Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, November 29, 2015

ஏமாற்டெல்!


இந்த மாத ஏர்டெல் பில் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது...!
கொஞ்சம் நோண்டலாம் என்று பார்த்தால்..
பெரிய டகால்ட்டி வேலை நடந்திருக்கிறது.

நான் பேசியது 14 மணி நேரம் 13 நிமிடங்கள் : அப்படியெனில் 853 நிமிடங்கள்தான் எனக்கு பில் செய்திருக்கவேண்டும். ஆனால், கொஞ்சம் தள்ளி அதனை யுனிட்டாக மாற்றுகிறேன் என்று சொல்லி 950 ஆக மாற்றியிருக்கிறார்கள். இதைக் கணக்கு செய்தால்.. 97 நிமிடங்கள் அதிகம் : அதன் படி ஒரு நிமிடத்துக்கு 40 பைசா வீதம் என்னிடம் 38.80 அதிகமாக பில் செய்திருக்கிறார்கள்.


இதைக் குறிப்பிட்டு ஒரு விரிவான மெயில் அனுப்பினேன்.

அது அப்படி இல்லை.. இப்படி என்று ஒரு மொக்கை கால்குலேஷன் சொல்லி மெயில் வந்தது.

அதற்கும் கேள்வி கேட்டு, யூனிட் என்றால் என்ன நிமிடம் என்றால் என்ன.. ஒரு நிமிடத்துக்கு எத்தனை யூனிட்? அதனை நான் இணைப்பு வாங்கும்போது ஏன் சொல்லவில்லை.. ஆக, இத்தனை ஆண்டுகளாக என்னை இப்படித்தான் ஏமாற்றுகிறார்களா என்று கேட்டு அடுத்த மெயில் போட்டேன்.

இப்போது ஒரு நபர் அழைத்து.. உங்கள் கணக்கில் 38 ரூபாய் கழித்துவிட்டோம் என்றார்... அதற்கான வரியையும் சேர்த்து 44.42 வருது.. அதனையும் கழியுங்கள் என்றேன். உடனே ஏதோ கணக்குப்போட்டு, என் கேள்விகளுக்கு பதிலும் சொல்லமுடியாமல், 42 ரூபாயை கழித்துவிட்டார்.

ஆக..
நேரடியாகக் கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்தால், இவனிடம் இப்படி காசை அடி என்று ஒரு நிர்வாகமே செயல்படுகிறது !!

இந்த 43 ரூபாய்க்கு இத்தனை நேர விரயமா? இந்த நேரத்தில் உங்கள் வேலையில் 1000 ரூபாய் சம்பாதித்திருக்கலாம் என்று குதர்க்கமாகத் தோன்றும் !!

இப்படி 43 ரூபாய்களாக கொள்ளை கொடுக்காமல் இருந்தாலே போதும். இவர்களுக்கும் கொடுக்க சேர்த்து சம்பாதிக்க வேண்டியிருக்காது. !!

யார் நம்மிடம் கொள்ளை அடித்தாலும் என்ன பெரிய விஷயம் என்று நினைப்பதால்தான்.. நாமும் யாரிடமும் கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணம் எல்லா இடத்திலும் புரையோடிப்போயிருக்கிறது.

200 ரூபாய் கொடுத்தா குறைஞ்சா போயிடுவீங்கன்னு கேட்பவர்கள் அதிகமானதுக்குக் காரணம்.. எங்கெங்கு நோக்கிலும் இதுபோன்ற அடாவடி அல்லது அறிவாளித் திருடர்கள் அதிகரித்தால்தான்!

விலைவாசி எப்படி ஏறுகிறது என்று இப்போது புரியும் என்று நினைக்கிறேன். வேறு யாரும் ஏற்றவில்லை. நாம் கேள்வி கேட்கவிடாமல் வாங்குகிறோம். கேள்வி கேட்காமல் கொடுக்கிறோம்.

மீண்டும் செல்வேந்திரன்தான் நினைவுக்கு வருகிறார் !

“கண்டக்டரிடம் ஒரு ரூபாய்க்குச் சண்டை போடுபவனை ஏளனமாகப் பார்க்காதீர்கள்.. பாவம்! உழைத்துச் சம்பாதித்தவனாய் இருப்பான்!” என்ற ரீதியில் எழுதியிருப்பார்.

கொஞ்சம் விழிப்புணர்வுடன் கேட்போம்..!! நம் பிள்ளைகள் நம்மைப் பார்த்துதான் வளர்கின்றன ! ‪#‎கேட்டால்கிடைக்கும்‬

Sunday, September 27, 2015

மதுரை சம்பவம் !








 
ஒரு தனியார் நிறுவனத்தின் மாநில அளவிலுள்ள நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்.!! மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டு, தேதி, இடம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சி ! 

        ஒப்புக்கொண்டபடி நானும் நேற்று மதுரைக்குச் சென்றுவிட்டேன். பத்து மணிமுதல் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. அங்கு என் நிகழ்ச்சி 11 மணிக்குத் துவங்கவேண்டும். நானும் அங்கு சென்றடைந்துவிட, அந்தக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள நிறுத்துமிடத்தில், காரை வைத்துக்கொண்டு 20 நிமிடங்களுக்கும் மேல் காத்திருந்தோம். நிறுவன முக்கிய அதிகாரியும் என்னுடன் அமர்ந்திருந்தார். இடையில் ஃபோன் வர, வெளியில் சென்று பேசிவிட்டு வந்து அமர்ந்தார். அவர் முகத்தில் கவலை ரேகை..!! ஏன் என்ன ஆச்சு? என்று கேட்டால்,

“ஒரு சின்ன பிரச்னை சார்!”

என்ன?

ஸ்டாலின் மதுரை வந்திருக்காரு.. ! அவரோட நிகழ்ச்சிக்காக அவர் இந்த மண்டபத்தில் உள்ள இன்னொரு ஹாலை புக் பண்ணியிருக்காங்க! இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவாராம். அதனால, நம்ம நிகழ்ச்சியை நிறுத்திவைச்சுட்டு, அவர் வந்துட்டுப் போனதுக்கு அப்புறம் நம்மளை நடத்திக்கச் சொல்றாங்க! ஏற்கனவே நமக்குக் கொடுத்திருந்த மைக்கெல்லாம் எடுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க!

ரெண்டும் ஒரே ஹாலா?

இல்லை சார்.. ரெண்டு ஹாலுக்கும் சம்பந்தமே இல்லை.. தனித்தனி வராண்டா, தனித்தனி வாசல்!

அப்புறம் ஏன் நிறுத்தச் சொல்றாங்க!

அவங்களுக்கு நம் நிகழ்ச்சி இடைஞ்சலா இருக்குமாம். நம்ம எல்லாரையும் வெளில போய்ட்டு அவர் வந்துட்டுப் போனதுக்கப்புறம் வரச்சொல்றாங்க!

ஓ...அவர் எப்ப வராரு?

தெரியலை!

எவ்வளவு நேரம் அவங்க நிகழ்ச்சி?

அதுவும் தெரியலை!

நமக்கு எத்தனை மணி வரைக்கும் நேரம் இருக்கு..?

நாம 5 மணிக்கு மண்டபத்தை காலி பண்ணனும்.!

இப்ப என்ன பண்ணியிருக்கீங்க?

11:30க்கு விடவேண்டிய டீ ப்ரேக்கை இப்பவே விட்டாச்சு ! என்ன பண்றதுன்னு தெரியாம , உங்ககிட்டயும் சொல்லமுடியாம .....பேசிக்கிட்டிருந்தோம்.!

நம்மளை நிறுத்தச்சொல்லி நிர்ப்பந்திக்கிறது யாரு?

திமுக நிர்வாகிகளும், இந்த மண்டப மேனேஜரும்... !!

மிகவும் அநியாயமாகப் பட்டது..!! திமுகவினர், தங்கள் நிகழ்ச்சிக்காக, ஏற்கனவே திட்டமிடப்பட்டு, மூடப்பட்ட தனி அரங்கத்தில் நடத்தப்படும் தனியாரின் நிகழ்ச்சியின் மீது தங்கள் அதிகாரத்தை நீட்டிக்கிறார்கள் என்றால், அது மக்கள்விரோதப்போக்காகப் பட்டது.!

உடனே, அந்த அரங்கத்தின் பொறுப்பாளருக்கும், எங்கள் நிகழ்ச்சியை நிறுத்தச்சொன்ன திமுக நிர்வாகிகளுக்கும் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ளச் செய்தேன். “கேட்டால் கிடைக்கும்” என்று மீண்டும் நிரூபித்தோம். அது, அங்கு நமக்கு நாமே வாக வேலை செய்தது !! பிரச்னை முடிந்தது ! எங்களுக்கு விடிந்தது!

பிறகு, எங்கள் நிகழ்ச்சி தடையின்றி நடந்தது !!

இதுதான் NEWS... இனி எனது VIEWS...

இதில்.. ஒரு சாமானியனாக ,என் வருத்தமும் ஆதங்கமும், கோபமும் வெளிப்பட வேண்டியிருக்கிறது...

1 ஒரு தனியார் நிறுவனம், தங்கள் செலவில், மாநில அளவில் உள்ள நிர்வாகிகளை பயணிக்க வைத்து, முன்னரே திட்டமிட்டு, பயிற்சியாளரை சென்னையிலிருந்து வரவழைத்து ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால், ஒரு தமிழகக் கட்சி.... அதுவும் எதிர்க்கட்சியாகக்கூட இல்லை.. ஏற்கனவே அதிகார துஷ்பிரயோகம் அதிகமாகச் செய்யும் கட்சி என்று பெயர் எடுத்திருப்பவர்கள், அதனாலேயே மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள்..மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடிக்கவேண்டும் என்று அந்தக் கட்சியின் பொருளாளர், மாநிலம் முழுவதும் மக்களோடு மக்களாக கலந்து பழகுகிறார் என்று பிம்பம் ஏற்படுத்துபவர்கள், தங்கள் நிகழ்ச்சிக்காக.. மாநிலம் முழுவதிலிருந்து வந்திருக்கும் 90 நபர்களை துன்பப்படுத்தினார்கள் என்றால், இந்த ஒற்றை நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் அந்த குறிப்பிட்ட நபர்கள் மூலம் பரவும் என்பது தெரியாமலா இருந்திருக்கும்?

2. ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவே இல்லை என்றால் பரவாயில்லை. நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியை நாங்கள் சொல்லும்வரை நிறுத்தவேண்டும் என்று இப்போதே அதிகார துஷ்பிரயோகம் செய்தால், உங்களிடம் அதிகாரத்தைக் கொடுக்கவே கூடாது என்று மக்கள் நினைப்பது உண்மையாகிவிடுமே? எந்த அரசு அதிகாரமும் இல்லாதபோதே, ஒரு நிகழ்ச்சிக்குள் தங்கள் எல்லையை நீட்டிக்கும் கட்சியின் மீது எப்படி நம்பிக்கை வைப்பது?

3. நிகழ்ச்சிக்காக வைத்திருந்த மைக்கையெல்லாம் நிர்வாகத்தின் மூலமாக பறித்துச்சென்றது எந்த விதத்தில் நியாயம்..? தங்கள் கட்சி நிகழ்ச்சி நடந்தால், அந்தப்பகுதியில் வேறு எந்த சத்தமும் வரக்கூடாது என்று நினைப்பது என்ன விதமான ஜனநாயகம்?

4.அவர் எத்தனை மணிக்கு வருவார், நிகழ்ச்சியின் கால அளவு எதுவுமே சரியாகத் தெரியாதபோது, ஒரு நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியை, தங்கள் இஷ்டத்துக்கு வளைப்பது என்பது தர்மமே இல்லை! 

5.ஏதோ, கொஞ்சம் பேச முடிந்த, பேசத்தெரிந்த என் போன்றவர்கள், அவர்களுக்கு உண்மையை எடுத்துச்சொன்னதால், இருபக்கமும் பிரச்னையின்றி நிகழ்த்த முடிந்தது. இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்? நான் சென்ற நிகழ்ச்சியாளர்கள்...பயந்துபோய் , தங்கள் நிகழ்ச்சியை நிறுத்தி வைத்து, திட்டமிட்டபடி நடக்காமல், ஏனோதானோவென்று நடத்திவிட்டுச் சென்றிருப்பார்கள்.

6. இதுவே, திமுகவினருக்கு பயந்து, நிகழ்ச்சி நின்று போயிருந்தால்,..? அதுவே ஒரு ஆளும்கட்சி குடும்பத்தின் விழாவாக இருந்திருந்தால் ? ஒரு திமுக நிர்வாகி வீட்டுத் திருமணமாக இருந்திருந்தால்..? அஞ்சாநெஞ்சன் நடத்தும் விழாவாக இருந்திருந்தால்..? அரசு நிகழ்ச்சியாக இருந்திருந்தால்...?

7. இதுதான் உங்கள் நமக்கு நாமேவா? அதாவது நம் கட்சி மட்டும்தான் இருக்கவேண்டும்,, வேறு யாரையும் அந்தப் பகுதியில் இருக்க விடக்கூடாது. அதற்கு நாமே உதவிக்கொள்ளவேண்டும் என்று அர்த்தமா? இது போன்று நீங்கள் செய்வது உங்களுக்கு ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று புரிகிறதா? இப்படியெல்லாம் செய்தால், உங்கள் கட்சித் தலைமை எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும் என்று தெரிகிறதா? என்று கேட்கவைத்தேன். நேரடியாகச் சண்டை போட்டிருந்தால், நிச்சயம் தங்கள் பலத்தை அவர்கள் காட்டியிருப்பார்கள்.

8. மக்களை நேரடியாகச் சந்திக்கிறேன் என்று மாநிலம் முழுதும் பயணம் செய்கிறார் திரு. ஸ்டாலின் அவர்கள். ஆனால், ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்று அராஜகங்களை அவரது கட்சிக்காரர்கள் அரங்கேற்றுகிறார்கள் என்ற தகவல் அவருக்குத் தெரியுமா? அப்படித் தெரிந்து செய்ய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இதற்குப் பிறகு அவருக்குத் தெரியவந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு, மக்கள் வெறுப்பை நேரடியாகச் சம்பாதிக்காமல் இருப்பது உத்தமம்! அவரால் , அவர்களைக் கட்டுப்படுத்தமுடிந்தாலே போதும் !!

9.ஏன் திமுகவை மக்கள் தள்ளிவைக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இதுபோன்ற நிகழ்வுகள்தான்! ஒரு தனி மனிதனாக, அடிபடும்போதுதான் இது ஆதங்கமாக வெளிப்படுகிறது.

ஒரு பிரச்னை.. அதுவும் சுமுகமாக முடிந்துவிட்டது. பின் ஏன் வெளியில் சொல்லவேண்டும் என்று கேட்பவர்களுக்கு : 

அது ஒரு தனி மனிதர் செய்திருந்தால், நிச்சயமாக வெளியில் சொல்லியிருக்கமாட்டேன். அது ஒரு நிறுவனம்.! கட்சி! அதில் ஒவ்வொரு தொண்டனுக்கும் இப்படி நினைப்பிருந்தால், மாற்றிக்கொள்ளலாம். ஏதோ தாங்கள் ஆட்சிக்கே வந்துவிட்டதுபோல் மமதை வருவதைத் தவிர்க்கலாம். அதற்குத்தான்! அப்படியானால்.. ஆட்சிக்கு வந்துவிட்டால், என்னவெல்லாம் செய்வார்களோ என்ற முன்னோட்ட பயத்தை ஏற்படுத்தாமலிருக்கலாம்.

என் அரசியல் சார்பு பற்றியோ .... அந்தக் கட்சி இப்படிச்செய்யவில்லையா? இந்தக்கட்சி அப்படிச் செய்யவில்லையா என்று கேட்பவர்களுக்கு :

இந்தச் சம்பவத்தில் எனக்குத் தொடர்பிருக்கிறது. பேசினேன். அதற்கு மட்டும் விளக்கம் போதும். வேறு ஒரு சம்பவம் நடந்தால், அதுபற்றி அதற்குத் தொடர்பானவர்களுடன் பேசவும்! மேலும் இப்படிக் கேட்பதுதான் திமுகவின் பலவீனம் என்ற மக்கள் பேச்சு உண்மையாகிவிடும்.

திமுகவினருக்கு:
இதில் ஹிட் ஃபார்முலா ஒன்று இருக்கிறது. அந்த நிறுவன நிகழ்ச்சி, அருகில் இருப்பதை அறிந்துகொண்டு, அந்த நிகழ்ச்சிக்கு, திரு.ஸ்டாலின் அவர்களைத் தலைகாட்டச் சொல்லி, 30 மாவட்ட தனி நபர்களின் நல்லெண்ணத்தை ஒரே நிமிடத்தில் பெறச்செய்வது! அதுதான் உண்மையான மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கான வெற்றி.. நான் ஆலோசகனாக இருந்திருந்தால்.. அதைத்தான் செய்திருப்பேன்..!! 

எனக்குப் பரிந்து பேசுவதாக எண்ணி, தங்கள் சார்பை நிலைநாட்ட எண்ணுபவர்களுக்கு:

இங்கு அதுபோன்ற சாயங்கள் வேண்டாம். இதில்.. எந்த தனிமனித வெறுப்போ, காழ்ப்புணர்ச்சியோ, கட்சி மீதான தனிப்பட்ட பார்வையோ கிடையாது. ஒரு சம்பவம்.. அதில் என் உணர்வுகள்.. அதன் பதிவு அவ்வளவே.. இனி நான் இதனைத் தூக்கிச் சுமக்கப்போவதில்லை..



நன்றி!

Friday, July 17, 2015

வெறும் கணக்கு



விகடனில், எஸ்.ராவின் ‘வெறும் கணக்கு’ சிறுகதை எனக்குள் பல
நினைவலைகளையும், நெகிழ்ச்சியையும் உண்டாக்கிவிட்டது.
பண விஷயத்தில், யாராலும் நம்பப்படாத ஒருவர், தன்னை நம்பிய ஒருவரின் மரணச் செலவை பைசா சுத்தமாக அவரது மகனிடம்
ஒப்படைக்கும் நிகழ்வை இத்தனை அற்புதமாக, நுட்பமாக எழுதி எஸ்.ரா எப்போதும்போல் நம் மனதில் தனக்கான சிம்மாசனத்தை இன்னும் பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில், எத்தனை பேர் அன்றாடச் செலவுகளை பைசா சுத்தமாக கணக்கு எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் பெரும்பாலும் எழுதி எக்ஸலில் பதிவு செய்துவிடுவேன். அது பல விதங்களில் உதவியிருக்கிறது. அதனை நான் சந்திக்கும், பயிற்றுவிக்கும் அனைவருக்கும் சொல்லி வருகிறேன்.
ஏனெனில் செலவில் நமக்கிருக்கும் விழிப்புணர்வே நமது வருமானத்தைப் பற்றிய அறிவை அதிகமாக்கும் என்பது எனது எண்ணம். அதைப் பின்பற்றும் பலரும் கிடைத்த மகிழ்ச்சியையோ, கவன உணர்வையோ பகிர்ந்துகொள்ளும்பொழுது இன்னும் பெருமையாக இருக்கும்.
இந்தக் கணக்கெழுதும் விஷயத்தில் எனது தந்தைதான் எனக்கு
முன்னோடி.எத்தனை அதிக வேலைப்பளு இருந்தாலும், அன்றாட செலவுக்கணக்கை மிகச்சரியாக எழுதிவைத்துவிட்டுத்தான் தூங்கப்போவார்.
மிகக்குறைவான
வருமானத்தில்கூட, அதனை தவறாமல் செய்து வந்து, இன்றும் அந்தக் கணக்கெழுதும் வழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
எத்தனையோ தருணங்களில், அவரது கணக்கு நோட்டின் மூலம், முன் ஆண்டுகளில் புதுக்கோட்டை -
சென்னை பேருந்துக் கட்டணம் 55ரூபாய் ,
வசந்தவிஹார் சாப்பாடு 5ரூபாய்,
ஒரு சீப்பு வாழைப்பழம் 1ரூபாய் ,
சாரதாஸில் வாங்கிய சட்டை 44 ரூபாய்,
திண்ணை பூச கொத்தனாருக்குக் கொடுத்த நாள் கூலி 10 ரூபாய் என்று பல நிகழ்வுகள், பொருட்களின் விலைவாசியைத் தெரிந்துகொள்ளும்போது பொருளியலே படித்த அளவுக்கு சிந்தனை விரிந்திருக்கிறது.
ஒரு திருமண நிகழ்வு மாதிரியான குடும்ப விழாக்களில் அதன் மொத்தச் செலவையும் எழுதி வைத்து, பின்னர் எடுத்துப் பார்க்கும்போதோ, அந்தச் செலவுக்குப் பிறகு , மிச்சமிருக்கும் தொகை சரியாக இருக்கும்போதோ கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதேபோல் அந்த விழா வீட்டினர் , நம்மிடம் கொடுத்த தொகைக்கு சரியான இரசீதுகளுடன் கணக்குக் கொடுத்துவிட்டு, நிமிர்ந்து நடக்கும் பெருமை அதைவிட அலாதி!
பொதுவாக இப்போது நம்மில் எத்தனை பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னால், எல்லா வீடுகளிலும் ஒரு கணக்கு நோட்டு இருந்திருக்கும்.
இந்த நினைவுகள் அனைத்தையும் தூண்டி , நெகிழவும் மகிழவும் வைத்த எஸ்.ராவுக்கு அழைத்துப் பேசியபின்னரும் மீதமிருக்கிறது உணர்வின் மிச்சம்!
நன்றி எஸ்.ரா , இப்படிப்பட்ட உணர்வுகளைப் பதிவு செய்தமைக்கு! நீங்கள் எங்கள் பொக்கிஷம்!

Saturday, May 23, 2015

அருகாமை!

தஞ்சையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது,
அவர் ஒரு ஸ்க்ரீன் பிரிண்ட்டிங் பிரஸ் வைத்திருந்தார். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்றை வாங்கி அதற்குத் தவணை முறையில் பணம் கட்டி வந்தார். அவரிடமிருந்து ஒரு மாதமாக தவணை வரவில்லை என்று வசூலிக்கும் நபர் காட்ட, அவரைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் கிளை நிர்வாகியான எனக்கு வந்துவிட்டது.

அன்று மாலை 4 மணி இருக்கும். சென்றபோது நல்ல உயரமான நபர் ஒருவர் தாடி வைத்துக்கொண்டு, பெரிய கண்களுடன் நின்றிருந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பேச ஆரம்பித்தேன். கொஞ்சம் உடம்பு சரியில்லை. இந்த வாரம் வந்துரும் . மொத்தமா குடுத்துர்றேன் கவலைப்படாதீங்க..! வேணும்னா நாளைக்கு சாயங்காலம் ஒரு தொகை வரவேண்டியிருக்கு ! அதையே தந்துர்றேன். நீங்க வாங்களேன். என்றார். சரி சார் ! என்று சொல்லிவிட்டுக் கிளம்பும்போது, அவர் மேசையில் இருந்த புத்தகங்களும், சிற்றிதழ்களும் என்னைக் கவர்ந்தன. ஏனெனில் நானும் எனது நண்பன் எழிலரசுவுடன் சேர்ந்து “விடியல்” என்ற சிற்றிதழ் நடத்திக்கொண்டிருந்தேன்.

            அந்த ஆர்வத்தில் , அவரிடம் பேச ஆரம்பித்தேன். அவரும் குழந்தை போல் இலக்கியம் குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டார். அவர் நடத்தும் பத்திரிக்கை பற்றியும் சொன்னார். பேசிவிட்டுக் கிளம்பும்போது, தெற்கு வீதியில் ஒரு கடை மாடியைச் சொல்லி, அங்குதான் இலக்கியக் கூட்டம் நடக்கும். வாங்களேன். அங்கேயே வந்து பணம் வாங்கிக்குங்க என்று சொன்னார்.

      அதேபோல் அங்கு போய்ப் பார்த்தால், நிறையப் பேர் வந்திருந்தார்கள். காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இவர் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். தாடியைத் தடவி விட்டுக்கொண்டே சட்டைப்பையிலிருந்து ஒரு கவரை எடுத்தார். பணத்தை வாங்கிக்கொண்டு நானும் ரசீது போட்டுக் கொடுத்தேன். உடனே, என்னை அந்தக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். “ஒரு சிற்றிதழ் நடத்துறார்” என்று சொல்லி ஆரம்பித்தார்.

      நிறையப் பேசினார்கள். கேட்டுக்கொண்டிருந்தேன். கடைசியில் அவரிடம் விடைபெறும்போது, நான்கைந்து புத்தகங்களை எடுத்து கையில் கொடுத்து, நிதானமா படிச்சுட்டு சொல்லுங்க! ஒருநாள் இந்தப் புத்தகத்தைப்பத்தின உங்க கருத்துக்களைப் பாத்துரலாம் என்று உற்சாகமாகச் சொல்லி வழியனுப்பினார்.

அதற்குப்பிறகு பல கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர் பெயர் தெரிந்து, அவரும் ஒரு எழுத்தாளர் என்று அறிந்து, அவரது நூல்களையே ஆழமாகப் படித்து, புரிந்துகொள்ளமுடியாமல் சில இடங்களில் தடுமாறி , “தப்பா நினைச்சுக்காதீங்க. எனக்குப் புரியலை” என்று நான் சொல்லி, அவரே அதற்கு விளக்கமும் அளித்து , ஆதுரமாகப் பேசி அனுப்புவார். இசை , கலை, இலக்கியம், வரலாறு, மராட்டிய மன்னர்கள், தஞ்சையின் பாரம்பரியம் என்று அவர் தொடாத விஷயங்களே இருக்காது. அனைத்தையும் ஆழமாக அலசுவார். துவக்க காலங்களில் நான் படித்த பின் நவீனத்துவ இலக்கியங்களை எனக்கு அறிமுகப்படுத்தியதே அவர்தான்.!

அவர் வீட்டில் ஒரு பெரிய நாய் வளர்த்துவந்தார். விபரம் தெரிந்து நான் பார்த்த முதல் மிகப்பெரிய நாய் அதுதான்.

நான் வேலையை விட்டுவிட்டு வெளிநாடு போகும்போது சொல்லிவிட்டுச் சென்றேன்.

பிறகு தொடர்பே இல்லை. சில ஆண்டுகள் கழித்து திரும்ப தஞ்சை செல்லும்போது விசாரித்தேன்.

இறந்துவிட்டார் என்றார்கள்.

அவரது நிறுவனத்தின் பெயர் GML Screen Pirinting என்று தெரியும்.

பழகத் தொடங்கி அவரை பல காலம் “GML பிரகாஷ்’ என்றுதான் நினைவு வைத்திருந்தேன்.

அவர்தான் எழுத்தாளர் “தஞ்சை பிரகாஷ்” என்று பின்னர்தான் தெரியும்.







Wednesday, February 26, 2014

ஆட்டோ மீட்டர் - கேட்டால் கிடைக்கும்






குற்றாலத்திலிருந்து தனியார் பேருந்தில் வந்து, சென்னை வடபழனியில் இறங்கும்போது காலை 6:20 ஆகியிருந்தது.

     கதவு திறந்தவுடன் வரவேற்கக் காத்திருந்தவர்கள்போல், ஆட்டோ டிரைவர்களின் கூட்டம் மொய்த்தது. இறங்கி,

விருகம்பாக்கம் போகணும். ஆனா மீட்டர் போட்டாத்தான் வருவேன்

என்று நான் சொல்லி , நாக்கை மடித்து உள்ளே வைப்பதற்குள் கூட்டம் காலி…!! என்னை விட்டுவிட்டு அடுத்த பயணியைத் தேடிச் சென்றுவிட்டார்கள்.

நான் விடவில்லை. அந்த வரிசையில் இருந்த சுமார் 15 ஆட்டோக்களிலும் வரிசையாகக் கேட்டேன். அனைவரது பதில்களும் இப்படி இருந்தன..

100 ரூபா ஆகும் சார்!

டேய்! சாருக்கு மீட்டர் போடணுமாம்.

வராது சார்!

என் மீட்டர் ரிப்பேர்.

சார் மீட்டர் போட்டாத்தான் வருவாராம்..நீ போறியா?

இப்போ இன்னாத்துக்கு சார் மீட்டரு 60 ரூவா வரும். 10 ரூபா சேத்து 75(!) ஆ குடுத்துருங்க!

மீட்டரெல்லாம் சும்மா சார்… அதெல்லாம் கட்டுப்படியாவாது.

பேப்பர்ல படிச்சுட்டு வராதீங்க சார்! சென்னைல எங்கயும் மீட்டர் போடுறதில்லை.

மீட்டர் போடுறேன். ஆனா, 80 ரூவா தரியா?

பக்கத்து ஏரியாக்கெல்லாம் மீட்டர் போடமுடியாது சார்!

கம்ப்ளெயிண்ட் செய்யலாமா என்று கேட்டதற்கும்.. பண்ணிக்க சார்! என்று அடாவடியாக ஒருவர் லந்தடித்தார்.

     வடபழனி போலீஸ் ஸ்டேஷன் பக்கம் திரும்பி நடந்தால், அங்கு ஷேர் ஆட்டோ கிடைக்கும். 10 ரூபாய்க்கு சென்று சேர்ந்துவிடலாம். ஆனால், என்னால் அப்படிச் செல்ல முடியவில்லை. நேராக வடபழனி காவல் நிலையம் சென்றேன். வாசலிலேயே ஒரு பேட்ரல் வண்டியில் ஒரு போக்குவரத்துக் காவலரும், சார்ஜெண்ட்டும் இருந்தார்கள். அவர்களிடம் சென்று விபரம் சொன்னேன்.

     உடனே இறங்கினார்கள். சார்ஜெண்ட் என்னிடம் வந்தார்.

“சார்.. நீங்க மறுபடியும் போய் மீட்டர் போடச்சொல்லுங்க…மாட்டேன்னு சொன்னான்னா , சரின்னு ஒத்துக்கிட்டு ஆட்டோவில் ஏறி இந்தப்பக்கம் வாங்க பிடிச்சுக்கிறேன். என்றார்.

அந்த வரிசையில் இருக்கும் எல்லா ஆட்டோவும் இதே தப்பைத்தான் செய்யுறாங்க … கேள்வியே வேண்டாம் எல்லாரையுமே பிடிக்கலாம் என்றேன்.

இருந்தாலும், நீங்க கையும் களவுமா பிடிச்சாத்தான் சார் நாங்க கேஸ் போடமுடியும் என்றார். சரி என்று ஒத்துக்கொண்டு, நானும், மீண்டும் அந்தச் சாலையில் நடந்தேன்.

ஏற்கனவே என்னிடம் தெனாவெட்டாக பதில் சொன்ன ஒரு டிரைவரிடம் சென்று, மீட்டர் போட்டு, விருகம்பாக்கத்துக்கு வரீங்களா என்றேன்.
அதற்கு..அந்த இளைஞன்.

இன்னா சார்.. யாருமே மீட்டர் போடலையா? அதான் சொன்னேன்ல.. சரி 100ரூபா குடுங்க.. மீட்டரெல்லாம் ஓடாது . என் மீட்டர் ரிப்பேர் என்றான்.

நான் அவன் கையைப் பிடித்துக்கொண்டேன். சார்ஜெண்ட் கூப்பிடு தூரத்தில் நின்று கொண்டிருந்தார்.

ஸார்…………..வாங்க! என்று கத்தினேன்.

அவர் அருகில் வரவும், மீட்டர் ரிப்பேராம். ரிப்பேரான மீட்டருடன் வண்டியை ஓட்டிக்கிட்டிருக்கார் . பாருங்க ! என்றேன்.

அதை அந்த இளைஞன் எதிர்பார்க்கவில்லை.

சார்ஜெண்ட்டும் விரைந்து வந்து, கூடவே வந்த காவலரிடம்..
இவனை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப்போங்க என்று சொல்லி, அவனிடமிருந்து ஆட்டோ சாவியை வாங்கினார்.

அதற்குள் ஆறேழு ஆட்டோ ஓட்டுனர்கள் கூடிவிட்டனர்.

சார்ஜெண்ட் சொன்னார்.

என்னய்யா.. ஒருத்தனும் மீட்டர் போட்டு ஓட்டமாட்டேங்கிறீங்களாம்..!! சார் வந்து கம்ப்ளெய்ண்ட் பண்றாரு!

என்கிட்ட கேக்கலையே சார்! நான் மீட்டர் போட்டு ஓட்டுவேனே என்று கூசாமல் பொய் சொன்னார் ஒருவர்.

நான் பிடித்துக்கொண்டேன்.
அப்படியா…? உடனே வாங்க ..மீட்டர் போடுங்க..விருகம்பாக்கம் போகணும். என்று சொல்லிக்கொண்டே அவரது ஆட்டோவில் எனது லக்கேஜை வைத்தேன்.

ஆனால், ஆட்டோவில் ஏறுவதற்கு முன்.. அங்கு வந்து நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கிய ஒரு தம்பதி மற்றும் சிலரிடம் சத்தமாகச் சொன்னேன்.

இங்க உள்ள ஆட்டோ எல்லாருமே நல்லவங்க…மீட்டர் போட்டுத்தான் ஓட்டுவாங்க.. எல்லாரும் ஏறிக்கிங்க…பேரமே பேசவேண்டாம்.என்று சொல்லி மூன்றுபேரை ஏற்றிவிட்டேன்.

சார்ஜெண்ட்டை நோக்கி மற்ற ஆட்டோக்காரர்கள் வந்தார்கள். அவர் அவர்களைத் திட்டிக்கொண்டிருந்தார். “ஏண்டா இப்படி பப்ளிக்கிட்ட அநியாயம் பண்றீங்க?”

நான், லக்கேஜை வைத்த ஆட்டோவில் ஏறி, ஆட்டோவை எடுக்கச் சொன்னேன்.

ஆட்டோ 20 அடி நகர்ந்திருக்கும். போக்குவரத்துக் காவலர்.. நான் முதலில் பிடித்துக்கொடுத்த இளைஞனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“காலங்காத்தால மீட்டர் போடலைன்னு வந்து எங்க உயிரை எடுக்குறான்” என்றார்.

உடனே ஆட்டோவிலிருந்து இறங்கி.. அவரை நோக்கிச் சென்றேன்.

யாரு சார் உங்க உயிரை எடுத்தது? போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துலேயே இருந்துக்கிட்டு தைரியமா மீட்டர் போடாம அடாவடி பண்றாங்கன்னா நீங்கதான் பப்ளிக் உயிரை எடுக்கிறீங்க..  இந்த அநியாயத்துக்கு நீங்கதான் காரணம்.. உங்களை வந்து பாத்த எனக்கு..உங்க உயரதிகாரியப் பாக்க எவ்வளவு நேரமாகும்? போய்ப் பாக்கவா? தட்டிக்கேக்க நேரம் ஒதுக்காத ஆள் நான் கிடையாது. இப்போ நீங்களும் சேந்து மாட்டுறீங்க! என்றேன். கடைசியாக என் ஊடக அடையாளத்தையும் சொன்னேன்.

அதிர்ந்தார்..

“சார் அதான் எங்கயோ பாத்தமாதிரி இருக்கேன்னு நினைச்சேன் என்று வழிந்துவிட்டு.....சார்! நான் உங்களைச் சொல்லலை .. டிரைவரைத்தான் சொன்னேன். பிரச்னையை பெருசு பண்ணாதீங்க சார்! என்று சொல்லி நான் ஏறிய ஆட்டோ டிரைவரிடம்..


சாரை பத்திரமா விட்டுட்டு வாய்யா ! என்று சொல்லி என்னை அனுப்ப யத்தனித்தார்.

இந்த ஸ்டாண்டில் யார் வந்து இறங்கினாலும், ஆட்டோவில் மீட்டர் போட வைங்க சார்! அப்போதான் கவர்மெண்ட்டுல வாங்குற சம்பளம் ஒட்டும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

அதுவரை இறங்கிய பயணிகளாகட்டும்.. அந்தப்பக்கம் ஆட்டோவில் பேரம்பேசி ஏறிக்கொண்டிருந்தவர்களாகட்டும்.. ஒருவராவது கவனிக்கவேண்டுமே… ம்ஹூம்..


தட்டிக் கேட்காதவரை எந்த டேஷையும் யாராலும் சரிசெய்யமுடியாது என்பதை உணர்ந்த பிறகு…இந்தியாவை புரட்டுவது பற்றிப் பேசலாம்.



Friday, January 17, 2014

பொங்கல் - வாழ்த்து




ஒவ்வொரு பொங்கல் விழாவின் போதும், யாராவது பொங்கல் வாழ்த்துச் சொல்லும்போது , அதனை என்னால் வார்த்தையாக மட்டும் எண்ண இயலாது. என்னைப்பொருத்தவரையில் அது ஒரு பொருள்.

அது ஒரு அட்டை , முன்பக்கம் ஒரு அழகான படம் இருக்கும். பின்புறம், ஒரு பாதியில், யார் அனுப்பினார்களோ, அவர்களது வாழ்த்து அவர்களது கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கும். மறுபாதியில், நமது முகவரி எழுதப்பட்டிருக்கும்.

வேறொரு விதமாகவும் அது வரும். ஒரு சிறிய புத்தகம்போல மடிப்புடன் இருக்கும். முன்னட்டையிலும் பின்னட்டையிலும் படங்கள் இருக்கும். சிலவற்றில் முன்னட்டையில் மட்டும் படம் இருக்கும். உள்ளே ஒரு காகிதம் ஒட்டப்பட்டு, அதில், நமக்கான வாழ்த்து, கவிதையாகவோ, வாசகங்களாகவோ அச்சிடப்பட்டிருக்கும். அதற்குக்கீழே, அனுப்பியவர்களும் ஓரிரு வார்த்தைகள் எழுதியிருப்பார்கள். அந்த மொத்த வாழ்த்தும் ஒரு உறைக்குள் வைக்கப்பட்டு, முன்புறம் நமது முகவரியுடன் அனுப்பப்படும்.

பொங்கல் வாழ்த்து என்று அதற்குப் பெயர்!

எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல், பொங்கல் சமயத்தில், விழாவை விட அதிகம் எதிர்பார்ப்பது அந்த அட்டைகளைத்தான். பொங்கலுக்கு ஒரு வாரம் இருக்கும்போது நம் வீட்டு முகவரிக்கு வாழ்த்துக்கள் வரத் துவங்கும். ஒவ்வொரு உறவும் தனித்தனி விதங்களில் வாழ்த்துக்களை அனுப்புவார்கள். அதில் பொதுவாக ஒரு கடவுள் படம் இருக்கும். அதிலும், பிள்ளையார், முருகன், ஏழுமலையான், மஹாலெட்சுமி, ஆகியோர்தான் அதிகமாக வருவார்கள். அல்லது இரண்டு கரும்பு, மஞ்சள் கொத்து, ஓவியம் தீட்டப்பட்ட பானையில் பொங்கும் பொங்கல், தூரத்தில் சூரியன், வணங்கும் நிலையில் ஒரு குடும்பம் என ஒரு பக்கம் முழுவதும் நிறைந்து இருக்கும். மேலே அழகான வண்ணத்தில் “பொங்கல் வாழ்த்து” என்று அச்சிடப்பட்டிருக்கும். அடடா, அந்த வழு வழு அட்டையைக் கையில் வாங்கும் சுகமே அலாதிதான்.


சிறுவயதில், பொங்கல் சமயத்தில், எங்கள் தெருவில் மதியம் 12 மணியானால், எனக்கெல்லாம் பரபரவென்றிருக்கும். போஸ்ட் மேன் தெருவுக்குள் நுழையும்போதே, க்ணிங் க்ணிங் என்ற அந்த சைக்கிள் மணி ஓசை கேட்கும். அடுத்த விநாடி, எங்கிருந்தாலும் ஓடிப்போய் ரோட்டில் நின்று, 

“எங்க வீட்டுக்கு தபால் வந்திருக்கா?” என்று கேட்டு.

”இரு பாத்துச் சொல்லுறேன்.” என்று அவர் கடிதங்களைப் பார்க்கும் வினாடிகளை இன்றைய சூப்பர் சிங்கர் முடிவு அறிவிக்கும் நேர டென்ஷனோடு ஒப்பிடலாம்.

”இருக்கு!” என்ற ஒற்றைச்சொல், என்னைக் குதூகலிக்க வைத்து, பரபரத்து கைநீட்டிக்காத்திருக்கும் நொடிகளை இப்போதும் உணர முடியும்.

பொங்கல் நெருங்க நெருங்க, போஸ்ட் மேன் நம் கையில் தரும் வாழ்த்துக்களின் எண்ணிக்கையும் கூடும்.

அதையெல்லாம் வாங்கி, வீட்டு வாசலிலிருந்து, வீட்டுக்குள் சென்று சேர்வதற்கு முன், யாரிடமிருந்தெல்லாம் வந்திருக்கிறது என்று பார்த்து, அதனைச் சத்தமிட்டுச் சொல்லி, பாட்டி அல்லது தாத்தா கையில் சேர்ப்பிக்கும்போது ஆஹா.. அது ஒரு தனி மகிழ்ச்சி பாஸ்!

பிறகு, அந்த வாழ்த்துக்கள் பிரிக்கப்படும். அட்டைகளாக இருந்தால், உடனே படித்துப் பார்ப்போம். கவருடன இருந்தால் அதனை மிகவும் கவனமாக ஒரு கத்தி வைத்து தாத்தா கிழிப்பார். ஒவ்வொரு வாழ்த்தும் அனைவரது கைகளுக்கும் சென்று வரும். யார் பெயரெல்லாம் போட்டிருக்கிறார்கள் என்று பார்க்கப்படும். ஒரு சில காலகட்டங்களில் எங்கள் வீட்டில் 12 பேர் வரை ஒன்றாக இருந்தோம். 
அப்போதெல்லாம், அந்த வாழ்த்தில் நம் பெயரும் போட்டிருக்கிறார்களா என்று பார்ப்பதில் இரகசிய ஆசை அனைவருக்கும் இருக்கும். ஒவ்வொரு வாழ்த்திலும் என் பெயரைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ந்திருக்கிறேன்.

ஒவ்வொரு உறவும், அவரவர்கள் விருப்பத்துக்கும் வசதிக்கும் ஏற்றார்போல், அழகாக அச்சிடப்பட்ட பெரிய வாழ்த்துக்கள் வைக்கப்பட்ட கவர்கள், ஒருபக்கம் மட்டும் படம் உள்ள வாழ்த்து அட்டைகள், 15 பைசா போஸ்ட் கார்டில் , கைகளால் வரையப்பட்டு, அழகான எழுத்துக்களைத் தாங்கிவரும் வாழ்த்துக்கள், என விதவிதமாக பொங்கல் வாழ்த்துக்களை அனுப்புவார்கள். அப்பாவின் உறவினர்கள், அம்மாவின் பந்தங்கள், பாட்டிக்குத் தெரிந்தவர்கள், தாத்தாவின் சொந்தங்கள் என பலரிடமிருந்தும் வாழ்த்துக்கள் வந்து குவியும். வங்கியில் சில சொந்தங்கள் இருந்ததால், அந்தக் காலகட்டத்திலேயே வங்கிகளின் பொங்கல் வாழ்த்துக்கள் கூட வீட்டுக்கு வரும். 

ஒவ்வொரு வாழ்த்து வந்ததும், யாரிடமிருந்தெல்லாம் இன்னும் வரவில்லை என்று ஒரு விவாதம் நடக்கும். பொங்கலுக்கு முந்தைய கடைசி நாட்களில், அவர்களெல்லாம் அனுப்பிவிடுவார்கள். சில நேரங்களில் எதிர்பார்க்காத இடத்திலிருந்தெல்லாம் வாழ்த்துக்கள் வந்து உறவுகளை பலப்படுத்தும்.

எல்லா பொங்கல் வாழ்த்துக்களும் ஒரு மேசையின் இழுப்பறையில், வேலை விட்டு வரும் அப்பா உள்ளிட்ட பெரியவர்கள் வந்து பார்க்கும் வகையில் வைக்கப்படும். அவர்கள் பார்த்து முடித்தபின், அவற்றை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்வோம். நான் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் பொங்கல் வாழ்த்துக்களைச் சேகரித்து கறம்பக்குடி வீட்டில், ஒரு மரப்பெட்டியில் போட்டு வைத்திருந்தேன். வேலைக்காக வெளிநாடு சென்று திரும்பும்போது அந்த மரப்பெட்டியை கரையான் தின்றிருந்தது. கண்டதும் ,சில நிமிடங்கள் அழுதுவிட்டேன். அத்தனை வருட உறவுகளின் தொகுப்பின் இழப்பும், அதன் வலியும் இன்றும் உள்ளத்துக்குள் உள்ளது.

பள்ளி நாட்களில் நண்பர்களுக்குள் வாழ்த்துக்கள் அனுப்பிக்கொள்வோம். எனக்கு பல நண்பர்கள் அனுப்பும் வாழ்த்துக்களில், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோர் அதிகம் இடம்பெறுவார்கள். சதாசிவம் என்ற நண்பன் ராமராஜன் படத்தை நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்தாக அனுப்பி வைத்ததற்காக , லீவு முடிந்து பள்ளி சென்றபோது அடி நொறுக்கிவிட்டோம். மேலும் சில்க், டிஸ்கோ சாந்தி, அபிலாஷா போன்ற நடிகைகள் படத்தை யாராவது வம்பிழுக்க அனுப்பிவைத்துவிடுவார்கள் வீட்டில் பதில் சொல்வதற்குள் தாவு தீர்ந்துவிடும் .எங்களுடன் படித்த ரேவதி, கனகா வெறியர்கள் தங்கள் பெயருக்கு முன்னால், பெருமையாக ரேவதி பாஸ்கர், கனகா மணிவேல் என்று போட்டே அனுப்புவார்கள். அதனால் பிழைத்தோம். இதில் மணிவேல் ஒரு ஹார்ட்கோர் கனகா வெறியன். அவன் தாவணி மட்டும்தான் கட்டியதில்லை. பாக்கி அனைத்தும் செய்துவிடுவான். அதுவும் தாலாட்டுக் கேட்குதம்மா வந்த புதிதில் அவன் படுத்திய பாடுகள்…அது ஒரு தனி நாவல் எழுதலாம். 

காதலுக்கு உதவுவதில் பொங்கல் வாழ்த்துக்கு பெரும் பங்கு உண்டு. என் வகுப்பில் ஒரு நண்பன், அவன் டாவடிக்கும் பெண்ணுக்கு ஹார்ட்டின் படம் போட்டு, இன்னொரு மாணவியின் பெயர் போட்டு பொஙகல் வாழ்த்து அனுப்பிவிட்டான். அவள் சரியாக இவன் கையெழுத்தை அடையாளம் கண்டுபிடித்து, இவன் முகவரிக்கு, தன் பெயரைக் குறிப்பிட்டு, “நன்றி” கார்டு போட்டுவிட்டாள். நம் ஆளுக்கு வீட்டில் ஆட்டம் காலி! இவனுக்கு தனியாக பொங்கல் வைத்துவிட்டார்கள். இதில் உச்சகட்டம் என்னவென்றால், அவர்கள் இருவரும் இப்போது கணவன் -மனைவி!

மேலும் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் பயன்படும். அஞ்சல் துறை மூலம் அனுப்பும் வாழ்த்தில் ஸ்டாம்ப் ஒட்டாமல் அனுப்பிவிட்டால் போதும். செத்தான் எதிரி! தண்டம் கட்டி, கார்டை வாங்கி வைத்துக்கொண்டு, அனுப்பியவனிடம் வம்படியாக வசூல் செய்வார்கள் அல்லது அந்த உறவே அந்துபோய்விடும்.

பள்ளிக்காலத்தில், எல்லோருக்கும் தனியாக வாழ்த்து அனுப்பும் அளவுக்கு எனக்கு வசதி இல்லாததால், ஒரு போஸ்ட் கார்டில் என்னால் முடிந்த அளவுக்கு டிசைன் செய்து, எங்கள் வகுப்பின் பெயர் போட்டு பள்ளிக்கூடத்துக்கே அனுப்பிவிடுவேன். அதனை நானே போய் ஆஃபீஸ் ரூமில் வாங்கி வகுப்பில் கொண்டு வந்து காட்டுவேன். “கஞ்சப்பய” என்று ஓட்டினாலும், ஐடியாவை மெச்சுவார்கள். 

பதினொன்றாவது படிக்கும்போது, எனக்கு ஒரு பேனா நண்பன் இருந்தான். அவன் அனுப்பிய முயல் படத்தில் அதன் கண்களுக்கு சிவப்பு குந்துமணிகள் ஒட்டிய அந்த வாழ்த்தை பொக்கிஷமாக வைத்திருந்தேன். என் ஓவியத்திறமை(!) அனைத்தையும் காட்டி, வைக்கோலை வெட்டி ஒட்டி ஒரு வாழ்த்தும் நன்றியும் அவனுக்கு அனுப்பியிருந்தேன். காலப்போக்கில் சில நெருங்கிய நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் இருந்தது. அதுவும் இப்போது காணாமல் போய்விட்டது.


பொங்கல் வாழ்த்து அனுப்புவதற்கு அடுத்த கட்டம் ஒன்றிருந்தது. அது “நன்றி” கார்டு அனுப்பும் வழக்கம். வந்திருந்த ஒவ்வொரு பொங்கல் வாழ்த்துக்கும் , நன்றி கார்டு அனுப்பி உங்கள் வாழ்த்து வந்து சேர்ந்தது என்று உறுதிப்படுத்தவும். தங்கள் நன்றியைப் பதிவு செய்யவும் இந்தப்பழக்கம் பயன்பட்டது. அத்தகைய கார்டுகள் விதவிதமாக இருக்கும். ஏர் இந்தியா மஹாராஜா நன்றி சொல்லுவார். ஒரு பெண்ணின் கைகள் மட்டும் நன்றி சொல்லும். ஒரு குழந்தை நன்றி சொல்லும். தலவரின் சல்யூட் கூட நன்றி கார்டுக்குப் பயன்படும். பல விதங்களில் நன்றி கார்டுகள் வலம் வரும். நன்றி கார்டு என்பது எதிர் மொய் வைப்பது போன்ற கௌரவமாகப் பார்க்கப்பட்ட காலங்களெல்லாம் உண்டு. 

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் , கால ஓட்டத்தில் பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் வேறு தளத்துக்கு வந்து, முதலில் நம்மை அழைக்கும், தொலைபேசி வாழ்த்தாகி, பின்னர் நம் மின்னஞ்சலுக்கு வரும் மெயில் வாழ்த்தாகி, அதற்கடுத்து, மொத்தமாக குழுவுக்கு அனுப்பும் குறுஞ்செய்தி வாழ்த்தாகி, அதுவும் மாறி இணைப்பிலிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரே வார்த்தையில் வாழ்த்துச்சொல்லும் முகநூல் வாழ்த்தாக வந்திருக்கிறது. நேர சேமிப்பாகத் தெரிந்தாலும், பொங்கல் வாழ்த்து அனுப்பிய காலத்திலிருந்த ஒட்டுதல் குறைந்ததாகவே உணர்கிறேன். தபால் அனுப்பும் நேரத்தை விட முகநூலில் அதிகம் நேரம் செலவழிக்கிறோம் என்பதும் உண்மை! உணர்வுகளால் சூழப்பட்ட என்னைப்போன்ற ஆட்களுக்கு, அழகான படங்களுடனும், எழுதியவரின் கையெழுத்து இது என்று தொட்டுணரும் பொங்கல் வாழ்த்துடன் எதையும் ஒப்பிட இயலவில்லை. எண்ணங்களில் பல்வேறு கேள்விகள்!

அச்சிடப்பட்டு, விற்காமல் மீதமுள்ள பொங்கல் வாழ்த்துக்களெல்லாம் எங்கிருக்கும்?

இதை நம்பித் தொழில் செய்தவர்களெல்லாம் என்ன செய்துகொண்டிருப்பார்கள்?

எங்கள் ஊர் தபால்காரர் பொங்கல் நேரத்தில் எத்தனை கடிதங்களை டெலிவரி செய்வார்?

என் போன்று யாராவது பழைய பொங்கல் வாழ்த்துக்களை சேகரித்து வைத்திருப்பார்களா?

இன்றைய பள்ளிச் சிறுவர்களுக்கு அப்படி ஒரு பொருள் இருந்தது தெரியுமா?

இப்போதைய ஒவ்வொரு பொங்கலும் , அந்த ‘பொங்கல் வாழ்த்து, நன்றி கார்டு ‘ இல்லாமல்தான் கழிகிறது. அதனால்தானோ என்னவோ, பெரிய சுவாரஸ்யம் இல்லை. நமக்கென்று வயலில்லை, வரப்பில்லை, விவசாயமில்லை, கரும்புத் தோட்டமில்லை. கடைசியில் பொங்கல் வாழ்த்தும் இல்லாமல் போய்விட்டது.

இதையெல்லாம் எண்ணிப்பார்த்து, நான் மீண்டும் பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பத் துவங்கலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம். என் பேச்சை நானே கேட்கிறேனா என்று ?


டிஸ்கி: 

இந்த பதிவுக்காக பொங்கல் வாழ்த்து அட்டையின் படங்களை இணையத்தில் தேடும்போது மிக அரிதாகத்தான் புகைப்படங்கள் கிடைத்தன.

அப்படிப்பட்ட ஒரு படம்தான் இங்கு இருப்பதும்... ஆனால்,  அதை விட அரிதான கட்டுரை, இதே எண்ணத்தைப் பிரதிபலித்தது. பட உதவியும் அந்தத் தளம்தான் செய்தது.!

அதனை இங்கு பதிவதில் பெருமையடைகிறேன்.





Monday, December 30, 2013

ஹெல்மெட்




சென்ற ஜுலையில் ஒரு நாள்!

அன்று தொலைக்காட்சியில் நேரலை. 2 மணிநேரம் தொடர் நிகழ்ச்சி..! முடித்துவிட்டு வெளியில் வந்தால், மதியம் மணி 2 என்றது.
வீட்டிலிருந்து அழைப்பு!

சாப்பிட வரீங்களா?

ஆமாம்.. இதோ சேனல்லேருந்து கிளம்பிட்டேன். இன்னும் 15 நிமிஷத்தில் வீட்டில் இருப்பேன்.

என்று சொல்லிவிட்டு, பைக்கைக் கிளப்பினேன்.

காசி தியேட்டர் சிக்னல் தாண்டி, .அடுத்த நூறு மீட்டரில், BSNL அருகில் சிக்னல் இல்லாமல் ஒரு சந்திப்பு. அதில் திடீரென்று நான்கைந்து வாகனங்கள் இடது புறத்திலிருந்து குறுக்கிட, நானும் என் அருகில் வந்துகொண்டிருந்த காரும் கொஞ்சம் நிதானித்து நிறுத்தினோம்.

நான் வண்டியை நிறுத்திய கணம் ‘டொம்’ என்ற ஒரு சத்தம் கேட்டது.

மறுவிநாடி நான் வானத்தில் பறந்துகொண்டிருந்தேன்.

என் பைக் எனக்கு முன்னால், தரையில் பயணித்துக்கொண்டிருந்தது. சாலையில் நேராகப் போய் மோதப்போகிறோம் என்று தெரியும். ஆனால் என்ன செய்வது என்று முடிவெடுக்கத் தோன்றவில்லை. நேரமும் இல்லை. கை கால்கள் இலக்கின்றி அலைகின்றன.

“ச்சொட்” என்ற சத்தத்துடன் என் தலை நேரடியாகச் சாலையில் மோதியது. உடல் எடை முழுவதும் தலையில் இறங்கி அது, தரையிலும் இறங்குவதை அந்த நொடி உணர முடிந்தது.

ஆனால், அதிசயமாக, ஒரு கீறல் கூட இல்லாமல் எழுந்தேன். வலது கணுக்காலில் மட்டும் சரியான வலி! நிச்சயம் எலும்பு உடைந்திருக்க வேண்டும்.

சுற்றி இருந்தவர்கள் ஓடிவந்தார்கள். என் பைக்கிலிருந்து பெட்ரோல் சாலையில் வழிந்துகொண்டிருந்தது. ஆளாளுக்கு உதவி செய்துகொண்டிருந்தார்கள்.

என் பேனாவை ஒருவர் எடுத்துக்கொடுத்தார்.

பைக்கை நிமிர்த்தி, சாலையோரம் ஒருவர் நிறுத்தினார்.

ஒரு ஸ்கூட்டி பெண்மணி
“இப்பத்தான் உங்கள டிவில பாத்தேன்.. என்னாச்சு சார்? ” என்று அக்கறையுடன் விசாரித்தார்.

அப்படி இன்னா வேகமா வந்து இப்டி இட்ச்சிட்டு நிக்கிற? என்று அவர்கள் கைநீட்டித் திட்டிக்கொண்டிருந்தபோதுதான் கவனித்தேன். என்னை மோதிய அந்தக் காரின் ஓட்டுநரை!

என் பைக்கில் மோதியது ஒரு நட்சத்திர ஹோட்டலின் டிராவல் டெஸ்கின் கார்! அது மோதிய வேகத்தில்தான் நானும் பைக்கும் நிலை குலைந்திருக்கிறோம். காரின் நம்பர் ப்ளேட் கீழே கிடந்தது. அதனை எடுத்து வைத்துக்கொண்டு, அந்தக் கார் ஓட்டுநரை எல்லோரும் திட்ட, அந்த இளைஞனும் பயந்துவிட்டான்.

என்னைச் சுற்றி சிலர்.. அவனை விசாரிக்க சிலர் என்று இருக்க..

நான் அருகில் சென்றேன்.

அவனும் என்னிடம் ஓடிவந்தான்.

“ரொம்ப அடிபட்டிருச்சா சார்?. ஸாரி சார்! பேஸஞ்சர் வேகமா போங்க!ன்னாங்க ! புத்தி கெட்டுப்போச்சு! உங்க வண்டியை ஓரமா நிறுத்திட்டு வாங்க! காரில் ஆஸ்பத்திரி கூட்டிட்டுப்போறேன். என்று தீர்வை நோக்கிப் பேசினான்.

நானும் சண்டை போடும் மனநிலையில் இல்லாமலும், அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலும் இருந்ததால்,
“சரி வாங்க போலாம்” என்று சொன்னேன்.

ஆனால், அந்தக் காரில் பயணியாக வந்தது ஒரு தனியார் விமானப் பணிப்பெண். அவள் மனிதாபிமானத்துக்குக் கூட காரை விட்டு இறங்கவில்லை.

தனக்கான மாற்றுக்காரை ஏற்பாடுசெய்துவிட்டு , எங்குவேண்டுமானாலும் போ! என்று சொல்லியிருக்கிறாள்.

நான் சிரித்துக்கொண்டே அவளைப் பார்த்தேன். வெள்ளைத் தோலுடன்,முகம் முழுக்க சரியான அலங்காரத்துடன், அழகாகத் தெரியவேண்டியவள், அப்போது மிகவும் அசிங்கமாகத் தெரிந்தாள். சுற்றியிருந்தவர்கள் போட்ட சத்தத்தில் , காரை விட்டு இறங்கி, செல்ஃபோனை நோண்டிக்கொண்டே, சடுதியில் காணாமல் போனாள்.

அதற்குப் பிறகு , அருகிலேயே “மாயா” மருத்துவமனைக்குச் சென்றோம். மருத்துவர் மிகவும் நட்பாக உரையாடி, காலுக்கு மட்டும் எக்ஸ்ரே எடுத்து, கணுக்காலில் ஒரு எலும்பு மிக மிக லேசாக விரிசல் விட்டிருப்பதாகவும். ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்றும் சொன்னார். அதற்குள் அந்த நட்சத்திர ஹோட்டலின் மேலாளர் உள்ளிட்ட இரண்டுபேர் வந்து என்னைப் பார்த்து, விசாரித்து, மருத்துவச் செலவுகளைப் பார்த்துக்கொண்டார்கள். பைக் சரி செய்யும் செலவையும் ஏற்றுக்கொள்வதாகச் சொல்லி, எண்கள் கொடுத்து, தனியாகச் சென்றுவிடுவீர்களா? வீட்டில் கொண்டு வந்து விடட்டுமா என்று கேட்டு, நான் வேண்டாம் போய்விடுவேன் என்று சொன்னதும்தான் சென்றார்கள்.

ஆனால் இவையெல்லாம் நடந்தேறும்போது நேரம் 4 மணி ஆகியிருந்தது.

வீட்டிலிருந்து 11 மிஸ்டு கால்கள்!

அழைத்தேன்.

கிளம்பிட்டேன் இன்னும் 15 நிமிஷத்தில் வரேன்னீங்க !! ரெண்டு மணி நேரமாச்சு! எங்க இருக்கீங்க? என்று அந்தப்பக்கம் கேட்க,

“ஒரு சின்ன வேலையாயிடுச்சும்மா! கொஞ்ச நேரத்தில் வந்துருவேன். நீ சாப்பிட்டுரு” என்றேன்.

பரவால்ல…சீக்கிரம் வாங்க ! சேந்து சாப்பிடுவோம்.! என்றது எதிர்முனை!

கண்ணீர் துளிர்க்க, ஒரு கலவையான மனநிலையுடன் பைக்கை எடுத்தேன்.

மகிழ்ச்சியாக சேனலிலிருந்து கிளம்பிய நான், வீட்டிற்கு போய் சேராமலேயே இருந்திருப்பேன். அந்த விபத்தில், என் தலை சாலையில் நேரடியாக மோதி, நான் கனவுகளுடன் சிதறிப்போவதை தடுத்து நிறுத்திய ஒரே பொருள்… ஹெல்மெட்!

விபத்து நடந்து சில நிமிடங்கள் வரை நான் ஹெல்மெட்டைக் கழட்டாமலேதான் நின்றுகொண்டிருந்தேன். யாரோதான் கழட்டி விட்டார்கள். அதற்குப்பிறகுதான் ஒரு சிலர் “எங்கேயோ பார்த்திருக்கிறேன்” என்ற ரீதியில் பேசினார்கள். எனக்கு “ஹெல்மெட் மட்டும் இல்லைன்னா?” என்ற சிந்தனைதான் திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.

வானில் பறந்துகொண்டிருந்த அந்த வினாடியும், தரையில் தலை மோதியபோது ஏற்பட்ட சத்தத்தையும் இன்னும் நான் அனுபவித்து, நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த சம்பவம் நடப்பதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்னர்தான், எனது உறவினர் ஒருவர், சாலை விபத்தில் தலையில் காயம்பட்டு உயிரிழந்தார். அவர் செய்த ஒரே தவறு ஹெல்மெட் அணியாததுதான்.!!

எப்போதுமே ஹெல்மெட் போடுவதை நான் விரும்பிச் செய்வேன். ஏனெனில் , முகம் நேரடியாக வெயிலில் படாது. கண்களில் தூசி விழாது. குறிப்பாக, தேவையில்லாமல், போக்குவரத்துக் காவலர்களிடம் பதில் சொல்ல வேண்டியிருக்காது. அவர்கள் முதலில் சொல்வதே “உங்க நல்லதுக்குத்தானே சார் சொல்லுறோம்?”

ஆனால், அதையெல்லாம் மீறி அதன் உண்மையான வேலையான, உயிர்காக்கும் செயலை மிக அற்புதமாகச் செய்து தெய்வமாகவே மாறிப்போனது எனது ஹெல்மெட்!

பொதுவாக நாம் ஹெல்மெட் போடாததற்கு சொல்லும் சப்பைக் காரணங்கள்.. முடி கொட்டுது!  வேர்த்துக்கொட்டுது,  uneasyஆக இருக்கு! ஆகியவைதான். இதையெல்லாம் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுங்க பாஸ்! நமக்காக வீட்டில் சாப்பிடாம காத்திருப்பாங்க! அவங்க கண்ணீருக்கு நம்ம காரணமாகிடக்கூடாது.

இது என் அறிவுரையெல்லாம் இல்லை. ஆனால், அந்த மரண வினாடியை அனுபவித்தவன் சொல்கிறேன்.

தயவுசெய்து ஹெல்மெட் அணியுங்கள்.!


தலை முடியை விட, உயிர் முக்கியம்!


Saturday, July 13, 2013

லூசுதவி !







            அன்று இரவு, எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் பார்க்கிங்கில் என் வண்டியை நிறுத்தும்போது ஒரு செல்ஃபோனின் பாட்டுச்சத்தம் மட்டும் கேட்க, அதைப் பின் தொடர்ந்து சென்றால், ஒரு ஸ்கூட்டியின் கீழே அந்த் ஃபோன் கிடந்தது. 

            கடைசியாக அழைத்த நபரிடமே கேட்டபோது, ஃபோனின் உரிமையாளர் ஒரு பெண் என்றும் அவரது வேலை பற்றியும் தெரியவந்தது. ஆனால், அழைத்தவருக்கும் அந்தப்பெண்ணின் வீடு பற்றித் தெரியவில்லை.

           எங்கள் பார்க்கிங்கில் இருந்ததால், நிச்சயம் அவர் எங்கள் குடியிருப்பில்தான் வசிக்கவேண்டும். ஆனால் 48 வீடுகளிலும் சென்று கேட்கமுடியாது. செக்யூரிட்டிக்கும் அந்த ஸ்கூட்டி யாருடையது என்று அடையாளம் சொல்ல இயலவில்லை. அவரும் செல்ஃபோனைக் கொடுக்கும் பொறுப்பை மறுத்துவிட்டார். ஆகவே, அந்த வண்டியிலேயே எனது தொலைபேசி மற்றும் வீட்டு எண்களை எழுதிவைத்துவிட்டு செல்ஃபோனை எடுத்துக்கொண்டு, படியேறினேன்.

வீட்டுக்கு வந்தபின், அந்த ஃபோனை ஆராய்ந்து ‘அம்மா’ என்ற எண்ணுக்கு அழைத்தேன்.

ஹலோ!

வணக்கம்! நீங்க... xxxxxx வோட அம்மாவா?

இல்லை.. நான் தான் xxxxxx பேசுறேன்.

ஓ.. சரிங்க! உங்க செல்ஃபோனை எங்க விட்டீங்க?

இருங்க பாத்துச் சொல்றேன். (என்று சொல்லிவிட்டு என்னை லைனில் வைத்துக்கொண்டே 10 விநாடிகள் தேடினார்) ஓ. ஹேண்ட்பேகில்தான் வச்சிருந்தேன். கீழ பார்க்கிங்கில் வண்டிக்கிட்ட எல்லாத்தியும் எடுக்கும்போது இருந்துச்சே! தேடிட்டு சொல்றேன். ஆமா.. ஏன் கேக்குறீங்க?

ரொம்ப நல்லது! உங்க போன் என்கிட்ட இருக்குங்க! உங்க அம்மா ஃபோனில் இந்த அழைப்பு வரும்போது callingன்னு வந்த பேரை வச்சுக்கூட கண்டுபிடிக்க முடியலையா?

ம்.. அதில் LOOSU ன்னு வந்திருக்கு! அது நீங்கதான்னு நினைச்சு பேசினேன்.

நாசமாப் போச்சு!!

(அப்புறம் நான் விபரம் சொல்ல, என் வீட்டுக்கு வந்து ஐம்பது நன்றிகள் சொல்லி வாங்கிச் சென்றார்!. அம்மாவுக்கும், மகளுக்கும் மூன்றாம் உலகப்போர் வந்திருக்கும்)




கண்டுபிடிப்பு # 1       உங்க நெருங்கின சொந்தமே இருந்தாலும், அவங்க உங்க பேரை எப்படி ஃபோனில் வச்சிருக்காங்கன்னு பாருங்க!

கண்டுபிடிப்பு # 2       அரை மணி நேரத்துக்கு மேல் தன் ஃபோனைப் பற்றிய நினைவில்லாமல் இருக்கும் இளம்பெண்களும் சென்னையில் இருக்கிறார்கள்.

கண்டுபிடிப்பு # 3       உதவி செய்யும் அனைவருக்கும் லூசு என்ற பட்டமே நிரந்தரம்




இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...