Tuesday, October 18, 2011

கண்ணனும், கண்ணனும் (சவால் சிறுகதைப்போட்டி 2011)



வாகனங்கள் எரிபொருளைத் தின்றுவிட்டு, எரிச்சல் தாங்காமல் ஓடிக்கொண்டிருந்தன. அவ்வப்போது சிகப்பு, மஞ்சள், பச்சை என்று விளக்குகளைப்போட்டு ஓட்டத்தைத் சீராக்கிக்கொண்டிருந்தன மஞ்சள் மரங்களாய் நின்றுகொண்டிருந்த சிக்னல் கம்பங்கள்.

சென்னையில், தனது அலுவலகத்தின் 3வது மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த கண்ணன், ‘அட ! எப்படியெல்லாம் நமக்கு சிந்தனை வருது?’ என்று நினைத்துக்கொண்டே திருப்பூரிலிருக்கும் தன் நண்பன் கண்ணனுக்கு போனை ஒற்றினான்.

‘டேய்! ஆபீஸ் வந்துட்டியா?’

’வந்துட்டேன்! சொல்லு?’

’இந்த வருஷமும் ஒரு சிறுகதைப்போட்டி வச்சு,நம் மக்கள் சிந்தனையைத் தட்டிவிடுவோமா?’

’நானும் நினைச்சுக்கிட்டே இருந்தேன் கண்ணா! ஓ. எஸ்.! செஞ்சுரலாம்.’

சென்னைக் கண்ணனும், திருப்பூர் கண்ணனும் நண்பர்கள். தங்கள் வாழ்வியல் சூழல் தடுத்ததால், கற்பனைக் குதிரைகளை லாயத்தில் கட்டி வைத்திருந்தவர்கள். இணைய தளத்தில் வலைப்பூ என்று ஒன்று உருவானபோது, அதைப்பயன்படுத்தி குதிரையை ஓடவிட, அற்புதமான பதிவுலக எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்கள். கதைகள், அனுபவங்கள், சினிமா விமர்சனங்கள் என கலந்து கட்டி அடிப்பார்கள். இருவருக்கும் மிகப்பெரிய ஒற்றுமை, கிண்டலும், நகைச்சுவையும் எழுத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் பாங்குதான்! இதனாலேயே மிகப்பெரிய வாசகர் கூட்டம் இவர்களுக்கு இருந்தது.  

எப்போதாவது நேரில் சந்தித்தாலும், அடிக்கடி போனில் நட்பை வளர்த்து உறுதி ஆக்கியிருந்தார்கள். ஏறத்தாழ இருவரின் இயல்பும், ரசனைகளும் ஒன்றாயிருந்ததே காரணம்.! இருவர் பெயரும் கண்ணன் என்று இருந்தது ஒரு கூடுதல் சிறப்பே!

இருவருக்கும் கதை எழுதுவதில் இருந்த ஆர்வம், நாம் ஏன் வலையுலகத்தில் இயங்கும் எழுத்தாளர்களுக்கென கதைப்போட்டி வைக்கக்கூடாது என்று தோன்ற, ஒரு ஆண்டுக்கு முன் ‘கண்ணனும், கண்ணனும் கலக்கும் கதைப்போட்டி ‘ என்று அர்த்தப்படும் ’4க’ என்று போட்டிக்குப் பெயரிட்டான் திருப்பூர் கண்ணன். அவன் எப்போதும் இது போன்ற வார்த்தை ஜாலங்கள் செய்வதில் வித்தகன்.!

     உரையாடலை, திருப்பூர் கண்ணன் தொடர்ந்தான்.

‘போன வருஷம் சம்பந்தமில்லாத வார்த்தைகளைக் கொடுத்து எழுதச்சொன்னோம். அதுவும் ஒரு க்ரைம் சப்ஜெக்ட்!’

’ஆமா! நம்ப மக்கள் கலக்கிட்டாங்க இல்ல?’

‘இந்த வருஷம் இன்னும் புதுமையா நம்ப ’4க’ போட்டியை நடத்தணும் கண்ணா!

எப்படிப் பண்றது?

’எனக்கு ஒரு யோசனை!’

’சொல்லு!’

’ஏதாவது ஒரு காட்சியை வச்சு கதை பண்ணச் சொல்வோமா?’

’ம்.. செய்யலாம்..! ஆனா அதுதான் எல்லாப் பத்திரிக்கையிலயும், காட்சிக்கு கதை, கவிதைன்னு போட்டுத் தாக்குறாங்களே!’

’பரவாயில்லை..! ஆனா அந்தக் காட்சியை ஒரு வித்யாசமான, நாம் நினைக்கிற மெத்தட்ல வரமாதிரி செஞ்சுருவோம். நைட் வீட்டுக்குப் போயிட்டு கூப்புடுறேன்.’

’சரி! நானும் யோசிக்கிறேன்!’

போனை வைத்துவிட்டு மீண்டும் சீட்டுக்கு வந்தான் சென்னைக் கண்ணன்
.
அது ஒரு சரக்குப்பெட்டக அலுவலகம். வெவ்வேறு நாடுகளிலிருந்து கப்பலில் வரும் சரக்குகளை, உரிய நிறுவனங்களுக்கு க்ளியர் செய்து தருவதுதான் வேலை.! சென்னைக் கண்ணன் அங்கு மேலதிகாரி!

பல கடத்தல் சரக்குகள், முறையான ஆவணங்கள் இல்லாமல் வரும். வாடிக்கையாளர்கள் வரும் கடத்தல் சரக்கு பற்றி இவர்களிடம் உண்மையைக் கூறிவிடுவார்கள். அவற்றை தங்கள் வாடிக்கையாளருக்காகப் பேசி வாங்கித்தருவதில் ஏகப்பட்ட தகிடுதித்தங்கள், அதிகாரிகளுக்கு கூழைக்கும்பிடுகள் போடவேண்டிய நிர்ப்பந்தம் அந்த நிறுவன ஊழியர்களுக்கு உண்டு.

ஆனால், அன்று வேறு ஒரு பிரச்னை வந்தது. அவர்கள் அலுவலகத்திலேயே யாரோ ஒருவர் கஸ்டம்ஸுக்கு இன்பார்மராக செயல்பட்டு, தொடர்ச்சியாக தகவல் கொடுக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து கண்ட்டெய்னர் எண்ணை எப்படியோ சொல்லி, அதை முழுமையாக சோதனையிட வைத்து, ஏதாவது பொருள் சிக்கும்போது, நிறுவனத்திடமிருந்து பெரிய தொகை கறக்கிறார்கள். அதை இந்த ஊழியரும் பங்கு போட்டுக்கொள்கிறார். ஆனால் யாரென்று தெரியவில்லை என்று அந்த நிறுவனத்தின் ஒரு நேர்மையான் ஊழியனான செல்வா புகார் சொன்னான்.

கண்ணன் உடனே, அவன் முன்பாகவே, ஒரு நம்பிக்கையான ஊழியனை வைத்து எல்லோருடைய மேஜையையும் தேடச்சொல்லியிருந்தான். இன்று அவன் சிக்கிவிடுவான் என்று செல்வாவுக்கு நம்பிக்கை கொடுத்து,  அந்த டென்ஷனிலேயே நாள் கழிய, மாலை வீடு வந்தான்.

உடை மாற்றி, ரிலாக்ஸாக அமர்ந்தபோது, திருப்பூர் கண்ணனிடமிருந்து அழைப்பு!

‘சொல்லு கண்ணா!’  என்ன செய்யலாம்?

‘நான் ஏதாவது க்ரைம் கதை க்ளு தரலாமான்னு யோசிக்கிறேண்டா!’

’இன்னிக்கு எங்க ஆபீஸில் ஒரு சம்பவம் நடந்துச்சு ! கேக்குறியா, அது ஏதாவது உதவுதான்ன்னு பார்க்கலாம்.’

சொல்லு!
சென்னைக்கண்ணன் தன் அலுவலகத்தில் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.

ம்! ம்.! எனக் கேட்டுக்கொண்டிருந்தான் திருப்பூர் கண்ணன்.

திருப்பூர் கண்ணனுக்கு ஒரு மகள் ! அம்மு என்று அழைப்பான். 7ம் வகுப்பு படிக்கிறாள். அப்பாவைப்போலவே அறிவாளி! இவன் அளவுக்கு புத்தகங்கள் படிக்க ஆரம்பித்துவிட்டவள். தான் எழுதும் கட்டுரைகளையும், சிறுகதைகளையும் அவளையும் படிக்கவைப்பான். அவளும் தனக்குத்தெரிந்த கருத்துக்களை சொல்லுவாள். பாராட்டுவதை விட, அவனை விட்டுக்கிழிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவாள்.

அவளும் அப்பாவிற்கு அருகிலேயே ஒரு நாற்காலியைப்போட்டுக்கொண்டு அப்பா ‘ம்’ எனச்சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டே , ஒரு ராஜேஷ் குமார் நாவல் படித்துக்கொண்டிருந்தாள். வீட்டுப்பாடங்களையெல்லாம் முன்னரே முடித்துவிட்டதால், இந்த சுதந்திரம்..!

கண்ணனும்,கண்ணனும் தொடர்ந்தார்கள்.

’மேட்டர் நல்லாருக்கு கண்ணா! இதையே கொஞ்சம் ஆல்ட்டர் பண்ணி, நான் ஒரு கதை யோசிச்சு காலைல ஐடியா பார்ம் பண்ணிடுறேன்.’

’ஓக்கே! பை!’

தனது ஐ-போனை ஒற்றி, தொடர்பைத் துண்டித்தான்.

‘என்னப்பா மேட்டர்?’ அம்மு கேட்டாள்.

’நானும், கண்ணன் அங்கிளும் சேந்து இந்தவருஷமும் 4க கதைப்போட்டி நடத்தப்போறோம். அதைப்பத்திதான் பேசிக்கிட்டிருந்தேன்.’

‘சரி! சரி! இந்த வருஷம் என்ன Theme?’

‘அதாண்டா செல்லம் யோசிச்சிக்கிட்டிருக்கோம்.’

’சரி! ஃபைனல் பண்ணிட்டு சொல்லுங்க!’

’சரிம்மா!’

மகளின் ஆர்வமும், அன்பும் பெருமிதம் கொள்ளவைத்தது.

அடுத்தநாள் காலை, சென்னைக்கண்ணனுக்கு அழைத்தான்.

’கண்ணா!’

’சொல்லு!’

’உங்க ஆபீஸ் மேட்டரை வச்சே, ஒரு சூப்பர் ஐடியா பிடிச்சுட்டேன்.’

’சொல்லேன்.’

’ஒரு கண்டெய்னர் கம்பெனியில் இன்பார்மரான விஷ்ணு வேலை பாக்குறான். அவன் ஒவ்வொரு தடவையும் முறையான பேப்பர் இல்லாம மாட்டக்கூடிய கண்டெய்னர் பத்தின தகவல்களை கஸ்டம்ஸ் ஆபீசர் எஸ்.பி. கோகுலுக்கு கொடுப்பான். 
அதன்படி பிடிபட்டு, கப்பம் கட்டுறாங்க! ஆனா, தகவல் எப்படிப் போகுதுன்னு ஆபீஸில் பிச்சுக்கிறாங்க! மேனேஜர் சிவா அதை ஆராயுறான். அதே சமயம், அவன் கொடுத்த தகவல்படி, எஸ்.பி கோகுல் சோதனை போடுறார். 
‘Sea Wolf ஷிப்பில்  2H Row வில் 6F , அதாவது ஆரீஃப் ன்னு பேர் போட்ட கண்டெய்னரில் பெரிசா ஒண்ணும் இல்லை. குறைவான சரக்கும், அதுக்கு கப்பமா ஆயிரக்கணக்கான ரூபாயும்தான் பிராயுது. ஆனா, வேற கண்டெய்னரில் கோடிக்கணக்கான ரூபாய்க்கான சரக்கு கை மாறியிருக்கு.!
 இதை ஒரு கட்டத்தில் சிவாவும், கோகுலும் சேந்து கண்டுபிடிக்கும்போதுதான் ஒரு உண்மை தெரியுது. அவுங்க கம்பெனி ஓனர்தான் இதுக்கு மாஸ்டர் மைண்ட். விஷ்ணு அவரோட ஆள். ஒவ்வொரு தடவையும் போலீஸை திசை திருப்ப, சின்ன சரக்குள்ள கண்டெய்னரை க்ளூவா குடுத்திருக்கான். பெரிய ஐட்டம் நைசா வெளில போயிருக்கு!
அதுல கோகுல் எல்லா க்ளூவையும் கண்டுபிடிக்கும்போது, அவனுக்கு விஷ்ணுவே போன் பண்றமாதிரி ஒரு  சீனை வச்சு ஒரு போட்டோ எடுத்துர்றேன். இன்னிக்கே அறிவிச்சுறலாம்.’

சூப்பர் கண்ணா! செஞ்சுரு! என்று சொல்லிக்கொண்டே, திருப்பூர் கண்ணனின் மூளையை நினைத்து வியந்தான்.
***

திருப்பூரில் , கண்ணன் அலுவலகம் வந்ததும்

ஒரே A4 தாளில்,

Mr.கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு. கவனம்- விஷ்ணு

கொஞ்சம் இடம் விட்டு,

Sir, எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்.  -விஷ்ணு

என்று டைப் செய்து அந்தப்பேப்பரை சின்னதாக மடித்து, மடிப்பு தெரியும்படி, விரித்தான்.

பின்னர் அதனை இரு, தனித் துண்டுகளாக ஸ்கேலை வைத்து கிழித்தான்.

அலுவலக உதவியாளர் பாஸ்கரை அழைத்து அவரது எண்ணை தன் ஐ போனில் ஏற்றி, அவரை குனிந்து பார்க்கச்சொல்லி, அந்த போஸில் போட்டோவும் எடுத்துக்கொண்டு, அதற்கு VISHNU INFORMER என்று பெயரிட்டு, அவரை தன் எண்ணுக்கு அழைக்கச்சொன்னான்.

அது,  தெளிவாக கேமராவில் விழுமாறு பார்த்துக்கொண்டான்.

பாஸ்கரை விட்டு மூன்று நான்கு போட்டோக்கள் எடுத்துக்கொண்டான்.

அதில் சிறப்பாக வந்திருந்த ஒரு போட்டோவை, சென்னை கண்ணனுக்கு அனுப்பினான்.


அவனும், சூப்பரா இருக்கு! அறிவிச்சிடு! என்று மெயில் அனுப்பினான்.

கண்ணனும், கண்ணனும் :  கலக்கும் கதைப்போட்டி ’4க -2011’ என்று பெயரிட்டு, போட்டோவை பதிவேற்றி, போட்டி விதிகளை அடித்து, அன்றே அறிவிப்பும் வெளியிட்டான்.

பதிவுலகம் பற்றிக்கொண்டது. கதைகள் வர ஆரம்பித்தன.
***
சென்னைக்கண்ணனின் முதலாளி தீபக். இவன் அறிமுகப்படுத்தியதால் வலைப்பூக்கள் பார்க்க ஆரம்பித்தவர். இப்போது தீவிர வலைப்பூ வாசகர் ஆகிவிட்டவர். அவரும் போட்டிக்கான இந்தப் படத்தைப் பார்த்தார். கண்ணனை அழைத்தார்.
‘என்னய்யா இது?’

சார்…அது வந்து…..!!

***

ஒரு வாரம் ஆனது.

அன்று அம்முவுக்கு விடுமுறை..! திருப்பூர் கண்ணனும் வீட்டில் ட்விட்டரை நோண்டிக்கொண்டிருந்தான்.

’அப்பா!’

’சொல்லும்மா!’

’அந்தக்கதைப்போட்டி அறிவிச்சிட்டீங்களா?’

’ஆஹா..அறிவிச்சிட்டோமே!! ஸாரிடா உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்.’

இட்ஸ் ஓக்கே! என்ன க்ளூ குடுத்திருக்கீங்க!

விபரமனைத்தும், பெருமையுடன் சொல்லி, புகைப்படத்தையும் கம்ப்யூட்டர் திரையில் காட்டினான்
.
ஆர்வமாகக் கேட்க ஆரம்பித்தவள், புகைப்படத்தைப் பார்த்தவுடன் கண்ணனை ஏற இறங்கப்பார்த்தாள்.

‘எந்தக்காலத்துல இருக்கீங்க? கையில் ஐ-போனை வச்சிருக்கிற ஆபீஸருக்கு ஏன் இன்பார்மர் பேப்பரில் தகவல் குடுக்கணும்.? உக்காந்து யாருக்கும் தெரியாம டைப் பண்ணி, ப்ரிண்ட் எடுத்து, மடிச்சு, அவுங்க இருக்குற எடத்துக்கு அனுப்பி……சாதாரண வேலையா? ஒரு எஸ் எம் எஸ், இல்லன்னா இ-மெயில் பத்தாது.?  அதுவும் தவிர அவுங்க பாஸுக்கும் பேப்பரில் தகவல் குடுப்பாராமா? மேலும். விஷ்ணு இன்பார்மர்ன்னு சரியான பேரையே வச்சுக்கிட்டு, அவன் போட்டோவையும் போனில் வச்சிக்கிட்டு ஒரு ஆபீஸர் அலைவானா? சரியான லூசுப்பா நீ! பாவம் பதிவர்கள்! நீ குடுத்த க்ளூவை அடிப்படையா வச்சு கதை எழுதுவாங்க!! இன்னும் நல்லா சிந்திப்பா!  எங்க அம்மா அப்பவே சொன்னுச்சு! உங்கூட சேர வேண்டாம்னு!’

ஏதோ சொல்லி, சமாளிக்கத் தோன்றி…திக்கித்து நின்றான் கண்ணன். மனதுக்குள் மகளின் புத்திசாலித்தனத்தை எண்ணி பெருமிதம் வேறு…!

 ***

சென்னைக்கண்ணன் தன் முதலாளி தீபக்கிடம் சொன்னதை விட்டுவிட்டேனே..!

‘ஸார்.! நான் ஒரு லைன் தான் குடுத்தேன். ராத்திரி யோசிச்சு, காலைல கரெக்டா பாஸுதான் தப்பான ஆளா இருக்கணும்னு முடிவெடுத்துட்டான். ஆனா விஷுவலா யோசிக்கிறேன்னு பேப்பர் க்ளூ போட்டு ,லாஜிக்குல கோட்டை விட்டுட்டான். நம்ப தொடர்பெல்லாம் எஸ் எம் எஸ்ஸுல, இ-மெயில்லதான்! அதே மாதிரி நம்ப கம்பெனியைப் பொறுத்தவரைக்கும் அந்த இன்ஃபார்மரே நாந்தானே! என்மேல, கஸ்டம்ஸ் ஆபீசருக்கு சந்தேகம் வர வாய்ப்பே இல்லை. கவலையை விடுங்க! கண்டெய்னர் கம்பெனின்னு கண்ணனுக்கு மட்டும்தான் தெரியும். வர்ற சிறுகதைகளைப் படிப்போம். நாமும், செல்வா மூலமா கஸ்டம்ஸ்ல மாட்டாம இருக்கிறதுக்கு, வேற லூப் ஹோல் இல்லாம வேலை பாக்கமுடியுதான்னு பாப்போம்.!’

*************** 

Friday, September 30, 2011

நியாய நாய்







விபத்து நடந்து,
வினாடிகளில்
காணாமல் போகும்
நகைகளில்,
தொகைகளில்
இருக்கிறது
மனிதாபிமானப்
பிசாசுக்கும்
சுயநல
தெய்வத்துக்குமான
அமைதிப் போரின்
அநியாய வெற்றி!

வெற்றியின் ருசியில்


நாளைய 
விபத்துக்காய்

நாக்கைத்

தொங்கப் போடுகிறது

நியாய நாய்!









Sunday, September 25, 2011

இரத்தம்






         சவுதி அரேபியாவின் யான்புவில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது, 1998ன் பக்ரீத் விடுமுறை!!. ஒரு வாரம் போர் அடிக்கும்., எங்காவது டூர் செல்லலாம் என்று முன்னரே, நண்பர்களுடன் ஆலோசித்தபோது, சவுதி அரேபியாவின் மலை நகரங்கள் தபுக், ஹெய்ல் போன்றவை பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் திடீரென்று எகிப்து அருகில்தான் என்பதால், கெய்ரோ போகலாம் என்று முடிவெடுத்து வேலைகளை ஆரம்பித்தோம்.

       அடப்பாவிகளா! ஏதாவது பக்கத்துல இருக்குற ஒரு ஊருக்குப்போகலாம்னா, பக்கத்து நாட்டுக்கே போக ஐடியா குடுக்குறீங்களே? என்று திட்டினாலும், எனக்கும், பிரமிடுகளின் பிரம்மாண்டத்தின் மீது இருந்த அளப்பரிய ஆர்வம் காரணமாக, ஒரு மாத சம்பளத்துக்கும் மேல் செலவாகும் என்று தெரிந்தாலும், ஆசையுடன் ஏற்பாடுகள் செய்தோம்.

     பயண நாளும் வந்தது. யான்புவிலிருந்து ஜெட்டா, பின் அங்கிருந்து கெய்ரோ.! கெய்ரோ விமானநிலையத்தில் இறங்கி இமிக்ரேஷன் க்ளியரன்ஸுக்காக வரிசையில் காத்திருந்தோம். அப்போது, அரபிக் கலந்த ஒரு மொழியில் , - அப்போது எனக்கும் அரபிக் தெரியாது. – ஏதோ சொன்னார்கள். விமான நிலையம் பரபரப்பானது. அதற்குப்பின் அவர்கள் சொன்ன ஆங்கில அறிவிப்பில் ‘தோக்தர்’ என்ற வார்த்தை மட்டும் அறைகுறையாகப்புரிந்தது. அதை நான் உடன் வந்த நண்பரிடம் ‘டாக்டர் கேக்குறாங்க போலிருக்குன்னு’ சொல்லிக்கொண்டிருந்தேன். வரிசை நகர்ந்தது. என் முறை வந்தபோது, அந்த அதிகாரி என்னைப்பார்த்து, விசா பேப்பரைப்பார்த்துவிட்டு, என் சவுதி ஐ டி யைக்காட்டச்சொன்னார். நானும் காட்டினேன். ‘மாஷா அல்லா’ என்று சொல்லிவிட்டு, என் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை எடுத்துவைத்துக்கொண்டு, ஓரமாக நிற்கும்படி சைகை காட்டினார்.

      வெலவெலத்துப்போனேன். நம்ம தப்பு ஏதும் செய்யவில்லையே என்று மனது அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. என்னை ஓரமாக நிற்கச்சொன்ன அதிகாரி, தன் வயர்லெஸ்ஸிலிருந்து ஏதோ பேச, இன்னொரு அதிகாரி அவ்விடத்துக்கு வர, அவர்கள் என்னைக்காட்டி பேச, என்னுடன் வந்த நண்பர்கள் அரண்டுவிட்டார்கள். அதில் ஒருவருக்கு இமிக்ரேஷன் முடிந்து வெளிச்சென்றுவிட்டார். மற்றவர்கள் வரிசையில் முன்னேறிக்கொண்டிருந்தார்கள். அதில் , ஓரளவு அராபிக் தெரிந்த ஷாகுல் என்ற நண்பர், அவர் முறை வந்தபோது, என்னைக்காட்டி கேட்க, அதிகாரியும் ஏதோ பதில் சொல்ல… அவர் என்னைப்பார்த்து சைகை செய்ய முயற்சிக்கும்போது, ஒரு ஆஜானுபாகுவான அதிகாரி, என் தோளில் கை வைத்தார். அவர் பக்கம் திரும்பினேன். அவர் ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்.

நண்பரே ! உங்கள் இரத்தப்பிரிவு என்ன?

ஏ நெகட்டிவ்!

மிகச்சரி! உங்களுடைய உதவி எங்களுக்குத்தேவை!

என்ன செய்யவேண்டும்?

     ”இங்கு ஒரு பயணிக்கு பிரசவச்சிக்கலில், கொஞ்சம் இரத்தம் தேவைப்படுகிறது. இப்போதைக்கு நாங்கள் பார்த்த பயணிகளில் உங்களுக்குத்தான் இந்த இரத்த வகை இருக்கிறது. உடனடித்தேவை!! உதவுங்களேன்!”

ஓக்கே! செய்துகொள்ளுங்கள்!

மிக்க நன்றி நண்பரே! அல்லாவின் அருள் உங்களுக்கு நிலைக்கட்டும்!

     அதுவரை இரத்ததானம் பற்றி கேள்விதான் பட்டிருக்கிறேன். ஆனால், இரத்தம் கொடுத்ததில்லை. இந்தியாவில் இருந்தவரை ஒல்லிப்பிச்சான். 21 வயதில் 43 கிலோ! சவுதி வந்தபின்தான்… தினசரி ஒரு ஆப்பிள் என்று சாப்பிட்டு 22 வயதில் 62 கிலோவுக்கு வந்திருந்தேன். இங்கே திடீரென்று கேட்டவுடன் மறுக்கவும் தோன்றவில்லை.

       கூட்டிச்சென்றார்கள். அது விமான நிலைய மருத்தவமனை!

     முதலில் ஒரு சொட்டு இரத்தம் எடுத்து, என்னை அமரவைத்தார்கள். 15 நிமிடங்களில், மீண்டும் உள்ளே அழைத்தார்கள். என்னை வைத்துக்கொண்டே, என் இரத்த சோதனை காகிதத்தை வைத்து ஏதோ பேசிக்கொண்டார்கள். இறைவனை வணங்குவதுபோல் காட்டி, ஏதோ சொன்னார்கள்.

    பின்னர், என்னைப் படுக்கவைத்து ஒரு எகிப்திய நர்ஸ் அன்பாக ஏதோ சொல்லிக்கொண்டே, கையில் ஒரு இரப்பர் பந்தைக்கொடுத்து, அழுத்திக்கொண்டே இருக்கச்சொன்னார். பின்னர் என் முன் கையில், ஒரு பெல்ட் போல் ஒன்றைக்கட்டி, நரம்பைக்கண்டுபிடித்து, துளை பெரிதாக இருந்த ஊசியைக்குத்தினார். ‘விசுக்’ என்று பாய்ந்து வந்து, என் உடலை விட்டு வெளியே முதன்முதலில் தன் பயணத்தை ஆரம்பித்தது என் இரத்தம். முதன் முறையாக என் இரத்தத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் பார்த்தேன். கருஞ்சிவப்புடன், பீட்ரூட் ஜூஸ் போல் இருந்தது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அந்தப்பை ஆடிக்கொண்டே இருப்பதுபோல் ஒரு எடைக்கருவி வைத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அது ‘பீப்’ என்று சத்தமிட, அந்த நர்ஸ், சிரித்துக்கொண்டே வந்து, ஊசியை எடுத்துவிட்டு, பையின்மேல் ஒரு லேபிளை ஒட்டி உள்ளே கொண்டு சென்றார். பின்னர் ஒரு பெரிய கேன் ஜூஸ் கொடுத்தார்கள். ஒரு பிஸ்கட் பாக்கெட் மற்றும் ஒரு ஆப்பிள் பழம்.!

   இரப்பர் பந்தை படுக்கையிலேயே வைத்துவிட்டு, ஜூஸைக்குடித்து, ஆப்பிளைக்கடித்துக்கொண்டே, வெளியில் வந்தேன். அங்கு என்னை அழைத்துச்செல்ல வேறொரு அதிகாரி நின்றிருந்தார். சினேகமாகச் சிரித்தபடி அவர் ஒரு அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கு ஒரு வெள்ளை உடை அணிந்த மனிதர் அமர்ந்திருந்தார். அவரிடம் நான் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டேன். உடனே அவர் எழுந்து என்னைக் கட்டிப்பிடித்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.

    ”எங்களுக்குத் திருமணமாகி 12 வருடங்களாகிவிட்டது. பல்வேறு முயற்சிகளுக்குப்பிறகு, இப்போதுதான் அவள் கர்ப்பம் தரித்தாள். டெலிவரிக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கிறது என்ற தைரியத்தில்தான் நான் வெளியூர் செல்ல வந்தோம் வந்த இடத்தில் வலி வருவதுபோல் இருந்து, இப்போது டெலிவரி! உங்கள் சகோதரிக்கு உதவியிருக்கிறீர்கள். நீங்கள் நன்றாக இருக்கவேண்டும்.!”

       நான் தர்மசங்கடத்தில் நெளிந்தாலும், அந்த உண்மையான நன்றி கூறுதலில் கண்ணில் நீர் மல்கியது. ஒன்றும் சொல்லாமல் வெளியேற எண்ணினேன். ஆனால், அவர் என்னை அமரச்செய்தார். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள்.

         பின்னர் என் பாஸ்போர்ட், விசா, போன்றவற்றை என் கையில் கொடுக்கும்போது இன்னும் சில காகிதங்களும் இருந்தன.  அவை ,

கெய்ரோ – அலக்ஸாண்ட்ரியா – போக வர விமான டிக்கெட்
கெய்ரோ ஹாலிடே இன்னில் இரு சூட் ரூம்கள் ( என் நண்பர்களுக்கும் சேர்த்து)
பிரமிடுகளைச் சுற்றிப்பார்க்க ஹெலிகாப்டர் ரெய்ட்
அலெக்ஸாண்ட்ரியாவில் ஒரு நாள் தங்க ஏற்பாடு
அதுதவிர,
நாங்கள் உள்ளூர்த்தேவைகளுக்குப் பயன்படுத்த ஒரு டொயோட்டா கேம்ரி கார்.

இவை அனைத்தும் கொடுத்தது பற்றி அந்த அதிகாரி சொன்னார். நீங்கள் உள்ளூரில் ஏதாவது முன்னேற்பாடுகள் செய்துவைத்திருந்தால் அதை மறுத்துவிடுமாறும், அதற்கு ஏதேனும் முன்பணம் கொடுத்திருந்தால், அதை அந்த மனிதர் ஏற்றுக்கொள்வார் என்றும் , கெய்ரோ – ஜெட்டா விமான டிக்கெட் பிஸினெஸ் கிளாஸாக மாற்றப்படும் என்றும் கூறினார்.

உண்மையிலேயே எனக்கு தலை சுற்றியது.

இல்லை இதெல்லாம் வேண்டாம். அப்புறம் நான் இரத்தம் கொடுத்ததற்கு அர்த்தமே இல்லை என்று சொன்னேன். அதற்கு அந்த அதிகாரி…
”நீங்கள் இரத்தம் கொடுக்க ஒத்துக்கொண்ட உடனேயே , அந்த மனிதர் உங்கள் நண்பர்களிடத்தில் விசாரித்து, உடனே இந்த ஏற்பாடுகளைச்செய்துவிட்டார். நீங்கள் இனி மறுத்தாலும், அவருக்கு அந்தத்தொகை நஷ்டம்தான். ஒருவர் அன்பாகச் செய்யும்போது ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்? ”என்றார்.

ஒருபக்கம் வியப்பும், பிரமிப்பும் மேலோங்க… ‘ நம்ம எப்ப சம்பாதிச்சு இந்த சுகத்தையெல்லாம் அனுபவிக்கிறது? ஒரு பாக்கெட் இரத்தம் எவ்வளவு சந்தோஷத்தைக்கொடுத்திருந்தால், அந்த மனிதர் இவ்வளவு பெரிய ஏற்பாடுகளைச் செய்திருப்பார் என்று எண்ணியபடி சரியென்று தலையாட்டினேன்.

நான்கு நாட்கள், ராஜ மரியாதையுடன் சொர்க்கத்தை அனுபவித்தேன். நண்பர்களிடையே ஹீரோவானேன். ‘மாப்ள! அடுத்து புருனே போவோம். அந்த ராஜாவோட 22வது வொய்புக்கு டெலிவரியாம்… உன்னைத்தான் தேடிக்கிட்டிருக்காங்க! என்ற சார்லஸை பெருமிதத்துடன், தலையில் குட்டினேன்.

திரும்பும்போதுதான் தெரிந்தது அவர் எகிப்தின் அரசாங்கத்தில் மிக முக்கியப்பொறுப்பில் இருக்கும் ஒரு பெரிய மனிதர். அன்று பிறந்த குழந்தை ஆண்..! குழந்தைக்கு ரஹ்மத்துல்-அல்-ஹாஸி என்று பெயரிட்டிருக்கிறார்கள். தாயும் சேயும் நலம்.!! எனக்கு நன்றி சொல்லச்சொல்லி ஒரு பூங்கொத்து கொடுத்துவிட்டிருந்தார்.

அன்று ஆரம்பித்தது… அடுத்தவர் சந்தோஷத்தில் உளம் மகிழும் போதை…! அதுமுதல் நானாகச்சென்று, மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்தம் கொடுக்க ஆரம்பித்தேன்.

இந்தியா வந்தபின் ஒரு மருத்துவ நண்பரின் ஆலோசனையின் பேரில், இரத்ததான முகாமில் இரத்தம் கொடுப்பதை நிறுத்தினேன். ஏனெனில் என் இரத்தம் மிகவும் அரிதானது. ஆகவே தேவைகள் ஏற்படும்போது மட்டும் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிந்தேன்.

  எத்தனையோ முறை நண்பர்களுடன் பலவிதமான மது விடுதிகளுக்குச்சென்றிருக்கிறேன். ஒரு முறைகூடக் குடித்தது இல்லை. அதன் மீது ஒரு ஆவலே ஏற்பட்டதில்லை. மேலும் மது அருந்தி, அந்த நேரத்தில் ஒருவருக்கு இரத்தம் கொடுக்கும் தேவை வந்தால், கண்ணெதிரில் அந்த உயிரைக்காக்க முடியாமல் போகலாம் என்ற பயத்திலேயே இன்றுவரை மதுவை மறுத்துவருகிறேன். யார் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாமல் சிரிப்பும், மறுப்பும் வருவதற்கு இதுதான் காரணம்!

மதுவைவிட போதையாக, எத்தனையோ சந்தர்ப்பங்களில் மற்றவர் கண்களில் உண்மையான நன்றியைக் கண்டிருக்கிறேன்.

4 வயது மகனை ஸ்கூட்டியில் அழைத்துவரும்போது தடுமாறி விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் , இரத்தம் இழந்த அவனுக்கு நான் குருதி கொடுத்தபோது அந்த விதவைத்தாயின் கூப்பிய கைகள்! (அன்று எனது மகனின் காதுகுத்து மற்றும் பிறந்தநாள் ! வீட்டில் விருந்து நடந்துகொண்டிருந்தது. நைஸாக நழுவினேன். )

இலங்கையிலிருந்து சுற்றுலா வந்த இடத்தில், மதுரையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய பெரியவருக்கு இரத்தம் கொடுத்தபோது அந்தக்குடும்பமே என் கையில் சிந்திய கண்ணீர்! அவர்கள் கொடுத்த கத்தை ரூபாய் நோட்டுக்களை மறுத்தபோது ஏற்பட்ட பெருமிதம்!

கணவன் வெளிநாட்டில் இருக்க, காதல் திருமணத்தால், யாருமே இல்லாமல் தனியாக பிரசவத்துக்கு வந்த பெண்ணுக்கு,  மருத்துவர் என்னைத் தொடர்புகொண்டு கேட்டதால் இரத்தம் கொடுத்தபோது , குழந்தை பிறக்கும் வரை நில்லுங்கண்ணே என்று கண்ணீர் மல்கச்சொல்லி, பெண் குழந்தை பிறந்தபின்…என் பெயரை பெண்மைப்படுத்தி உடனே பெயர் வைத்த அந்தச் சகோதரியின் அன்பு!

நாம் தமிழர் இயக்க செயலாளர் விபத்தில் சிக்க, அவருக்கு அதிக அளவு இரத்தம் தேவைப்பட, அலைந்து திரிந்து இரத்தம் கொடுக்கப்பட்டு, அவரைக் காப்பாற்றியவுடன், தொடர்பே இல்லாத பல்வேறு ஊர்களிலிருந்து நன்றி கூறி அவரது தோழர்கள் போன் செய்த தருணங்கள்!

இவ்வாறு மதுரை, மணப்பாறை, சென்னை, கோவில்பட்டி, திருப்பத்தூர், புதுக்கோட்டை, திருச்சி என்று பல்வேறு ஊர்களுக்குச்சென்று கொடுத்துவிட்டு வந்த அனுபவங்கள்!  இன்றுகூட ஏதாவது விபத்து ஏற்பட்டால், அருகில் இருந்தால், இரத்தத்தேவையை அறிந்துகொண்டுதான் நகர்கிறேன்.

என் தந்தைக்கு உடல்நலம் சரியில்லை. அவர் மிகவும் தைரியமானவர். ஆனால், தீராத கழுத்துவலி மற்றும் தலைசுற்றலால் அவதிப்படுகிறார். குழந்தைபோல் ஆகிவிட்டார். மேம்போக்காக அவருக்கு ஆறுதல் சொன்னாலும், நாம் இவ்வளவு பேருக்கு நன்மை செய்திருக்கிறோமே, அவர்களது பிரார்த்தனைகளால், அவர் உடல்நலமடைய மாட்டாரா என்று உள்ளம் ஏங்குகிறது.


இதோ, சென்ற 17ம்தேதி ஒரு சிறுவனுக்கு இரத்தம் கொடுத்ததுடன்… 37  முறை ஆகிவிட்டது.

நம்மால் இந்த மானுட சமூகத்துக்கு நேரடியாகச் செய்யமுடிகிற இந்த உதவிக்கு அடிகோலிய அந்தப் பயணத்துக்கு, நன்றிகளுடன்....






Tuesday, August 30, 2011

மரணதண்டனைக்கு மரணதண்டனையா?











இப்போதைய நிகழ்வான மூவரின் மரணதண்டனை  கருணை மனு நிராகரிப்புக்குப் பின், நடக்கும் இருபக்க தர்க்கங்களையும் ஒரே இடத்தில் தொகுத்தால் என்ன என்று தோன்றியது. கேள்விப்பட்ட, நண்பர்களிடம் விவாதித்த, படித்த, ஊடகங்களில் பார்த்த விபரங்களின் அடிப்படையில், எனது வார்த்தைகளால் கோர்த்து ஒரு வடிவமாக்கினால், அது இப்படியாக இருக்கிறது. 



வாதங்கள் 


1. முதன்மையாகத் தவறுசெய்த சிவராசன், தனு ஆகியோர் இறந்தாயிற்று. ஆதி மூளையாய்ச்செயல்பட்ட பிரபாகரனையும் திட்டமிட்டு இலங்கை அரசுடன் சேர்ந்து கொன்றுவிட்டோம் என்று அறிவித்தாயிற்று. இப்போது பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்ற சப்பைக்காரணங்கள் கொண்டு ஒரு நிரபராதிக்கு மரணதண்டனை வழங்குதல் அநீதியானது. 

2. இன்றுவரை எத்தனையோ கொலைச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் பதவிசுகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு வேகத்தில் தவறு செய்தவர்களுக்கு இருபது ஆண்டுகால சிறைத்தண்டனை போதாதா? இன்னும் அவர்களைக் கொன்று என்ன பலன் அடையப்போகிறது இந்த அரசும்..நீதிமன்றங்களும்? 



3. தாமதமாக ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டு, அதைவிடத்தாமதமாக கருணை மனுவை நிராகரித்தது , தனி மனிதர்களாக அவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சலைத் தந்திருக்கும்.? இனியேனும் அவர்களை நிம்மதியாக, திருந்தி வாழவிடுவதுதான் மனிதாபிமானம்.! 



4. சோனியா காந்தியின் பழிவாங்கும் உணர்வுக்கு, பலியான தமிழர்கள் லட்சக்கணக்கானோர். ! இப்போது தனது தலைமையிலான அரசின் பங்காக, இந்த மூன்று தமிழர்களையும் கொன்று என்ன சாதித்துவிடப்போகிறார்? அப்படியே கொன்றாலும்.. இறந்த ராஜீவ் காந்தி திரும்ப வருவாரா? 



5. மகாத்மா காந்தியின் கடைசி வேண்டுகோள். கோட்சேயை ஒன்றும் செய்யவேண்டாம் என்பதுதான். அத்தகைய மாமனிதரின் கட்சியான காங்கிரஸ் ஆட்சி நடத்தும்போது , அஹிம்சை வழி வந்த ஒரு தேசம். தவறுசெய்தார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட அவர்களை மன்னித்தல்தானே மாண்பு! 



6. ராஜீவின் மரணம் ஜீரணிக்க முடியாததுதான்.! ஆனால், அதற்காக ஒட்டுமொத்த தமிழினமே அழியவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் காங்கிரஸ் அரசுடன், தமிழக காங்கிரசாரும் ஒத்துப்போவது இன்னும் கொடுமை! இந்த நேரத்திலாவது தமிழர்களுக்காக குரல் கொடுக்காவிட்டால், பின்னர் எப்போதும் கொடுக்கமுடியாதபடி போய்விடும். 



7. பேரறிவாளன் உண்மையிலேயே நிரபராதி. அவருக்கு ராஜீவை கொல்லப்போகிறார்கள் என்று தெரியாது. தவறு செய்தவர்களின் கூட இருந்த காரணத்துக்காக மரணம் என்பதெல்லாம் சர்வாதிகார நாடுகளில்கூட இல்லாத நடைமுறை! இது முழுமையான பழிவாங்கும் உணர்வைக்காட்டுகிறது. அல்லது யாரையோ காப்பாற்ற பேரறிவாளன் பலியிடப்படுகிறார். 



8. மரணதண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற வாதம் இரண்டாம் பட்சம்தான்.! இவர்களை விடுவிக்கவேண்டும் என்பதுதான் முதல் நோக்கம். ! அதுதான் ஈழத்தமிழர்களுக்கு , நாம் தரும் சிறு ஆறுதலாக இருக்கும்! 



9. கருணை மனு ஒன்றை 12 ஆண்டுகளாக தன் அலுவலகத்தில் வைத்திருந்த குடியரசுத்தலைவர்கள் அந்தந்த கட்சிகளின் விருப்பத்திற்கேற்ப முடிவடுக்காமல், தன்னிச்சையாக முடிவெடுத்திருந்தால், மூவரும் விடுதலையாகி எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருக்கும். 



10. தமிழக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து , ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினால் , மீண்டும் கருணை அடிப்படையில் பரிசீலித்து, தண்டனையைக்குறைக்க வாய்ப்பிருக்கிறது. 



11. தெரிந்தோ, தெரியாமலோ, செங்கொடி என்ற இளம்பெண் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். அவளது உயிருக்கு மதிப்புக்கொடுத்தாவது மூவரின் உயிரைக்காப்பாற்றுவது ஓவ்வொரு தமிழரின் கடமையாகும். 



12. இது ஒரு தொடர் வினைதான்.. ! ராஜீவ் அமைதிப்படை அனுப்பினார். அது அட்டூழியம் செய்தது. அது தாங்காமல் புலிகள் ராஜீவைக்கொன்றனர். கொன்றவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். தலைவர் பிரபாகரனையும் ,இயக்கத்தையும் - பழிவாங்கும் நடவடிக்கையாக – இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து, இல்லாமல் செய்தாகிவிட்டது. அவ்வளவுதானே..மீண்டும் ஏன் சோனியா தன் வலியுறுத்தலால் குற்றவாளிகளுக்கு உடந்தை என்ற காரணத்துக்காக, இந்த அப்பாவிகளை தண்டிக்கவேண்டும்? 



13. இது முழுக்கமுழுக்க மனிதாபிமான அடிப்படையிலான கோரிக்கையும், போராட்டமுமே தவிர, சட்டத்தை வளைக்கவோ, தவறுகளை நியாயப்படுத்தவோ அல்ல! அதை மனதில் கொண்டால் இவர்களை விடுவித்து மூன்று குடும்பங்களில் நிம்மதியை ஏற்படுத்தலாம். 



14. ராஜீவ்காந்தி என்ற ஒரு மனிதனின் உயிர் இழப்புக்கு, சோனியா இன்னும் எத்தனை லட்சம் தமிழர்களின் உயிர்களைப் பலிவாங்கப்போகிறார்? 



தமிழர்களை சொரணைகெட்டவர்களாக மத்திய அரசு நினைத்துக்கொண்டு எல்லா உரிமைகளிலும் கை வைக்கிறது. கச்சத்தீவு, தமிழக மீனவர்கள், இலங்கைத்தமிழர்கள் என்று திட்டமிட்டு தமிழினத்தை அழிக்கும் செயலில் இந்திய அரசே ஈடுபடுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. சரியோ தவறோ, ஒரு மாநிலத்தின் உணர்வை மதிக்காத நாட்டில் இறையாண்மை என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? 




                                                                



எதிர்வாதங்கள்: 





1. யாரையோ காப்பாற்ற பேரறிவாளன் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார் என்ற யூகம் விடுத்து, அந்த யார், யார் என்று வெளிப்படையாக காட்டிக்கொடுக்க யாராவது முன்வந்தால்...அவர்களைக் காப்பாற்ற முற்படுவதன் நோக்கம் முழுமையாகும். 



2. முருகனின் மகளை முன்னிருத்தும் ஊடகங்கள், ராஜீவ் இறக்கும்போது அவருக்கும் சிறிய மகள் ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் பிரியங்கா என்று நினைவில் வைத்திருக்கிறதா? 



3. ராஜீவ் கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்து மூவரையும் விடுவிப்பது முக்கியமா? அல்லது தப்பு நடந்துபோச்சு! அதுக்காக நீங்க குடுக்குற தண்டனையை எல்லாம் ஏத்துக்க முடியாது என்று சொல்வது சரியா? 



4. மரணதண்டனை கொடுக்கப்பட்டபின், ’தமிழர்களைக் காப்பாற்றவேண்டும்’ என்ற சொற்பிரயோகம் தேர்ந்த அரசியலாகத்தான் படுகிறது. அப்படியெனில், தமிழர்கள் கொல்ல உதவுவார்கள். தப்பிக்க நினைப்பார்கள் என்ற பொதுக்கருத்தை இந்தியர்களிடத்தில் விதைக்கிறோம். மேலும் அவர்கள் நிரபராதிகள் என்று வைகோ போன்ற வழக்கறிஞர்கள் முன்னரே தானாக ஆஜராகி வாதிட்டிருக்கவேண்டாமா? 



5. இன்றைய ஈழத்தமிழர்களின் அவலநிலைக்கும், அவர்களை கடைசி கட்டத்தில், கொலைகார இலங்கை அரசுக்கு வலியப்போய் உதவிய இந்திய அரசின் போக்குக்கும் அடிப்படைக்காரணம் ராஜீவ் காந்தியின் கொலைதான் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. 



6. அப்படிப்பார்க்கப்போனால், அத்தகைய சதிச்செயலுக்கு உடந்தையாய் இருந்த (அல்லது சட்டத்தால் நிரூபிக்கப்பட்ட) இந்த மூவரும், இன்றைய ஈழ நிலைக்கு எவ்வளவு பெரிய காரணியாய் இருந்திருக்கிறார்கள்? இவர்கள் அதைச்செய்திருக்காவிட்டால், இலங்கையில் இவ்வளவு கொடுமைகளையும் இந்தியா பார்த்துக்கொண்டிருந்திருக்காது. 

7. ராஜீவ் காந்தியின் அமைதிப்படை இலங்கைத் தமிழருக்குச் செய்த அக்கிரமங்கள் தெரிந்திருந்தும், அப்போது வாளாயிருந்துவிட்டு, அவர் மரணத்தின் அனுதாப ஓட்டுகள் பெற்று ஆட்சிகளை மாறி மாறி அனுபவித்த, அத்தனை அரசியல் கட்சிகளும், இன்று முதலைக்கண்ணீர் வடிப்பது ஒரு பொய் அரசியல் அன்றி வேறேதும் இல்லை. 

8. திட்டமிடாமல் செய்யப்பட்ட தருமபுரி பஸ் எரிப்பில் அப்பாவி மாணவிகள் இறக்கக்காரணமாயிருந்தவர்களின் தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத சமூகம், ஆண்டுக்கணக்கில், திட்டமிட்டு, ஒரு தேசத்தின் தலைவரைக் கொலைசெய்தவர்களுக்கு துணைபோனதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரணதண்டனைக்கு மட்டும் ஏன் இவ்வளவு கரிசனம் காட்டவேண்டும்.? மரணதண்டனை கூடாதென்பவர்கள் அதற்கும் துணை போயிருக்கலாமே? 

9. உண்மையில் இலங்கையில் தமிழீழத்தை நேசிக்கும் எந்த ஒரு ஈழத்தமிழரும், தமிழகத்தமிழரும், ராஜீவின் கொலையை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி இருந்தாலும், இருபது ஆண்டுகள் கழித்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் தீர்ப்பை எதிர்த்து எந்த பிரயோஜனமும் இல்லை. 

10. மேம்போக்காக இவர்களது மரணதண்டனையை எதிர்க்கும் அனைவரும், ஒருவினாடி அமர்ந்து சிந்தித்தால், தனது அண்ணனையோ, அப்பாவையோ திட்டமிட்டுக் கொன்றவர்களுக்கு மரணதண்டனை கொடுப்பதுதான் நீதி என்று ஒத்துக்கொள்வார்கள். அல்லது அவர்களே திட்டமிட்டுக் கொல்வார்கள். 

11. செங்கொடி என்ற அந்தப்பெண் இறப்பை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தவோ, தியாகப்படுத்தவோ முடியாது. அப்படிச்சொல்பவர்கள் செய்யட்டுமே அதை…! அது நமது போராட்டத் தலைவர்களாக இருந்தால் இன்னும் பலன் இருக்கும். 

12. அப்சல் குரு அல்லது கசாப்பை தூக்கிலிடக்கூடாது என்று ஐந்துபேர் தீக்குளித்தால் அவர்கள் தியாகி என்று கொண்டாடுமா இந்தச் சமூகம்? இந்த வழக்கை முறையாக எதிர்கொண்டு மூவரையும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு உணர்ச்சிமயமாகக் கையாள்வது இன்னும் செங்கொடிகளை உருவாக்குமே ஒழிய, தீர்வைத்தராது. 

13.முத்துக்குமரனின் தீக்குளிப்பில் இருந்த ஓலம் உண்மையானது. வன்மையானது. அது அப்பாவிகளின் மரணத்துக்கு எதிரானது. அதில் ஒன்றுகூடுவதில் ஒரு நியாயம் இருந்தது. அதையும் செங்கொடியையும் ஒப்பிடவே முடியாது. பாவம்.. அந்தப்பெண்ணின் பெற்றோரைக்கேட்டால் தெரியும் அவள் இழப்பு என்னவென்று! 

14. கருணை மனுவை பத்து ஆண்டுகள் வைத்திருந்த குடியரசுத்தலைவர்களை என்ன செய்யப்போகிறோம்? அது கருணை அடிப்படையிலான மனுதான்..அதை வைத்து நிரபராதி என்று நினைத்துவிடக்கூடாது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். 

15. இதற்காகப்போராடும், குரல்கொடுக்கும் தலைவர்களில் ஒருசிலருக்கு குற்றத்தின் உண்மையான இழையில் பங்கிருக்கிறது. அதை மறைக்க அவர்கள் போடும் இந்த இன வேஷம், மனிதாபிமான வேஷம், நீதி வேஷமெல்லாம் ‘மரணதண்டனை’ உறுதி என்று தெரிந்தபின் தான் வெளிப்படுகிறது. ஏனெனில் அவர்களுக்கும் தெரியும் இனி இதை மாற்றமுடியாது என்று! 

16. அன்னா ஹசாரேவின் போராட்டத்தை கேலி பேசியவர்கள், இந்தப்போராட்டத்தை ஆதரிப்பது ஒருவித முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகிறது. ஊழலை ஒழிக்கமுடியாது. ஆனால் மரணதண்டனையை ஒழிக்கவேண்டும் என்பது எப்படி சாத்தியம்? ஒரு ஊழல் அரசியல்வாதி..அவனுக்கு வளைந்துகொடுக்காத அதிகாரி.. இவரை அவன் திட்டமிட்டுக்கொல்கிறான். அதற்கு உடந்தையானவர்களையும் சேர்த்து கைது செய்து மரணதண்டனை கொடுக்கிறது நீதிமன்றம்! அவனை விடுவியுங்கள். ஊழலை ஒழிப்பது ஒன்றும் பெரிதில்லை. மரணதண்டனையை ஒழிக்கவேண்டுமென்பது எப்படி நியாயமாகும்? 

17. மனசாட்சியைத் தொட்டுப்பார்த்தால், மூவரின் மரணதண்டனையை ரத்துசெய்யக்கோரி போராடுபவர்களுக்கு தங்கள் ஆதரவை, இருந்த இடத்திலிருந்து தரும் யாரும் அதை உளப்பூர்வமாகச் செய்யவில்லை. ஊரோடு ஒத்து வாழ்ந்துவிடுவோம். எதற்கு வம்பு? பின்னர் நம்மையும் திட்டுவார்கள் என்றுதான் எண்ணிக் கூடுகிறார்கள். தங்கள் கருத்தை ஆரோக்கியமாக முன்வைக்க இந்த சமூகமும், அமைப்புகளும் விடுவதில்லை. 





இன்றைய சூழலில் 

ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது எனும் வாதத்தை இந்த சமூகம் உடைத்து பல ஆண்டுகளாகிவிட்டது. 

இப்போதெல்லாம். ஒரு குற்றவாளியை விடுவிக்க, ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.

முதலில் குற்றவாளியைக்கண்டுபிடிப்போம். அல்லது காட்டிக்கொடுப்போம். பின்னர் நிரபராதிகள் தானாக வெளிவருவார்கள். 



இது போன்ற வாதங்களுடன் பதிவுகள்






Friday, August 26, 2011

ஓமப்பொடி- 2




          சென்ற வாரம் ’ஒத்த வீடு’ என்ற படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில், அபிராமி ராமநாதன் அவர்கள் , இந்தக்காலகட்டத்தில் திரையரங்கத்துக்கு மக்களைக்கொண்டுவருவது கடினம். அதற்காகப் புதிது புதிதாகச் சிந்திக்கவேண்டியிருக்கிறது. அடுத்த வாரம் முதல் ,வீட்டிலிருந்து திரையரங்குக்கு வர, அபிராமி டாக்ஸி என்ற சேவையை அறிமுகப்படுத்தப்போவதாகச் சொன்னார். இதோ நாளை மறுநாள் முதல் அமல்படுத்தப்போகிறார்.

    அதே விழாவில் இயக்குநர் வி.சேகர் அவர்கள், பெரிய படங்களெல்லாம் ஆலமரம்போல், அதில் இளைப்பாறலாம். ஆனால் சாப்பிடமுடியாது. சிறிய படங்கள் நெற்பயிர் போல்.. அதுதான் உணவளிக்க முடியும் என்று சிறிய பட்ஜெட் படங்களைப்பற்றி உயர்வாகப்பேசினார். ஒத்த வீடு படத்தின் இயக்குநர் பத்திரிக்கையாளரும், மக்கள் தொடர்பு அலுவலருமான பாலன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

                         ++++++++++++++++++++++

     நேற்று, சூரன் பட இசை வெளியீட்டுவிழா நடந்தது. பார்வையாளனாக , நண்பனாக கமலா தியேட்டர் வாசல் வரை சென்ற என்னை – திடீர் ரவா உப்புமாவைப்போல்,- நிகழ்ச்சித் தொகுப்பாளராக்கிவிட்டார்கள். நானும் முடிந்ததைச் செய்தேன். நிகழ்ச்சி முடிந்ததும், படத்தின் நாயகன் கரண், இயக்குநர் சந்தானபாரதி, இயக்குநர் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சிவாஜி, பழனி,  இன்னும் சில நண்பர்கள் பாராட்டினார்கள். நன்றி சொல்லி எஸ்கேப்பானேன்.  

என் நேற்றைய அறிவிப்புகளில் சில :

# திறமைசாலிகளை OUTSTANDING என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். ஆகவே இங்கிருக்கும் திறமைசாலிகள் அனைவரும் உள்ளே வரவும்.

-    இயக்குநர் பொன்வண்ணன், தன் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டதால், தானும் ஒரு தயாரிப்பாளர்தான் என்று சொல்லிக்கொண்டார். அப்போது மேடையிலிருந்த இயக்குநர் சந்தானபாரதி தானும்தான் என்று கை தூக்கினார். ஆகவே அவரைப் பேச அழைத்தபோது…
#  சம்பளத்தைக்குறைத்துக்கொண்டதன் மூலம், இந்தப்படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான திரு.சந்தானபாரதி இப்போது பேசுவார்.

#  இப்போது இயக்குநர் சற்குணம் அவர்கள் தனது இரண்டு நிமிட உரையை வழங்குவார். (நேரமில்லாத காரணத்தால்)

#  அரை நிமிடம் சேமித்த அற்புத மனிதருக்கு நன்றி! (ஒன்றரை நிமிடம் பேசியதற்காக)

# இது அரோவணா பிக்சர்ஸ் அல்ல! எல்லோரையும் அரவணை பிக்சர்ஸ்!

# படத்தில் ஒரு செகண்ட் வந்து சென்றதால் செகண்ட் ஹீரோவான பழனி அவர்களை அழைக்கிறோம்.

# எல்லோரையும் வாரிய ஜெகன் அவர்களே வாருங்கள் ! நாங்களும் வாருகிறோம்!

# இது இசை மீட்டும் விழா ! திறமைசாலிகளை திசை காட்டும் விழா! உங்கள் ஒலி ரசனைக்கு விசை கூட்டும் விழா!

இப்படிப் போயிற்று!  முழு நிகழ்விலும் அரங்கத்தில் ஒருவித புன்னகை மனநிலை நிலவியது.
இசையமைப்பாளர் P.B. பாலாஜிக்கு நன்றி!  
அந்த நேரத்தில், எனக்காக சட்டை வாங்க அதீதமாக முயற்சித்த அன்பு நண்பர் மனோஜ் கிருஷ்ணாவுக்கு நன்றி!


வெங்காயம் திரைப்படம் பற்றி இயக்குநர் பாக்யராஜ் பாராட்டினார். நண்பர்கள் அனைவரும் நன்றாக இருப்பதாகவே சொன்னார்கள். இந்தவாரத்தில் பார்க்கவேண்டும். நல்லபடம் வேறு! தியேட்டரிலிருந்து தூக்காமல் இருக்கவேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தேமுதிக வில் நிறவெறி அதிகம் போலிருக்கிறது. அவர்கள் தலைவரின் நிறத்தையே மையப்படுத்தி போஸ்டரடித்து , கருப்பு எம் ஜி ஆர் என்று வர்ணித்திருக்கிறார்கள். தோல் நிறம் பார்த்து வாழும் கூட்டம் நாம் என்பதை உறுதிப்படுத்தும் வாசகங்கள்! வாழும் எம் ஜி ஆருன்னு சொல்லட்டும். மதுரை எம் ஜி ஆர்னு சொல்லட்டும். ஏன்....கேப்டன் எம் ஜி ஆர்ன்னு கூட சொல்லட்டும். இதுல... வெள்ளைக்காரனைப்பார்த்து ஆஸ்திரேலியாவில் நிறவெறின்னு கூச்சல் வேற! செவப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்னு வடிவேல் சொன்னது உண்மைதானோ? கலரைப்பாத்து காலர் தூக்கும் கூட்டம் இருக்கும்வரை கலக்கலாம் போங்க!! (’கா’னாவுக்கு ’கா’னா)


இந்தப்பாடலைக் கேட்டாலும் , பார்த்தாலும், இதயத்தை ஏதோ செய்கிறது. உற்சாகம் தெரிக்கும் வார்த்தைகளுடன் 2008ம் ஆண்டு வலம் வந்த பாடல் இது.! இதைப்பாடியது அனுராதா ஸ்ரீராம். இதில் இடம்பெற்றிருக்கும் பெண்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்? இருக்கிறார்களா? – பயமாக இருக்கிறது!


----------------------------------------------------------------------------------------------------------------

Monday, August 15, 2011

நம்பிக்கைச் சுதந்திரம்

நம்பிக்கை
       வாஞ்சிநாதன் ஆஷ் துரையைச்சுட்டுக்கொன்றுவிட்டு உடனே தற்கொலை செய்துகொண்டார். அது அவர் இளம் மனைவிக்கு தெரிவிக்கப்படவே இல்லை. குடும்பத்தினர் மறைத்தே வைத்திருந்தனர். கணவர் சுதந்திரப்போராட்டத்துக்காக வெளியூர் சென்றிருக்கிறார் என்றே நினைத்துக்கொண்டிருந்தார். ஒரு காலகட்டத்தில் மற்றவர்கள் சொன்னபோதும் அவர் நம்பவில்லை. என் கணவர் சீக்கிரம் இறந்துவிடமாட்டார் என்று நம்பிக்கையுடன் இருந்தார். கடைசிவரை கைம்பெண் கோலம் பூணாமல், சுமங்கலியாக வாழ்ந்துச்சென்றுள்ளார். அவரை அந்தப்பகுதியில் சுமங்கலி மாமி என்று அழைக்க ஆரம்பித்தார்களாம். பசும்பொன் தேவர் ஒவ்வொரு ஆண்டும் , வாஞ்சி இறந்த அன்று, ஒரு புடவை வாங்கிக்கொண்டு செங்கோட்டையில் (தென்காசி அருகில் உள்ள ஊர்) வாஞ்சியின் மனைவியைப் பார்த்துவிட்டு வருவாராம்.

சுதந்திரம்

இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருக்கிறோம். யோசித்தால், ஒன்றுமே செய்யாமல் வீட்டில் ‘சிறப்ப்ப்ப்ப்புத் திரைப்படங்களை’ மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்ததுதான் மிச்சமாய் இருக்கும். நம்மூர் செய்தித் தொலைக்காட்சிகள் வெவ்வேறு ஊர்களில், திரும்பத்திரும்ப கொடி ஏற்றியதையும், முட்டாய் கொடுத்ததையும் சொல்லிக்கொண்டிருந்தன. அதே நேரத்தில் அன்னா ஹசாரே என்ற அந்தத் தனி மனிதன் ராஜ் காட்டில், மழைத்தூறலில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். பார்த்துக்கொண்டே இருந்தபோது கண்கள் மறைத்து அவர் போட்டிருந்த வெள்ளை உடை மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது. அழுதிருக்கிறேன்.


     நாளை அவர் உண்ணாவிரதம்  இருப்பதற்குத் அனுமதியும் மறுத்து, அந்தப்பகுதிக்கு 144 தடை உத்தரவையும் விதித்திருக்கிறது திருடர்களைப் பாதுகாப்பதில் முனைப்புடன் இருக்கும் ’மண்’மோகன் அரசு! இதற்கிடையில் அன்னாவின் அறக்கட்டளை பற்றி விமர்சனங்கள் வேறு! அவர் தவறு செய்திருக்கிறார் என்றால் இவ்வளவு ஆண்டுகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இப்போது நோண்டக்காரணம் அவர் உங்கள் உயிர்நாடியான ஊழலை எதிர்க்கிறார் என்றுதானே?

அடிமைப்பட்டிருந்த காலத்தில் பிறந்து , அஹிம்சையால் சுதந்திரமடைந்த ஒரு நாட்டில், ஊழலின் வேர் ஆழமாக ஊன்றியிருக்கும் வேளையில் , அதைக் கொஞ்சமாவது வெட்டவேண்டுமென்று நினைத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அஹிம்சை வழியில் போராடும் ஒரு மனிதனை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்துகிறார்கள்? வெட்கமாக இருக்கிறது ! இப்படி யோசித்துப்பார்த்தேன்.

மேடையில் சுதந்திரமடைந்ததற்கு பெருமைப்பட்டு தேசியக்கொடியை ஏற்றிவிட்டு வாய்கிழியப் பேசிவிட்டு, கீழிறங்கியவுடனேயே , ஒரு கூட்டம் நாட்டு நலனுக்காகப் போராட இருப்பதை ஒடுக்க சதித்திட்டம் தீட்டும் பிரதமர் வேலை தேவையா மிஸ்டர். சோனியா?

ஒருவேளை சோறின்றி பட்டினியாகக் கிடக்கும் அத்தனை ஏழைகளையும் ஒன்றுதிரட்டினால், இந்தியாவில் தினசரி நடக்கும் சாதாரண நிகழ்வுதான் உண்ணாவிரதம்! அதற்கு என்ன தடை போடுவார்களாம்? அப்படித்தான் போடுங்களேன். பட்டினிச்சாவுகள் நிற்கும்!!

திருட்டை ஒழிக்கவேண்டுமென்பதற்காக, அதற்கான சட்டத்தை திருடர்களை விட்டே இயற்றச்சொன்னால் இப்படித்தான் நடக்கும்!

நாளை அன்னாவை கைது செய்தாலோ, அவர் உண்ணாவிரதத்தை ஒடுக்கினாலோ நாம் மெரினாவில் ஒன்றுகூடுவோமா? – அன்னாவை ஆதரிக்கிறோமோ இல்லையோ இந்த சமுதாயம் ஊழலை ஆதரிக்கவில்லை என்ற ஒற்றை மனநிலையையாவது காட்டலாம்.

ஏனென்றால்...

கேட்டால், கிடைக்கும்!!


இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...