'நீயெல்லாம் நண்பனாடா?'
இப்படிக்கேட்டுவிட்டுத்தான் ஆரம்பித்தான் சங்கர்.
'நீதான் எதைப்பாத்தாலும் அப்படியே வரையிவியேன்னு உங்கிட்ட வந்து எங்க அப்பா கையெழுத்தை மார்க் ஷீட்டில் போடச்சொன்னா உடனே தர்மம் நியாயம் எல்லாம் பேசுறியே! உனக்கெல்லாம் நட்பைப்பத்தி என்னடா தெரியும்?'
அவனோடு பிரபுவும்,சிவாவும் சேர்ந்துகொள்ள..அவன் அப்பா கையெழுத்தை அப்படியே போட்டேன்.
' நண்பன்னா நீதாண்டா நண்பன்! 'என்றான் சங்கர் முகம் முழுக்க பற்களோடு!
படித்து முடித்து ,ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டு இருந்தபோது சிவாவும் என்னுடனேயே தங்கியிருக்க, ஒரு நாள் இரவு சினிமாவுக்குப்போனபோது, டிக்கெட் கவுண்ட்டருக்குள்ளிருந்து அந்தக்குரல் கேட்டது,
'நீயெல்லாம் நண்பனாடா? - இந்த ஊர்லதான் இருக்கேன்னு ஒருவார்த்தை சொல்லக்கூடாது.? '
'அட..சங்கரு எப்படிடா இருக்க?' என்று அளவளாவ, இங்கதான் தியேட்டரில் டிக்கெட் குடுக்குறேன். நீ எங்க இருக்க? என்று விலாசம் வாங்கிக்கொண்டான்.
சில மாதங்களில்...ஒரு நாள் இரவு 10 மணிக்கு மேல் அறைக்கதவு தட்டப்பட, திறந்தால்..சங்கர்!
என்னடா?
'நண்பா..தியேட்டருக்கு அடிக்கடி வரும் ஒரு பொண்ணை லவ் பண்றேன். அவுங்க வீட்டுல தெரிஞ்சுபோச்சு..அதுனால கூட்டிக்கிட்டு ஓடப்போறேன்.பஸ் ஸ்டாண்டில் அவளை உக்கார வச்சிட்டு வந்திருக்கேன். ஆயிரம் ரூபா குடுடா!'
'டேய்..இன்னும் நீ வாழ்க்கைல செட்டிலே ஆகலை! வயசு வேற 23தான் ஆவுது! இப்ப ஏண்டா லவ்வு கிவ்வுன்னு.. அப்படியே திரும்பி வீட்டுக்குப்போயிரு..! நானும் சிவாவும் போய் அந்தப்பொண்ணை அவ வீட்டில் விட்டுர்றோம்.!' என்று சொல்லி முடிப்பதற்குள்,
'நீயெல்லாம் நண்பனாடா? இவ்வளவு நாள் பழகியும் ஆயிரம் ரூபா தர்றதுக்கு என்னல்லாம் அட்வைஸ் பண்ணுற! உனக்கு நட்புன்னா என்னன்னு தெரியுமாடா ' என்று கத்திப்பேசி அழ ஆரம்பிக்க..அக்கம்பக்க அறைகள் கவனிக்க ஆரம்பித்தன.
சிவாவும், 'சரி விடுடா! அவன் இப்ப அட்வைஸ் பண்ற நிலமைல இல்லை! காசைக்குடுத்து விட்ருவோம்.! போய் பொழச்சுக்கட்டும்' என்று என்னை அடக்கி காசைக்கொடுத்து அனுப்பிவிட்டான்.
ஆண்டுகள் ஓடின..
கோவையில் உள்ள சித்தப்பா பெண் திருமணத்துக்கு, உறவினர்களுடன் பாத்திரங்கள் வாங்கிவிட்டோம். பெயர் வெட்டலாமென்று கடைவாசலுக்கு வந்தால்...பெயர் வெட்டிக்கொண்டிருந்தது..சங்கர்!
'டேய் சங்கரு! எப்படிடா இருக்க?'
திரும்பியவன், என் முகத்தைப்பார்த்ததும்...
டேய் ! நீயெல்லாம் நண்பனாடா! நட்புன்னா உனக்கு என்னான்னு தெரியுமா? அன்னிக்கு பணம் கேட்டு வந்தேனே? ஒரு கன்னத்துல ஒரு அறைவிட்டு ரூமுல தள்ளி கதவைச்சாத்தியிருந்தீன்னா...நான் இப்ப இந்தக் கதிக்கு ஆளாயிருப்பேனா..! கல்யாணம் பண்ணி..ரெண்டு புள்ளையும் பெத்து தடுமாறிக்கிட்டிருக்கேண்டா..எல்லாத்துக்கும் நீதாண்டா காரணம்..! என்று கத்திக்கொண்டே போனான்.!

