Monday, December 31, 2012

தேடிக் காதல் நிதம் தின்று...


‘தேடிக்காதல் நிதம் தின்று... ’ என்ற தலைப்பில் முகநூலில் இந்த ஆண்டில் எழுதிய கவிதைகளில் சில இங்கே...




அண்டப் பெருவெளியில்

ஆகாசக் கொப்புளங்களின்
மூர்க்கச் சீற்றங்களாய்
மொய்த்திருக்கும் சர்ப்பச் 
சிறகுகளுக்குள் 
சாத்திரச் சங்கிலிகள்
சதிராடிப் போட்டுடைத்த 
வெப்பக் காற்றுப் பந்தாய்
வெடித்துக்கிளம்பும்
சூனியத்தின் நாற்றங்காலில்
பார்வை எரிக்குழம்பால்
மகரந்த இதயத்தில்
சூலுண்டாக்கி, 
ஒற்றை நீர்த்துளியை 
வார்த்துச் சென்றாய்
நீ!



படித்துப் பார்த்துவிட்டு
வாவ்!
நீ கவிஞன் டா என்று 
சொல்லிக்கொண்டே
கொடுக்கும்,
உன்
முன் நவீன முத்தத்துக்காக
பின் நவீனம் பிதற்றுகிறேன்
நான்!


                aaaaaaaa

உன்னைப்
பெற்ற
கர்வத்தில்
உன்
அப்பாவும்
கொஞ்சம்
அதிகமாய்த்தான்
ஆடுகிறார்.

நீயெல்லாம்
என்னத்த
படைச்ச..?
என்று 
பிரம்மனைப்
பார்த்து
நக்கலடிக்கிறாராம்.!

aaaaaaaa

வருடம் 

பிறக்கும்

வினாடியில்

12  முத்தம்

தரவேண்டும்

என்றாய்!


இது 
என்ன
கள்ள ஆட்டம்?

அது 2012 தானே?
அவ்வளவும்
வாங்கிக்
கொண்டுதான்
விடுவேன்.!!

aaaaaaaa

உன்னைப்
பார்க்க 
ஒவ்வொரு 
ஆண்டும்
வரிசையில்
நிற்கிறதாம்!
போகும் 2011
ஒரே புலம்பல்!

இது 2012ன் 
வாய்ப்பாம்..!
அதைப்போய்
புத்தாண்டு
என்று
கொண்டாடுகிறார்கள்
பாவம்!
aaaaaaaa
நான்

அப்போதே

சொன்னேன்

அடிக்கடி

மெரீனா போகாதே 

என்று!


இப்போது பார்!
அதுதானே
கிளம்பி
குடும்பத்துடன்
ஊருக்குள் வருகிறது
உன்னைப்பார்க்க!


aaaaaaaa

உன் 
உடைகளைப் 
பற்றிக்கொள்ள
குத்திக்கொள்ளும்
ஊக்குகளுக்குள் 
ஒரே பிரச்சனை!

உன் உடையைக் 
குத்துவதா என்று!
மொக்கையாகியே
வளைகின்றன..

அப்போதுதான்
உன்
வாயால் அதை 
நிமிர்த்துவாயாம்!

களவாணிப்பய
ஊக்குகள்!

aaaaaaaa





ஒரு பட்டை

ஸ்டிக்கர் பொட்டு 

வாங்கினாயாம்.

ஒற்றைப் பொட்டு

ஒட்டிக்கொண்டு

உன்னை விட்டு

அகல மறுக்கிறதாம்.

இதைச்சொல்லி
ஒரு பஞ்சாயத்து
இன்று வந்திருக்கிறது.

மற்ற பொட்டுகளுக்கும்
வாய்ப்புக்கொடேன்.
பட்டை பொட்டுக்கள்
மோட்சம் பெறட்டும்!


aaaaaaaa

நீ போட்ட
மார்கழி
மாக்கோலத்தை
மட்டும்
உண்ண விடாமல்
ஆண் எறும்புகள்
அடாவடி 
செய்கின்றனவாம்!
ஏரியா பெண்
எறும்புகள்
ஏகோபித்துப்
புகார் 
கொடுக்கின்றன!

இன்று உண்டால்தானே
நாளையும் கோலம் போட
வருவாள்.
உன்னைப் பார்க்கமுடியும்
என்று ஆறுதல் சொல்லச்சொல்லி
அனுப்பியிருக்கிறேன்.

ம்..
எதற்கும்,
உன் அம்மாவையே
கோலம் போட அனுப்பேன்.
எறும்பாயிருந்தாலும்..

பொறுக்கவில்லை!

aaaaaaaa

கிறிஸ்துமஸ்

தாத்தாவைப்

பார்த்து

என் விருப்பமாக

உன்னைக் கேட்டால்

வெடிச் சிரிப்புகிறார்.

போடா! போ!
அவ ஏற்கனவே
உன்னைக் கேட்டா!

மொத்த பூமியையும்
வச்சுக்கோன்னுட்டு
நான் பையை
உதறிட்டேன்

பரிசால்,
பரிசு கேட்கமுடியாது
போடா!
என்றார்....!


aaaaaaaa

நீ
வெட்டிப்போட்ட
நகத்துணுக்குகளை
பிறை
நிலாவாக்கி
அழகு 
பார்க்கிறது
வானம்!

நட்சத்திரங்கள் 
எப்படி என்றேன்.
உன்
வியர்வைத்
துளிகளின்
வேலை
என்றது.

aaaaaaaa


நீ தினசரி வரும்

ஒரே காரணத்துக்காக

பிரம்மச்சரியத்தை

விடுவதாய்

அனுமன்

சொன்னதாய்

அஞ்சனை
என் கனவில் வந்து
ஒரே புலம்பல்!

கோவிலை 
மாற்றேன்.!

அனுமன்
பிழைத்துப்போகட்டும்!


aaaaaaaa

கந்தர்வ
குளத்தில்
இரண்டு 
கயல்களைக்
காணவில்லை என்று
ஒரே அழுகை!
உன்
கண்களைப்
பார்க்க
விட்டுவிட்டார்கள்
பாவம்!
aaaaaaaa

உன் 

இதழ் 

சுவைத்தபின்

தினமும்

தேவர்களைத்

திட்டுகிறேன்

எவண்டா
அமுதம்
சுவையானது
என்று
சொன்னது?

aaaaaaaa


உன் மொபைலின்
பட்டன்களுக்குள்
பாரபட்சம்
காட்டுகிறாயாம்!

Z
ம் X ம் ஒரே அழுகை!

எல்லா எழுத்துக்களும்
பயன்படுத்தி
எஸ். எம்.எஸ்
அனுப்புகிறாள்.

எங்களை 
எதற்கேனும்
பயன்படுத்தச் 
சொல்லேன்
என்கின்றன..!

நான் தான்
இருக்கிறேனே
பெறுநராய் உன்
பேரடிமை!

zzzzzzzzzzz
xxxxxxxxxx
என்றாவது
ஒரு எஸ்.எம்.எஸ்
அனுப்பு

இரு எழுத்துக்களும்
மோட்சம் 
பெறட்டும்!

அஃறிணையும்
அசரடிக்கும்
அழகியை
அடைந்ததற்கு,
நான்
இதைத்தான்
செய்யமுடியும்!
aaaaaaaa


வெட்டிப்பேச்சாக

இருந்தாலும்

தொட்டுப் பேசினால்

பட்டுப்பூவைப்போல்

இருக்கிறதென்று 

சொன்னேன்.



நீ

ரொம்ப

கெட்டுப்போய்விட்டாய்

என்று

கைகளால்

கன்னத்தைக்
கிள்ளுகிறாய்!

அட!
பூவைக் கிள்ளி
பார்த்திருக்கிறேன்
பூவே கிள்ளி
பார்க்கிறேன்
என்றேன்...

அதற்கு
ஏன்
அப்படிச்
செய்தாய்?


aaaaaaaa





உன் மூக்குநுனி 
வியர்வைத்துளிக்கும்
சூரியனுக்கும்
பஞ்சாயத்து!

எவ்வளவுதான்
சுட்டெரித்தாலும்
காயமாட்டேன்
என்கிறதாம்!

சூரியனின்
வேலை
கெடுகிறதாம்!

அவள்
தொட்டுத்
துடைக்கட்டும்
போகிறேன்
என்கிறது
வியர்வை!

துடைத்துத்
தொலைத்து
விடு!

ஆனால்..

யார் யாரெல்லாம்
எனக்குப் போட்டி?

aaaaaaaa
உன்னைப்
புரிந்துகொள்ளவே
முடியவில்லை
என்று நீ சொல்லும்
ஒவ்வொருமுறையும்,,
நீ
எவ்வளவு
புரிந்துகொண்டுள்ளாய்
என்று
வியக்கிறேன்.
உன் புரிதலின்
வெம்மையில்
வியர்க்கிறேன்.




பலநூறு ஆண்டுகளாய்

மஞ்சள் பூசி வளர்ந்த 

ஸ்ட்ராபெரிப் பழங்கள்

உன் இதழ்களில் பட்டதும்.

வெட்கத்தில்

வேட்கையில்

சிவப்பாய்
மாறியதில் ஏற்பட்ட
இரசாயன மாற்றம்
ஏழேழு ஜென்மமாய்த் 
தொடர்கிறதாம்.

ஸ்ட்ராபெரிப் பழங்களின்
நிறத்தின் இரகசியத்தை
நேற்று ஒரு பழம் 
போட்டு உடைத்தது.

பதிலுக்கு...சிபாரிசாய்
என்னிடம் கேட்கிறது
அவள் இதழில் சாகவேண்டும்
அனுமதி தருவாயா?’

ஸ்ட்ரா பெரியெல்லாம் எனக்கு
சக்களத்தனா?




               aaaaaaaa




சித்திரை நிலவும்

நித்திரை கலைக்கும்



கத்திரி வெயிலிலும்

கனவுகள் பிறக்கும்!



பகல் பத்தரை மணிக்கெல்லாம்
பனித்துளி தெறிக்கும்

உன் முத்திரைப் புன்னகை
முகத்திரை கிழிக்கும்.

கத்தினால் கூட 
காந்தர்வம் ஒலிக்கும்

பத்திரமாய் இரு என
பாற்கடல் தவிக்கும்!

நீ
மொத்தினால் கூட
மெத்தென்று இருக்கும்!

உனைப்
பெத்தவன் காலில் விழ
பெருங்கூட்டம் துடிக்கும்!

சத்தியம் சடுதியில்
சகலமும் துறக்கும்.

உன் 
முத்த வாய் தீண்டலில்
மோட்சமும் கிடைக்கும்

இனி
எத்தனை கவிதைகள்
எதுகையில் பிறக்கும்?




என்னை வேறொருவன்

காதலித்து..

அவனை

எனக்கும் 

பிடித்திருந்தால்

என்னடா

செய்வாய்
என்று 
கேட்டாள் 
என்னை, 
இத்தனை நாள் 
காதலித்தவள்..!

வருத்தத்துடன்
ஆரம்பித்தேன்.

உன்
விருப்பமே
என் 
விருப்பமடி..!

அவன்
கையில்
உன் கை கொடுத்து
சொல்வேன்..!

இன்னிலேருந்து
நீ
சாவுடா..!


(இது மட்டும் கொஞ்சம் வம்பாக எழுதியது)

aaaaaaaa


Saturday, December 29, 2012

விஸ்வரூபம், எக்ஸ்பிரஸ் மால்..இன்ன பிற..



     
    விஸ்வரூபம் எடுத்திருக்கும் பிரச்னையை கமல் மிகச்சரியாகத்தான் கையாண்டுகொண்டிருக்கிறார். அவரது DTH ஒளிபரப்பு சிந்தனை மிகவும் சிறப்பானது. தொழில்நுட்ப வளர்ச்சியை முறையாகப் பயன்படுத்திக்கொண்டால்தான், ஒரு கலை மட்டுமல்ல… ஒரு சமூகமே நன்கு வளரும். அதைப் புரிந்துகொள்ளாமல் குய்யோ முறையோ என்று கதறும் திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு விரலை கமலை நோக்கிக் காட்டும்போது மற்ற விரல்கள் தங்களை நோக்கித்தான் இருக்கின்றன என்று மறுப்பதற்கில்லை.

    உண்மையிலேயே, தமிழ் சினிமாவின் இப்போதைய வியாபார ரோலர் கோஸ்டர் நிலைக்கு, திரையரங்குகள்தான் காரணம்.! அவர்களது நியாயமற்ற டிக்கட் விலைதான் , இரசிகனை தியேட்டருக்கு வராமல் செய்கிறது. மேலும், அரசும் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது நிச்சயம் ஆபத்தை வரவழைக்கும். இப்போது கமல் எடுத்திருக்கும் முடிவை, மிகவும் நைஸாக மற்ற தயாரிப்பாளர்களும் எடுத்துவிடும் தூரம் அதிகமில்லை. ஒருபக்கம் திரையரங்குகள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள், மறுபக்கம் திரையரங்குகள் தங்கள் அடாவடி டிக்கெட் கட்டணத்தால் இரசிகர்களை உள்ளே வரவிடாமல் திண்டாடவைக்கிறார்கள். இது தொடர்ந்துகொண்டேயிருந்தால், ஒரு படத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கும் யுக்திகள் அனைத்தையும் தயாரிப்பாளர்கள் எடுக்கவேண்டியதுதான் காலத்தின் கட்டாயம்.

    திரையரங்கு உரிமையாளர்கள், தங்களுக்கு வியாபாரம் பாதிக்கிறது என்பதற்காக, நீ வேறு எங்கும் படத்தை ஒளிபரப்பக்கூடாது என்று வம்பிழுப்பது முட்டாள்தனம். திருட்டு டிவிடிக்குக் காரணமே இவர்கள்தான். தியேட்டர்களிலிருந்துதான் பிரிண்ட் எடுக்கப்படுகிறது என்பதை மறுக்கவே முடியாது. அதுவும், கேமராவில் திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்துவிட்டு, ஒலியை மட்டும் நேரடியாக DTS மிக்ஸரிலிருந்து திருடித்தான் டிவிடி வருகிறது. அந்தத் திருட்டை ஒழிக்க வக்கில்லாத திரையரங்கு உரிமையாளர்கள், நேர்மையாக ஒரு மனிதன் வேறு முறையில் மக்களிடம் தன் படைப்பைக் கொண்டு சேர்த்தால், குதிப்பதில் நியாயமே இல்லை. திரையரங்கு உரிமையாளர்கள் திருட்டு டிவிடி வராது என்று உறுதி அளிக்க இயலாத பட்சத்தில் , கமலின் வியாபரத்தில் தலையிட அருகதையே கிடையாது.

    உண்மையில், இன்றைய சூழலில், தமிழ் சினிமாவை வீழ்த்துவதில் திரையரங்குகளுக்குத்தான் பங்கு அதிகமாயிருக்கிறது. கமல் மட்டுமே, தயாரிப்பாளர்களுக்கு புதிய வியாபார யுக்திகளை பல்வேறு காலகட்டங்களில் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறார். தமிழ்த் திரையுலகை, கமலை, திரை சார்ந்த வியாபாரத்தை நேசிப்பவர்கள் அனைவரும், அதை ஆதரிப்பதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

கமல் சார் நீங்க செய்வது சரிதான்..! நீங்க முன்னாடி போங்க! …பின்னாடியே வரோம். அவங்களும் வருவாங்க!
_______________________________________________________________

     எக்ஸ்பிரஸ் அவென்யூவில் ஒரு விளையாட்டு உலகம் இருக்கிறதாம். அங்கும் கார்டு சிஸ்டத்தைக் கொண்டுவந்து அதில் 20 ரூபாய் வசூலித்து அடாவடி செய்துகொண்டிருக்கிறார்களாம். இந்திய உணவு அல்லது பொழுதுபோக்குச் சட்டத்தில் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை. இவர்களது உள்கணக்கு வசதிகளுக்காக வாடிக்கையாளர்களை அடாவடி செய்கிறார்கள். இந்த முறை மொத்தமாகப் போய் கேட்கலாம் என்று எண்ணம். இவர்கள் செய்யும் அநியாயத்தை நாம்தான் தட்டிக்கேட்கவேண்டும். இதற்காக தேவதூதன் யாரும் பிறந்து வந்துவிடமாட்டான். இது போன்ற சாத்தான்களுக்கு நாமே போதும்.!! கரம் கோர்க்க விரும்புபவர்கள் kettaalkidaikkum@gmail.com க்கு ஒரு மெயிலைத் தட்டிவிடுங்கள். தேதியும் நேரமும் தனியே அறிவிக்கப்படும்.


ஒன்று மட்டும் நிச்சயம்.. தன்னெதிரே நடக்கும் தவறுகளைத் தட்டிக்கேட்காத சமுதாயம் நாசமாய்ப் போவதை யாராலும் தடுக்க முடியாது.
___________________________________________________________________________


       ஜெயா ப்ளஸ்ஸில் கற்றல் அழகு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அதில். ஒவ்வொரு மேற்படிப்புத் துறைகளின் உண்மையான தன்மையை ஆராய இருக்கிறது. உதாரணமாக, ஏரோநாட்டிக் பொறியியல் படித்தால், பைலட் ஆகலாம் என்று பரவலாக எண்ணம் இருக்கிறது. ஆனால், அது படித்தால், விமான உற்பத்தி அல்லது பழுதுபார்த்தலில்தான் வேலை கிடைக்கும். அதுவும் அதனுள் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன. ஏரோ ஸ்பேஸ் டெக்னாலஜி என்று ஒன்று உள்ளது. அது படித்தால், செயற்கைக்கோள் தயாரிப்பில் பங்குபெறலாம். அதுதவிர ஏவியானிக்ஸ் என்ற படிப்பு இருக்கிறது. அது படித்தால் மட்டுமே, விமான கட்டுப்பாட்டுக் கருவிகள்  தயாரிப்பில் பங்கெடுக்கமுடியும். இதில் முதுகலைப் படிப்புகள் முடித்தவர்கள் பல்வேறு சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்று பல்வேறு படிப்புகளைப் பற்றியும், அதன் பாடத்திட்டங்கள், வேலை வாய்ப்பு, ஆராய்ச்சி வாய்ப்பு பற்றிய உண்மைத் தகவல்களை அந்தக் கல்லூரிகளுக்கே சென்று , செயல்முறை விளக்கத்துடன் புரியவைப்பதுதான் நிகழ்ச்சியின் நோக்கம். ஒளிபரப்பு நாளும், நேரமும் விரைவில்…


வரும் திங்களிலிருந்து, மக்கள் தொலைக்காட்சியில், காலை 8:48க்கு ஒளிபரப்பாகும் ஊருக்கு உரைப்போம் என்ற நிகழ்ச்சியில், சில நூல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். கன்ஃப்யூஷியஸ், லியோ டால்ஸ்டாய் புத்தகங்கள், வீரத்தேவன் வரலாறு போன்றவை அடக்கம்..  அது அறிமுகமா,? படுத்தலா? என்று பார்த்தபிறகுதான் தெரியும்.

Friday, December 21, 2012

திரைப்பாடல் நினைவுகள்





     

 திரைப்படப்பாடல்கள் இந்தச் சமூகத்தில், நம்முடன் பிணைந்துவிட்டதாகவே உணர்கிறேன். ஏதோ ஒரு காலகட்டத்தில் நமக்கு அறிமுகமான பாடலை இப்போது கேட்கும்போது அதே காலகட்டம் நினைவுக்கு வந்து ஒரு ரம்மியத்தையோ, சோகத்தையோ கிளறிவிட்டுவிடுகிறது.

        நான் சிறுவயதில் பல ஊர்களில் படித்த நினைவுகள் பாடல்களோடு ஒன்றிப்போய் , அந்தக் காலகட்டங்கள் இன்றும் ஸ்லைட் ஷோக்களாகவும்,. சில நேரங்களில் 16mm படங்களாகவும் ஓடுகின்றன.

குழந்தைப்பருவத்தில்.. ‘ என்னடீ ராக்கம்மா..பல்லாக்கு நெளிப்பு’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதையே பாடிக்கொண்டிருப்பேன் என்று அம்மா சொல்லுவார்கள். அதிலும் நான் சொல்லும் என் நெஞ்சு குலுங்குலடி..! என்ற வார்த்தைக்காக எல்லோரும் திரும்பத் திரும்பக் கேட்பார்களாம்.

       ’மலர் கொடுத்தேன்..கைகுலுங்க வளையலிட்டேன்’ – இந்தப்பாடலை திருச்சி வானொலி நிலையத்தின் திரைகானம் நிகழ்ச்சியில் கேட்டதும் ..அந்த வளையலிட்டேன் என்ற வார்த்தை உள்ளேயே நுழையாமல்…நான் பட்ட அவஸ்தை..அப்பப்பப்பா…! தனியாகச் சொல்லிவிடுவேன். பாட்டோடு சேர்த்துப் பாடும்போது.. கை குளுங்க என்று வந்துவிடும். பின்னர் அதைச் சரி செய்து, கைகுலுங்க என்றால்…வலையலிட்டேன் என்று வரும்.. பல நாட்கள் அதை வகுப்பறையில் பாடிப்பார்த்திருக்கிறேன். ரத்னாபாய் டீச்சர்.. நான் ஏதோ அறிவியல் பாடத்தைச் சொல்லிப்பார்க்கிறேன் என்று நம்ம்ம்பி விட்டுவிடுவார்கள். பின்னர் நீண்ட நாட்களுக்குப்பிறகு, அந்தப்படம் –திரிசூலம்- கறம்பக்குடி முருகன் தியேட்டரில் பார்க்க நேரிட்டபோது.. அடுத்த கவலை பீரிட்டது.

     சிவாஜி..இந்தப்பாட்டை, மிகவும் அநாயாசமாக பாடுகிறாரே.. அதான் இந்த ஆளை நடிகர் திலகம் என்கிறார்கள் என்று நினைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது..அந்த அநாயாசத்துக்குச் சொந்தக்காரர் டி.எம்.எஸ் என்று..

       பிறகு.. தகிட ததிமி தகிட ததிமி தந்தானா… என்னைக் கட்டிப்போட்ட பாடல், அதை முதலில் கேட்டது, இலுப்பூரில்  4ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது , ஒரு சலூன் ரேடியோவில் . அதுவும் பாடிப்பார்க்கவே முடியாமல் பல நாள் என்னை அலைக்கழித்தது.. தகிட தகிமி என்று வரும்.. பின்னதை சரி செய்ய நினைத்தான் ததிட ததிமி என்று வந்து அலைப்பறை செய்யும்.
     
      அந்த சலூன் அண்ணன், கமல் போலவே முடி வெட்டியிருப்பார். அவருக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு போஸ்டர் கிடைக்குமோ தெரியாது. அந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமாக ஓடும் படத்தின் போஸ்டர் , அவரது கடைக்குள் ஒட்டியிருக்கும். அதன்படி சலங்கை ஒலி பட போஸ்டர் ஒட்டியிருக்க, அதில் கமல் காலைத்தூக்கி ஆடும் ஒரு போஸ் இருக்கும். அதைக்காட்டி, இந்தப்பாட்டுல ஆடும்போது எடுத்த போட்டாவைத்தான் நான் போஸ்டராக்கி ஒட்டினேன் என்று சொன்னார். அன்றிலிருந்து அவரையே கமலாக எண்ணி வியக்க ஆரம்பித்தேன். பிறிதொரு நாள் சலங்கை ஒலி பார்க்கும்போதுதான் தெரிந்தது, அந்த போஸ் தகிட ததிமிக்கு ஆடியது இல்லை. நாத வினோதங்களுக்கானது என்று… பயபுள்ள பொய் சொல்லியிருக்கு!

       சங்கீத ஜாதிமுல்லையை மிகவும் லேட்டாகத்தான் கேட்டேன். அப்போது நாங்கள் கறம்பக்குடியில் இருந்தோம். எஸ்.பி.பி என்பவர் மேல் வெறிபிடித்து அலைந்த காலகட்டம் அது..!! அந்தப் பாடல் முதன்முதலில் கேட்ட கதையே மிகவும் நீளம்..!! பள்ளியிலிருந்து, மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்துவிட்டு, திரும்பச் செல்லும்போது தாமதமாகிவிட்டால், சீனி கடைமுக்கத்திலிருந்து NNL (முன்னால் அதன் பெயர் PTR) பஸ்ஸில் தொற்றிக்கொண்டு பேருந்து நிலையத்தில் இறங்கிவிடுவது வழக்கம். செக்கர் அண்ணன் டிக்கெட்டெல்லாம் கேட்கமாட்டார். அப்படி ஒருநாள் பஸ்ஸில் ஏறிவிட்டேன்…

        ‘திருமுகம் கண்டு பழகுமோ…அறிமுகம் செய்து விலகுமோ? என்ற வரியில் கேட்க ஆரம்பித்து கலக்கி எடுத்துவிட்டது அந்தப்பாடல்..! பாட்டு ரொம்ப பெரிசு..! ஒரு நிமிடப் பயண தூரத்தில் என்ன கேட்டுவிடமுடியும்..? பள்ளிக்கூட பெல் அடிக்கவில்லை.. முடிந்தவரை நின்று கேட்டுவிட்டுத்தான் நகர்ந்தேன். பிறகு அந்தப்பாடலை எங்கெல்லாம் கேட்டேன் என்று ஒரு மிகப்பெரிய பட்டியலே உண்டு.

      குழலூதும் கண்ணனுக்கு குயில்பாடும் பாட்டுக்கேட்குதா? – முதல் முறையே வசீகரித்த பாடல், அதை மிகவும் சிலாகித்து வகுப்பறையில் பேச…என் நண்பன் ஒருவன் தன் வீட்டு டேப் ரெக்கார்டரில் கேட்கலாம் என்று அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அன்று மாலை , அவன் அக்கா அந்தப்பாடலை போடவே விடவில்லை. சரியாக 5 மணிக்கு போடச் சொன்னார். நாங்களும் தினம் தினம் கேட்டு ரசித்தோம். சில நாட்களுக்குப் பிறகு, எதேச்சையாக அவர்கள் வீட்டைக் கடக்கும்போது அதே பாடல்..!! நேரம் 5 மணி! அப்புறம்தான் தெரிந்தது.. எதிர்வீட்டு ஆசிரியரின் மகனுக்கும் அந்தப்பாடலை கேட்கப் பிடிக்கும் என்று..!!

     ’தேவதை இளம் தேவி! என்னைச் சுற்றும் ஆவி..!! ‘ இந்தப்பாடல் தென்காசியில் கேட்டது…! அணைக்கரைத் தெருவின் கடைசி வீடு லிப்டன் டீ மாமாவுடையது. அந்த வீட்டு ஹரீஷ் அண்ணன் ஒரு சிறிய பெட்டி ஒன்றிலிருந்து கிளம்பும் ஒயர்களை தனது காதில் வைத்துக்கொண்டு , தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். அவர் தலையசைக்கும் அழகுக்காகவே நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். கேக்குறியாடா? என்று அவர் சொன்னதும்.. பாய்ந்து சென்று அருகில் நின்றேன். காதில் வைத்தார்…அப்போது..கேட்ட வரிகள்… ‘’தேவமுல்லையே….!! என்று ஆரம்பித்தது…பின்னர் ஒரு முறை அந்தப்பாடலை…கேசட்டை ரீவைண்ட் செய்து கேட்கவைத்தார். அதன்பிறகு.. நான் வானொலியில் பணியாற்றும்போது தேடித்தேடி மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது ஒலிபரப்புவேன். ஆனாலும்..முதல் முறை கேட்ட வாக்மென் அனுபவம் இன்னும் காதுக்குள்ளேயே இருக்கிறது.

      இன்னும் பல பாடல்கள் நினைவுகளை வருடி.. சில நேரங்களில் அந்த நேரத்தில் சாப்பிட்ட உணவுகூட நினைவுக்கு வருகிறது.. அதே வாசனையுடன்..!! அம்மா என்றழைக்காத உயிரில்லையே - பாடல் அறந்தாங்கி அம்மா மெஸ்ஸின் சாம்பார் வாசனையையும் சேர்த்தே வைத்திருக்கிறது. 

ஜுலி ஐ லவ் யூ – தென்காசியில் , நான் கர்ச்சீஃபில் கொட்டிக்கொண்ட பாண்ட்ஸ் பவுடர் வாசனை..!!

தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே ! - இலுப்பூர் ஆர்.ஸி பள்ளியின் மடத்துக்குள் இருக்கும் கொய்யாப்பழ வாசனை..!

    ராசாவே!  உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க.. – எங்கள்  லட்சுமிப் பசுவின் கன்றுக்குட்டி வீட்டுக்குள் ஓடிவந்தபோது பரவிய கன்றுக்குட்டி வாசனை இன்னும் நாசிக்குள்…
      


     இன்றும் இந்தப்பாடல்கள் நினைவுகளைக் கிளறி…சில நேரங்களில் சின்னப்பிள்ளையாகவே இருந்திருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது.

       இதயக்கோவில் படத்தின் அனைத்துப்பாடல்களும் மனதை வருடினாலும், வானுயர்ந்த சோலையிலே - பாடல் மிகவும் நெருக்கமானது. அது எனக்கு பாட்டுப்போட்டியில் முதல் பரிசு பெற்றுத்தந்த பாடல். ! அந்தப்படத்தின் கேசட்டை என் நண்பன் சத்யா வாங்கினான். அவனுக்காக ஒரு ஆம்ப்ளிஃபயர் நான் செய்து தந்தேன். அதைக் கேட்டுவிட்டு, பாப்புலர் சலூனில் இருப்பதுபோல் சில் சில் என்று வரவேண்டும் எனக் கேட்டான். நானும் பல பாஸ்-ட்ரபிள் போர்டுகளை மாற்றி மாற்றி முயற்சி செய்துபார்த்தேன்.  அப்புறம் ச்சில்லிங் எஃபட்டுக்காக ட்வீட்டரும் வாங்கி மாட்டியாயிற்று. மீண்டும் பாப்புலர் சலூன் சென்று கேட்டால், அந்த எஃபக்ட் நம்மிடம் இல்லை. பின்னர்தான் எனக்குத் தெரிந்தது. சலூனில் சப்-ஊஃபரே இல்லை. அனைத்துமே ட்வீட்டர்தான் என்று..!! கடைசிவரை சத்யாவுக்கு சலூன் எஃபக்ட் வரவில்லையே என்று வருத்தம்தான்!


     காரணமே இல்லாமல், வாய் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் ஒன்று உண்டு.    பூந்தேனில் கலந்து…பொன்வண்டு எழுந்து..சங்கீதம் படிப்பதென்ன..?  ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தருணத்தில் நான் முணுமுணுத்துவிடும் பாடல் இது…!  இதன் நினைவுதான் மிகவும் ஆழமானது. இலுப்பூரில் வேல்முருகன் தியேட்டரில் ஏணிப்படிகள் பார்த்துவிட்டு வரும்போது அந்த அக்காவைப் பார்த்தேன். ஷோபா போலவே தெரிந்தாள். இரண்டு நாட்களில் பள்ளியில் சர்க்கஸ் கூட்டிச் சென்றபோது அந்த அக்கா  அங்கு, கம்பியில் நடந்து காட்டிக்கொண்டிருந்தாள். அடுத்த வாரத்தில் இலுப்பூர் பேருந்து நிலையத்தில் அவளும், ஒரு இளைஞனும் பிணமாகக் கிடந்தார்கள். 

   ஒவ்வொரு பாடலும் ஜீவனைக் கட்டிப்போட இதுபோன்ற நினைவுகளும் கயிறாகிறது என்று எண்ணுகிறேன்.



Wednesday, December 19, 2012

வேலைத்தகுதி வேட்டை



       வேலையில்லாத் திண்டாட்டம் என்பது ஒரு காலகட்டத்தில் நம்மை அச்சுறுத்தியது. இப்போது வேலைக்கு ஆளில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. அதாவது, வேலைக்குத் தகுதியான ஆட்கள் இல்லாமல், நிறுவனங்களும் , சிறு முதலாளிகளும் தவிக்கிறார்கள்.

      ஒரு பெரிய கணிப்பொறி நிறுவன மேலதிகாரியும், ஒரு அச்சக உரிமையாளரும் ஒரே மாதிரிதான் புலம்புகிறார்கள்.

     “இந்தக்காலத்துப் பசங்களுக்கு, வேலை பாக்கணும்கிற எண்ணமே இல்லை சார்.! அதுவும் நேர்மை, நாணயம், உழைப்புல எல்லாம் நம்பிக்கையே இல்லை. பொறுப்பே இல்லாம ஏதாவது வேலை கிடைக்குமான்னு பாக்குறாங்க! பொறுப்புகளை எப்படி தட்டிக்கழிக்கிறதுன்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க..! நாங்கள்லாம் எங்க மேலதிகாரிக்கும், முதலாளிக்கும் பயந்தோம். இப்போ நாங்கதான் எங்க ஊழியர்களுக்கு பயப்படுறோம்..!

     எங்கே தவறு நிகழ்ந்தது என்று ஆராய இப்போது நேரமே இல்லை. நடந்த தவறை உணரும் தருணத்தில் இருக்கிறோம். ஏனெனில் இன்றைய உயர்கல்வி மாணவர்களுக்கு அத்தகைய வேலைத்தகுதி மிகவும் குறைவாக இருக்கிறது என்பதையே அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

     ஆனால், உண்மை அப்பட்டமாக வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகளில் 17 சதவீதத்தினர் மட்டுமே வேலைக்குத் தகுதியானவர்கள். மற்ற பட்டதாரிகளில் 23 சதவீதத்தினர் மட்டும் தகுதியானவர்கள். இதுதான் நிலைமை. ஆனாலும் , தகுதியற்ற 70-80 சதவீதத்தினரை வைத்துத்தான் நிறுவனங்கள் ஓட்டிக்கொண்டிருக்கின்றன.

    இந்த அடிப்படையில், சமீபத்தில் ஒரு பொறியியல் கல்லூரியில் வேலைத்தகுதி ஆய்வு ஒன்று நடத்தினோம்.. இளைஞர்களின் கவனிக்கும் திறன், தகவல் தொடர்பு, குழு மேலாண்மை, நேர நிர்வாகம், சூழல் அறிவு , கற்பனைத்திறன் ஆகியவற்றில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று சோதித்ததில்..மிகவும் அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இதில் அவர்களது கல்வி அறிவை சோதிக்கவே இல்லை என்பது தனி !

     மொத்தம் 230 மாணவர்கள் பங்கேற்ற ஆய்வில் , நிறுவனங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தகுதியுள்ள மாணவர்கள் 12 பேர்தான்…!! இதுதான் இந்தியா முழுமைக்குமான நிலை…

அவர்களது கவனிக்கும் திறன் மிகவும் குறைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதில் ஒரு கேள்வி :

ரமேஷின் அப்பாவுக்கு மூன்று மகன்கள். அவருக்கு கார்கள் என்றால் மிகவும் பிரியம். ஆகவே முதல் மகனுக்கு மாருதி என்றும் இரண்டாவது மகனுக்கு ஃபியட் என்றும் பெயர் வைத்தார். மூன்றாவது மகனுக்கு என்ன பெயர் வைத்திருப்பார்..?

96% மாணவர்கள் ஏதாவது ஒரு கார் கம்பெனியின் பெயரைத்தான் எழுதியிருந்தார்கள்.

4% பேர் மட்டும்தான்.. ரமேஷ் என்ற சரியான பதிலை எழுதியிருந்தார்கள். பொதுவாக, இப்படித்தான் எல்லாக் கேள்விகளுக்கான பதில்களும் இருந்தன.

புத்திசாலித்தனத்தை விட , பொறியியல் கல்வியின் மதிப்பெண்கள் மேல்தான் அவர்களது கவனம் அதிகமாகியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பாடத்தில் திறமையை நிரூபிக்க, அந்தப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஒரு ஏரோநாட்டிக்கல் மாணவனிடம் கைரோஸ்கோப் என்றால் என்ன ? அது எப்படி வேலை செய்கிறது என்று கேட்டேன். மூன்றாம் வகுப்பு மாணவனிடம், மோர்ஸ் விதி கேட்டதுபோல் விழிக்கிறான்.

     அவர்களுக்கான களம் தவறாக இருக்கிறது அல்லது சமூகச் சூழல் அவர்களைக் கற்றலிலிருந்து தள்ளி வைக்கிறது. நட்பு, ஊடகம் என்று பல்வேறு பாதிப்புகளும் சாதகமாக இல்லை. எது எப்படியோ, அவர்களை வேலைக்குத் தகுதியில்லாதவர்களாக நாமும் மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

     இது  ஒரு சோறுதான்..!! மொத்த இந்தியாவின் நிலையும் இதுதான் என்பது அடுத்த ஆபத்து.. ! ஏனெனில், இந்தியாவில் 2020ம் ஆண்டு, 20 கோடி வேலை வாய்ப்புகள் இருக்கப்போகிறது. அப்போது இதேபோல் இளைஞர்கள் இருந்தால், நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து வேலையாட்களைக் கொண்டுவரப்போவது நிச்சயம்.

     இப்போதே ஒரு கட்டிட நிறுவனம், பிலிப்பைன்ஸிலிருந்து  300 தொழிலாளர்கள், பொறியாளர்களை இறக்குமதி செய்திருக்கிறது.


முன்னால்..

வேலை இல்லாதவந்தான் வேலை தெரிஞ்சவந்தான் வீரமான வேலைக்காரன்..

ஆனால் இப்போது

வேலை உள்ளவந்தான், வேலை தெரியாதவந்தான் விவகாரமான வேலைக்காரன்.!
    
     கல்லூரிகளும், பெற்றோரும் விழித்துக்கொள்ளவேண்டிய நேரம் இது..!!


Saturday, December 15, 2012

நானோ சர்வீஸ்..கேட்டால் கிடைக்கும்



     





     நானோ கார் வாங்கும்போதே, சர்வீஸுக்கான புத்தகமும் கொடுத்தார்கள். அதில் முதல் இலவச சர்வீஸுக்கு – 1500 கிலோமீட்டர் அல்லது மூன்று மாதங்கள் – இதில் எது முதலில் வருகிறதோ, அதில் பயன்படுத்திக்கொள்ளவும் என்று போட்டிருந்தார்கள். நானும் முதல் மூன்றுமாதம் கழித்து பார்த்தால், 750 கிலோமீட்டர்தான் ஓடியிருந்தது. (அந்தக்காலகட்டத்தில் நான் நிறைய வெளி மாநிலங்களில் சுற்றிக்கொண்டிருந்ததால், காரைப் பயன்படுத்த வாய்ப்பே  கிடைக்கவில்லை) இன்னும் கொஞ்சம் ஓட்டிவிட்டுக்கொடுத்தால்தானே வண்டி சர்வீஸ் விட்டதற்கு அர்த்தம் இருக்கும் என்று நானும் பொறுமையாக இருந்தேன்.

அப்புறம் கொஞ்ச நாட்கள் சென்னைக்குள் ஓட்டிக்கொண்டிருந்துவிட்டு, ஒரு திருப்பதி பயணம், சென்று வந்தால், 1400 என்று காட்டியது. ஓக்கே இந்தவாரம் சென்றுவிடலாம் என்று நினைக்கும்ப்போது ஒரு திடீர் திருச்சி பயணம்… போய்விட்டு வந்து பார்த்தால் 2200 கிலோமீட்டர் ஓடிவிட்டது என்று போட்டிருந்தது. ஆஹா…சர்வீஸ் செய்யவேண்டிய கட்டத்தை கடந்திருக்கிறதே என்று உடனே நானோவின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்ட்டருக்கு ஓட்டிச்சென்றேன்..
அங்குதான் ஆரம்பமானது கச்சேரி !

     நல்ல இன்முகத்துடன் வரவேற்று , சர்வீஸ் ஷீட் எல்லாம் போட்டவர்கள். கிலோமீட்டர் ரீடிங்கைப் பார்த்தவுடன்,
ஸாரி ஸார்..! இந்த வண்டிக்கு இலவச சர்வீஸ் செய்யமுடியாது..! எங்க சர்வீஸ் லிமிட்டை விட 700 கிலோமீட்டர் அதிகமா ஓடியிருக்கு.. நீங்க 650 ரூபாய் கட்டவேண்டியிருக்கும் என்றார்கள்.

நானும், அதே இன்முகத்துடன்..

 1400 கிலோமீட்டர் ரீடிங் காட்டும்போது அர்ஜெண்ட்டா திருச்சி போறேன்.. திண்டிவனத்துக்கிட்ட 1500 காட்டுது… அங்கயே அப்படியே நிறுத்திட்டு, சர்வீஸ் செஞ்சுதான் நான் வண்டியை எடுத்திருக்கணுமா என்றேன்.


அது தெரியாது சார்… வேணும்னா டாட்டா மோட்டார்ஸ் காரங்ககிட்ட நேரா பேசிக்குங்க என்றார்.

முதலில் டோல் ஃப்ரீ எண்ணுக்கு அழைத்து விபரம் சொன்னேன். அந்த இளைஞர் ,
அது ஒண்ணும் பிரச்னையே இல்லை சார்.. முதல் சர்வீஸ் 1500 கிலோமீட்டர்க்குள்ள நீங்க செஞ்சிருக்கணும்.. விட்டுட்டீங்க.. இப்போ, இரண்டாவது இலவச சர்வீஸுக்கான ஸ்லிப்பைக் கொடுத்து, இந்த சர்வீஸை இலவசமா செஞ்சுக்குங்க என்று ஆலோசனை சொன்னார்.

இது பரவாயில்லையே என்று எண்ணிக்கொண்டே, இரண்டாவது இலவச சர்வீஸ் ஸ்லிப்பைப் பார்த்தேன். 10000 கிலோமீட்டர் அல்லது ஒரு ஆண்டு என்று போட்டிருந்தது. அதாவது 2200 கிலோமீட்டர் ஓட்டியிருந்த நான் 10000 கிலோமீட்டர் ஓட்டினால் செய்துகொள்ளவேண்டிய சர்வீஸை பயன்படுத்திக்கொள்ளலாமாம்.

சுர்ரென்று ஏறியது..

சர்வீஸ் ஸ்டேஷனில்..
நீங்க சர்வீஸ் செஞ்சு வச்சாலும், இல்லைன்னாலும் இந்தப் பிரச்னை தீராமல் நான் காரை திரும்ப எடுக்கப்போவதில்லை என்று சொன்னேன்.

அவர்களும்..
நாங்க சர்வீஸ் செஞ்சு வச்சுடுறோம் சார். டாட்டாவிலிருந்து உங்களுக்கு இலவச சர்வீஸ் செய்யச்சொல்லி ஒரு மெசேஜ் வந்தா போதும் என்றதுடன், டாட்டாவின் தமிழக டிவிஷன் மேனேஜரின் மெயில் ஐடியும் தந்தார்கள்.

வீட்டுக்கு வந்தேன்.

அவருக்கு ஒரு மெயில் அடித்தேன். அதன் சாராம்சம் இதுதான்..!!

    1500  கிலோமீட்டர் அல்லது 3 மாதம் என்று போட்டிருக்கிறீர்கள். அவசர வேலையாகச் செல்லும்போது மீட்டர் ரீடிங் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. 700 கிலோமீட்டர் வித்தியாசத்தில் சர்வீஸ் செய்ய முடியாது என்று சொல்லும் உங்கள் சட்டம்,  7800 கிலோமீட்டர் வித்தியாசத்தில்  10000 கிலோமீட்டருக்கான இரண்டாவது சர்வீஸை இப்போதே செய்துகொள்ள எப்படி ஒத்துக்கொள்கிறது.?

   சர்வீஸ் செய்யாமல் ஓட்டி, அதனால், வண்டி ஏதேனும் பழுதாகியிருக்கும் பட்சத்தில், நான் முன்னரே சர்வீஸ் செய்யாததால்தான் இது நேரிட்டது என்று ஒத்துக்கொள்வேன். அப்போது நான் இலவச சர்வீஸ் கேட்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால், வண்டி நன்றாக இருக்கிறது. நீங்கள் செய்யவேண்டிய சர்வீஸைத்தான் கேட்கிறேன். அதற்கு சட்டதிட்டங்களைக் காரணம் காட்டுவது மிகவும் வருத்தமாக உள்ளது.

நிறுவனம்,  இதயமுள்ள மனிதர்களால் அமையவேண்டுமே அன்றி இற்றுப்போன சட்டங்களால் அல்ல!


  நான் டாட்டா மீது நம்பிக்கையும், பற்றும் வைத்திருப்பதால்தான் நானோ வாகனத்தை வாங்கினேன். இதுபோன்ற சம்பவங்கள் ஒரு வாடிக்கையாளரை உங்களை விட்டு விலகவைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.


இவ்வாறு அனுப்பிய மெயிலுக்கு பதிலாக, அடுத்த நாளே அந்த மேலாளர் நேரடியாக தொலைபேசினார். முதலில், எதுவும் செய்யமுடியாது என்பதுபோல் ஆரம்பித்தார். மீண்டும் , அவரிடம் சூழலைச் சொன்னேன். அவரும்.. எங்கள் நிறுவன விதிப்படி.. மூன்று மாதத்துக்குள் இந்த சர்வீஸை முடித்திருக்க வேண்டும். இருந்தாலும், உங்கள் மெயிலில் இருந்த நியாயத்தைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கு இலவச சர்வீஸ் செய்ய அனுமதி அளித்திருக்கிறோம்.  என்று சொன்னார்.

சிறிது நேரத்தில், சர்வீஸ் ஸ்டேஷன் மேலாளர் அழைத்து

” நீங்க நேரடியா கம்பெனியை தொடர்புகொண்டு பிரச்னையை முடிச்சுக்கிட்டீங்க சார்..! ஆனா நிறைய கஸ்டமர் நேரா எங்களைத் திட்டிட்டு , பணத்தையும் கட்டிட்டு போறாங்க சார்.. மற்றபடி, உங்கள் கார் ரெடி சார்! எடுத்துச் செல்லுங்கள்!!! என்றார்.

சென்றேன் . எடுத்தேன். வந்தேன்..!!

அதனால்தான் அழுத்திச் சொல்கிறோம். கேட்டால் கிடைக்கும்!



Friday, December 7, 2012

மய மாயம்



        
       இதோ ஆரம்பித்துவிட்டது. டிசம்பர் 2012. ! மயன் காலண்டர் பற்றி பல்வேறு ஊடகங்கள் லேசாக பீதியைக்கிளப்ப ஆரம்பித்தன. ஒரு படம் வந்து , கிளப்பிய பீதியை நன்றாகப் பரவ வைத்தது. ஆக மொத்தத்தில் இந்த மாதம்  21ம் தேதி உலகம் அழியப்போகிறது என்று பல்வேறு தரப்பினர் நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். நாம் படிக்கும் செய்திகள், சந்திக்கும் மனிதர்களின் எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது.
       அப்பாடி! அழியட்டும்.. இவனுங்க செய்யும் அட்டகாசத்துக்கு அதான் சரி!

இவ்வளவு கண்டுபிடிச்சு என்ன பிரயோசனம் பாருங்க! அழிவைத் தடுக்க ஒரு ஆயுதமும் கண்டுபிடிக்கலையே?

நான் அழியறதைப் பத்திக்கூட கவலையில்லை… அந்தத்தேதிக்குப் பிறக்கும் குழந்தைங்க என்ன பாவம் பண்ணுச்சு?

எல்லாமே தண்ணீர் மயமாயிடும் இல்ல?

இருக்குற கொஞ்ச நாளிலாவது, நான் நினைச்சதை செஞ்சு பாக்கப்போறேன்.

இயற்கை ஏன் அழிக்கணும். மனிதன் செய்யும் அநியாயத்துக்கு.. அவனே அவனை அழிச்சுக்குவான்.

எத்தனை பாவம் பண்ணியாச்சு..!! அதுக்கெல்லாம் பரிகாரம் தேடணும்!

மனித இனம் செஞ்ச அட்டூழியத்துக்கு…பாவம்.. தப்பே செய்யாத விலங்குகளும் அழியறதை நினைச்சாத்தான் கவலையா இருக்கு!

தலைவர் சொன்னது சரியா இருக்கே! ‘சாகுற நாள் தெரிஞ்சா வாழும் நாள் நரகமாயிடும்’ போல!

அதெல்லாம் சும்மா..! இன்னும் 4 லட்சம் வருடம் உலகம் இருக்கும்.

இயற்கை எவ்வளவு நாள்தாங்க பொறுமையா இருக்கும்?

பாவிகள் பள்ளிக்கூடம் நடத்துவார்கள்ன்னு போட்டிருக்காம். அது இப்ப நடந்துக்கிட்டுத்தானே இருக்கு! அப்ப உலகம் அழியறது உறுதிதான்.!

மயன் கேலண்டர்ல உள்ள மாதிரிதான் இன்னிவரைக்கும் நடந்திருக்காமே? அப்ப இதுவும் கன்ஃபர்ம்தான் போல!

     மொத்தத்தில், எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு நம்பிக்கையோ, பயமோ எட்டிப்பார்த்திருக்கிறது. ஒருசில ஐரோப்பிய , தென் அமெரிக்க கிராமங்களில் தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டதாக முழுமையாக நம்பி, பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். தாங்கள் செய்யவிரும்பியதைச் செய்திருக்கிறார்கள். மேலும், தன்னால் வருத்தப்பட்டவர்களிடம் சென்று மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், தாங்கள் பார்க்க விரும்பிய இடங்களைச் சென்று பார்த்திருக்கிறார்கள். பொதுவாக, அழிவு என்று ஏற்படுவதற்குமுன் தாங்கள் மிகவும் சுத்தமான, ஆன்மாவுக்கு நேர்மையான ஜீவன்களாக வாழ எண்ணியிருக்கிறார்கள். அப்படியானால்..அதற்கு முன்னால்?

     இந்தக்கேள்விதான்…மயன் கேலண்டர் என்ற நம்பிக்கை செய்த மாயம். நம் வாழ்வுக்கு ஏதாவது ஆபத்து என்றால் உடனே நம் எண்ணங்களில் நற்குணம் அதிகமாகப் புகுந்துகொள்கிறது. ஆனால், சாதாரணமாக, தீயகுணங்களுக்கு கொஞ்சம் அதிக இடம் கொடுக்கிறோமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. மரணம் என்ற ஒன்று யாரும் சந்திக்காமலே இருக்கப்போவதில்லை.

   ’நமக்குச் சாவே வராது. சாவவே மாட்டோங்கிற நெனப்புலதானே அத்தனை அநியாயமும் பண்ணுறானுங்க!’ என்று நெல்லைக் கண்ணன் அய்யா சொல்லுவார்.

உண்மைதான்…!! நாம் ஏதோவொரு காரணத்துக்காக சக உறவுகள், நண்பர்கள், ஊழியர்கள் , முகம் தெரியாதவர்கள் என்று எல்லோரிடமும் ஏதோவொரு நேரத்தில் சிக்கலை வரவழைத்துக்கொள்கிறோம். அது யாருடைய தவறாக இருந்தாலும் சரி..!! அதனை மறப்பதும் இல்லை..மன்னிப்பதும் இல்லை. இரண்டும் இருந்துவிட்டால்… சாதாரண மனிதர்கள் , அசாதாரணர்களாக மாறும் அதிசயம் நிகழ்ந்துவிடும். ஹஜ் பயணத்தை மிகவும் அசாதாரண நிகழ்வாக நினைப்பதாலும்.. அது கடைசி வாய்ப்பாக நினைப்பதாலும்தான், ஹஜ் செல்வதற்குமுன், அனைவரிடமும் அன்பையும், மன்னிப்பையும் பரிமாறச் சொல்லியிருக்கிறது இஸ்லாம்.  அதனை அனைவருமே பின்பற்றினால், பிரச்னைகளுக்கு வாய்ப்பே இல்லை. ஆனால், நமக்கு வாழ்வின் நீளத்தின்மேல் உள்ள நம்பிக்கைதான், அனைத்துத் தவறுகளையும் செய்ய வைக்கிறது.

அதேபோல், சாதிக்கவேண்டும் என்று எண்ணம் உள்ளவர்கள்.. அடுத்த ஆண்டு அதைச் செய்யவேண்டும்.. இதைச்செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டு comfort zone எனப்படும் சவுகரிய வட்டத்துக்குள்ளிருந்து, வெளியிலேயே வராமல் இருந்துவிட்டு, சாதிக்கும் வாய்ப்பையே இழந்துவிட்டுப் போகிறார்கள். அடுத்த பிறவியில் சாதித்துக்கொள்ளலாம் என்று நினைக்கமுடியாது என்று தெரிந்தும்.. நீண்ட நாட்கள் நாம் இருப்போம் என்ற நம்பிக்கைதான் சாதனைகளையும் தள்ளிப்போட வைக்கிறது.

இன்று அழியாவிட்டாலும், என்றாவது ஒருநாள் உலகம் அழியப்போகிறது என்ற எண்ணம் ஒருபுறம் இருக்கட்டும்.! நாம் வாழும்வரைதான் நமக்கு இந்த பூமி என்ற கோளத்தின் இருப்பு பற்றிய ஆர்வம் இருக்கும் என்ற உண்மையை நாம் முதலில் உணரவேண்டும். நான் பிறந்தேன். உலகம் என்ற ஒன்றைப்பற்றிய அறிவு வந்தது. நான் இறந்தபின் இந்த உலகம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன? ஆக, என் வாழ்வுதான் என் உலகம்..!! அதனை நான் எப்படி அமைத்துக்கொள்ளப்போகிறேன்.? எப்படி அழித்துக்கொள்ளப்போகிறேன் என்று எண்ணினால் போதும்!

     என்னிடம் ஒரு நண்பர் வெகு ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார். மனித இனம்தாங்க இந்த உலக அழிவுக்குக்காரணம்.. இயற்கையை என்னமா நாசம் பண்ணிட்டானுங்க! இந்த ப்ளாஸ்டிக் வேண்டாம்னு எத்தனை வருஷமா கத்திக்கிட்டிருக்கோம். விடுறானுங்களா? மயன் கேலண்டராவது ஒண்ணாவது..!! மனுசந்தான் காரணம்.. பிளாஸ்டிக்தான் காரணம்..!!  நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது.. அவர் கையில் இருந்தது ஒரு டிஸ்போஸபிள் டீ கப் !

     இந்த உலகமே இப்படித்தான் பாஸ்.. அது உருவாகும்..அழிச்சுக்கும்..!! அதுக்கும் ஒரு ரிலாக்ஸேஷன் வேணுமா இல்லையா?  கடவுள் என்பவர் கணிப்பொறி விற்பன்னராக இருந்தால்… இப்படித்தான் சிந்தித்திருப்பார்..!!

     '' சிஸ்டம் ரொம்ப ஹேங் ஆகுது..டிசம்பர் 21ம் தேதி ஹார்ட் டிஸ்கை ஃபார்மேட் அடிக்கணும்.. "



இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...