Saturday, March 31, 2012

குதிரை(க்கொம்பு) யாவாரம்











      சென்னையில் பள்ளிகள் தேர்வுகளை முடித்து, விடுமுறை விட ஆரம்பித்துவிட்டன. ஆனால், பெற்றோர்களுக்கு மிகப்பெரிய தேர்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு சீசனிலும், ஒவ்வொரு செயலில் நாம் அதிகம் ஈடுபடவேண்டியிருக்கிறது. அதுவும், பிள்ளையை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது என்பது ஒரு பேயடித்தல்தான்..!!

தங்கள் வீட்டுக் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முனைப்புடன், யாருடனாவது பேசிக்கொண்டோ, சிந்தித்துக்கொண்டோ, மண்டை காய்ந்துகொண்டோ செல்லும் தந்தைகளை, தாய்களை அல்லது தம்பதிகளை சாலைப்பயணங்களில், அலுவலக வளாகங்களில், வணிகக் கூடங்களில் இந்தக்காலகட்டத்தில் எல்லோரும் சந்திக்கலாம். அது நாமாகக்கூட இருக்கலாம்.

ஏன் இவ்வளவு பீடிகை என்று கேட்பதற்கு முன்னால்…நிற்க!
உங்கள் நினைப்பு சரிதான். எங்கள் வீட்டின் குட்டிப்பெண்ணை பள்ளியில் சேர்க்கும் நிலை வந்துவிட்டது. அவள் பள்ளி செல்ல அழுவதற்கு முன்னால், நம்மை அழுக அடிக்கிறார்கள்.

      ஒரு தனியார் பள்ளியில், அதுவும், அவள் அண்ணன் படிக்கும் பள்ளியிலேயே சேர்க்கும் ஆவலில்… நவம்பரிலிருந்தே நடையாய் நடந்து, விண்ணப்பம் வாங்க ஒரு டோக்கன் கொடுத்தார்கள். அதை வைத்துக்கொண்டு அவர்கள் சொன்ன தேதியில் ஜனவரியில் ஒரு புதன்கிழமை சாலை வரை நின்ற வரிசையில் தேவுடு காக்கவேண்டியிருந்தது. அப்போது நம்மை நான்காவது கூட படித்திராத செக்யூரிட்டி…’இப்டிக்கா நில்லு சார்! அப்டீக்கா நில்லு சார்..! பட்ச்சவங்கதானே நீயி..! என்று வரிசையில் நிற்பவர்களை சரமாரியாகத்திட்டி நம் கல்விச்சான்றிதழ்களை வாயாலேயே கிழித்தெறிந்தார். சரி.. வேதாள உலகத்துக்குள் போக இது ஒரு கட்டம் போலிருக்கிறது என்று பொறுத்துக்கொண்டு, உள்ளே சென்றால்.. அன்று விண்ணப்ப நேரம் முடிந்தது என்று சொல்ல ‘ கேட்டால் கிடைக்கும்’ நரம்பு வேலை பார்த்தது.

        கொஞ்சம் அழுத்திக் கேட்டதில். தானாக விண்ணப்பம் கை நோக்கி வந்தது. ஒரு விண்ணப்பத்துக்கு நான் கொடுத்த தொகையை வைத்து, A4 டம்மி ஷீட்டில், இரண்டு கலர்கள் கொண்ட அப்ளிக்கேஷன்கள் 500 காப்பிகள் அடிக்கலாம். அந்த வரிசையில் என்னைப்போன்று 600 பேர் நின்றுகொண்டிருந்தோம். ஆக, அப்ளிக்கேஷன் காசை வைத்துத்தான் அவர்கள் அடுத்த வகுப்புக் கட்டிடம் கட்டப்போகிறார்கள் என்பது உள்ளங்கை வெள்ளைத்தாளாகத் தெரிந்தது.

        அய்யோ..அடித்தல் திருத்தல் இல்லாம எழுதுங்க! பாத்து..பாத்து என்று விமானத்தை தரையிறக்கும் லாவகத்துடன் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தன்னை மாங்காட்டில் அருள்பாலிக்கும் அம்மனாகவே நினைத்துக்கொண்டு அதிகாரம் செய்துகொண்டிருந்த ஒரு அம்மாவிடம் (அந்தப்பள்ளியின் அலுவலர்) பவ்யமாக, காலில் விழுந்தால்கூடத்தவறில்லை எனும் அளவுக்குத் தவழ்ந்து கொடுத்துவிட்டு வந்தாயிற்று.!

      நம் மகன் அந்தப்பள்ளியில் படிப்பதால், கண்டிப்பாக சீட் கிடைத்துவிடும் என்று அன்றே பாயசம் தயாராகியது.

எப்போது நேர்முகத்தேர்வுக்கு அழைப்பார்கள் என்று தெரியாமல், தினமும் அ முதல் ஃ வரையிலும் ஆங்கில எழுத்துக்களையுமே மூன்றுவேளையும் ஊட்டி, ஒரு கொதிநிலையிலேயே மூன்றுவாரங்களுக்கு வீடு இருந்தது.

வரும் ஞாயிறன்று நேர்முகத்தேர்வு என்று ஒரு குறுஞ்செய்தி அந்தப் பள்ளியிலிருந்து வர, வீடே அல்லோகலப்பட்டது. எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று ஒரு கேன் கோல்ட் வின்னர் எண்ணையை ஹாலில் கொட்டிவிட்டு அதில் வழுக்கி விளையாடிக்கொண்டிருந்தாள் பள்ளிசெல்லவேண்டிய பைங்கிளி!

ஞாயிறும் வந்தது.
பள்ளியிலும் கூட்டம் அலைமோதியது.

நம் குழந்தைக்கு எங்கே நேர்முகத்தேர்வென்று நாங்கள் தேடி அலைய…அங்கிருக்கும் பள்ளி ஊழியர்கள் ஒருவருக்குமே உண்மையில் LKGக்கான நேர்முகத்தேர்வு எங்கு நடக்கிறது என்று தெரியவில்லை.

இது என்னடா சோதனை என்று மீண்டும் விட்ட இடத்துக்கே வந்தால்.. ஓ..நீங்க எல்.கே.ஜி அட்மிஷனுக்கு வந்தீர்களா? அது போனவாரமே முடிஞ்சுபோச்சே என்று சொல்லி…சாவதானமாக ஒரு லிட்டில்பாயை ஹிரோஷிமா மீது போட்டதுபோல் போட்டுவிட்டு அந்த ஆசிரியை சென்றுவிட்டார். ஜப்பானைவிட மோசமான நிலையில் நாங்கள் காட்சியளித்தோம்.

அப்போதும் மனம் தளராமல், நான் பள்ளி முதல்வரை பார்க்கவேண்டும் என்று அடம்பிடித்து, சந்தித்தால், அந்த அம்மா வீராவேசமாக..
சார். 3000 பிள்ளைங்க படிக்கிறாங்க.. ஆனா..மொத்தமே 40 பிள்ளைங்கதான் டி.ஸிக்கு எழுதிக் கொடுத்திருக்காங்க.. வேக்கன்ஸியே இல்லை.. ! உங்க பையன் இங்க படிக்கிறாங்கிறதுக்காக எல்லாம் நான் க்ளாஸ்ரூம் கட்டமுடியாது என்று ‘ உங்களுக்கு சீட் இல்லை’ என்பதை வெவ்வேறு காரணச்செங்கல்களால் அடுக்கினார்.

என் புத்திக்கு அந்தச்சூழலில்.. வடிவேலு சொல்லும் ‘ எலவு காத்த கிளி கதையில்..அந்தக் கருப்பு வேற..இந்தக்கருப்பு வேற..எனும் டயலாக் ஞாபகம் வந்தது.. இடுக்கண்ணில் நகைத்தும் தொலைத்தேன்.

அப்புறம் ஆரம்பித்தது பிரச்னை …..

ரெண்டு நாள் கழிச்சு சொல்றேனே….!

Thursday, March 22, 2012

ஓமப்பொடி # 4


               
         மின்வெட்டின் தாக்கம் காரணமாக, ஜெனரேட்டர் , இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. 


         எனது நெருங்கிய நண்பர் ஒருவர் ஜெனரேட்டர் வாங்க ஏற்பாடு செய்தார். அப்போது என் நண்பரான ஒரு ஜெனரேட்டர் நிறுவன மேலாளர் சொன்ன தகவல்கள் :

        சென்னையில் மட்டும் சென்ற ஆண்டை விட 340% ஜெனரேட்டர் விற்பனை அதிகரித்திருக்கிறது.

        அதற்கான துணைப்பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

        முன்னெரெல்லாம் ஆர்டர் எடுக்க போராடுவார்கள். இப்போது, அழைப்புகளை நிராகரிக்கும் அளவுக்கு அதிக ஆர்டர்கள்.

        போட்டியில், லாபம் குறைவாக்கிக்கொண்டாலும் ஒரு சில நிறுவனங்களே களத்தில் இருப்பதால், அது விற்பனையாளர் சந்தைதான். !

        எனக்கு ஒரு யோசனை வந்தது. : தமிழக அரசே ஜெனரேட்டர் விற்றால் என்ன? செஞ்ச பாவத்துக்கு பரிகாரமும் ஆச்சு! வியாபரத்தில் லாபமும் ஆச்சு!

        கடவுளை நினைத்துப் பார்த்தேன் : சென்னைக்கு மேலே அனந்த சயனத்தில் இருப்பவருக்கு.. திடீரென்று ஒரு பகுதியில் இருந்து, இரண்டு மணிநேரம் ’வ்ர்ர்ரூம்’ என்று இரைச்சல் வரும். அடுத்த வினாடியே.. இன்னொரு பகுதியிலிருந்து இரைச்சல்… எங்களைப் படைச்சு, இப்படியா இம்சிக்கிற.. நீ தூங்கவே கூடாது…! என்று நாம் கடவுளுக்குக் கொடுக்கும் பதிலடிதான்..ஜெனரேட்டர் சத்தம்.!!

        உண்மையில் இதனால் ஏற்படும் ஒலி மாசு நம்மை எவ்வளவு பாதிக்கும் என்று யாருக்குத் தெரியப்போகிறது.?
       ************************************************************************************************************

        புவனேஸ்வருக்கு,  ஒரு தமிழக நிறுவனத்தின் மேலாளர்களுக்கான மேலாண்மைப் பயிற்சியாளராகச் சென்றேன். அந்த நிறுவனத்தைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அங்கு சென்றபின் தான் , எவ்வளவு சிறப்பான மனிதர்கள் நம்மைச்சுற்றி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.


        அந்த நிறுவனத்தின் சேர்மன், தன்னிடம் சிறப்பாக வேலை பார்த்த இளைஞர்கள் இருவரை நிறுவன இயக்குநர்களாக்கி இருக்கிறார். வாரிசுகளை விட , திறமையுள்ளவர்களை முன்னேற்றியிருக்கிறார்.

        இங்கிருந்து 2005 ல் 30 ஊழியர்களுடன் புவனேஸ்வர் சென்று இறங்கிய அந்த நிறுவனத்தில் இன்று 3000 ஊழியர்கள்.

        அங்கு வேலைபார்க்கும் அனைவரும் , நிறுவனத்தின்மீது ஒரு உணர்வுப்பூர்வமான பந்தத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

        நிறுவனத்தின் இயக்குநருடன் அனைவரும் மிகுந்த அக்கறையும், அன்பும் வைத்திருக்கிறார்கள்.

        கனவு நிறுவனமாக அது வளர்ந்து நிற்கிறது. அவர்களை உற்சாகப் படுத்தச் சென்ற நான், உற்சாகமடைந்து வந்திருக்கிறேன்.


        அந்த நிறுவனம் Chennai Radha Engineering Works . www.crewpl.com இணைய தளத்தில் DAY CON என்ற ஒரு இதழ் வெளியிடுகிறார்கள். தினசரி அதனை புதுப்பிக்கிறார்கள்.

இதுபோன்ற உழைப்பு, நேர்மை, ஒழுக்கம் ,பணிவு நிறைந்தவர்களால்தான் ஒரு தேசத்தை முன்னேற்ற முடியும்.


************************************************************************************************************
        சென்ற வார ஆனந்த விகடனின் (21.03.2012) என் விகடன் சென்னைப் பதிப்பில் எனது வலைப்பூவைப் பற்றி வந்திருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு நிறைய நண்பர்கள் அழைத்து வாழ்த்தினார்கள். அனைவருக்கும் நன்றி..!!ஒருவரை ஒரே நாளில் இவ்வளவு மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்று நிரூபித்த விகடனுக்கும், வலையோசை குழுவுக்கும் உளமார்ந்த நன்றிகள்!






        என் பள்ளி நண்பன் ஒருவன் தேடிக் கண்டுபிடித்து, வாழ்த்தினான்.அது இன்னும் மகிழ்ச்சியைத் தந்தது. அவன் பெயர் ஞானவடிவேல்.அவன் என்னைவிட நன்றாகப் படிப்பான். எழுத்து மிகவும் அழகாக இருக்கும். நல்ல சிந்தனாவாதி. அவனது தந்தை தீவிர மார்க்ஸிஸ்ட். இப்போது அவன் ஒரு மருந்து நிறுவனத்தில் பெரிய பதவியிலிருக்கிறான். அவன் இவ்வளவு அழகாகக் கவிதை எழுதுவான் என்று தெரியாது. அவனது கவிதை ஒன்றை இங்கே தருவதில் பெருமிதம் கொள்கிறேன்.

எதிர்கால  இந்தியா

என்னாகும்  இந்தியா எதிர்காலத்தில் ?-எதில்
முன்னேறும்   இந்நாடு  வருங்காலத்தில்?

அதிகாலைத் தேநீரும் அந்திக்குப்பின் மதுநீரும்
பொதுவான பானமாகிப் போகும்-இனி
இளைஞரினம் கிழவரினம் ஆகும்.

கானல்வரிக் காவியங்கள் கோணல்வரி ஓவியங்கள்
நாணல்இணை  நாட்டியங்கள் சாகும்.-நம்
நுண்கலைகள் முன்கலைகள் ஆகும்.

தண்பரிதிமுன் எழுந்து செம்புழுதிமண் உழுது
தரணிக்கே உணவளித்த தேசம்-இனித்
தன்பசிக்கே தள்ளாடி மாயும்.

கடல்முகத்தைக் காண்பதற்கே  கடுகிவரும் ஆறனைத்தும்
அணை அடுக்கில் அடைபட்டுப் போகும்.-அதை
விடுவிக்க மாநிலப்போர் மூளும்.

கற்றவர்கள் கூட்டமிகும் .வேலையின்மை ஏற்றம்பெறும்
விற்கும் பொருள் ஏற்றுமதி ஒழியும் -இங்கு
விற்பன்னர்  ஏற்றுமதி நிகழும்.

ஊழலெனும்  நஞ்சுநன்றாய்   ஊறியுள்ள   நெஞ்சுமட்டும்
வாழையடி வாழையென வாழும். -இங்கு
ஏழைநிலை மென்மேலும் தாழும்.

ஆதிமுதல் நாம்வளர்த்த அன்பழிந்து அறிவொழிந்து
சாதிகளால்  இந்தியர்கள் பிரிந்து-ஒரு
தேதியினில் தானழிவார் விரைந்து.

நாளும்நிகழ் காரியங்கள்  நடுக்கம்தரும் சூழலிலே
நாளைஎன்ன ஆகும் இந்த நாடு?
என்ற வினா கண்டகனா இஃது.

அத்தனையும் பொய்த்திடலாம் சொர்க்கமென வைத்திடலாம்
சத்தனைத்தும் நமக்குண்டு பாரீர்!- இங்கு
சகலருக்கும் சமஉரிமை தாரீர்!  

சொத்தனைய பண்பாடு வித்தைதொழில்  விருத்தி செய்து 
வித்துக்களே   விழிமலர்த்தி வாரீர்!-இந்த
வையகத்தை  வழிநடத்தி வாழ்வீர்!


***********************************************************************************************************

Saturday, March 10, 2012

பெண்களே.. பெண்மையே! வாழ்க நீங்கள்!


 





எங்கள் வாழ்வில் அர்த்தம் சேர்த்து, எண்ணங்களில் ஏற்றம் சேர்க்கும்

பெண்மையே , பெண்களே வாழ்க நீங்கள்…!!

ஒவ்வொரு ஆண்டும் (2008, 2009, 2010, 2011) பட்டியலில் உள்ளவர்களுக்கும்....

இந்த ஆண்டு நட்புகளாய் வந்த,

லஷ்மி ராமகிருஷ்ணன்
ஷாரதா
ஷ்ருதி
ஷ்ரயா


கவிஞர் பத்மாவதி
ஸ்ரீ புவனா
ரேவதி
மணிமேகலை
ப்ரியா
சௌம்யா
கீர்த்தனா
சத்யா
சங்கீதா
கல்பனா

உமா பத்மநாபன்
ராஜி
ஆகியோருக்கும்..
இணைய நட்பாய்ப் பூத்த

கயல்விழி
ப்ரியா முரளி

ஆகியோர்
எந்நாளும் இன்பமாய், ஆரோக்கியமாய், இனிமையாய் வாழ என் உளமார்ந்த வாழ்த்துக்கள் !! 

( பதிவை… முன்னரே பதிவேற்றி தேதி மாற்றி schedule செய்ததின் விளைவு!! ஒரு நாள் தாமதமாக வெளியாகிறது…)

Monday, February 27, 2012

இப்படியாக ஒரு திரைப்பார்வை - ஏழாம் அறிவு







ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு,  விமர்சனங்கள் என்ற ஒரு சிந்தனையை எழுத்தாகவோ, பேச்சாகவோ நாம் ஒவ்வொரு படம் வெளியானபோதும் செய்துவருகிறோம்.

இதில் இரசிகனின் கண்ணோட்டத்தில் நன்றாக இருக்கிறது அல்லது.. இல்லை என்று ஒரே வார்த்தையில் முடிக்கப்படுவது உண்டு. தனது திரைப்பட ரசனையின் எல்லையை விரிவுபடுத்தியதால், அதன் நீள அகலங்களை சிலர் ஆய்வதும் உண்டு. திரைப்பட விமர்சனம் என்பதை இரசித்துச் செய்பவர்கள் ஒருபுறமும் ,தான் பார்த்ததை அப்படியே எழுதுபவர்கள் மறுபுறமும் உண்டு.

அத்தகைய விமர்சனங்கள் , படம் வெளிவந்து முதல் வாரத்தில் வந்துவிடுகின்றன. அதைப்பார்ப்பதா வேண்டாமா என்று வாசகனை முடிவெடுக்கவும் வைக்கின்றன.

விமர்சனங்களுக்கு இன்னொரு கோணம் ஏற்படவேண்டும் என்பது எனது அடிப்படை நோக்கம். அதைப் படம் வெளிவந்த உடன் செய்யாமல், சிறிது நாட்கள் கழித்து செய்து பார்த்தால் என்ன என்று நினைத்திருக்கிறேன். நாம் வாசித்த புத்தகங்களைப் பற்றி  விமர்சிக்கும்போது, அது வெளியான கால தேச வர்த்தமானங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. ஆனால், அது திரைப்படத்துக்கு அப்படியே பொருந்தாது எனினும், ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனையை உருவாக்க காரணியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

முதலில்...


ஏழாம் அறிவு




சீனாவுக்குச் செல்லும் பல்லவ மன்னன் அங்கு அவர்களது தற்காப்புக் கலைகளின் மஹா குரு போதிதர்மனாக ஆகிறான். அவன் கற்றுக்கொடுத்த வித்தைகளை வைத்தே இந்தியாவை அந்த நாடு நோண்டப்பார்த்தால் என்ன ஆகும்? … தமிழகத்தில் அதே குருவின் வம்சத்தில் ஒருவன் அதை முறியடித்தால் எப்படி இருக்கும்? என்ற What If… அணுகுமுறைதான் இந்தக் கதை…!!


அதன் நிறை குறைகள் பலவிதங்களில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால்.. என்ன செய்திருந்தால் இன்னும் சுவைபட இருந்திருக்கும் என்பதுதான் இந்த அலசல்..! கதையின் மூலமும், அது சார்ந்த விஷயங்களும் சிதைக்கப்படாமல் எப்படி மாற்றமுடியும் என்று சிந்தித்ததின் விளைவுதான் இது..!!


பல்லவ மன்னன் விஷயங்கள் காட்டப்படுகிறது. (சீனர்கள் நமக்கு எதிராகப் பயன்படுத்தினால்…என்று சொல்லும் அந்தப்பகுதி மட்டும் இல்லாமல்) அவரது வம்சாவளி DNA மூலம் மீண்டும் போதி தர்மனைக் கொண்டுவரலாம் என்று அது முடியும்போது ,அதை டாக்குமெண்ட்ரியாக எடுத்த ஸ்ருதி ஹாசன் தனது ப்ரொஃபஸரிடம் போட்டுக்காட்டுகிறாள். அந்த ஆள் ஒரு மெயில் அடிக்கிறான்.

சீனாவில்..அந்த மெயில் திறக்கப்படுகிறது. மீட்டிங் நடக்கிறது. அவர்கள் ஒரு ஸ்ருதியைக் கொன்று அவள் ஆராய்ச்சியைக் குலைக்கவும், இந்தியாவில் கிருமிகளைப் பரப்பவும் நோக்கு வர்ம, குங்ஃபூ விற்பன்னனை அனுப்புகிறார்கள். அவனும் இந்தியா வந்து இறங்குகிறான்.

ஸ்ருதி காஞ்சிபுரம் போய் பல்லவ வம்சாவளி குடும்பங்களைச் சந்திக்கிறாள். அவர்களில் ஒருவரது வீட்டில் கிடைத்த முடி மூலம், போதிவர்மனின் DNA ஒத்துப்போன சூர்யாவின் போட்டோவைப் பார்க்கிறாள். அவன் எங்கே என்று கேட்டால், சர்க்கஸில் இருக்கிறான் என்கிறார்கள். சர்க்கஸ் விளம்பரத்துக்காக சூர்யா சாலையில் ஆடி அறிமுகமாகிறார்.

சென்னை வந்து இறங்கிய டாங் லீ… நாய்க்கு ஊசி போடுகிறான்.

ஸ்ருதி, சர்க்கஸுக்கு வந்து சூர்யாவை சந்திக்கிறார். சூர்யா, ஸ்ருதியைக் கண்டவுடன் காதல் வயப்படுகிறார். அதை நண்பர்களும் ஆதரிக்கிறார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில், ஸ்ருதி சொல்ல வருவதையே சூர்யா கண்டுகொள்வதில்லை.

டாங் லீயால் கொல்லப்பட்டவர்கள் பற்றிய விசாரணை தொடங்குகிறது. அவனைப் போலீசார் தேட ஆரம்பிக்கிறார்கள்.

சூர்யா தன் காதலை ஸ்ருதியிடம் சொல்கிறார். அதை அவர் மறுத்து, அவரது முன்னோர் பற்றி சொல்லி தான் பல நாள் சொல்ல வந்த நோக்கம் பற்றிச் சொல்கிறார். சூர்யா அதற்கு ஒத்துழைக்க ஆரம்பிக்கிறார். ஸ்ருதிக்கும் சூர்யாவின் மேல் காதல் வருகிறது.

டாங் லீ ஸ்ருதியைத் தேடி வரும் இடங்களிலெல்லாம் அவள் மிஸ் ஆகிறாள். அவள் ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்தில் போதிதர்மனின் வாரிசையும் கண்டுபிடித்துவிட்டாள் என்று ப்ரொஃபசரிடம் சொல்கிறாள். அவரும் விசுவாசமாக சீனாவுக்கு தகவல் கொடுக்கிறார்.

டாங் லீ ஸ்ருதியைத்தேடி வந்தபோது தானாகவே சுட்டுக்கொண்டு இறந்தவர்கள் பற்றி, சிசிடிவி வீடியோ மூலம் பார்த்து போலீஸிடம் ஸ்ருதி அந்த வித்தை நோக்கு வர்மம் என்று விளக்குகிறாள். மீடியா அலறுகிறது.

      தனது தகவல்கள் எப்படி வெளிச்சென்றது என்று ஸ்ருதி கவலைப்பட, சூர்யா ப்ரொஃபஸர் மேல் சந்தேகம் கொள்கிறார். அதே போல், ப்ரொஃபஸரின் தகிடுதித்தம் கண்டுபிடிக்கப்படுகிறது. இடையில் டாங் லீயிடம் மாட்டும் சூழலில் அவன் கண்ணில் படாமல், ஆனால் அவனால் பார்க்கப்பட்டவர்களால் இருவரும் தாக்கப்படுகிறார்கள்.

      டாங் லீ கண்ணில் படாமல் ஒரு இடத்தில் வைத்து, ஸ்ருதி, சூர்யாவுக்கு மரபணு ஊட்டம் செய்ய முயற்சிக்கிறாள். அவளைத் தேடும் முயற்சியில் வில்லன் அவளது நண்பர்களைக் கொல்கிறான். போலீஸ் அவனைத் துரத்த, அவன் பல்வேறு சாகசங்கள் செய்து போலீஸிடமிருந்து தப்பிக்கிறான்.

      கடைசியில், ஆய்வுக்கூடத்திலிருந்து சூர்யாவை , ஸ்ருதி மீட்டுச்செல்லும்போது அவருக்கு நினைவு திரும்புகிறது. என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள், டாங் லீ குறுக்கிடுகிறான். அவன் கண்ணில் முதலில் சூர்யா படுகிறான். அவனிடம் நோக்கு வர்மம் பலிக்கவில்லை. ஸ்ருதி கண்ணில் படுகிறாள். அவளைப் பார்க்கிறான். இப்போது ஸ்ருதி , சூர்யாவைக் கொல்லத் துரத்துகிறாள். சூர்யா தன்னையும் காத்துக்கொண்டு டாங் லீயையும் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்ருதியுடன் சண்டை போடுகிறான். அப்போது அவனுக்கு நோக்கு வர்மம் வேலை செய்ய ஆரம்பித்து, அவளை சாந்தமாக்குகிறான். பின்னர் டாங் லீயுடன் சண்டை போட்டு முடிக்கிறான்.

      இப்படி இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று எண்ணியதன் விளைவு..இந்தப்பதிவாக வந்திருக்கிறது. இன்னும் சில படங்களை இப்படி விமர்சிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.!

ஒரு படைப்பாளியின் படைப்பை, அவரது படைப்பாகவே வைத்திருந்து சிறு மாற்றங்களைச் செய்து பார்ப்பதுதான் இதன் நோக்கம்..! அவர் படத்தை என் படமாக்கும் முயற்சி அல்ல..!! விமர்சனத்தையும் விமர்சனம் பண்ணுவேன்னு யாராவது கோதாவில் இறங்கினால்…வுடு ஜூட்..!!






Tuesday, February 14, 2012

ட்விட்டுரை # 2

                           






எனது பல்வேறு காலகட்ட கீச்சுக்களின் தொகுப்பு

அக்கா..வீட்டிலியே இருந்தா வெளிச்சொத்துக்களை யாரு பாத்துப்பா? _அப்ப சரி!! குடும்பத்தோட வெளில போய் பாதுகாத்துருங்க! - அப்ப மக்கள்? ஹெஹெஹெ!!


சொத்துக்குவிப்பு வழக்கில், அப்ரூவரானா அல்வாக்கடை வச்சுத்தரேன்னாரு வூட்டுக்காரரு...நான் வரேன்க்கா!! #யாருடீ இவுங்களை வெளில அனுப்பிச்சது?


முல்லைப் பெரியாறை விட்டுட்டு மன்னைப் பெரியோரை நினைக்கும் இந்த தமிழ்க்கூட்டம்..!! கிடைத்த கேப்பில் கட்டையப்போடுடே சாண்டி!!


நானே எப்படிடா வெளில போலாம்... இதுவரைக்கும் அமுக்கினதை அனுபவிக்கலாம்னு நெனச்சிக்கிட்டுருந்தேன்.மவராசி..தானே கழட்டிவுட்டுட்டா! #யாரு?யாரோ!


காந்தித்தனம் நன்றுதான்எதிராளி ஆங்கிலேயனாக இருக்கும் பட்சத்தில்..! இந்தியனென்றால்..டையர்த்தனம்தான் நல்லது..#ச்சுட்டேபுடணும்!


பணக்கார பையனை காதலிக்கும், அழகான பெண்ணை காதலனுக்கும் அறிமுகப்படுத்துங்கள்!அப்புறம் என்ன ? Break Up தான்! ஸ்வீட் எடு கொண்டாடு #Breakup Idea


அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமான்னு கேட்டால்...ரெண்டுபேரையுமே பிடிக்காது முகத்துக்கு நேராகச் சொல்லும் நேர்மையான பாப்பாதான் நாளைய VIP


இனி ஒரு விதி செய்யப் புறப்படும் மருத்துவ விஞ்ஞானியின் வேலை. இனி ஒரு வியாதி செய்வது!! - இது என் 9ம் வகுப்பில் எழுதியது!!


இதுஇல்லாமஇதுபண்ணினாலோ, ‘இதுபண்ணாமஇதுபோட்டுக்கிட்டாலோஇதுவரும்..ஜாக்கிரதை!! #HIV


நீங்கபாட்டுக்கு மலைக்குப் போறேங்கிறீங்க? நாங்க இங்க ஒரு பெரிய பிரச்னைக்கு பிச்சிக்கிட்டிருக்கோமே மேdam!!


30 நாளில் 3000 கோடி செலவழிக்கணுமா அருணாச்சலம்!! # டேய் அண்ணனை பஸ்ஸில் ஊரைச்சுத்திக்காட்டி , பால் வாங்கிக்குடு!


ஊழலை ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது - சோனியா # ஏன் இந்த திடீர்த் தற்கொலை முடிவு?


அணு உலை வேணுங்கிற அப்பாடக்கரெல்லாம் அங்கயே உக்காந்துக்கவேண்டியதுதானே? சொல்லிட்டு டெல்லிப்பக்கம் ஓடிர்றானுங்க! #நீங்க இருந்து காட்டுங்க!



பள்ளி இருக்கும் நாளில் 7:30 மணிக்கு எழுப்ப பெரிய போரே நடக்கும்..! லீவுன்னு சொன்னவுடனே பயபுள்ளை 6 மணிக்கெல்லாம் எந்திருச்சு ஆட்டம்.!.#சேட்டை மகன்.


எது எப்படியோ? இன்னிக்கு ஒரு சொந்தக்காரப்பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சு அவன் வாழ்க்கையை சீரழிச்சாச்சு! அப்பாடா!


மயக்கம் என்ன : அடுத்தவன் காதலியை சுடலாம்.. நம்ப  படத்தை அடுத்தவன் சுடப்புடாது..! இதுதான் கருத்து.. இல்லையா யுவர் ஆனர்? #டவுட்டு


நான் ஏன் எந்தக்கருத்துமே சொல்லாமமண்மோகனா இருக்கேன்னு தெரியுதா? ஏதாவது பேசினா அடிக்கிறாய்ங்க! இல்ல சரத்து? #யாரு? யாரோ!


800 ஆண்டு பழமையான அனுமார் கோவிலை எப்படிச் சுருக்கமாகச் சொல்வது? ‘மாருதி 800’ !! # முடியல!



இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...