Friday, August 26, 2011

ஓமப்பொடி- 2




          சென்ற வாரம் ’ஒத்த வீடு’ என்ற படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில், அபிராமி ராமநாதன் அவர்கள் , இந்தக்காலகட்டத்தில் திரையரங்கத்துக்கு மக்களைக்கொண்டுவருவது கடினம். அதற்காகப் புதிது புதிதாகச் சிந்திக்கவேண்டியிருக்கிறது. அடுத்த வாரம் முதல் ,வீட்டிலிருந்து திரையரங்குக்கு வர, அபிராமி டாக்ஸி என்ற சேவையை அறிமுகப்படுத்தப்போவதாகச் சொன்னார். இதோ நாளை மறுநாள் முதல் அமல்படுத்தப்போகிறார்.

    அதே விழாவில் இயக்குநர் வி.சேகர் அவர்கள், பெரிய படங்களெல்லாம் ஆலமரம்போல், அதில் இளைப்பாறலாம். ஆனால் சாப்பிடமுடியாது. சிறிய படங்கள் நெற்பயிர் போல்.. அதுதான் உணவளிக்க முடியும் என்று சிறிய பட்ஜெட் படங்களைப்பற்றி உயர்வாகப்பேசினார். ஒத்த வீடு படத்தின் இயக்குநர் பத்திரிக்கையாளரும், மக்கள் தொடர்பு அலுவலருமான பாலன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

                         ++++++++++++++++++++++

     நேற்று, சூரன் பட இசை வெளியீட்டுவிழா நடந்தது. பார்வையாளனாக , நண்பனாக கமலா தியேட்டர் வாசல் வரை சென்ற என்னை – திடீர் ரவா உப்புமாவைப்போல்,- நிகழ்ச்சித் தொகுப்பாளராக்கிவிட்டார்கள். நானும் முடிந்ததைச் செய்தேன். நிகழ்ச்சி முடிந்ததும், படத்தின் நாயகன் கரண், இயக்குநர் சந்தானபாரதி, இயக்குநர் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சிவாஜி, பழனி,  இன்னும் சில நண்பர்கள் பாராட்டினார்கள். நன்றி சொல்லி எஸ்கேப்பானேன்.  

என் நேற்றைய அறிவிப்புகளில் சில :

# திறமைசாலிகளை OUTSTANDING என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். ஆகவே இங்கிருக்கும் திறமைசாலிகள் அனைவரும் உள்ளே வரவும்.

-    இயக்குநர் பொன்வண்ணன், தன் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டதால், தானும் ஒரு தயாரிப்பாளர்தான் என்று சொல்லிக்கொண்டார். அப்போது மேடையிலிருந்த இயக்குநர் சந்தானபாரதி தானும்தான் என்று கை தூக்கினார். ஆகவே அவரைப் பேச அழைத்தபோது…
#  சம்பளத்தைக்குறைத்துக்கொண்டதன் மூலம், இந்தப்படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான திரு.சந்தானபாரதி இப்போது பேசுவார்.

#  இப்போது இயக்குநர் சற்குணம் அவர்கள் தனது இரண்டு நிமிட உரையை வழங்குவார். (நேரமில்லாத காரணத்தால்)

#  அரை நிமிடம் சேமித்த அற்புத மனிதருக்கு நன்றி! (ஒன்றரை நிமிடம் பேசியதற்காக)

# இது அரோவணா பிக்சர்ஸ் அல்ல! எல்லோரையும் அரவணை பிக்சர்ஸ்!

# படத்தில் ஒரு செகண்ட் வந்து சென்றதால் செகண்ட் ஹீரோவான பழனி அவர்களை அழைக்கிறோம்.

# எல்லோரையும் வாரிய ஜெகன் அவர்களே வாருங்கள் ! நாங்களும் வாருகிறோம்!

# இது இசை மீட்டும் விழா ! திறமைசாலிகளை திசை காட்டும் விழா! உங்கள் ஒலி ரசனைக்கு விசை கூட்டும் விழா!

இப்படிப் போயிற்று!  முழு நிகழ்விலும் அரங்கத்தில் ஒருவித புன்னகை மனநிலை நிலவியது.
இசையமைப்பாளர் P.B. பாலாஜிக்கு நன்றி!  
அந்த நேரத்தில், எனக்காக சட்டை வாங்க அதீதமாக முயற்சித்த அன்பு நண்பர் மனோஜ் கிருஷ்ணாவுக்கு நன்றி!


வெங்காயம் திரைப்படம் பற்றி இயக்குநர் பாக்யராஜ் பாராட்டினார். நண்பர்கள் அனைவரும் நன்றாக இருப்பதாகவே சொன்னார்கள். இந்தவாரத்தில் பார்க்கவேண்டும். நல்லபடம் வேறு! தியேட்டரிலிருந்து தூக்காமல் இருக்கவேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தேமுதிக வில் நிறவெறி அதிகம் போலிருக்கிறது. அவர்கள் தலைவரின் நிறத்தையே மையப்படுத்தி போஸ்டரடித்து , கருப்பு எம் ஜி ஆர் என்று வர்ணித்திருக்கிறார்கள். தோல் நிறம் பார்த்து வாழும் கூட்டம் நாம் என்பதை உறுதிப்படுத்தும் வாசகங்கள்! வாழும் எம் ஜி ஆருன்னு சொல்லட்டும். மதுரை எம் ஜி ஆர்னு சொல்லட்டும். ஏன்....கேப்டன் எம் ஜி ஆர்ன்னு கூட சொல்லட்டும். இதுல... வெள்ளைக்காரனைப்பார்த்து ஆஸ்திரேலியாவில் நிறவெறின்னு கூச்சல் வேற! செவப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்னு வடிவேல் சொன்னது உண்மைதானோ? கலரைப்பாத்து காலர் தூக்கும் கூட்டம் இருக்கும்வரை கலக்கலாம் போங்க!! (’கா’னாவுக்கு ’கா’னா)


இந்தப்பாடலைக் கேட்டாலும் , பார்த்தாலும், இதயத்தை ஏதோ செய்கிறது. உற்சாகம் தெரிக்கும் வார்த்தைகளுடன் 2008ம் ஆண்டு வலம் வந்த பாடல் இது.! இதைப்பாடியது அனுராதா ஸ்ரீராம். இதில் இடம்பெற்றிருக்கும் பெண்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்? இருக்கிறார்களா? – பயமாக இருக்கிறது!


----------------------------------------------------------------------------------------------------------------

Monday, August 15, 2011

நம்பிக்கைச் சுதந்திரம்

நம்பிக்கை
       வாஞ்சிநாதன் ஆஷ் துரையைச்சுட்டுக்கொன்றுவிட்டு உடனே தற்கொலை செய்துகொண்டார். அது அவர் இளம் மனைவிக்கு தெரிவிக்கப்படவே இல்லை. குடும்பத்தினர் மறைத்தே வைத்திருந்தனர். கணவர் சுதந்திரப்போராட்டத்துக்காக வெளியூர் சென்றிருக்கிறார் என்றே நினைத்துக்கொண்டிருந்தார். ஒரு காலகட்டத்தில் மற்றவர்கள் சொன்னபோதும் அவர் நம்பவில்லை. என் கணவர் சீக்கிரம் இறந்துவிடமாட்டார் என்று நம்பிக்கையுடன் இருந்தார். கடைசிவரை கைம்பெண் கோலம் பூணாமல், சுமங்கலியாக வாழ்ந்துச்சென்றுள்ளார். அவரை அந்தப்பகுதியில் சுமங்கலி மாமி என்று அழைக்க ஆரம்பித்தார்களாம். பசும்பொன் தேவர் ஒவ்வொரு ஆண்டும் , வாஞ்சி இறந்த அன்று, ஒரு புடவை வாங்கிக்கொண்டு செங்கோட்டையில் (தென்காசி அருகில் உள்ள ஊர்) வாஞ்சியின் மனைவியைப் பார்த்துவிட்டு வருவாராம்.

சுதந்திரம்

இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருக்கிறோம். யோசித்தால், ஒன்றுமே செய்யாமல் வீட்டில் ‘சிறப்ப்ப்ப்ப்புத் திரைப்படங்களை’ மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்ததுதான் மிச்சமாய் இருக்கும். நம்மூர் செய்தித் தொலைக்காட்சிகள் வெவ்வேறு ஊர்களில், திரும்பத்திரும்ப கொடி ஏற்றியதையும், முட்டாய் கொடுத்ததையும் சொல்லிக்கொண்டிருந்தன. அதே நேரத்தில் அன்னா ஹசாரே என்ற அந்தத் தனி மனிதன் ராஜ் காட்டில், மழைத்தூறலில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். பார்த்துக்கொண்டே இருந்தபோது கண்கள் மறைத்து அவர் போட்டிருந்த வெள்ளை உடை மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது. அழுதிருக்கிறேன்.


     நாளை அவர் உண்ணாவிரதம்  இருப்பதற்குத் அனுமதியும் மறுத்து, அந்தப்பகுதிக்கு 144 தடை உத்தரவையும் விதித்திருக்கிறது திருடர்களைப் பாதுகாப்பதில் முனைப்புடன் இருக்கும் ’மண்’மோகன் அரசு! இதற்கிடையில் அன்னாவின் அறக்கட்டளை பற்றி விமர்சனங்கள் வேறு! அவர் தவறு செய்திருக்கிறார் என்றால் இவ்வளவு ஆண்டுகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இப்போது நோண்டக்காரணம் அவர் உங்கள் உயிர்நாடியான ஊழலை எதிர்க்கிறார் என்றுதானே?

அடிமைப்பட்டிருந்த காலத்தில் பிறந்து , அஹிம்சையால் சுதந்திரமடைந்த ஒரு நாட்டில், ஊழலின் வேர் ஆழமாக ஊன்றியிருக்கும் வேளையில் , அதைக் கொஞ்சமாவது வெட்டவேண்டுமென்று நினைத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அஹிம்சை வழியில் போராடும் ஒரு மனிதனை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்துகிறார்கள்? வெட்கமாக இருக்கிறது ! இப்படி யோசித்துப்பார்த்தேன்.

மேடையில் சுதந்திரமடைந்ததற்கு பெருமைப்பட்டு தேசியக்கொடியை ஏற்றிவிட்டு வாய்கிழியப் பேசிவிட்டு, கீழிறங்கியவுடனேயே , ஒரு கூட்டம் நாட்டு நலனுக்காகப் போராட இருப்பதை ஒடுக்க சதித்திட்டம் தீட்டும் பிரதமர் வேலை தேவையா மிஸ்டர். சோனியா?

ஒருவேளை சோறின்றி பட்டினியாகக் கிடக்கும் அத்தனை ஏழைகளையும் ஒன்றுதிரட்டினால், இந்தியாவில் தினசரி நடக்கும் சாதாரண நிகழ்வுதான் உண்ணாவிரதம்! அதற்கு என்ன தடை போடுவார்களாம்? அப்படித்தான் போடுங்களேன். பட்டினிச்சாவுகள் நிற்கும்!!

திருட்டை ஒழிக்கவேண்டுமென்பதற்காக, அதற்கான சட்டத்தை திருடர்களை விட்டே இயற்றச்சொன்னால் இப்படித்தான் நடக்கும்!

நாளை அன்னாவை கைது செய்தாலோ, அவர் உண்ணாவிரதத்தை ஒடுக்கினாலோ நாம் மெரினாவில் ஒன்றுகூடுவோமா? – அன்னாவை ஆதரிக்கிறோமோ இல்லையோ இந்த சமுதாயம் ஊழலை ஆதரிக்கவில்லை என்ற ஒற்றை மனநிலையையாவது காட்டலாம்.

ஏனென்றால்...

கேட்டால், கிடைக்கும்!!


Sunday, July 31, 2011

ஒரு கோப்பைத் தண்ணீர்



சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் மதியத்தைத்தாண்டிவிட்டது. உடனே அங்கிருக்கும் கேண்டீனில் சாப்பிடலாம் என்று முடிவெடுத்தோம். எல்லாக்கடைகளிலும் நட்சத்திர ஹோட்டலைவிட ஏகத்துக்கும் விலை வைத்து விற்பனை நடந்துகொண்டிருந்தது. இரண்டு சப்பாத்தி – 60 ரூபாய் , இரண்டு பரோட்டா – 60 ரூபாய். (அளவும் சிறியதுதான்) நாங்கள் சப்பாத்தியும், பரோட்டாவும் வாங்கினோம். சாப்பிட ஆரம்பித்த பிறகுதான், தண்ணீரின் ஞாபகம் வந்தது. 

பிறகு குடிக்க தண்ணீர் கேட்டால், ’இல்லை சார் ! போய் பாட்டில் வாட்டர் வாங்கிக்குங்க!’  என்று கடைக்காரர் சொல்ல, 

     நான் உங்ககிட்டதான் உணவு வாங்கியிருக்கேன். நீங்கதான் தண்ணி தரணும் என்றேன் நான்.!

     உடனே. இல்லை சார்! இந்த இடத்தை காண்ட்ராக்ட்டுக்கு விட்டவங்க, தண்ணி பாட்டில் விக்கறதுக்குன்னு, தனியா ஒரு ஸ்டாலை வாடகைக்கு விட்டிருக்கோம். நீங்க தண்ணி குடுக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க! என்றார்.  
          
     இது என்னய்யா அராஜகம். அவுங்க சொல்றபடிதான் நாங்க சாப்பிடணுமா? அது முடியாது. எனக்கு தண்ணி வேணும். மேலும் அப்படிச்சொன்ன ஆளை நான் பாக்கணும் என்று தகராறு செய்ய ஆரம்பித்தேன்.

    இல்லை சார்! எங்களுக்கே நாங்க வாட்டர் பாட்டில்தான் வாங்கிக்குடிக்கிறோம் என்று சொன்னார்.

      அது உங்க பிரச்னை! எனக்கு குடிக்க தண்ணீர் நீங்கதான் தரணும். அதுதான் சட்டமும் கூட! என்று சொல்லி.. இதுக்காக யாரை நான் சந்திக்கவேண்டும்? என்று கேட்டேன்.

      ஆனாலும், அவர் மழுப்பினார். இதற்கிடையில் இவர்கள் வியாபாரம் நடந்துகொண்டுதான் இருந்தது. அப்போது நான் கொஞ்சம் குரலை உயர்த்த ஆரம்பித்து, அநியாயமாக 60 ரூபாய்க்கு பரோட்டா வாங்கி அதுக்கு தண்ணியும் காசு கொடுத்து வாங்கணுமா? என்று கேட்டவுடன்.,..ஓரிருவர் , ‘ அவர்தான் கேக்குறாருல்ல..! கொடேன்ப்பா! என்று சொல்லிக்கொண்டே சென்றனர். ஓரிருவர், உணவு வாங்குவதைத்தவிர்த்துச் சென்றனர்.

   இதற்கிடையில் உடன் வந்த நண்பர், தண்ணீர் பாட்டில் வாங்கிவந்துவிட்டார். அவர் எனக்காக தருவதாக இருந்தாலும், அந்தக்கடையிலேயே தண்ணீர் வாங்கிக் குடிக்காமல் போவதில்லை என்று நான் முடிவெடுத்திருந்ததால், அதை வாங்கவில்லை.  

      மீண்டும் என் வாக்குவாதம் தொடர்ந்துகொண்டிருந்தது. நான் அவரிடம் நீங்க இந்தக்கடைக்கு ஓனர் இல்லைன்னா, உங்க ஓனரையாவது கூப்பிடுங்க! பேசணும் என்றேன். அதற்கும்.. அவர் இங்க இல்லை சார்! என்றார். அதாவது, என்னை யாரையும் சந்திக்க வைக்கவோ, என் பிரச்னையை வேறெங்கும் எடுத்துச்செல்லவோ அவர் விரும்பவில்லை. ஆனால், நானும் விடுவதாயில்லை.

கடைசியாக நான் சிரித்துக்கொண்டே கேட்டேன்.

‘இப்போ உங்களை நான் அடிச்சா, நமக்குள் வரும் சண்டைக்கு பஞ்சாயத்து பண்ண யார் வருவாங்களோ அவுங்களை வரச்சொல்லுங்க பாஸு!

உடனே கல்லாவில் இருந்து 50 ரூபாயை எடுத்துக்கொண்டு சென்று, ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிவந்தார். அவர்களிடம் இருந்த கேன் தண்ணீரிலேயே கை கழுவவும் வைத்தார்.

     இது செலவழித்தல் சம்பந்தமான பிரச்னையே இல்லை. என்னிடம் காசு வாங்கிக்கொண்டு எனக்கு உணவு கொடுக்கும் கடை, தண்ணீரை இன்னொரு கடையில் வாங்கிக்கொள்! அதுதான் இங்கு சட்டம்! என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய அராஜாகம்! இத்தனை களேபரத்தையும், கண்காட்சியின் ஒரு அங்கம் போல வேடிக்கை பார்த்த கூட்டம்தான் அதிகம்.! யாருக்கும் தட்டிக்கேட்க துணிச்சலில்லை. ஏனெனில் எல்லோர் கையிலும் வாட்டர் பாட்டில்கள்!

     இது போன்ற நிகழ்வுகள், இன்னும் எத்தனை விதமான நுகர்வோர் பிரச்னைகளை உருவாக்கப்போகிறது என்று தெரிவதற்கில்லை. நாளை, பரோட்டா இந்தக்கடை, குருமா அடுத்த கடை, தண்ணீர் அதற்கடுத்த கடை என்று வரும். எவ்வளவு பிரம்மாண்டமான கயமைத்தனத்துக்குள் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்று இப்போது புலப்படாது. ஏனெனில் நம் சட்டைப்பையில் இருந்து இன்னொருவன் காசை எடுத்து தன் பொருளை நம் கையில் திணிப்பதை நாமே எற்றுக்கொள்ளப்பழகிவிட்டோம். கொஞ்சம் நேரம் செலவழித்து, நேர்மையான கேள்விகள் மூலம், எனக்கு அது கிட்டியது. இது எல்லோருக்கும் கிட்டவும் வாய்ப்பிருக்கிறது. தவறு என்று சுட்டிக்காட்டி, தட்டிக்கேட்டால்..! ஏனெனில் அவர்களுக்கும் தெரியும்.! அவர்கள் செய்வது தவறு என்று!

     இது ஒன்று மட்டுமில்லை. வீட்டை விட்டு தெருவில் இறங்கினால், எங்கு சென்றாலும் நாம் தட்டிக்கேட்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் அவற்றை ஜஸ்ட் லைக் தட் நாம் புறம் தள்ளிச்செல்கிறோம். ஆனால், எல்லாத் தீவிரவாதங்களுக்கும் இதுதான் தாய் என்பதை மறந்துவிடக்கூடாது. தட்டிக்கேட்க வக்கில்லாத சமூகம், தீவிரவாதத்தை தானே பந்திவைத்து வரவேற்கிறது என்று அர்த்தம்.! பதிவர்கள் சமூகம் என்று மார்தட்டிக்கொள்ளும் நாம் ஏன் சிறுவிஷயங்களிலிருந்து தட்டிக்கேட்க ஆரம்பிக்கக்கூடாது.? இதோ நாங்கள் ஆரம்பித்துவிட்டோம்.

இயக்கத்தின் பெயர் : கேட்டால் கிடைக்கும்
பொறுப்பு : கேபிள் சங்கர், சுரேகா.

கேபிள் சங்கர் : 98403 32666 , sankara4@gmail.com,
சுரேகா : 96000 97444, surekaanow@gmail.com

விபரம் வேண்டும் அனைவரும் எங்களைத்தொடர்புகொள்ளலாம். 

     பி.கு : சென்ற வாரம்தான் கேபிள் சங்கர் ஒரு பதிவில், எங்கள் பக்கத்து கட்டிடமான ‘ஃபேம் நேஷனலில்’ கேண்ட்டீனில் தண்ணீர் கேட்டுவாங்கிக்குடித்தது பற்றி போட்டிருந்தார். அதே போன்ற நிகழ்வு எனக்கும் நடந்தது ஆச்சர்யம்.! நாங்கள் எப்போதும் இதேபோல் தட்டிக்கேட்பதை வழக்கமாகவே வைத்திருப்பதால், இதை ஏன் பதிவர்களுக்கு வலியுறுத்தக்கூடாது என்று விவாதித்துக்கொண்டதன் விளைவுதான் இது!

Tuesday, July 5, 2011

உங்க அப்பாதான் கிழவன்! - Buddha Hoga Tera Baap..!






           தொலைக்காட்சிகளில் பார்த்த ட்ரெய்லரும், ராம் கோபால் வர்மாவே பொறாமைப்பட்டு, பூரி ஜெகன்னாத்தைப் பாராட்டி ட்வீட்டியிருந்ததும் படத்தின்மேல் ஒரு ஆர்வத்தைத்தூண்டியிருந்தது.


              பார்த்தே ஆகவேண்டும் என்ற வெறியைத்தூண்டியதற்கு இன்னும் ஒரு காரணம் இருந்தது. – அமிதாப் பச்சன்!


      ப்ரகாஷ் ராஜ் ஒரு லோக்கல் தாதா!  வெடிகுண்டுகளை பொது இடங்களில் வைத்து இன்பம் காண்பவர்! ஒரு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில், குற்றவாளியை மோப்பம் பிடித்து, ப்ரகாஷ் ராஜின் அடியாளை கைது செய்கிறார் போலீஸ் அஸிஸ்டெண்ட் கமிஷ்னர் சோனு சூட்! மிகவும் நேர்மையான அதிகாரியாக இருப்பதால், இரண்டு மாதத்துக்குள் மொத்த நகரத்தின் தாதா சாக்கடையையும் சுத்தம் செய்துவிடுவேன் என்று பேட்டி கொடுக்கிறார்.


      தன் ஆளை கைது செய்தது இல்லாமல், தன்னையும் நெருங்கி பிரச்னை செய்துவிடுவாரோ என்று கொதித்து, சோனுவைக் கொல்ல ஒரு ஆளை ஏற்பாடு செய்யுமாறு பணிக்கிறார் ப்ரகாஷ்ராஜ்.! அவர்களும் சோனுவைக்கொல்ல ஒரு சிறந்த ஆளை ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறுகிறார்கள்.


      வந்து இறங்குகிறார் அமிதாப்! ஒரு பக்கா பழைய தாதா! ஏர்ப்போர்ட்டில் இறங்கும் காட்சியிலேயே அதகளத்தை ஆரம்பிக்கிறார். வரிசைல நில்லுங்க என்று போலீஸ்காரர் சொல்ல, ’நான் நிக்கிற இடத்தில் வரிசை ஆரம்பிக்கும்’ என்று சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது பச்சனின் பஞ்ச்!!


      ஒரு காபி ஷாப்பில் சார்மி, தான் மேட்ரிமனி சைட்டில் பார்த்த ஒருவனைச் சந்திக்க வர, அவன் உனக்கு செட்டாக மாட்டான் என்று உசுப்பேற்றுவதில் ஆரம்பிக்கிறது அமிதாப் – சார்மி நட்பு! தனது தோழியான மினிஷாவிடமும் அமிதாப்பை அறிமுகப்படுத்துகிறார்.


      கல்லூரிக்காலத்திலிருந்து மினிஷா லம்பாவை ஒருதலையாகக் காதலித்து வருகிறார் அஸிஸ்டெண்ட் கமிஷ்னர் சோனு சூட்…! இவர்களுக்கிடையே அமிதாப் அறிமுகமாகி, காதலை கனியச்செய்கிறார்., இந்நிலையில், போலிஸ் ஸ்டேஷன் வாசலிலேயே நிற்கும் ஜீப்பில் ஒரு பாமை வெடிக்க வைத்து, சோனுவை எச்சரிக்கிறார் அமிதாப்.!


           ஒரு கோவில் விழாவில் சோனு, தனது தாய் ஹேமமாலினியுடன் வந்து காரில் இறங்குகிறார். அப்போது அவரைச்சுட – ப்ரகாஷ்ராஜால் நியமிக்கப்பட்டு - காத்திருக்கும் கொலையாளியை காத்திருந்து சுட்டுவிட்டு, தான் யாரென்ற முடிச்சை அவிழ்க்கிறார் அமிதாப்!

அவர் சோனுவின் அப்பா! – இடைவேளை!


       சோனு குழந்தையாக இருக்கும்போதே ஹேமமாலினி- அமிதாப் பிரிந்துவிடுகிறார்கள். தன் மகனுக்கு ஒரு ஆபத்து என்று வரும்போது அவனைக்காப்பாற்ற வந்திருக்கிறார் அமிதாப்!

              பின்னர் ப்ரகாஷ்ராஜ் கூட்டத்துக்குள் நுழைந்து, சோனுவைக்கொல்ல அவர்கள் போடும் திட்டங்களை முறியடித்து, அனைவரையும் போட்டுத்தள்ளி...

 சுபம்!



 

அமிதாப் – தெய்வமே! என்று காலில் விழுந்துவிடலாம். அந்த அளவுக்கு நக்கலும் நையாண்டியும் விளையாடுகிறது. ஆக்ரோஷத்தில் அந்தக்கால அமிதாப் ஆடித்தீர்க்கிறார்.






ப்ரகாஷ் ராஜ் – இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு, கலக்கியிருக்கிறார் மனிதர்! வில்லனுக்கான ஆத்திரமும், அவசரமும்…..சூப்பர்! அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில்…’கண் கலங்க…..’ அப்ப போலீஸே வரலை! அத்தனை பேரையும் நீதான் சுட்ட…!. “ என்று கூறி முடித்து அழ ஆரம்பிக்கையில் அப்ளாஸை அள்ளுகிறார். ஹிந்தி வில்லன்களே …உஷார்!!





சோனு சூட் – அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சரியாகச் செய்திருக்கிறார். ஆனால் ரொமான்ஸுக்குக்கூட சிரிக்கமாட்டேன் என்று இருப்பது இடிக்கிறது. டைரக்டர் அப்படி எதிர்பார்த்திருப்பாரோ?






சார்மி – ரவீணா டேன்டன் – முறையே மகள் – அம்மா கேரக்டர்…கலக்கியிருக்கிறார்கள். படத்தின் நகைச்சுவைக்கு குத்தகை! அதுவும் ரவீணாவின் முகச்சுழிப்புகள் – பின்றீங்க மேடம்!



ஹேமமாலினி – அமைதியான அம்மா! பெரிதாக வேலை இல்லை! கொடுத்த வேலைக்கு பங்கமுமில்லை!






படத்தின் முடிவில்… அமிதாப்புக்கு சமர்ப்பணம் என்று போடுகிறார்கள்.

பூரி ஜெகன்னாத் ஒரு மிகச்சிற்ந்த பொழுதுபோக்குப் படத்தை கொடுத்திருக்கிறார். 

அமிதாப்புக்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்.




பெங்களூரில் சென்ற வேலை முடிந்தவுடன் ஞாயிறு இரவுக்காட்சியாக கொரமங்களா பி வி ஆரில் ஸ்க்ரீன் 7ல் பார்த்தேன். 9:25க்கு ஷோ என்று கூறி ..சரியாக வினாடி சுத்தமாக படம் போட்டார்கள். என்ன….? டிக்கெட்தான் 240 ரூபாய்!! ஆனால் அந்த மொத்த மாலும் படுசுத்தமாக இருக்கிறது.


Tuesday, May 31, 2011

ஓமப்பொடி




ஆச்சர்யம் # 1



கோ படத்தில், அஜ்மல் நடத்தும் அமைப்பின் பெயர் சிறகுகள், அது மாணவர்களை ஒருங்கிணைத்து நன்மை செய்வதாகச் சொல்லியிருப்பார்கள்.
உண்மையிலேயே, 2003ஆம் ஆண்டு புதுக்கோட்டையில், சிறகுகள் (WINGS – Winners and Ignitors of New Generation Society) என்ற அமைப்பைத் துவக்கி, மாணவர்களை ஒருங்கிணைத்து, நேர்மைதான் தாரகமந்திரம் என்ற நோக்கத்தில் ஒரு இயக்கமாக மாற்றி கிட்டத்தட்ட 3000 மாணவர்களை ஒருங்கிணைத்து வைத்திருந்தேன். அதன் தலைமைப்பொறுப்பில் நாங்கள் 3 இளைஞர்கள் இருந்தோம். பள்ளிகளில் என் எஸ் எஸ், ரெட் ரிப்பன் கிளப் போல, சிறகுகள் அமைப்பையும் உருவாக்கினோம். அதற்கு வலைப்பூ கூட உருவாக்கினேன். இதோ அதன் சுட்டி! 

இரு வாரங்களுக்கு ஒருமுறை கூட்டம் கூடும். அதுவும், மாதிரி பாராளுமன்றமாக இருக்கும்.

மாதம் ஒருமுறை வங்கி, அஞ்சலகம், தாலுகா அலுவலகம் போன்ற அரசு நிறுவனங்களின் நடைமுறைகள் அந்தந்த அதிகாரிகளின் துணையோடு பயிற்றுவிக்கப்படும்.

நேர்மையான அரசியல் என்றால் என்ன? என்று கற்பிக்கப்படும்.

அரசியல் எவ்வளவு முக்கியம் என்று நாடகம் நடித்துக்காண்பிக்கப்படும்.

லஞ்சம் கொடுக்கமாட்டோம் என்ற உறுதிமொழி வாங்கிக்கொள்ளப்படும்.

சுயநீதிமன்றம் என்ற நடைமுறை பின்பற்றப்படும். அதாவது வகுப்பில் ஒருவன் தவறு செய்துவிட்டால், அது கண்டுபிடிக்கப்பட்டாலும், ஆசிரியரிடம் போகாமல், சிறகுகளே அவனை விசாரித்து, அவனுக்கான தண்டனையை அவனே நிர்ணயம் செய்துகொள்ளும் நேர்மையை வலியுறுத்தும்.

அரசு போடும் சட்டங்களை முழுமையாகப் பின்பற்ற பயிற்சியளிக்கப்படும்.
சிறகுகள் என்ற மாத இதழ் நடத்தப்படும். அதை சிறகுகள் மாணவர்களே நடத்துவார்கள். சமூகம் சார்ந்த விஷயங்களை மட்டுமே எழுதுவார்கள். படைப்பார்கள்.

தட்டிக்கேட்கும் பழக்கம் வலியுறுத்தப்படும்.

தன்னம்பிக்கைக்கு உரம் போடப்படும்.

அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் என்று கண்டுபிடித்துச் சொல்லப்படும்.

இப்படி அழகாகச் சென்றுகொண்டிருந்த இயக்கம்…இப்போது இல்லை..! ஏன்? அதற்கான காரணத்துக்கு ஐந்து பதிவுகள் போடவேண்டியிருக்கும். ஆனால் இன்றும் சிறகுகள் இளைஞர்கள் அதிகபட்ச(!) நேர்மையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இது எப்படி கே.வி.ஆனந்த் குழுவிற்கு சிந்தனையில் உதித்தது என்பது ஆச்சர்யமாகவே உள்ளது.! அவரை அணுகி கேட்கும் எண்ணமும் இருக்கிறது.

ஆச்சர்யம் # 2

சென்ற பதிவாக நான் எழுதிய நாடா நினைவுகள், கேசட்டுகள் பற்றியது. இதை எழுதவேண்டுமென்று ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து யோசித்து, கொஞ்சம் எழுதிவைத்துவிட்டு, சென்றவாரம் புதன் இரவுதான் முடித்து பதிவேற்றினேன். பதிவின் நீளம் கருதி, இரண்டு பாகங்களாக்கி அடுத்த பாகத்தை வெள்ளியன்று வலையேற்றினேன். அன்று காலை வந்த ஆனந்தவிகடனில்…மூங்கில் மூச்சு என்ற தொடரில்..சுகா அண்ணன் (தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன் அவர்களின் புதல்வர்..சுரேஷ் கண்ணன் அவர்கள்) அதே நினைவலைகளை , அவர் கோணத்தில் மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருந்தார். அட! எப்படி அவர் எழுதிய அதே விஷயத்தை நாமும் எழுதியிருக்கிறோம் என்று ஆச்சர்யப்பட்டேன். அவரிடமும் இதைப்பற்றி விவாதிக்கும் எண்ணம் இருக்கிறது.
                        ------------------------------------------------------

சென்னையில் மிகவும் சிக்கனமான போக்குவரத்து எதுவென்றால், அது..ஷேர் ஆட்டோதான் !



 ஆனால், அதில் ‘ கொஞ்சம் உள்ள போங்க சார்! என்று டிரைவர் சாதாரணமாகச்சொல்லும் இடத்துக்கு நாம் சென்றால், ஆட்டோவின் அந்தப்பக்க வாசல் வழியாக வெளியில் விழும் ஆபத்து இருக்கிறது. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ! என்று சொல்லியே நான்கு பேர் அமரும் இடத்தில் ஏழு பேரை ஏற்றும் சர்க்கஸ் நாள்தோறும் நடந்தேறுகிறது.

அடுத்து..ஆட்டோ..? இல்லை! அவர்களிடம் பேரம் பேசியே ஒழிந்துவிடுவோம். நீண்ட தூரப்பயணத்துக்கு, பாதுகாப்பான சிக்கனமான வழி – கால் டாக்ஸிதான்.!

 
மிகவும் தொழில்நேர்த்தியாக , சிறப்பாகச்செய்கிறார்கள். சமீபத்தில் நான் சென்ற கால்டாக்ஸி காட்டிய கிலோமீட்டருக்கும், அது காட்டிய தொகைக்கும் வித்தியாசம் இருந்தது. உடனே அதை புக் செய்த எண்ணுக்கு அழைத்துக்கேட்டேன். உடனே...மீட்டர் தவறாக இருக்கலாம் சார்! உங்க கணக்குப்படி கிலோமீட்டருக்கு என்ன உண்டோ அதைக்கொடுங்க போதும் என்று கூறி, அதையே டிரைவருக்கும் அறிவுறுத்திவிட்டனர். மிகவும் மகிழ்வாக இருந்தது.  ஆட்டோ ஸ்டாண்ட் அண்ணாச்சிகளா? முழிச்சுக்குங்க! ஏதாவது செய்ங்க!! 

Thursday, May 26, 2011

நாடா நினைவுகள் - தொடர்ச்சி....






பின்னர் முதன்முறையாக வீட்டிற்கு ஒரு பிலிப்ஸ் டேப் ரெக்கார்டரை சித்தப்பா வாங்கி வந்தார்..,எம்.எஸ்ஸின் சுப்ரபாதம்,கந்தர் சஷ்டி கவசமும், ஒரு டி எம் எஸ்ஸின் முருகன் பாடல்கள் கலெக்‌ஷனும் , நினைவே ஒரு சங்கீதம், வேலைக்காரன் படப்பாடல்களையும் கேசட்டாக வாங்கி வந்திருந்தார். அதற்கு ஒரு துண்டைப்போட்டு மூடி ஒரு மேசையில் வைத்தபின் வீட்டுக்கே அழகு வந்தது.


ஆஹா! நம் வீட்டிலும் கேசட் வந்துவிட்டது என்று புளகாங்கிதமடைந்தேன். வேலைக்காரன் படப்பாடல்கள் மொட்டை மனப்பாடம் ஆனது.! ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் –திருச்சி வானொலியில் – சூரியகாந்தி என்ற தலைப்பில் வரும் நாடகங்களைக் கேட்டுவிட்டு, சித்தப்பாவின் ஏற்பாட்டின்படி ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோவின் பவ்யத்தோடு, ஒவ்வொருவரும் உள்ளறைக்குச் சென்று அந்த டேப் ரெக்கார்டரில் எங்கள் குரல் வளத்தைக்காட்டி பாட்டுப்பாடி பதிந்துவிட்டு வந்தோம். நண்டு சிண்டுகள் வரை அனைவருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் என் தங்கை பாடிய ‘சுந்தரி சௌந்தரி நிரந்தரியே….! ‘ சூப்பர் ஹிட்!

பின்னர், வீட்டில் கேசட் புழக்கம் என்னால் அதிகரித்துவிட்டது. நண்பன் ஹரிகிருஷ்ணன் வீட்டில் இருந்து, ‘சம்சாரம் அது மின்சாரம்’ வசன கேசட் வாங்கிவந்து கேட்டேன். ஏன் ஓசியில் வாங்கி வந்தாய் என்று பாட்டு கிடைத்தது. இருந்தாலும், அந்த கேசட்டை ஓடவிட்டு கேட்பதில் ஒரு சுகம்தான். பின்னர் அதன் நுணுக்கங்கள் பிடிபட ஆரம்பித்தது. மெதுவாக கையில் இருக்கும் காசிலிருந்து, கேசட்டுகள் வாங்கத்துவங்கினேன். சித்தப்பாவின் டேப்ரெக்கார்டரை ஒப்பேற்றிய பெருமையும் என்னையே சேரும்!
கல்லூரி சென்றபின், கேசட் வாங்குவது அதிகமானது. நான் கேசட் வாங்காத பஸ் ஸ்டாண்டே இல்லை எனலாம். டி சீரிஸ், ராஜா, எக்கோ, வாணி, வீணா என பல்வேறு கம்பெனி கேசட்டுகள்! டூயட் பட கேசட் – நீலக்கலரில் வந்தது. மிகவும் அழகாக இருக்கும்.
பின் மைக்கேல் ஜாக்ஸனின் டேஞ்ஜரஸ்! 99ரூபாய்க்கு கருப்பு கலரில் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருந்தது.  வந்தே மாதரம் கேசட்டின் வடிவமைப்பும் மிகவும் அழகாக இருக்கும். அந்த கேசட்டின் கவர் மட்டும் மொழுக்கையாக கையில் கீறாமல் வடிவமைக்கப்பட்டிருந்தது.
காமெடி கலெக்‌ஷனாக, சுருளிராஜன், கவுண்டமணி செந்தில், ‘மூர்த்தி-கோபியின் காமெடி கேசட்டுகள்! மயில்சாமி-லக்‌ஷ்மணனின் ‘முப்பத்தாறு மொட்டைகளின் அட்டகாசங்கள்’ கேட்டு , அதன்படி கல்லூரியில் மிமிக்ரி செய்து பரிசுகள் வாங்கியது அந்த கேசட்டுகள் செய்த உதவி!
நான் படித்தது எலக்ட்ரானிக்ஸ் என்பதால், முதலில் நான் முயன்றது ஒரு ASSEMBLED டேப் ப்ளேயர்தான். அதற்கான கேஸிங், ட்ரான்ஸ்பார்பர், டையோடு, ஆம்ப்ளிபயர் போர்டு, டேப் மெக்கானிஸம், பி டி போர்ட் , ஈக்வலைஸர் போர்ட், அதற்கான எல் இ டி டிஸ்கோ லைட்  என பார்த்துப்பார்த்து வாங்கி அதில் லயித்துப்போய் வீட்டையே இரண்டு செய்திருக்கிறேன். அந்தக்காலகட்டத்தில் எங்கள் வீட்டில் ஆறு ஸ்பீக்கர்கள். தெருவில் தண்ணீர் எடுப்பவர்கள், என்னம்மா? தம்பி காலேஜ்லேருந்து வந்திருச்சுபோல? என்று கேட்கும் அளவுக்கு என் ஒலி(அலறல்)பரப்பு பிரபலம்!
வேலைக்குச் செல்லும் காலகட்டத்தில், கன்னாபின்னாவென்று கேசட்டுகள் வாங்கி, அதற்கு எண்கள் போட்டு ஒழுங்குபடுத்தி , தேடும்போது உடனே கிடைக்குமாறு ஒரு நோட்டில் எழுதிவைத்து என, அதற்காக நான் செலவழித்த நேரம் அதிகம்!
ஒரு பாடலை டீக்கடையில், பேருந்தில் கேட்டுவிட்டு, மிகவும் பிடித்துப்போய்விட, அந்தப்பாட்டு நமக்கே சொந்தமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று மனம் ஆசைப்படும். அப்போது நாம் இருக்கும் ஊரில் இருக்கும் ரெக்கார்டிங் கடைக்குப்போய், தேவைப்படும் பாடல்களை பட்டியலாக எழுதிக்கொடுத்து, ஒரு புதிய TDK 90 கேசட் வாங்கி அதில் இருபுறமும் பதியச்சொல்லி , என்று தருவீர்கள் என்று கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்து நகம் கடித்துக்காத்திருப்பேன். அவர் சொன்ன தேதியில் சொன்னதைவிட கொஞ்சம் முன்னாலேயே சென்று ரெக்கார்டிங் ஆகிவிட்டதா என்று போட்டுக்கேட்டுவிட்டு ஒரு நிமிடம் பதிசெய்யப்படாமல் மிச்சம் இருக்கும்போது..
அண்ணே! தளபதி படத்தில் யமுனை ஆற்றிலே மட்டும் போட்டுருங்க! என்று நைசாகக் கேட்க,
வசந்தம் மியூசிக்கல் ஓனர் அண்ணன், அந்த ஒரு நிமிசம் ஒங்க டேப்பில் சும்மா ஓடக்கூடாதாக்கும்? 90க்கு காசு குடுத்திருக்கீங்க? அதானே! நல்ல வெவரம்டா தம்பீ! நல்லா வருவ! என்று முன்கூட்டியே கணித்து வாழ்த்தினார் . J

நாம் அழகாக கலெக்ட் செய்த பாடல்களை போட்டுக்கேட்டுவிட்டால், வேறு எங்கு அதில் உள்ள ஒரு பாடலைக் கேட்டாலும், அடுத்தபாடலாக, நம் கேசட்டில் உள்ள பாடலைத்தான் வாய் முணுமுணுக்கும். மேலும், பேருந்துகளில், நம் கேசட்டைக்கொடுத்து, அதை டிரைவர் போட்டுவிட, பயணிகள் ரசிக்கும்போது, அனைவரது முகத்தையும் (குறிப்பாக கல்லூரிப்பெண்கள்)  பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டே பயணிக்கும் சுகம் இருக்கிறதே…..அனுபவிக்கணும் பாஸு!
அதில் இன்னும் சில டிரைவர்கள், அந்த கேசட்டை அப்படியே பதிந்துவிட்டு தருவதாக வாங்க, நானும் நம்ம்ம்பிக்கொடுக்க, அவர் அப்படியே அந்தக் கேசட்டை ஆட்டையப் போட்டுவிடும் சோகம் இருக்கிறதே…அதையும் அனுபவிக்கணும் பாஸு!
அப்படிச்சேர்ந்துபோன 500க்கும் மேற்பட்ட கேசட்டுகளை விட்டுவிட்டு நான் வெளிநாடு போய்விட்டு வந்தபின், என் குடும்பம் அதைப் பாதுகாத்து வைத்திருந்தது. இடையில் திருச்சி வானொலிக்காக, ‘எங்கிருந்தோ வந்தான், படத்தின் ஒரு பாடலான, ‘மௌனம் என்பது கவிதை மொழி’ என்ற அருமையான மெலடி இணையத்திலும் கிடைக்காமல், என்னிடம் இருந்த கேசட்டிலிருந்து எடுத்துக்கொடுத்தபோது, அவைகளைப்பாதுகாத்ததற்கு நன்றியாக உணர்ந்தேன்.
இதோ, கேசட்டுகள் மீண்டும் என்னுடன் சென்னைக்கு வந்துவிட்டன. ஒரு நாள் ஒதுக்கி அந்த நாடாக்களில் கேட்ட அத்துனை ஓசைகளையும் மீண்டும் கேட்க காதுகள் துடிக்கின்றன. தற்காலிக நிவாரணத்துக்கு…நாடா நினைவுகளாக !!

Wednesday, May 25, 2011

நாடா நினைவுகள்







     வீடு மாற்றும்போது, பழைய பொருட்களை பரணில் இருந்து இறக்கிக்கொண்டிருந்தேன். ஒரு பெரிய அட்டைப்பெட்டி கண்ணில் பட்டது. அட! என்று ஆசையுடன் அதை இறக்கிவைத்து விட்டு, திறந்து காட்டி, இதையும் சென்னை கொண்டு போறோம். என்று தங்கமணியிடம் சொல்ல, ”ஹ்க்க்ம்!” என்ற ஒரு கனைப்பு வந்தது. அதற்கு என்ன அர்த்தம் என்று அவரிடம் கேட்கவும் முடியாது.
பாட்டு கேட்பது என்பது இப்போது மிகவும் எளிமையான செயல். கேட்க நினைக்கும் பாடலை இணையத்தில் தேடி, நமது இசைபாடும் கருவியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் கேட்கத்தொடங்கிவிடலாம். இதில் இருக்கும் வேகமும், எளிமையும் நம்மை பரவசத்தில் ஆழ்த்துவது உண்மைதான்!
ஆனால்,ஒரு காலத்தில், திருவிளையாடல் படத்தின் அனைத்துப்பாடல்களும், ஒரு கருப்பு வட்டத்தட்டில் இருக்கும். அதற்கு இசைத்தட்டு என்று தமிழிலும், ரெக்கார்ட் என்று ஆங்கிலத்திலும் கூறினார்கள். இந்த வார்த்தைகளை நான் மனப்பாடம் செய்துகொள்ள பலமுறை சொல்லிப்பார்த்திருக்கிறேன். அதனை ஒரு பெரிய அட்டை உறையில் போட்டு வைத்திருப்பார்கள். ஒவ்வொருமுறை பாடலை ஒலிக்கவிடும்போதும், ஒரு பெரிய கிராமபோன் பெட்டியில் போட்டு சுழல விடுவார்கள். இப்போதுபோல் பாடலை உடனே தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், இலுப்பூர் பிடாரிகோயிலில் இசைத்தட்டு போடும் அந்த அண்ணன் இப்ப பாக்குறியா? கரேட்டா ‘பாட்டும் நானே’ போடுறேன் என்று ஓரளவு அதற்கு அருகில் போய் முள்ளை வைத்துவிடுவார். அது ’பாத்தா பசுமரம்’ என்று ஆரம்பிக்கும். எப்படி மாறிப்போச்சு என்று முனகிக்கொண்டே, மீண்டும் முயற்சித்து பாடவைத்துவிடுவார்.
லேசான கொரகொரப்புடன் அது ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என ஆரம்பித்து ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்று ஆரம்பிக்கும்போது, நான் அவ்வையார் இதற்குள் எப்படிப் போனார் என்று பலமுறை வியந்திருக்கிறேன். ஆனால், கிராமபோன் வாங்கித்தாருங்கள் என்று அப்பாவிடம் கேட்க எனக்கும் தைரியமில்லை. வாங்கிவந்தால், மூன்றாவது நாள் அதை நோண்டாமல் ஒழுங்காக வைத்திருப்பேனா என்று என்மேலும் நம்பிக்கையில்லை. ஆனால், அதில் அவ்வளவு ஆசை இருந்தது.
பின்னர் பாடல்கள் கேட்கும் ஆர்வம் , வானொலியிலும், எங்காவது செல்லும் விழாக்களிலுமாக சுருங்கியிருந்த வேளையில், பக்கத்துவீட்டு லைப்ரேரியன் வீட்டில், சிங்கப்பூரிலிருந்து ஒரு பெரிய பெட்டிபோன்ற வஸ்து வந்து அமர்ந்திருந்தது. சிறுவர்கள் அனைவரும் அதைச்சென்று பார்த்தோம். அதன் பெயர் நேஷனல் டேப் ரெக்கார்டர் என்றார்கள். அது என்ன ஒற்றுமை என்று தெரியவில்லை. அதில் நான் கேட்ட முதல் பாடல் ‘ இசையால் வசாமாகா இதயமெது?’. அன்றே அந்த டேப் ரெக்கார்டரில், என்னைப்பாடச்சொல்லி, பதிவுசெய்வதாகச் சொன்னார்கள். நான் பாடிய முதல் பாடல் ‘ புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!’
பாடல்கள் பெட்டியிலேயே இருக்குமா? அல்லது வெளியில் எடுக்கலாமா? இசைத்தட்டு எங்கே வைப்பார்கள்? முள்ளை எப்படி நகர்த்தி வைப்பது? பட்டனெல்லாம் எதுக்கு? செவப்பு பட்டனை ஏன் அமுக்கினீங்க? என்று நான் கேட்ட கேள்விகளால் அந்த கருப்பையா மாமா திணறித்தான் போயிருப்பார். சொல்றேன் என்று கூறிவிட்டு, ஒரு பட்டனை அழுத்தினார். பிளந்த எங்கள் வாய்கள் போலவே ஒரு சிறிய கதவு திறந்தது. அதிலிருந்து, ஒரு பொருளை எடுத்தார்.  



இருபுறமும் துளைகளுடன் ஒரு செவ்வகப்பெட்டி. அதில் ஒருபக்கம் மட்டும் வெளியில் தெரியும் காப்பிப்பொடி நிற நாடா. அதைச்சுற்றிக்கொள்ள இரு துளைகளிலும் சுழலுமாறு இரு சக்கரங்கள் என மிகவும் அழகாக இருந்தது. அதனுள் இருக்கும் நாடாவில்தான் பாடல் இருக்கும் எனவும், அது ஒருபக்கம் சுற்றிமுடித்தபின் திருப்பிப்போட்டால், வேறு பாடல் கேட்கலாம் எனவும் தெரிந்துகொண்டேன். அது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஏனெனில், நம் குரலையும் அதில் பதிந்துகொள்ளலாம் என்ற இன்னொரு அம்சம்! அதற்கு கேசட் என்று பெயர் சொன்னார்! ‘சட்டுன்னு பாட்டு கேட்கலாம் என்று யோசித்து ‘கேள்-சட்’ ஐத்தான் இப்படி வைத்திருக்கிறார்கள் என்று நானாகவே ஒரு காரணம் யோசித்துவைத்துக்கொண்டேன்.


அப்போதிலிருந்து ஆரம்பித்தது கேசட் மோகம். கேசட்டுகளை எங்கு பார்த்தாலும் ஆசையாக இருக்கும். வெளிவரும் எல்லா கேசட்டுகளையும் வாங்கிவிடவேண்டும் என்று லட்சியம் வைக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கேசட் கடைக்காரர்கள் மீது பொறாமையாக இருக்கும். பிடாரிஅம்மன் கோயில் அண்ணன் கேசட் ப்ளேயருக்கு மாறியதும் கேசட்டுகளின் நெருக்கம் அதிகமானது. தெரிந்த விழாக்களுக்குச்செல்லும்போது, முதலில் மைக் செட் அண்ணனை நட்பாக்கிக்கொள்ளுவது அத்தியாவசியமாகிப்போனது.


                                     நாடா நினைவுகள் தொடரும்....!

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...