Friday, July 17, 2015

வெறும் கணக்கு



விகடனில், எஸ்.ராவின் ‘வெறும் கணக்கு’ சிறுகதை எனக்குள் பல
நினைவலைகளையும், நெகிழ்ச்சியையும் உண்டாக்கிவிட்டது.
பண விஷயத்தில், யாராலும் நம்பப்படாத ஒருவர், தன்னை நம்பிய ஒருவரின் மரணச் செலவை பைசா சுத்தமாக அவரது மகனிடம்
ஒப்படைக்கும் நிகழ்வை இத்தனை அற்புதமாக, நுட்பமாக எழுதி எஸ்.ரா எப்போதும்போல் நம் மனதில் தனக்கான சிம்மாசனத்தை இன்னும் பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில், எத்தனை பேர் அன்றாடச் செலவுகளை பைசா சுத்தமாக கணக்கு எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் பெரும்பாலும் எழுதி எக்ஸலில் பதிவு செய்துவிடுவேன். அது பல விதங்களில் உதவியிருக்கிறது. அதனை நான் சந்திக்கும், பயிற்றுவிக்கும் அனைவருக்கும் சொல்லி வருகிறேன்.
ஏனெனில் செலவில் நமக்கிருக்கும் விழிப்புணர்வே நமது வருமானத்தைப் பற்றிய அறிவை அதிகமாக்கும் என்பது எனது எண்ணம். அதைப் பின்பற்றும் பலரும் கிடைத்த மகிழ்ச்சியையோ, கவன உணர்வையோ பகிர்ந்துகொள்ளும்பொழுது இன்னும் பெருமையாக இருக்கும்.
இந்தக் கணக்கெழுதும் விஷயத்தில் எனது தந்தைதான் எனக்கு
முன்னோடி.எத்தனை அதிக வேலைப்பளு இருந்தாலும், அன்றாட செலவுக்கணக்கை மிகச்சரியாக எழுதிவைத்துவிட்டுத்தான் தூங்கப்போவார்.
மிகக்குறைவான
வருமானத்தில்கூட, அதனை தவறாமல் செய்து வந்து, இன்றும் அந்தக் கணக்கெழுதும் வழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
எத்தனையோ தருணங்களில், அவரது கணக்கு நோட்டின் மூலம், முன் ஆண்டுகளில் புதுக்கோட்டை -
சென்னை பேருந்துக் கட்டணம் 55ரூபாய் ,
வசந்தவிஹார் சாப்பாடு 5ரூபாய்,
ஒரு சீப்பு வாழைப்பழம் 1ரூபாய் ,
சாரதாஸில் வாங்கிய சட்டை 44 ரூபாய்,
திண்ணை பூச கொத்தனாருக்குக் கொடுத்த நாள் கூலி 10 ரூபாய் என்று பல நிகழ்வுகள், பொருட்களின் விலைவாசியைத் தெரிந்துகொள்ளும்போது பொருளியலே படித்த அளவுக்கு சிந்தனை விரிந்திருக்கிறது.
ஒரு திருமண நிகழ்வு மாதிரியான குடும்ப விழாக்களில் அதன் மொத்தச் செலவையும் எழுதி வைத்து, பின்னர் எடுத்துப் பார்க்கும்போதோ, அந்தச் செலவுக்குப் பிறகு , மிச்சமிருக்கும் தொகை சரியாக இருக்கும்போதோ கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதேபோல் அந்த விழா வீட்டினர் , நம்மிடம் கொடுத்த தொகைக்கு சரியான இரசீதுகளுடன் கணக்குக் கொடுத்துவிட்டு, நிமிர்ந்து நடக்கும் பெருமை அதைவிட அலாதி!
பொதுவாக இப்போது நம்மில் எத்தனை பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னால், எல்லா வீடுகளிலும் ஒரு கணக்கு நோட்டு இருந்திருக்கும்.
இந்த நினைவுகள் அனைத்தையும் தூண்டி , நெகிழவும் மகிழவும் வைத்த எஸ்.ராவுக்கு அழைத்துப் பேசியபின்னரும் மீதமிருக்கிறது உணர்வின் மிச்சம்!
நன்றி எஸ்.ரா , இப்படிப்பட்ட உணர்வுகளைப் பதிவு செய்தமைக்கு! நீங்கள் எங்கள் பொக்கிஷம்!

Saturday, May 23, 2015

அருகாமை!

தஞ்சையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது,
அவர் ஒரு ஸ்க்ரீன் பிரிண்ட்டிங் பிரஸ் வைத்திருந்தார். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்றை வாங்கி அதற்குத் தவணை முறையில் பணம் கட்டி வந்தார். அவரிடமிருந்து ஒரு மாதமாக தவணை வரவில்லை என்று வசூலிக்கும் நபர் காட்ட, அவரைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் கிளை நிர்வாகியான எனக்கு வந்துவிட்டது.

அன்று மாலை 4 மணி இருக்கும். சென்றபோது நல்ல உயரமான நபர் ஒருவர் தாடி வைத்துக்கொண்டு, பெரிய கண்களுடன் நின்றிருந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பேச ஆரம்பித்தேன். கொஞ்சம் உடம்பு சரியில்லை. இந்த வாரம் வந்துரும் . மொத்தமா குடுத்துர்றேன் கவலைப்படாதீங்க..! வேணும்னா நாளைக்கு சாயங்காலம் ஒரு தொகை வரவேண்டியிருக்கு ! அதையே தந்துர்றேன். நீங்க வாங்களேன். என்றார். சரி சார் ! என்று சொல்லிவிட்டுக் கிளம்பும்போது, அவர் மேசையில் இருந்த புத்தகங்களும், சிற்றிதழ்களும் என்னைக் கவர்ந்தன. ஏனெனில் நானும் எனது நண்பன் எழிலரசுவுடன் சேர்ந்து “விடியல்” என்ற சிற்றிதழ் நடத்திக்கொண்டிருந்தேன்.

            அந்த ஆர்வத்தில் , அவரிடம் பேச ஆரம்பித்தேன். அவரும் குழந்தை போல் இலக்கியம் குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டார். அவர் நடத்தும் பத்திரிக்கை பற்றியும் சொன்னார். பேசிவிட்டுக் கிளம்பும்போது, தெற்கு வீதியில் ஒரு கடை மாடியைச் சொல்லி, அங்குதான் இலக்கியக் கூட்டம் நடக்கும். வாங்களேன். அங்கேயே வந்து பணம் வாங்கிக்குங்க என்று சொன்னார்.

      அதேபோல் அங்கு போய்ப் பார்த்தால், நிறையப் பேர் வந்திருந்தார்கள். காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இவர் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். தாடியைத் தடவி விட்டுக்கொண்டே சட்டைப்பையிலிருந்து ஒரு கவரை எடுத்தார். பணத்தை வாங்கிக்கொண்டு நானும் ரசீது போட்டுக் கொடுத்தேன். உடனே, என்னை அந்தக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். “ஒரு சிற்றிதழ் நடத்துறார்” என்று சொல்லி ஆரம்பித்தார்.

      நிறையப் பேசினார்கள். கேட்டுக்கொண்டிருந்தேன். கடைசியில் அவரிடம் விடைபெறும்போது, நான்கைந்து புத்தகங்களை எடுத்து கையில் கொடுத்து, நிதானமா படிச்சுட்டு சொல்லுங்க! ஒருநாள் இந்தப் புத்தகத்தைப்பத்தின உங்க கருத்துக்களைப் பாத்துரலாம் என்று உற்சாகமாகச் சொல்லி வழியனுப்பினார்.

அதற்குப்பிறகு பல கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர் பெயர் தெரிந்து, அவரும் ஒரு எழுத்தாளர் என்று அறிந்து, அவரது நூல்களையே ஆழமாகப் படித்து, புரிந்துகொள்ளமுடியாமல் சில இடங்களில் தடுமாறி , “தப்பா நினைச்சுக்காதீங்க. எனக்குப் புரியலை” என்று நான் சொல்லி, அவரே அதற்கு விளக்கமும் அளித்து , ஆதுரமாகப் பேசி அனுப்புவார். இசை , கலை, இலக்கியம், வரலாறு, மராட்டிய மன்னர்கள், தஞ்சையின் பாரம்பரியம் என்று அவர் தொடாத விஷயங்களே இருக்காது. அனைத்தையும் ஆழமாக அலசுவார். துவக்க காலங்களில் நான் படித்த பின் நவீனத்துவ இலக்கியங்களை எனக்கு அறிமுகப்படுத்தியதே அவர்தான்.!

அவர் வீட்டில் ஒரு பெரிய நாய் வளர்த்துவந்தார். விபரம் தெரிந்து நான் பார்த்த முதல் மிகப்பெரிய நாய் அதுதான்.

நான் வேலையை விட்டுவிட்டு வெளிநாடு போகும்போது சொல்லிவிட்டுச் சென்றேன்.

பிறகு தொடர்பே இல்லை. சில ஆண்டுகள் கழித்து திரும்ப தஞ்சை செல்லும்போது விசாரித்தேன்.

இறந்துவிட்டார் என்றார்கள்.

அவரது நிறுவனத்தின் பெயர் GML Screen Pirinting என்று தெரியும்.

பழகத் தொடங்கி அவரை பல காலம் “GML பிரகாஷ்’ என்றுதான் நினைவு வைத்திருந்தேன்.

அவர்தான் எழுத்தாளர் “தஞ்சை பிரகாஷ்” என்று பின்னர்தான் தெரியும்.







Thursday, April 9, 2015

செம்மரச் சந்தேகங்கள் !





எத்தனையோ கேள்விகள் இடிக்கிறது !!
செம்மரக்கடத்தல் தவறுதான்… ஆனால் அது சுட்டுக்கொல்லும் அளவுக்குக் குற்றமா?

தப்பிச்செல்ல முயற்சிப்பவர்கள்… சுட்டுக்கொல்லப்படும் வரை அவ்வளவு பெரிய கட்டையை தூக்கிக்கொண்டேவா ஓடினார்கள்?

தாக்கினார்கள் என்றால், திருப்பி துப்பாக்கியால் சுடும் அளவுக்கு தூரத்தில் இருந்தார்களா? அப்படியென்றால், எதனால், எங்கு தாக்கினார்கள்...?

20 பேரும் கையில் செம்மரக்கட்டையையும் வைத்துக்கொண்டு, எதனால் தாக்கியிருக்கமுடியும்?

கீழே போட்டுவிட்டுத் தாக்கினார்கள் என்றால், ஓடும்போது சுட்டிருந்தால், அந்தக் கட்டைகள் அருகிலேயே மீண்டும் வந்து படுத்துக்கொண்டார்களா?

பிடிபட்டு தப்பிப்பவர்கள்தான் தாக்குவார்கள். மரம் கடத்தியவர்களை இன்னும் பிடிக்கவே இல்லை எனும்போது, அவர்கள் ஏன் தாக்கித் தப்பிக்கவேண்டும்.?

அதெப்படி இருபது பேரும் ஒரே வரிசையில் சுடப்பட்டார்கள்? இவர்கள் மட்டும் ஒரே வேகத்தில், சம தூரங்களில் ஓடிக்கொண்டிருந்தார்களா? 

சுட்டது எத்தனை காவலர்கள்? அவர்கள் ஓடிய அனைவரையுமே குறிபார்த்துச் சுடும் அளவுக்கு அப்பாடக்கர்களா?

ஒரு குற்றம் நடந்தால், அதைச் செய்யத்தூண்டியவருக்கு(த்தான்) தண்டனை தரவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அப்படி இருக்கும்போது, இவர்கள் நேரடியாக செம்மரத்தை வெட்டி, ஏற்றுமதி செய்ப்வர்களா? அல்லது, இவர்களை இப்படி வெட்டிவரச்சொன்ன முதலாளி யார்?

அந்த முதலாளியைக் காப்பற்றத்தான், ஒரு தடயமும் சாட்சியாகக் கூட பிடிபட்டுவிடக்கூடாது என்று குற்றம் செய்ததாகச் சொல்லப்படும் தொழிலாளர்கள் சுடப்பட்டார்களா?

இயற்கை வளம் சுரண்டப்பட்டுவிடக்கூடாது என்பதில்… அவ்வ்வ்வளவு அக்கறை நிறைந்தவர்களா அரசும், வனக்காவலர்களும்? அப்புறம் ஏன், மத்தியப்பிரதேசம் , சத்தீஸ்கர் போன்ற பல மாநிலங்களில் வனக்காவலர்களே , பழங்குடி மக்களை வைத்து பல இயற்கைப் பொருட்களைக் கடத்துகிறார்கள்?

செம்மரக்கடத்தலில் அவர்களுக்கும் பங்கிருப்பதாக பல ஆண்டுகளாக ஆந்திர வனத்துறை மீது பல்வேறு தெலுங்கு ஊடகங்கள் சொல்லிவருவது சரிதானோ?

கேள்விகேட்க ஆளில்லையென்றால், நாங்கள் காவலர்களாக இருக்க மாட்டோம். யாரையோ காக்க, யாரை வேண்டுமானாலும் போட்டுத்தள்ளுவோம் என்பதுதான் ஆந்திர வனத்துறையின் சட்டமா?

மனித உரிமை … மனித உரிமை என்று கதறிக்கொண்டிருக்கும் தேசத்தில், மனித உயிர்கள் துச்சமாவதுதான் நமது நாகரீக வளர்ச்சியா?

இயற்கையைக் காக்கிறேன் என்று போலியாகச் சொல்லிக்கொண்டு, மனிதனைப் பலிகொடுக்கத்தான், மனிதக்காவலர்களை நாம் வளர்த்துக்கொண்டிருக்கிறோமா?
சட்டம் தன் கடமையை இப்படித்தான் செய்யுமா?

அய்யா… நான் தமிழன் என்று கொதிக்கவில்லை.. இந்தியன் என்று கூவவில்லை., ஏழைப்பங்காளன் என்று எழுந்திருக்கவில்லை. மனிதன் என்றுதான் மருகிக்கொண்டிருக்கிறேன். சக மனிதனுக்கு இப்படி நடந்தது பதைக்காதா?

இந்தக் கட்டையைக் கொண்டு சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்தால்தான் அடுத்த வேளை சோற்றுக்கு கொஞ்சமாவது காசு கிடைக்கும். கிராமத்தில் விட்டுவந்த மனைவி குழந்தைகள் முகத்தைப்பார்க்கலாம் என்று – செய்வது தவறு என்று தெரிந்தும் – உயிர்வாழத் தவறு செய்தவர்களின் உயிரைப் பறித்தது எந்த விதத்தில் நியாயம்…?

எவனோ ஒரு செம்மரக்கடத்தல் சாம்ராஜ்ய அதிபனைக் காக்க – தன் அதிகாரிகளின் ஆணையைத் தீர்க்க – சட்டத்துக்கு முன் நிறுத்தியிருக்கவேண்டியவர்களை , கண்ணுக்கு முன் அப்பாவி என்று தெரிந்தும் சுட்டுக்கொன்றுவிட்டு, அன்றிலிருந்து, மனசாட்சி உறுத்தியே அச்சத்தில் வாழப்போகிற ஏதோ ஒரு காவலன் எழுதப்போகும் சுயசரிதை மட்டும்தான் நடந்த தவறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருமா?

அதுவரை நாமும் சொரணை இன்றிக் காத்திருப்போம்.

மனிதம் வாழ்க !

Thursday, August 21, 2014

மருத்துவ சோதனை !!

நீயா ? நானா? வில் ஒரு நடந்த மருத்துவர்களின் பரிசோதனை பற்றிய விவாதத்தில்.. ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொள்ளவே முடியவில்லை...

மருத்துவர்களைப்பார்த்து கோபி கேட்டார்....

நீங்கள் ஏன் மருத்துவ சீட்டுகளை அதிகரிக்க விரும்பவில்லை ? ஏன் அதிகரிக்கவில்லை? ஏன் டிமாண்டை ஏற்படுத்துகிறீர்கள்? என்று !!

என் நினைவு சரி என்றால்... மருத்துவக்கல்லூரி இடங்களை அதிகப்படுத்தச்சொல்லி, 7 ஆண்டுகளுக்கு முன்னால், மருத்துவ மாணவர்கள் போராடினார்கள்..

அதுவே போகட்டும்.. எனக்கு ஒரு சந்தேகம்..!!

எஞ்சினியர்கள்தான்..எஞ்சினியரிங் காலேஜ் சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு?

வக்கீல்கள்தான்.. 
சட்டக்கல்லூரி சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு ?

எத்தனைபேர் கல்லூரியில் படிக்கணும்கிறதை... மாணவனே நிர்ணயிக்கிறானா என்ன?

இதைத்தான் நம்ம ஊரில் ..

போறபோக்கில் போட்டுவிட்டுப் போறதுன்னு சொல்லுவாங்க !!

கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்..!!

சரி.. மருத்துவர்களுக்கு வருவோம்…


எனக்குத் தெரிந்து மிக நல்ல மருத்துவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சென்னை அரசு மருத்துவமனையிலேயே பொதுமக்களிடம் கனிவாகப் பேசும் மருத்துவர்களைப் பார்த்திருக்கிறேன். ஏன்..? நண்பர் மருத்துவர் புருனோ பற்றியும் அவரது துறை சார்ந்த நிபுணத்துவம் பற்றியும் அவர் துறையின் மேலதிகாரிகள் அவர் அளவுக்கு திறமையான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வெளியில் இல்லை என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இன்னும் 20 முதல் 50 ரூபாய் வரை ஆலோசனைக் கட்டணம் பெற்றுக்கொண்டு சிறப்பாக மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நோய்ப் பரிசோதனைக் கூடங்களில்... இரண்டு வகை!
ஒன்று.. பரிசோதனைக்கு டெக்னீஷியன்கள் மட்டும் கொண்டு இயங்கும்

இன்னொன்றில்.. பரிசோதனை மருத்துவர் (Pathologist) கொண்டு இயங்கும்.

முதலாவதில்தான், பெரிய தவறுகளுக்கான சாத்தியங்கள் அதிகம்.

இரண்டாவதில் ... தவறுகளுக்கான சாத்தியம் குறைவு.

குறிப்பாக..
சென்னையின் பிரதான பகுதியில் ஒரு பரிசோதனை நிலையம் நடத்திவரும் ஒரு பேத்தாலஜி மருத்துவர் தனது மேலாண்மைத் திறனை வளர்த்துக்கொள்ள என்னை அணுகினார்.

அவர் முதலில் தன் கொள்கையாகச் சொன்ன ஒரே விஷயம்...

நான் மற்ற மருத்துவர்களின் பரிந்துரையால்தான் அதிக சோதனை நடத்தமுடியும். ஆனால், அவர்களுக்கு நான் கட்டிங் கொடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறார்கள். 

ஆனால், நான் எந்த டாக்டருக்கும், நோயாளியின் பரிசோதனைக்காக கட்டிங் கொடுப்பதில்லை என்று உறுதியாக இருக்கிறேன். எந்த டாக்டர் கட்டிங் வாங்காமல் எங்களைப் பரிந்துரை செய்கிறார்களோ அந்த ஆர்டர் போதும். ”

டாக்டர்களுக்குக் கட்டிங் கொடுப்பதை விட, நேரடியாக பொதுமக்களிடம் , பரிசோதனைக்குச் சரியான தொகையை வசூலிப்பதுதான் தனக்கு தர்மம் என்று உறுதியாகச் செயல்படுகிறார். 

அவருக்கு ஆலோசகனாக இருப்பதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது.
ஆனால், இப்படிப்பட்டவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவித்தாலே போதும்...!!

தவறானவர்களைக் குறைகண்டு பூதாகரப்படுத்துவது ஒருவிதம் என்றாலும்... சரியானவர்களை நிறைய அடையாளம் காட்டுவதுதான் நேர்மறைச் சிந்தனையாக உணர்கிறேன்.

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...