சென்ற வாரம் ஒரு நாள் மிகச்சாதாரணமாய்த்தான் விடிந்தது.
என் அன்பு நண்பர் ஷேக் அப்துல்லா...ஊரில் ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார். புதுக்கோட்டை போன்ற ஒரு பின் தங்கிய மாவட்டத்திற்கு ஒரு ஏற்றுமதி நிறுவனத்தைக் கொண்டு வரவேண்டுமென்று முயன்று , அதில் வெற்றியும் பெற்று—கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு ஏற்றுமதி நிறுவனத்த்தைத் தன் சகோதரர்களுடன் சேர்ந்து தொடங்கி , மிகவும் வெற்றிகரமான நிறுவனமாக்கி அந்தப்பகுதியில் சுமார் 120 பேருக்கு வேலையும் அளித்து கலக்கிக்கொண்டிருக்கிறார்.
வயது 32தான் ஆகிறது. எல்லாச்செயல்களிலும் ஒரு தெளிவு, பண விஷயத்தில் மிகவும் நேர்மை ஆகியவை நான் பல சந்தர்ப்பங்களில் அவரிடம் கண்கூடாகக்கண்டது. யாருக்கும் பயப்படாமல் தன் மனதுக்குத்தோன்றியதை அப்படியே கூறும் விஷயத்தில் நாங்கள் இருவருமே ஒத்துப்போனதால் எங்கள் நட்பு நீடித்தது.
குடும்பத்திலும் மிகவும் அக்கறை கொண்டவர்..! அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் ....மனைவியிடம் மிகவும் பிரியமாக இருப்பார். அண்ணன்களிடம் மிகவும் மரியாதையாக , அன்பாக நடந்துகொளவார்... நல்ல வீடு ஒன்று தனக்காகக் கட்டவேண்டுமென்று நினைத்து ஆறு மாதத்துக்கு முன்னால் மிகுந்த பொருட்செலவில் ஒரு மாளிகையைக்கட்டியிருக்கிறார். இவரது நிதி நி்ர்வாகத்திறனைப்பார்த்து அந்த மொத்தக்குடும்பமும் குடும்ப நிதி நிர்வாகத்தை அவரிடம் ஒப்படைத்திருக்கிறது.
யாரிடம் எப்போது பணம் வாங்கினாலும், சொன்ன நேரத்துக்கு ஒரு மணிநேரம் முன்னதாக கொடுத்துவிட்டு கம்பீரமாக நடை போடுவார்.
தொலைபேசியில் மிகவும் தெளிவாக, சுருக்கமாகப்பேச இவரைப் பார்த்து கற்றுக்கொள்ள முயன்று வருகிறேன்.
என்னால எல்லாம் எதுக்கும் பொறுத்துக்கிட்டிருக்க முடியாது சார்! எல்லாம் உடனுக்குடனே நடந்தாகணும் என்று அடிக்கடிக்கூறுவார்.
யாரிடம் என்ன பேசினாலும், அவர்களிடமே நேராகச் சொல்லிவிடுவார். ஒருவரைப்பற்றி பின்னால் பேசி நான் கண்டதே இல்லை!
வசீகரமான சிரிப்பால் எல்லோரையும் கவர்ந்துவிடுவார்..!
அந்த அளவு என் நண்பர்கள் வரிசையில் நீங்கா இடம்பிடித்த அன்பு நண்பர் ஷேக் அப்துல்லா சென்ற வாரத்தில் ஒரு நாள் மிகவும் அசாதாரணமாய் இறந்துபோனார்...!
மனைவியை பிரசவத்திற்கு ஊருக்கு அனுப்பிவிட்டு, குற்றாலம் செல்லலாம் என நண்பர்களுடன் சென்று, கூட வந்த நண்பர்களில்
ஒருவரே சுமோவை ஓட்ட அதிகாலை 3 மணியளவில் ராஜபாளையம் அருகே ஒரு லாரி மீது நேருக்கு நேர் மோதி அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
அந்த நாள் எனக்கு சாதாரணமாய் முடியவில்லை!
அவருக்கு...நேற்றுத்தான் மூன்றாவதாக அழகான ஒரு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது...
இன்று வரை மரணத்தை ஒரு கடைசி விருந்தாளியாக நினைத்து, அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாத என்னை, மிகவும் காயப்படுத்தி , இன்றுவரை அதிலிருந்து மீளமுடியாமல் செய்த ஷேக் அப்துல்லா ....! ?

யாருக்கு, என்ன கற்றுக்கொடுக்க இந்த மரணம்.!? கடைசி விருந்தாளியையும் உடனுக்குடன் வரவழைத்துவிட்டீர்களே ஏன்?








