Monday, June 29, 2009

அஜினோமோட்டோ எனும் அரக்கன்

அஜினோமோட்டோ எனும் ஒரு சுவை சேர்க்கும் பொருள் இப்போதெல்லாம், எல்லாவகை சைனீஸ், இந்திய உணவு வகைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இது ஒரு நச்சுப்பொருள் என்பது தெரியாமலேயே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் தீமைகள் தெரிந்தால் அதை யாரும் பயன்படுத்தவோ, சாப்பிடவோ மாட்டார்கள் என்பது உறுதி.

இதில் பென்லிலானைன் எனும் ஒரு வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது மூளையின் நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கப்படக்கூடிய தன்மை கொண்டது. மேலும் இதைப்பயன்படுத்துபவர்களுக்கு அதிகப்படியான கோபம், மன அழுத்தம் ஆகியவை தேவையில்லாமல் ஏற்படும்.மேலும் இது வன்முறை எண்ணங்களையும் தூண்டும் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மேலும் அஜினோமோட்டோவில் 10% மெத்தனால் கலந்துள்ளது. அது ஒரு நேரடி விஷம். கள்ளச்சாராயங்களில் காணப்படும் மெத்தனால்தான் இது. இதன் மூலம் கண் எரிச்சல், நரம்புத்தளர்ச்சி போன்றவை நாளடைவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதைவிட பயங்கரமாக இது மரபுக்கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

அடுத்ததாக அஸ்பார்டிக் ஆஸிட் எனப்படும் அமிலம் அஜினோமோட்டோவில் கலந்துள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கக்கூடியது. குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களில் ஊடுருவி, ஞாபக மறதி, வலிப்பு நோய், மனநோய் போன்றவற்றில் கொண்டுவிட்டுவிடும். இதுவும் அஜினோமோட்டோ கலந்த நூடுல்ஸ் அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

அதைவிட ஆபத்தைவிளைவிக்கக்கூடியது, MSG எனப்படும் மோனோ சோடியம் க்ளூட்டாமேட் எனும் வேதிப்பொருள்! இது ஒரு நச்சு உணவு! இது கலந்த உணவை உண்டவர்கள் அதிகம் தூங்க ஆரம்பிப்பார்கள். மேலும் வயிற்றில் புண் மற்றும் சரியான நேரத்துக்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் அல்சர் ஆகியவை ஏற்படும். மேலும் எப்போதும் ஒரு சோர்வான உடல்நிலையை இது ஏற்படுத்தும். இவ்வளவு கெடுதல்களையும் கொண்ட ஒரு உணவை காசு கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உணவகங்கள் அவர்களை பலவீனப்படுத்தவேண்டாம். மேலும் ஹோட்டல்களுக்கு உணவு உண்ணச்செல்லும்போது, அஜினோமோட்டோ கலக்காமல் நூடுல்ஸ் கேட்டு வாங்கி உடல் நலத்தைப்பேணுங்கள் !
அஜினோமோட்டோ எனும் அரக்கனைப்புறக்கணித்து, பணம்
செலவழித்து வியாதி வாங்குவதை தவிர்ப்போம்.

பார்க்கமுடியாததைப் பார்ப்போம்!

சில திரைப்படங்கள் பார்த்தவுடனேயே -அதைப்பற்றி நண்பர்களிடம் - சொல்லவோ, விமர்சனம் எழுதவோ தோன்றும்..தூண்டும்!

ஆனால் சில திரைப்படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கவைத்து- பிரமிக்கவோ,விதிர்க்கவோ வைத்து , அசைபோட்டு பின்னர் சொல்லத்தூண்டும்.
இது இரண்டாவது ரகம் போலும்! ( லேட்டா பதிவு போடறதுக்கு இப்படி ஒரு பில்டப்பா?)

ஆம்..
BLINDNESS - அப்படிப்பட்ட படம்தான்.!

ஒரு நகரம்- அதன் காலைநேரப் போக்குவரத்துச்சந்தடிகளில் சிக்னலில் ஒரு மனிதர் காரில் - பச்சைவிளக்குக்காகக் - காத்திருக்கிறார். பச்சை விளக்கு எரியும்போது அவருக்கு, கண் தெரியாமல் போய்விடுகிறது. அது ஒருவிதமான வெள்ளைக்கண் குறைபாடு- WHITE BLINDNESS-காரை எடுக்கமுடியாமல் தவிக்கிறார். அவருக்கு உதவ வந்த மனிதன் இவரது பார்வையின்மையைப் பயன்படுத்தி காரைத்திருடிக்கொண்டு செல்ல, அவரைச்சோதிக்கும் மருத்துவர் கண்ணில் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் எப்படி ஆனதென்று
தெரியவில்லையென்று சொல்லிவிட, வீடு வந்து சேருகிறார். அப்போது பிடிக்கிறது கதையில் சூடு!

அவர் பார்த்த, அவரைப்பார்த்த எல்லோருக்கும் தொற்றுநோயாக பார்வையின்மை ஏற்பட, மக்கள் தவித்துப்போகிறார்கள். இதில் மருத்துவரும் அடக்கம்.உடனே அரசு இந்த வகை நோயாளிகளை வெளியுலகத்திலிருந்து தனிமைப்படுத்துகிறது.அப்படி தனிமை முகாமிற்கு மருத்துவர் அழைத்துச் செல்லப்படும்போது அவரது மனைவியும் வருகிறார். ஆனால் அவருக்கு பார்வை நன்றாகத்தெரிகிறது. (எப்போதுவேண்டுமானாலும் தனக்கும் பார்வை போய்விடும் என்று அவரும் நம்புகிறார்)

அவர்கள் அடைக்கப்படும் தனிமை முகாமுக்குள்தான் மீதிக்கதை பயணிக்கிறது.

அங்கு, முதலில் காரில் பார்வை இழந்தவரும், ஏனையோரும் வந்து அடைக்கப்படுகிறார்கள். அதற்கு கடுமையான காவலும், கதவுகளும் உள்ளன. உணவுமட்டும் வெளி உலகத்திலிருந்து வரும்.அப்போது சின்னச்சின்ன பிரச்னைகளை அவர்கள் சந்திப்பதையும், கண் தெரியாதவர்களின் உலகம் எவ்வளவு ஒழுங்கற்றதாக ஆகும் என்று மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.ஒரு சமயத்தில், உணவுப்பொருள் உள்ளே வரும் ஒரு வார்டில் இருக்கும் ஒருவனுக்கு ஆதிக்க வெறி வந்து,கையில் துப்பாக்கியோடு மற்ற வார்டில் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள பணம், பொருட்களை கொடுத்தால்தான் உணவு கிடைக்கும் எனக்கூற, அதன்படியே செய்கிறார்கள். இவர்களிடம் ஒன்றுமில்லாமல் போகும்போது , அடுத்த வேளை உணவுக்கு வில்லன் கேட்பது மற்ற வார்டில் உள்ள பெண்களை ! வேறு வழியின்றி உணவுக்காக, தம் வார்டில் உள்ள பெண்களையும் அனுப்புகிறார்கள்!இந்த நிலையிலும், ஆச்சர்யமாக மருத்துவரின் மனைவிக்கு மட்டும் அந்த நோய் தொற்றாமல், பார்வை போகாமல் இருக்கிறார்.
இந்நிலையில், வெளியிலிருந்து உணவு வருவதும் நின்றுபோகிறது.மேலும் மேலும் வில்லனின் அராஜகம் அதிகமாக, வேறு வழியின்றி கண் தெரியும் மருத்துவரின் மனைவி அவனைக் கொன்றுவிடுகிறார். மீதமுள்ளவர்களுடன் அந்த முகாமிலிருந்து வெளிவருகிறார். அப்போதுதான் நமக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த நகரமே பார்வையின்மையால் பாதிக்கப்பட்டு சீரழிந்துபோய் இருக்கிறது. அந்த நகரத்திலேயே பார்வை தெரிந்தவர் கதாநாயகி மட்டும்தான்! மெதுவாக தன் கணவருடன் மற்றவர்களையும் கூட்டிக்கொண்டு தன் வீட்டை அடைகிறார். அங்கு அவர்கள் மெதுவாக தங்கள் வாழ்க்கையை வாழத்துவங்குகிறார்கள். முதலில் பார்வை இழந்தவருக்கு, மீண்டும் பார்வை வருகிறது . அத்துடன் படமும் நிறைவு பெறுகிறது.

இது நாவலாக வந்து படமாக்கப்பட்டிருக்கிறது. அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
José Saramago எழுதிய கதையின்
இயக்குநர் Fernando Meirelles.
கதாநாயகி Julianne Moore

படத்தின் ஒவ்வொரு காட்சியும் வீணாக்காமல் எடுக்கப்பட்ட்டிருக்கிறது.
கணவனின் மீது இவ்வளவு அன்பு மிகுந்த ஒரு மனைவியின் பாத்திரத்தை ஜுலியான் மூர் மிகச்சிறப்பாகச்செய்திருக்கிறார்.
அந்த முகாம் ஆரம்பத்தில் இருப்பதற்கும், போகப்போக அதில் ஏற்படும் மாற்றங்களையும் அதிர்ச்சிகரமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

வில்லனின் வார்டில் ஒரு இயற்கையிலேயே பார்வை இழந்தவர் இருக்கிறார். அவர் இவர்களைவிட பார்வையின்மைக்கு பழக்கப்பட்டிருக்கிறார் என்பது சிந்திக்கவைக்கிறது.அவருக்கு ப்ரெய்லி தெரியும் என்பது கூடுதல் திறமையாகப்பார்க்கப்படுகிறது.

முகாமிலிருந்து இவர்கள் வெளியேறியவுடன்,ஒரு சூப்பர்மார்க்கெட்டில் உணவுப்பொருட்களை எடுத்துக்கொண்டு வெளிவரும் ஜூலியான் மூரை கண்தெரியாதவர்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டு உணவைப்பிடுங்குவது சூழலுக்கேற்றவாறு பழகும் மனிதவளர்ச்சியை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் தேவைகளையும், அதற்காக அவன் போராட்டங்களையும், அவனுக்கு ஏற்பட்ட ஆதிக்க வெறியையும் அதற்காக அவன் அடைந்ததும் , இழந்ததுமான பாதையை இந்த முகாம் என்ற போர்வைக்குள் நமக்கு காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இன்னும் இந்தப்படத்தைப்பற்றி பேசிக்கொண்டே போகலாம்.

எப்ப வாய்ப்பிருந்தாலும்கண்டிப்பா பாருங்க !

Tuesday, May 19, 2009

உன்னை நாங்கள் கொன்றுவிட்டோம்!

விபரம் தெரிந்து
விளையாடும்போதெல்லாம்
வீரத்துக்கு
உன்னைதான்நினைப்பேன் !

எதிரிகளை
எப்படி கையாள்வது என்று
உன் யுக்தி கண்டு
ஊரெங்கும் சொல்லுவேன்!

தங்க இடமின்றி
தடுமாறியதலைமுறைக்கே
தலைவன் நீயென
தற்பெருமை கொள்ளுவேன்!


உன் எல்லாச்செயலிலும்
நியாயம் கண்டுபிடித்து
உனக்கே சொன்னால்
மகிழ்வாய் என்றெண்ணுவேன்!

நீ செய்தது
தவறாகவே இருந்தாலும்
செய்தது நீ என்பதால்
சரியென்று வாதிடுவேன்.

துன்பியல் சம்பவமென்று
துணிவுடன் கூறியதற்கு
என்ன ஒரு தமிழ் வார்த்தை
என்று எக்காளம் பேசிடுவேன்!

எப்படி ஊடுருவினாய்
அண்ணனே!
எல்லா இதயங்களிலும்
எந்தவிதச் சிரமமுமின்றி!?

நீ இறந்துவிட்டாய்
என்று வரும்
ஏராள வதந்திகளில்
இதுவும் ஒன்றாய் இருக்காதா?

உன்னை
நாங்கள் எங்கள்
இயலாமையால்
கொன்றுவிட்டோம்!

எங்களை
நாங்களே
எதிர்க்காமல்
தின்றுவிட்டோம்.

கையாலாகாத அயோக்கியன்
கவிதை எழுதுகிறேன்.
கண்ணீர் என்னமோ
கொட்டிக்கொண்டுதானிருக்கிறது!

Sunday, May 17, 2009

நரி



கோரைப்பல்லை வச்சு ஒரு இழுப்பு இழுத்துப்பாத்தேன்...
அந்தக்காஞ்சு போன மாமிசம் ஜவ்வு மாதிரி வந்ததே தவிர சாப்புட முடியும்னு தோணலை!

என்னடா இது இப்படி ரெண்டு நாளா எங்க தேடியும் சரியான ஆகாரமே கிடைக்கலையேன்னு கவலையா இருந்தது.

அப்படியே பொடி நடையா நடந்தேன். காட்டுக்குள்ள இருக்குற ஒத்தையடிப்பாதைல அந்தக்கிளவி கூடையத்தூக்கிக்கிட்டு போச்சு...கையில ஒரு பெரிய கம்பு இருந்தது.

கூடையில ஏதாவது திங்கிற சாமானாத்தான் இருக்கும். ஆனா எப்படி எடுக்குறது.. கிளவியை அடிச்சுச்சாப்பிடும் அளவுக்கு நமக்கு பலமில்ல!
கிளவிக்குத்தெரியாம அதை பின் தொடர்ந்தா ஏதாவது சிக்குதான்னு பாக்கலாம்.

அந்தக்கிளவி ஏதோ மொணகிக்கிட்டே போயிட்டிருந்தது.

மரங்கள் அடர்த்தி கொறஞ்சு..ஒரு மண்ரோடு தென்பட்டுச்சு! ஆஹா ...கிளவி அதுல இல்ல ஏறிப்போகப்போகுது...நமக்கு வேற ஏதாவது கிடைக்குதா பாப்போம்னு நினைச்சுக்கிட்டே திரும்பறதுக்குள்ள கிளவி என்னைப்பாத்துருச்சு....வீச்சுன்னு கத்திக்கிட்டே கம்பைத்தூக்கி என்மேல வீச, எகிறி ஓடினேன் ஒரு ஓட்டம்...பொசுக்குன்னு ஒரு பெரிய மரத்துக்குப்பின்னாடி போய் ஒளிஞ்சுக்கிட்டேன்.

அய்யய்யோ....யாராவது இருக்கீகளா...நரி...நரின்னு கிளவி கத்த...ஒரு ஆள் ஒடியாந்தான்.

என்ன கெளவி?

எம்பின்னாடி ஒரு நரி வந்துச்சு! -கூடைய புடுங்கிடுமோன்னுதான்..!

சரி..அதான் காட்டுக்குள்ள நெறயா திரியுதே..ஒண்ணும் செய்யாது போ! இந்தா கம்பு...! கெளம்பு..!

கிளவி கொஞ்ச தூரம் போனாள்..நான் ஒரு மேட்டுப்பகுதி மரத்தடியில் நின்னுக்கிட்டேன். அவ கூடைல அப்புடி என்னதான் இருக்குன்னு பாத்துடணும்!

போனவள் கொஞ்சம் நடமாட்டம் நிறஞ்ச எடமாப்பாத்து..ஒரு மரத்தடில உக்காந்தாள். கூடையை இறக்கினாள். அதுக்குள்ளேயிருந்து ஒரு சாக்கை எடுத்து விரிச்சா ! மறுபடியும் கூடைக்குள்ளேருந்து வட்ட வட்டமா ஒரு திண்பண்டத்தை எடுத்தா...நடுவுல ஒரு ஓட்டை இருந்தது. அதை எடுத்து அடுக்கினா...நான் மெதுவா இன்னும் கொஞ்சம் கிட்டக்க போனேன்.. எதிர் வரிசைல மரமா இருந்ததால, நான் இருக்குறது தெரியாது...! கிளவி கத்த ஆரம்பிச்சா...

வடை..வடை..!


அட.. அதுதான் வடயா? ரெண்டு மூணுபேர் வாங்க ஆரம்பிச்சாங்க...! வாங்கி சாப்பிட ஆரம்பிச்சாங்க..எனக்கு எச்சி ஊற ஆரம்பிச்சுருச்சு! என்னய கம்பை வீசி துரத்தின இல்லை? இரு...உங்கிட்டேயிருந்து வடைய லாவுறேன். ம்ம்...எப்புடி எடுக்குறது ?

யோசிச்சுக்கிட்டே கிளவியைப்பாத்துக்கிட்டிருக்கும்போதே... அவ உக்காந்திருந்த மரத்து மேலேருந்து ஒரு காக்கா 'சொர்ர்' றுன்னு பறந்து வந்து ஒரு வடைய லாவிக்கிட்டு பறந்தது. கிளவி கத்தி களேபரம் பண்ணி...கம்பை மறுபடியும் வீச...திருட்டுப்பய காக்கா..நிமிசமா தப்பிச்சுருச்சு..

ஆஹா..இந்தக்காக்காயால நம்ப பொழப்பு போச்சே...இனும கெளவி இன்னும் உஷாராயிருமே..ன்னு நினைச்சுக்கிட்டுருக்கும்போதே...காக்கா கிளவிக்கு எதிர்த்திசையில் பறந்துவந்து காட்டுக்குள்ள பூந்துடுச்சு...சரியா நான் ஒளிஞ்சிருந்த மரத்து மேல வந்து உக்கார, அடிச்சுதுரா யோகம்..!

நம்பளைத்தான் தந்திரத்துக்கு அடையாளமா சொல்வாய்ங்களேன்னு ,பட்டுன்னு...ஒரு யோசனை தோண..

ஏ...காக்காவ்!

திடுக்குன்னு முழிச்ச அது...யாது..யாது? ன்னுது. வாய்ல வடை வச்சிருந்ததுல சரியா பேச்சு வரலை!

அட..கீழ பாரு..!

ஓ நதியா..!

வேற எதுவுமே பேசாம நேரா மேட்டருக்கு வந்துட்டேன்.
ஆமா..நீ..நல்லா பாடுவியாமே..ஒரு பாட்டுப்பாடேன்.. ரொம்ப சந்தோசப்படுவேன்.

கொஞ்சம்கூட யோசிக்காம...வாயை அகலமாத்திறந்தது. அது வாயிலேருந்து சத்தம்வந்ததையே நான் பாக்கலை..வடை என்னை நோக்கி கீழ வந்துக்கிட்டிருந்தது.

'சொத்' ன்னு வடை விழ..அப்பதான் அதை கிட்டக்க பாத்தேன். நல்ல அழகா வட்டமா , மொத்தமா இருந்தது ! கிட்டக்க போய் மோந்து பாத்துட்டு வாசனையா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்போதே..காக்கா...

அய்யய்யோ.. நரி! அது என் வடை! தயவு செஞ்சு சாப்டுறாத...குடுத்துரு..!

சரி..சரி..நான் சாப்பிடலை...வா..வந்து எடுத்துக்கிட்டு போ !

நான் சொன்ன மறுவிநாடி கீழ பறந்து வந்தது.

நானும் ஒரு வினாடி கூட தாமதிக்கலை! கீழ என் உயரத்துக்கு வந்தபோதே ஒரே அடி...
அது தடுமாறுறதுக்குள்ள...அடுத்த அடி...காக்க சொத்துன்னு காலடில விழுந்தது. என்னமோ சொல்ல வந்தது. ரெண்டு ரெக்கயையும் பிச்சு, சாவகாசமா தின்னேன்.

என்ன பண்றது...ஒண்ணுமில்லாததுக்கு காக்காவாவது கிடைச்சதே...வடைய எவன் திம்பான் ? ! அதுவும் காக்கா எச்சியை !

Tuesday, May 12, 2009

ஓ - போடப்போறேன்

அன்பு நண்பர்களே..!

உண்மையிலேயே உங்கள் வேட்பாளர் சரியில்லாதவர் என்று தெரிந்தால்
49 (O) போடுங்கள்.செய்யவேண்டியதெல்லாம்..

வாக்குச்சாவடிக்கு செல்லவேண்டும்.

வாக்குச்சாவடி அலுவலரிடம் சென்று நம் முகவரியையும் , பெயரையும் சரி பார்த்து 17A புத்தகத்தில் கையெழுத்திட்டுவிட்டு. மையிட்டுக்கொண்டு....49 (O) என்று சொல்லுங்கள்!

அவரே அதை பூர்த்தி செய்வார்...காரணமாக...நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள்..எழுதப்படும்..
மீண்டும் கையெழுத்திட்டுவிட்டு....கையைத்தட்டிக்கொண்டு வந்துவிடுங்கள்..!


நான் 49 (O) தான் போடப்போகிறேன்..காரணமாக , புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியை நீக்கியது பொறுக்காமல் -என்று சொல்லப்போகிறேன்.

விபரம் அறிய தயவு செய்து இதையும் படியுங்கள்.

Sunday, May 3, 2009

நியூட்டனின் 3ம் விதி - அட !

தமிழில் , பழிவாங்கும் கதைகளில்,அடிதடியை விட்டால் வேறு ஒன்றுமே திரைக்கதையாக இல்லையா என்று அடிக்கடி நாங்கள் விவாதித்துக்கொள்வோம்.

அதில் பெரும்பகுதியை நிவர்த்தி செய்ய வந்துள்ளது நியூட்டனின் 3ம் விதி!

எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு சிறந்த படம் அமைந்தது அவர் செய்த புண்ணியம்!
முழுக்க முழுக்க புத்திசாலித்தனத்தை மட்டும் பயன்படுத்தி, ஒரு திருப்தியான படத்திற்கு அடிகோலியிருக்கிறார் இயக்குநர் தாய்முத்துச்செல்வன்



குரு(எஸ் ஜே சூர்யா) , ஈகிள் டிவி காம்பியரான ப்ரியாவை(ஷாயாலி பாகத்) க்காதலிக்கிறான். ஒரு சில கலாட்டாக்களுக்குப்பிறகு காதல் கைகூடி திருமணம் செய்யலாமென்று முடிவெடுத்த தினத்தன்று ஓரிரு சம்பவங்களுக்குப்பிறகு...ப்ரியா தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறார்.
ஏன் என்று அவன் அலையத்தேவையே இல்லாமல், ஒரு ஆதாரத்தை ப்ரியா விட்டுச்செல்கிறாள்.

அடுத்த ஆண்டு அவள் இறந்த அதே நாளில், காலை 10 மணிக்கு , குரு பிரம்மாண்டமான மீடியா சாம்ராஜ்ய மன்னன் ஈகிள் டிவியின் ஜேப்பி(ராஜீவ் கிருஷ்ணா)க்கு ஒரு போன் செய்கிறான் ! இன்று பகல் சரியாக 12 மணிக்கு உன்னைக்கொல்கிறேன் என்று !
அதை முதலில் நம்பாத ஜேப்பியை நம்பவைக்க, அடுத்த 3 நிமிடங்களுக்கு சேனல்களை நிறுத்திக்காட்டுகிறான். ஜேப்பி போலீஸின் உதவியை நாட,
அவர்கள் செல் நம்பர் மூலம் ஆளைக் கண்டுபிடிக்க, அது ஜேப்பியின் சின்னவீடான தாரிகாவை அடைகிறது. போலீஸ் விபரம் தெரியாமல் அவள் மீது கைவைக்க, விஷயம் குரு மூலமாக மீடியாவுக்குப்போய் மானம்
கப்பலேறுகிறது.

ஜேப்பியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனிக்கும் குரு , அவனது அலுவலக பாத்ரூமிற்கு வரச்சொல்லி அங்கும் ஒரு விளையாட்டு காட்டி - முழுமையாக பயமுறுத்துகிறான். பின்னர் தனியாக ஒரு ஏரியாவுக்கு
வரச்சொல்லி, அங்கு போக்குக்காட்டி அவனைவிட்டு ஒரு காரை எடுக்கச்சொல்ல, ஜேப்பிக்கு திக் என்கிறது. ஏனெனில் அது அவனது கள்ளப்பணம் வைத்திருக்கும் கார். அதை எடுத்துக்கொண்டு கோயம்பேடு
பஸ்டாண்டுக்கு வரச்சொல்கிறான். அங்கு -குருவைத்தாக்க -தேவா (யுகேந்திரன் ) என்ற ரவுடியின் ஆட்களையும் ஜேப்பி வரவழைத்திருக்க, அதைக்கண்டுபிடித்து, அவர்களுக்கு தர்ம அடி வாங்கிக்கொடுத்து, அதிலிருந்து ஜேப்பியை
காப்பாற்றுவதுபோல் நடித்து, தன்னைப்பற்றி ஒரு பெரிய பயத்தை உருவாக்கி தப்புகிறான்.

ஆனால் பஸ்டாண்டில் , வருமான வரி அதிகாரிகள் காரில் உள்ள கள்ளப்பணத்தை கைப்பற்றுகிறார்கள்.
இப்படியே ஒவ்வொன்றாகச்செய்து ஜேப்பியின் எல்லா கருப்புப்பக்கங்களையும் வெளிக்கொண்டுவந்து , அலற அடிக்க, தன்னை மிரட்டுவது யார் என்றே தெரியாமல் ஜேப்பி தடுமாற, தேவா மூலம் ஐடியா கிடைக்க , குரு ,ஜேப்பி கையில் சிக்கி சின்னாபின்னமாகி, கடைசியில் 12 மணிக்கு ஜேப்பியைக் கொன்றானா இல்லையா என்பதுதான் கதை..!

ஒரு சில லாஜிக் மீறல்களை நீக்கிவிட்டுப்பார்த்தால், காட்சிகளை வீணாக்காததற்கு டைரக்டருக்கு ஒரு பெரிய பூங்கொத்து!

சூர்யாவும் மிகவும் அடக்கி வாசித்து, கதாபாத்திரத்தின் பழிவாங்கும் உணர்ச்சியை மிகவும் அற்புதமாக நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்.

போலிசாக வரும் தலைவாசல் விஜய் " Sir ! This is my phone ! " என்பது மிகச்சரியான யதார்த்தம்!

யுகேந்திரன் , தேவா என்ற ரௌடியாக வந்தாலும் ரசிக்க வைக்கிறார். யார் இதைச்செய்திருக்க முடியும் என்று அவரை விட்டு விளக்க வைத்திருப்பது மிகச்சரியான காட்சி! 'அவன் இந்த ஒரு நாளுக்காக 365 நாள் வேலை பாத்திருக்கான் ' என்று உணர்ந்து சொல்லும்போது அவருக்கே கைதட்டல் விழுகிறது.

மற்றபடி எல்லாக்கதாபாத்திரங்களும் தன் பங்களிப்பை சீராக வழங்கி தமிழுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்குப் படத்தைத்தந்திருக்கிறார்கள்.

ஹீரோவை விட்டு ஒரு சண்டைகூடப்போடச்சொல்லாமல், ஆனால் வில்லனுக்கு அடி மேல் அடி விழ வைத்திருக்கிறார்கள்.

கடைசிக்காட்சியில் மட்டும்தான் எஸ் ஜே சூர்யா 1 நிமிடம் சண்டை போடுகிறார். மற்றபடி எல்லாமே புத்திசாலித்தனமான காட்சிகள்தான்.!

நியூட்டனின் மூன்றாம் விதியில் - அட போட வைத்திருக்கிறார் இயக்குநர்!
வாழ்த்துக்கள் சார்!

Friday, April 17, 2009

சங்கரின் காதல் - 2

சங்கரின் காதலைச் சொன்னதில்
எனக்கு கடுமையான அதிர்ச்சி!
ஒருபக்கம் என்னடாது இப்படி திடீர்ன்னு ஒரு முடிவு எடுத்துருக்கானேன்னு !
மறுபக்கம்..இவனுக்கெல்லாம் காதலிக்க பொண்ணு கிடைக்குதே, நாமளும்தான் இருக்கோமேன்னு புகைச்சல் வேற !

சரிடா...இருந்தாலும் இதெல்லாம் தப்புடா ! நீ மரியாதையா அந்தப்பொண்ணை அவுங்க வூட்டுல விட்டுட்டு ஒழுங்கா உன் வேலையப்பாருன்னு லேசான வில்லத்தனத்துடன் நான் சொல்ல,

பரவாயில்ல மாப்புள ..! செஞ்சது செஞ்சுட்ட ! நல்லபடியா போய்ட்டுவான்னு என் நண்பன் சொல்ல...

சங்கருக்கு வந்ததே கோபம்..
என்னது? உங்கிட்ட ஆசீர்வாதமோ அட்வைஸோ வாங்கவா நான் வந்தேன்.! நீங்கள்லாம் ப்ரெண்டாடா.. ? நட்புன்னா என்னன்னு தெரியுமா? உங்களுக்கு எங்க தெரியப்போகுது...இந்த வயசிலேயே பிஸினஸ் பண்ணி சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டீங்கங்கிற திமிரு! சரி சரி...அதெல்லாம் போகட்டும். 1000 ரூபா காசு குடுங்க! ன்னு அடுத்த அதிர்ச்சி கொடுத்தான்.

என்னது? காசா?

ஆமா ! கிளம்புற அவசரத்துல காசைப்பத்தி யோசிக்கலை! எங்கிட்ட காசு சுத்தமா இல்ல! அந்தப்பொண்ணுக்கிட்ட அதைச்சொன்னா என்னை என்ன நினைக்கும்..? அதான் உங்கிட்ட குடுத்து வச்சிருக்கேன், வாங்கிட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்னு அடுத்த குண்டை தூக்கிப்போட்டான்.

காசெல்லாம் தரமுடியாது! - இது நான்!

போனாப்போறான்டா ! ஏதாவது குடுத்தனுப்புவோம்...நம்பளை நம்பி வந்துருக்கான்! - இது என் நண்பன்!

என்னடா பட்டிமன்றம் நடத்திக்கிட்டிருக்கீங்க! மரியாதையா காசைக்கொடுத்து
அனுப்பிவைங்கடா! பெத்த அப்பா அம்மாக்கிட்டகூட சொல்லிக்காம ,வாழலாம்னு ஓடிப்போக உங்ககிட்ட வந்து நிக்கிறேன் பாரு...! என்னையச்சொல்லணும்! என்னமோ உண்மையிலேயே குடுத்துவச்சவன் மாதிரி கோவிச்சுக்கிட்டான்.

நான் பிடிவாதமா மறுத்தேன். டேய் இந்தக்காச வச்சுக்கிட்டு 3 நாள்கூட ஓட்டமுடியாது! அப்புறம் எப்படிடா சமாளிப்ப?

இல்ல..! கோயமுத்தூர்ல எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ் இருக்காங்க அவுங்க வேலை வாங்கித்தந்துருவாங்க! சமாளிச்சுருவேன்.

சரிடா..வேலயே கிடைச்சாலும் ஒரு மாசம் கழிச்சுத்தானே சம்பளம் கிடைக்கும்...! அதுவரைக்கும் என்ன பண்ணுவ? நான் இப்ப கிளம்பாத....உன்னைய கொஞ்சம் ஸ்டடி பண்ணிக்கிட்டு ஓடிப்போன்னு சொல்றேன்.

டேய் என்னடா இவன் இவ்வளவு விதண்டாவாதமா பேசுறான்..! என் நிலைமையப்புரிஞ்சுக்குங்கடா ! அந்தப்புள்ள காத்துக்கிட்டிருக்கு ! இப்ப உங்க அட்வைஸெல்லாம் வேண்டாம்டா...காசுதான் வேணும்...நண்பன்னா அவனவன் வேன் வச்சு கூட்டிட்டுப்போய் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிவைக்கிறாய்ங்க..நீங்க என்னடான்னா பிச்சைக்காசு(!) 1000 ரூவாய்க்கு அழுவுறீங்க! - நாங்கள் அவன் பாக்கெட்டில் இருந்து எடுத்ததை குடுக்காதது மாதிரி ராவடி பண்ண ஆரம்பிச்சான்.

என் வாதம் பலவீனப்பட ஆரம்பிக்க, என் நண்பன் காசை எடுத்துக்கொடுத்துட்டான்.

அப்பவும்....என்னமோ அவன் சோத்தில் மண்ணள்ளிப்போட்டமாதிரியே
முறைச்சுக்கிட்டே...போய்ட்டு வரேன்டா..! உன் காசை மணியார்டர் பண்ணி வச்சுடுறேன் னான்.

அப்புறம் அவனை மறந்தே போனோம்....!

7 வருஷத்துக்கப்புறம் , கோயம்புத்தூரில் ஒரு சொந்தக்காரங்க வீட்டு விசேஷத்துக்கு உதவி செய்யப்போனப்ப, பாத்திரம் வாங்க ஒரு பெரிய கடைக்குப் போனோம். பாத்திரமெல்லாம் வாங்கிட்டு , பேர் வெட்டணும்னா அங்க வாசல்ல உக்காந்திருக்கிறவர்க்கிட்ட கொடுங்கன்னு சொல்ல, பாத்திரத்தைக்கொண்டு போய் வச்சா...பேர் வெட்டுற எடத்தில்...அட..! நம்ம சங்கரு!

பாத்தவுடனே...டேய் ! சங்கரு! எப்படிடா இருக்க?

திடீர்ன்னு எழுந்தான்..என் சட்டையப்பிடிச்சான்..!

நீயெல்லாம் ப்ரெண்டாடா..? நட்புன்னா என்னன்னு தெரியுமாடா?

எனக்கு ஒண்ணுமே புரியலை! என்ன ஆச்சு இவனுக்கு?

ஏண்டா..நாங்கதான் பணம் குடுத்துத்தானே அனுப்பி வச்சோம்!

அதத்தாண்டா சொல்றேன்....ஏன்டா அனுப்பி வச்சீங்க! ஒரு அறை அறைஞ்சு ரூமுக்குள்ள வச்சு பூட்டியிருந்தீங்கன்னா...இப்படி நான் சீரழிஞ்சு சிரிப்பா சிரிக்கமாட்டேன்ல..! ஓடிவந்து...சரியான வேலை இல்லாம, நாங்க ரெண்டுபேருமே செரமப்பட்டு ....அந்தப்புள்ளயும் வேலைக்குப்போய்,
தெனம் சண்டை போட்டுக்கிட்டு - பொழப்பே நாறிப்போச்சு..! என் வாழ்க்கையையே கெடுத்துட்டீங்களேடா...- இன்னும் பேசிக்கொண்டே போனான்.

அன்னிக்குத்தான் நான் உண்மையிலேயே மண்டை காஞ்சேன்...!

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...