸ்லாமிடம்.. ஒரு நிறுவனத்தின் வேலைக்காக யாரவது 8 மாதம் காத்திருப்பார்களா? கிடைக்கும் வேலையைப்பார்! கண்டிப்பாக உன்னை நான் சேர்த்துவிடுகிறேன். என்று கூறியிருக்கிறார்.  இதே கேள்வியை நான் கேட்கும்போதெல்லாம், அதெல்லாம் வேண்டாம்.இதோ மெயில் வந்துவிடும்., நாளை ஆர்டர் வந்துவிடும், நானே பார்த்தேன் என்றெல்லாம் கூறிவிட்டு –திடீரென்று இப்படிக்கூறினால், இவர் கழட்டி விடுகிறார் என்றுதானே அர்த்தம்.!

   இதே நேரத்தில், உண்மைகள் சுடும் என்றும் நான்யாரா..என்றும் நர்சிம்மைப்பற்றிய பதிவுகள் வந்திருந்ததாக அவர் சொல்லித்தான் அறிந்தேன். அவருக்கு. அது நானாக இருக்குமோ என்று சந்தேகம் இருந்தது. மறைந்திருந்து தாக்குமளவுக்கு கோழை நான் அல்ல! நேரடியாக முதலில் மின்னஞ்சல் அனுப்பி உங்களைத்தாக்கியது நான்தான் என்றும் சொல்லிவிட்டேன். பின்னரும் அஸ்லாம் விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தேன்.

   அன்று, ஒரு கடுமையான குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டுக்காத்திருந்தேன். நான் என்ன தற்கொலை செய்துகொள்ளவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா என்றார். இல்லை என்றேன். பட பட வென்று பேசினார். நிறைய விளக்கினேன். நேரில் சந்திக்கலாம் என்றேன். முடியாதென்றார். தனக்கு ஏன் இப்படி நடக்கிறதென்று புரியவில்லை என்றார். நான் சொல்கிறேன் என்றேன். கடைசியாக ஒரு கேள்வி கேட்டேன். அஸ்லாமுக்கு வேலை வாங்கித்தருவதாகச்சொன்ன கார் நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்க்கிறீர்களா?  

இல்லை என்றார்.

நாடகம் முடிந்தது.


வெட்டியோ, ஒட்டியோ பேச நான் இதை வழக்காக எடுத்துக்கொண்டு வரவில்லை. மனதில் உள்ளதை வெளியில் பகிர்ந்துகொண்டேன். பணப்பிரச்னை தனியானது என்று சொல்பவர்களுக்கு மட்டும் ஒன்று! என்னிடம் ஒருவர் பணவிஷயத்தில் செய்ததை யாரிடமும் சொல்லாமல் இருப்பது, அடுத்தவரிடமும் அதையே குறிப்பிட்ட நபர் செய்வதற்கு வழிவகுக்கும் என்பதால், நல்ல நண்பர்களிடத்தில் சொல்லிவிடுவது உத்தமம். நீங்கள் அனைவரும் நல்ல நண்பர்கள்.! சொல்லிவிட்டேன்! இதில் ஒரு வரிகூட பொய்யில்லை. ஏனெனில்.. எல்லாவற்றுக்கும் ஆதாரமாக குறுஞ்செய்திகளும், உரையாடல் பதிவுகளும் உள்ளன.

     இந்தப்பதிவுக்கு யாரும் பின்னூட்டம் இட வேண்டாமென்று நினைக்கிறேன். படிப்பதற்கு செலவழித்த நேரமே போதும். அவசியம் ஏற்பட்டால் , பின்னூட்டப்பெட்டியை மூடிவிடுகிறேன். கட்டாயம் ஏதாவது பகிர்ந்துகொள்ளவேண்டுமென்றாலோ, அஸ்லாமுக்கு வேலை வாங்கித்தர விரும்பினாலோ surekaanow@gmail.com க்கு மின்னஞ்சலிடவும். உங்கள் அனைத்து உணர்வுகளையும் மதிக்கிறேன்.

       இதற்குப்பிறகாவது தெளிவாகுங்கள் நர்சிம்..! உங்களை எல்லோரும் ஏதோ ஒரு வகையில் மதிப்பதால்தான் இவ்வளவு நேரம் செலவழித்து குறையாகக்கூட எழுதுகிறோம். படிக்கிறோம்.!  ஒரு நல்ல ஊடகத்தை மிகவும் மோசமாகப் பயன்படுத்திவிட்டீர்கள். போகட்டும்…..! ஆனால், நான் உங்களால், ஒரு புதிய திரைக்கதையை அமைத்துக்கொண்டிருக்கிறேன்.  நன்றி! வேப்பம்பூவில் தேன்!

          

       பி.கு: அதே கார் நிறுவனத்தின் இணையதளம் மூலம் அதன் உயர் அதிகாரி ஒருவரின் மின்னஞ்சல் முகவரி பெற்று தொடர்ந்து அவருடன் ட்விட்டி, மெயிலனுப்பி நட்பைத் துளிர் விட வைத்து, விபரம் சொல்லி, அஸ்லாமின் ரெஸ்யூமை அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறேன். உங்களில் யாராவது அவனுக்கு ஏதாவது வேலை வாங்கித்தந்தாலும் , விரைவில் அந்தக்குடும்பத்துக்கு விளக்கேற்றிவிடலாம் என்ற நம்பிக்கையுடன்….





      


Friday, April 1, 2011

ஓட்டுச்சாவடி வாசலில்..!





நம் தமிழகத்தின் சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்ளப்போகிறவர்களாக அரசியல்வாதிகளை நாம் பார்க்கிறோம். ஆனால், அத்தனையையும் எதிர்கொள்ளப்போவது நாம்தான்.

     நம்மிடம் ஒரு நிறுவனம் இருக்கிறது. அதனை நிர்வகிக்க, ஒரு ஆளை நேர்முகத்தேர்வு செய்து நியமிக்கிறோம். அவனுக்கு ஐந்தாண்டுகளுக்கான ஒப்பந்தம் அளிக்கிறோம்.ஆனால் அவன் தவறே செய்தாலும், தட்டிக்கேட்கமுடியாத அளவுக்கு அவனுக்கு அதிகாரம் தரப்படுகிறது. அவனும் கட்டுப்பாடில்லாத சுதந்திரத்தை நன்றாக அனுபவித்து, ஒரு ஆட்டம் ஆடிவிட்டுத்தான் ஓய்கிறான். பின்னர் ஐந்தாண்டுகளுக்குப்பிறகு அவன் மீண்டும் நம்மை தாஜா செய்து, வேலைக்கு விண்ணப்பிக்கிறான். அவனைப்போலவே இன்னொருவனும் விண்ணப்பிக்கிறான். அந்த இன்னொருவனுக்கும் எந்தத் தகுதியும் இல்லாதபோதும், முன்னவனை பழிதீர்க்க இரண்டாமவனை வேலைக்கு அமர்த்துகிறோம். அவனும் ஆட ஆரம்பிக்கிறான். இதுதான் தொடர்கதையாக இருந்தால், நஷ்டம் யாருக்கு? கண்டிப்பாக நிறுவனத்தை வைத்திருக்கும் நமக்குத்தான்.!

     இதே கதைதான் இப்போது தேர்தல் என்ற பெயரிலும் நடந்துகொண்டிருக்கிறது. களத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் யாராவது உண்மையிலேயே அரசியலில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய தகுதி இருக்கிறதா என்று கேட்டுப்பார்த்துக்கொண்டால் – ஆளவந்தானில் கமல் சொல்வதைப்போல் , கண்ணாடி பிம்பத்தில் முகம் சுளித்துக்கொண்டு – தெரியும். உண்மையிலேயே வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்த நபர்களோ, நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பணக்காரக் குடும்பங்களிலிருந்து வந்தவர்களோ இப்போது அறவே இல்லை.

சைக்கிள் கடை வைத்து நடத்தும் பிழைப்பில் வருமானம் இல்லை. அரசியலில் சேர்,
ஆளைக்கவிழ்,
வெற்றிபெறு,
அமைச்சராகு
ஊழல்செய்,
சொத்து சேர்!
மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இறங்கு!
அடுத்த ஆறு தலைமுறையை வாழ வை!
மக்கள் என்னவானால் நமக்கென்ன? என்று இருக்கும் ஆட்கள்தான் இன்று வேட்பாளர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால் , இவற்றையெல்லாம் மீறி நாம் அவர்களுக்கான ஓட்டுக்களை கையில் வைத்துக்கொண்டு, அவர்களைக்கண்டு பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறோம்.

அதனால்தான் அவர்கள் நமக்கு இப்படி விரல் காட்டுகிறார்கள்.

(எங்கு தவறு நடந்ததென்று தெரியவில்லை. பாவம் இவர்கள் நடுவிரலில் மை வைத்திருக்கிறார்கள்)


     ஒரு சிறு புள்ளிவிபரம். இந்திய அளவில் இன்றைய மக்கள் தொகை 121 கோடி  ,  தமிழகத்தில் 2001 ம் ஆண்டு கணக்குப்படி 6.24 கோடி இப்போது குறைந்தபட்சம் 7 கோடி ஆகியிருக்கும்.


நமது மொத்த அரசியல்வாதிகள்
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் – 234
தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் – 40
மொத்தம் = 234 + 40 = 274
அல்லக்கைகள் – 274 x 100 = 27,400
வட்டம், ஒன்றியம், மாவட்டம், மாநில கட்சிப்பொறுப்பாளர்கள்  = 10000
ஆக., ஒரு வெற்றிபெறும் கட்சியில் மொத்த அரசியல்வாதிகள் = 37,400 என்று வைத்துக்கொள்வோம் . (தோராயமாக)
மற்ற பெரிய கட்சிகள் எல்லாம் சேர்த்து அரசியல்வாதிகள் 
(வட்டத்துணைச்செயலாளர் உட்பட)  = 37400 x 2 = 74800
உதிரிக்கட்சிகள், துண்டு துக்கடா அரசியல்வாதிகள் (கார்த்திக் போன்றவர்கள் எல்லாம் சேர்த்து) = 20000
மொத்தம் 274 + 37400 + 74800 + 20000 = 169600 + உதிரிகள் 400 வைத்துக்கொண்டாலும் ஒரு லட்சத்து எழுபதாயிரம் பேர்தான் வருவார்கள்.



     ஆக, 7 கோடி பேர் 1.7 லட்சம் பேரைக்கண்டு அஞ்சுகிறோம். அதாவது 411 பேர் ஒரு ஆளுக்கு பயப்படுகிறோம். அவர்கள் தவறுகளைத் தட்டிக்கேட்பதில்லை. அவர்களைக்கண்டு பம்முகிறோம். அவர்களை வணங்கி மகிழ்கிறோம். அதுவும், இப்போது நாம் தேர்ந்தெடுக்கப்போவது அவர்களில் 234 பேரை! (2,99,145 பேருக்கு ஒருவர்) இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமும்!

    நமக்கான ஆட்களைத் தேர்வுசெய்வதில், நாம் என்றாவது நிதானமாகச் சிந்தித்திருக்கிறோமா என்றால், இல்லை என்று அடித்துச்சொல்லலம். ஆட்சியமைக்கப்போவதாக நாம் எண்ணிக்கொண்டிருக்கும் கட்சிக்கு நம் வாக்குகளைப்பதிவு செய்யத் துடிக்கும் வேளையில், நம் தொகுதிக்கு தகுதியான ஆளைத்தான் தேர்ந்தெடுக்கிறோமா என்றும் சிந்திக்கவேண்டும்.
ஒரு அரசியல் கட்சியோ, அதன் கூட்டணித்தலைமையோ தேர்ந்தெடுக்கும் ஆள், நம் பகுதிக்குச் சம்பந்தமே இல்லையென்றாலும் வாக்களித்து,  அவரைப் பிரதிநிதி என்று அழைப்பது எந்தவிதத்தில் நியாயம் என்றும் தெரியவில்லை.

       இவையெல்லாம் மீறி , பெரிய கட்சிக்காரர்களில் சுத்தமானவர்களை எதிர்பார்ப்பதில் அர்த்தமே இல்லை. எனக்கு பிரதிநிதியாகப்போகிற மனிதன்,  ஒழுக்கமுள்ளவனாக, கை சுத்தமானவனாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதிலும் தவறில்லை. அப்படி ஒரு ஆள் சுயேச்சையாக நின்றாலும், அவனை ஆதரிக்க ஆரம்பிப்போம். காலம் மாறும். காட்சிகள் மாறும். நம் எண்ணம் என்றாவது நாடு முழுதும் பரவும். நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள்.

ஓட்டுச்சாவடி வாசலிலாவது சிந்திப்போம்.

Sunday, March 27, 2011

சித்தப்பா




சிறுவயதில் எல்லோருக்கும் ஏதாவது ஒரு உறவு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அவர்கள் நடை,உடை, பாவனைகள் எல்லாவற்றையும் கவனித்து அதைப்போல நடக்க நினைப்போம் அல்லது அதைப்பற்றி சிந்திக்கவாவது செய்வோம்.அப்படி ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த மாமா, மூத்த அண்ணன், சித்தப்பா போன்ற உறவுகள் அமைந்திருக்கும்.

அப்படி எனக்கு அமைந்த உறவுதான் அவர்! என் அப்பாவின் கடைசித்தம்பி! என் அப்பாவுக்கு அடுத்து அவர்தான் பையன் என்பதால், என் பெரியப்பா மகன்களுக்கு இரண்டு, மூன்று சித்தப்பாக்கள் இருந்தபோதும், எனக்கு மட்டும் ஒரே ஒரு சித்தப்பாதான்! ஆக, மற்றவர்கள் அவரை ’சின்ன சித்தப்பா’ என்று அழைக்கும்போது, நான் மட்டும் சித்தப்பா என்றே அழைப்பேன்.
     
எனக்கு விபரம் தெரிந்து அவரை நான் பார்த்தது நாங்கள் இருந்த கலியாப்பட்டி என்ற ஊருக்கு அவர் வந்துசென்றபோதுதான்! ஆனால் அப்போது நான் மிகவும் சிறுவன்! முகத்தையோ நடவடிக்கைகளையோ அவ்வளவாக கவனிக்கவில்லை. பின்னர் நான் மூன்றாவது படிக்கும்போது, அவருக்குத் திருமணம் என்ற பேச்சுக்கள் வந்தபோதுதான் அவரை நான் கவனிக்க ஆரம்பித்தேன்.

சொந்த ஊரான கறம்பக்குடிக்கு செல்லும்போது பார்த்தால், கல்யாண மாப்பிள்ளை மீசை இல்லாமல், இளமையாக, கமலஹாசன்போல் தூக்கி வாரிக்கொண்டு, ,எல்லோரிடமும் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார். அவரது உண்மைப்பெயர் நடராஜன். ஆனால் எல்லோரும் அவரை அம்பி என்றே அழைத்துப்பழகினர். அவரது ஒவ்வொரு பேச்சின் முடிவிலும் ஒரு நகைச்சுவை கலந்த கிண்டல் தொனித்தது என்னை ஈர்த்திருக்கலாம்..

அதற்குப்பிறகு அவரை கொஞ்சம் ஆழமாக கவனிக்க ஆரம்பித்தேன். பின்னர் அவர்தான் எங்கள் குடும்பத்தின் முதல் மீசை வைத்த மனிதராகவும் ஆனார். திருமணத்துக்குப்பிறகு கோயம்புத்தூரில் வேலைக்காக செட்டிலானவர், மீண்டும் கறம்பக்குடிக்கே வந்தார். அங்கிருந்து புதுக்கோட்டையில் உள்ள அவரது வங்கிக்கு சென்றுவரத்தொடங்கினார்.

காலையில் சரியாக 7:25 வரும் RSR ஐப்பிடிக்க பஸ் ஸ்டாப்புக்கு சென்றுவிடுவார். ஒவ்வொரு நாள் இரவு உணவும் எங்கள் அனைவருடனும் சேர்ந்து உண்பார். அன்று வங்கியில், பேருந்தில் நடந்த சுவாரஸ்யமான விஷங்களை அழகாகச் சொல்லுவார். புதிய படங்களைப்பற்றி தகவல்கள் சொல்லுவார். வார இறுதியில் அவரது குடும்பம் இருந்த கோவைக்குச் சென்றுவிடுவார்.

                ஆனால் சில வாரங்களில், சனிக்கிழமைகளில் மாலை கொஞ்சம் சீக்கிரமே கறம்பக்குடி வீட்டுக்கு வந்து விடுவார். வந்தவுடன் முகம் கழுவிவிட்டு , அந்த ஊரில் இருக்கும் ஒரே திரையரங்கமான முருகனில் எந்தப்படம் போட்டிருந்தாலும் எங்களைக்கூட்டிக்கொண்டு சென்றுவிடுவார். பின்னர் ஞாயிறு கொஞ்சம் தாமதமாக எழுந்திருப்பார். டிபன் சாப்பிட்டுவிட்டு, துணிகளைத் துவைப்பார். தன் துணிகளை யாரையும் துவைக்க விடமாட்டார். பின்னர் குளித்துவிட்டு வந்து மதிய சாப்பாடு. சாப்பிட்டுவிட்டு படுத்தால், மிக நீண்ட தூக்கம். அப்போது மட்டும் வீடடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.யாரும் சத்தம்போடக்கூடாது. அப்படியும் எங்கள் குடும்பம், ரேடியோவில் மூன்றுமணி நாடகத்தை கேட்டுவிட்டுத்தான் ஓயும்.

அவர் மதியத்தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டார் என்பது குப்புறப்படுத்துக்கொண்டு பின்னங்காலை ஆட்டிக்கொண்டிருப்பதிலிருந்து கண்டுகொள்ளலாம். மாலை காபிக்குப்பிறகு, வீட்டின் உள் திண்ணையில் அயன்பாக்ஸை வைத்து, வேட்டியை மடித்துக்கட்டி, படியில் அமர்ந்துகொண்டு தன் துணிகளை அயன் செய்வார். (அவர் கறம்பக்குடியை விட்டுச்சென்றவுடன் நான் கல்லூரியில் படிக்கும்போது, அதே இடத்தில் வைத்துத்தான் என் துணிகளை அயன் செய்வேன்.)    சில நாட்களில் ஞாயிறு படம் உண்டு. விடுமுறையை பயனுள்ளதாகவும், ரசனையுடனும் கழிக்க வேண்டும் என இவரிடம்தான் கற்றுக்கொண்டேன்


                வெள்ளிக்கிழமையானால், குமுதத்துடன் வீட்டுக்கு வருவார். அதை ஞாயிற்றுக்கிழமை வரை வைத்திருந்து படிப்பார். நான் 7வது படிக்கும்போதே பத்திரிகைகள் படிப்பதில் அதிக ஆர்வம் இருந்ததால், அவர் வருகிறாரோ இல்லையோ, அவர் பையிலிருந்து வெளிவரும் குமுதத்துக்காக காத்திருப்பேன். அவரும் என் ஆர்வத்தை ஆட்டம் காணவைத்து வெளியிலெடுத்துவிட்டு 10 தோப்புக்கரணம் போட்டுவிட்டு வாங்கிக்கோ என்பார். சொன்னதைச் செய்துவிட்டு வாங்கிச்சென்றுவிடுவேன்.

                சமயலறையில், அம்மிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, மிக்ஸியை வீட்டுக்குள் கொண்டுவந்தவர் அவர்தான்! அதேபோல்தான் குக்கரும்!

                வீட்டில் முதன்முதலில் , டேப் ரெக்கார்டர் வாங்கி அதில் எங்கள் அனைவரது குரலையும் பதிந்து காட்டியவர் அவர்தான்!

      புதிய தொலைக்காட்சியை வாங்கி, அதில் வியாழன் இரவுகளில் ‘World This Week’ ம், வெள்ளி இரவுகளில் ஆங்கிலப்படங்களும் பார்க்கவைத்தவர் இவர்தான்! என்னுடைய திரையுலகப் பிரவேசத்தில் இவருக்கும் ஒரு பங்கு நிச்சயம் உண்டு!
     
      ஒருநாள் என்னையும், என் அத்தைமகன் கண்ணனையும், பட்டுக்கோட்டை சென்று முழுநாளும் படம்பார்த்துவிட்டு வரச்சொல்லி பணம் கொடுத்தனுப்பினார். அன்று நாங்கள் தொடர்ச்சியாக அபூர்வ சகோதரர்கள், சிவா, நினைவுச்சின்னம்  ஆகிய மூன்று படங்கள் பார்த்தோம்..

  எங்கள் பாட்டியைக்கண்டால், எங்கள் குடும்பமே பயந்து நடுங்கும். இவர்மட்டும் சிங்கத்திடம் விளையாடும் முயலைப்போல, அவரை மிகவும் கிண்டல் செய்து , அவரையும் சிரிக்கவைத்துவிடுவார். இவர்தான் பாட்டிக்கு கடைசிப்பிள்ளை என்பதால், பாட்டிக்கும் இவர்மீது பிரியம் அதிகம்.

  என் வாழ்வின்மீது அக்கறையுடன் இருப்பார். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு தவறான காரணத்துக்காக என்னை ஒரு ஆசிரியர் அடித்துவிட்டார் என்பதற்காக, இவர் வீட்டுக்கு வந்தவுடனேயே, என் அப்பாவை அழைத்துக்கொண்டு பள்ளி முதல்வரைச் சந்தித்து அந்த ஆசிரியரை எங்கள் வீட்டுக்கு வரவைத்து மன்னிப்பும் கேட்க வைத்தார்.

  தேர்வு சமயங்களில், அவருக்கும் மார்ச் மாத வங்கி வேலைகள் இருக்கும். இரவு தாமதமாகத்தான் வருவார். இருந்தபோதும், நான் அன்று எழுதிய தேர்வைப்பற்றி விசாரித்துவிட்டுத்தான் தூங்குவார். அண்ணன் மகன்தானே என்ற மேம்போக்கு எண்ணம் இல்லாமல் உரிமை எடுத்துக்கொள்ளுவார்.

  இன்று என் பேச்சில் தொனிக்கும் கிண்டலுக்கு இவர்தான் மூலகாரணமாக இருந்திருப்பார். நகைச்சுவை உணர்ச்சி நிறைந்த மனிதர். சத்தம்போட்டு சிரிக்கமாட்டார். ஆனால் சிரிக்க ஆரம்பித்தால், கண்ணீர் வரும்வரை சிரிப்பார்.

  பக்தி நிறைந்தவர். குடும்பத்துடன் அவர் அதிகம் சென்ற சுற்றுலாத்தலம் திருப்பதியாகத்தான் இருக்கும். என் அப்பாவிடம் மிகப்பெரிய பாசம் வைத்திருக்கிறார்.

  சுத்தம் பேணுவதில் முதன்மையானவர். மூலையில் ஒரு தூசி கிடந்தாலும் தானே கூட்ட ஆரம்பித்துவிடுவார். அடுத்தவர்களின் சிரமம் பொறுக்கமாட்டார். உடனே உதவி செய்துவிடுவார். எங்கள் உறவினர்களில் சிரமப்பட்டவர்கள் அனைவருக்கும் அதிகம் உதவியிருக்கிறார். அதுவும் படிக்கவேண்டுமென்றால் எல்லாச்செலவையும் ஏற்றுக்கொள்பவர்.

எனக்கு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்தபோது, நம் குடும்பத்தில் முதல் பொறியியல் பட்டதாரி இவனாக இருக்கட்டும் என்று தன் சேமிப்பிலிருந்து பணத்தை எடுத்து என் அப்பாவிடம் கொடுத்து சென்னை அனுப்பிவைத்தார். அன்றைய தினம் அவர் மாமனாரின் அறுபதாம் கல்யாணம் வேறு!

  இப்போதும் என் வளர்ச்சியின் மீது அக்கறையும், பெருமிதமும் கொண்ட அன்பான மனிதர் அவர்! சென்ற வாரம் கூட என் பதிவுகளை உளமாரப் பாராட்டி ஒரு அழகான மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இப்போது கோவையில் அவரும் சித்தியும் மட்டும் வசிக்கிறார்கள். என் இரு தம்பிகளும் நல்ல வேலையில் சென்னை, பெங்களூரில் இருக்கிறார்கள்

      .வேலை வேலை என்று தன் உடல்நிலையை கவனிக்காமல் இருந்துவருகிறார். அனைவரது வற்புறுத்தலுக்குப் பிறகும், வங்கி வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவது என்று முடிவெடுத்துள்ளார். அனேகமாக இந்த மாதத்துடன் ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்துவிடுவார். உடல்நிலையும் சரியாகிவிடும். மீண்டும் அந்த ரசனையான வாழ்வை வாழ..
        
      WELCOME HOME CHITHAPPA!!



Tuesday, March 8, 2011

பெண்மையே.. பெண்களே..வாழ்க நீங்கள்!




    நம் உலகத்தை அன்புமயமாக்கிய அத்தனை பெருமையும், பெண்களையே சேரும். அவர்களது தாய்மை, சகோதரத்துவம், நட்பு பாராட்டுதல், பாசம்,அன்பு, நேர்த்தி இல்லாமல் ஆண்களின் வாழ்வு சூன்யமாகவே இருந்திருக்கும்..
என் வாழ்வில் நட்பாக, உறவாக உள்ள பெண்களின் பட்டியலில்..
2008 
2009 
2010 

இவர்கள் போக,
மேலும், இந்த ஆண்டில்
நட்பு காட்டும்

ரேவதி வர்மா
தேஜாஸ்ரீ

நமீதா
ஆருஷி
கவிதா
ரம்யா

மற்றும்
அன்புநிறை பதிவர்கள்

அகிலா ஸ்ரீராம்
மதார்
உமா
மற்றும் வேலையிட நண்பர்கள்
ரமணி
சித்ரா
ஜானகி
சுதா
சௌம்யா
ஆகிய …
என் வாழ்வை அர்த்தப்படுத்தும் அத்துனை பெண்களுக்கும் இந்த பெண்கள் தினத்தில்  எனது உளமார்ந்த அன்பையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்.


பெண்களே..பெண்மையே வாழ்க நீங்கள்!

Wednesday, March 2, 2011

மூன்று வரித்திரைப்படங்கள்


திரைப்படங்களை மூன்றுவரிகளில் எழுதிப்பார்க்கும் ஆர்வம் இன்னும் குறையவில்லை. அதன் பாதிப்பாக.....

சேவல் சண்டையில் குருவின் அடிமை!
அவரின் துரோகம் தெரிந்ததே கொடுமை!
காட்டிக்கொடுக்காத சிஷ்யனின் நேர்மை

இவனின் தொழிலே திருட்டு!
போலீஸென நினைத்து எதிரியின் விரட்டு!
அவராய் மாறி வில்லனை மிரட்டு!

ஊர்சுற்றி லூட்டி அடித்தான்
டுட்டோரியலில் தொழில் படித்தான்
காதலியைக் கைப்பிடித்தான்!


பொது இடத்தில் வெட்டுண்ட கை
போலீஸால் தேடப்படும் மெய்!
பழிவாங்கும் குடும்பத்தை உறுதி செய்!





கண்டுபிடித்ததை பின்னூட்டமிடுங்கள்

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...