Showing posts with label நடப்பு. Show all posts
Showing posts with label நடப்பு. Show all posts

Saturday, May 7, 2016

சரவணா ஸ்டோர்ஸ் ! BRANDமாண்டமாய் !!







சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் பார்த்து ஏகப்பட்ட விவாதங்கள்!
அதற்குள் இருக்கும் நேர்மறை சூட்சுமம் நமக்கு புரிவதில்லை.
சரவணா ஸ்டோர்ஸ் 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரண பெரும் கடை! ஆனால் இப்போது ஒரு பிராண்ட்..!
அதற்கு தேவையில்லாமல் ஒரு நடிகருக்குக் கோடிக்கணக்கில் கொடுத்து, அவர் முகத்தை அந்த நிறுவனத்துக்கு அடையாளமாக்குவது ஒரு பிராண்டுக்கு தேவையில்லை.
மேற்கத்திய பிராண்டுகள் , பெரும்பாலும் ஒரு குறியீட்டைக் கொண்டிருக்கும் அல்லது அதன் முதலாளியின் படத்தைத்தான் கொண்டிருக்கும்.
உலகெங்கும் பொரித்த கோழி விற்கும் KFC யின் பிராண்ட் பாருங்கள்.. அதன் முதலாளியின் படம்தான் இருக்கும்.
நிதி நிர்வாகம் செய்யும் FRANKLIN TEMPLETON பாருங்கள்! அதன் முதலாளி படம்தான் இருக்கும்.
பாலு ஜுவல்லர்ஸ் முதலாளிதான் அதன் பிராண்ட்
ரத்னா ஸ்டோர்ஸுக்கு முதலாளிதான் பிராண்ட்
வசந்த் அண்ட் கோவுக்கு முதலாளிதான் பிராண்ட்
சரவணா ஸ்டோர்ஸின் மூலக் குடும்பத்துக்கு இன்னும் அண்ணாச்சியின் சிரித்த முகம்தான் பிராண்ட்!
அதனால், அவர் முகம் காட்டியதில் ஒன்றும் தவறில்லை.!!
நடிகர்களோ, விளையாட்டு வீரர்களோ, இன்னொரு பிராண்டுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், அந்த முதலாளிகள் மாற மாட்டார்கள்.
மேலும், அவரை நமக்கு முன்னரே தெரியாது என்பது மட்டும்தான் நமது பிரச்னை!
தெரிந்திருந்தால் இவ்வளவு கலாய்த்தல் நடந்திருக்காது.
மேலும்..
அவர் ஒன்றும் விபரம் தெரியாதவரோ, விளம்பரத்துக்கு முகம் காட்ட ஆசைப்படுபவரோ கிடையாது.
அந்த விளம்பரத்தில் வருபவரின் மகளுக்குத் திருமணமாகிவிட்டது.
அவர் ஆரம்பத்திலிருந்தே பிராண்ட் பற்றி அறிவு கொண்ட மனிதர்!
பெரிய நடிகரை அணுகி.. அவர் கேட்ட தொகை இவர்களுக்கு அதிர்ச்சி அளித்ததால்கூட களத்தில் இறங்கியிருக்கலாம்.
ஆனால்.. அவர் முகம் இப்போது சரவணா ஸ்டோர்ஸின் பிராண்ட் ஆகிவிட்டது.
இதனை ஒரு சரியான பிராண்ட் நடவடிக்கையாகத்தான் பார்க்கிறேன்.
மேலும்.. அவரது முகம் 1:1.6 எனப்படும் பிராண்ட் விதிப்படி சரியாக இருக்கிறது.
அழகை மீறி, விளம்பர உளவியலுக்குச் சரியான முகம்...!!
இன்னொரு செய்தி.. கடந்த ஒரு ஆண்டில், உலகளாவிய வகையில், பிராண்டுக்கு பிரபலங்களை புக் செய்வது 31% குறைந்திருக்கிறதாம்.
ஆக.. சரவணா ஸ்டோர்ஸ் உண்மையிலேயே Brandமாண்டமாய்த்தான் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Sunday, November 22, 2015

சென்னைப் பிழை!


 பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை விட
பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் ஆபத்து !!
அப்படியொன்றும் செய்துவிடமுடியாது என்று அறைந்துவிட்டுச் செல்கிறது இயற்கை!





சென்னை வெள்ளக்காடாகிவிட்டது என்று எல்லா இடங்களிலும் புலம்பி, அலம்பி , சலம்பித் தீர்த்துவருகிறோம். எவ்வளவுதான் மூட்டை மூட்டையாக எழுதினாலும் தண்ணீரை அடைக்கவோ, வடிக்கவோ அது போதுமானதாக இல்லை. அவ்வளவு எழுத்தும் மண்ணாக இருந்தால்கூட ஏதாவது சாத்தியப்பட்டிருக்கும்.

இந்த சூழலில், நமக்கு மொத்தமாக இருக்கும் ஆத்திரம், ஆதங்கம், வருத்தம், கோபம், ஆற்றாமை, எல்லாவற்றையும் திட்டி பதிவு போட்டோ, சென்னையை கேவலமாகக் கிண்டல் அடித்தோ வடித்துக்கொள்கிறோம்.

ஆனால், ஒரு நிதர்சனமான உண்மைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டுதான் இத்தனையும் செய்கிறோம் என்று புரிந்துகொள்ளவேண்டும்.

நாம் யாருமே சென்னையை நேசிக்கவில்லை.. சும்மா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் ஊரில், மழை பெய்தால் இப்படித்தான் வெள்ளமாகும். உடனே அப்பா ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லுவார், எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் வாய்க்காலை வெட்டிவிடுவார். எங்கள் வீட்டில் தண்ணீர் தங்காமல் காண்வாய்க்கால் வழியாக வழிந்து ஓடுகிறதா என்று பார்ப்பார். பிறகு பக்கத்துவிட்டு அண்ணனும் வெளியில் வந்திருப்பார். அவரும் அதையே செய்ய.. மொத்தத் தெருவின் தண்ணீரும் பெத்தாரி என்றழைக்கப்பட்ட பெத்த ஏரிக்குச் சென்றுவிடும். நாங்கள் அந்த வாய்க்கால் நீரில் கப்பல் விடுவோம். மிதந்துவரும் இலைகளை வேடிக்கை பார்ப்போம். அப்போதுகூட சிறுவர்களுக்கு ஒரு வேலை கொடுப்பார்கள். அதில் செத்தைகள் மெதந்துவந்தா எடுத்து வெளில போடுங்கடா... !!  சந்தோஷமாக அதைச் செய்வோம். ஊரில் வேறு எங்காவது தண்ணீர் தேங்குகிறது , உடைப்பு என்று தெரிந்தால்.. மொத்தக்கூட்டமும் ஓடும்.

தங்களால் முடிந்த ஏதாவது ஒன்றைச் செய்து உடைப்பை அடைத்துவிடும். 84ல் ஏற்பட்ட வெள்ளத்தில், நரியாற்றுப்பாலம் உடைந்தபோது.. மக்களே ஒரு ஏற்பாட்டை உருவாக்கினார்கள். கரைக்கு அந்தப்பக்கம் வரை எம்.ஜி.ஆர் வந்துசென்றது மசமசவென்று நினைவாடுகிறது.

எந்த தொழில்நுட்ப முன்னேற்றமும் இல்லாதபோது ஏதாவது ஒன்று செய்து கிராமத்தைக் காக்கவேண்டும் என்று அவர்கள் நினைத்ததற்குக் காரணம்... தான் வாழும் மண்ணை நேசித்தார்கள்.
 
ஊருக்குள் ஒருவர் வீட்டில் பிரச்னை என்றால் ஓடிப்போய் உதவினார்கள்.
ஒரு வீட்டில் தீப்பிடித்தது என்றால்... ஆளுக்கொரு வாளி நீருடன் ஓடினார்கள்.


இங்கு?

இதோ பாருங்கள்.. பாதாளச்சாக்கடை திறந்திருக்கிறது என்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்த நேரத்தில் இறங்கி மூட மனமில்லை!

சென்னைவாசிகள் என்றுதான் நம்மில் பலருக்கு உபபெயர்!  சென்னைக்காரர்கள் என்று இல்லை!! 
சந்தித்து மூன்றாவது நிமிடம்.. நமக்கு சொந்த ஊரு எது? என்று கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். ”எங்க ஊர்ல எல்லாம் இப்படி இல்லை” என்று பல முறை சொல்லி வருகிறோம். அப்படியானால், இந்த ஊர்?
 
இந்த மண்ணின் மீது மனதளவில் அந்நியப்பட்டு, இங்கிருக்கும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்தவேண்டும். ஆனால், அதற்கு எதுவும் நம்மால் ஆனதைச் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

சாதாரணமாக, ஒரு சாலை விபத்து நடந்தால்கூட ஓடிவந்து காப்பது சென்னைக்காரனாகத்தான் இருப்பான்.  சென்னைவாசியாக இருக்காது!

டிராஃபிக் ஜாம் ஆனால், வழி ஏற்படுத்திக் கொடுப்பது சென்னைக்காரனாகத்தான் இருப்பான். சென்னை வாசி.. ஹாரன் அடித்துக்கொண்டிருப்பான்.!

இந்த தண்ணீர் தேசமாகிவிட்ட நிலையில், அறைக்குள் அமர்ந்துகொண்டு, இந்தியாவின் வெனிஸ்... !! என்று வியாக்கியானமாக எழுதுபவன் சென்னைவாசியாகத்தான் இருப்பான்!
தெருவில் இறங்கி வேலை பார்த்துக்கொண்டிருப்பான் சென்னைக்காரன் !

சென்னையின் மொத்த மக்கள் தொகையில் 8% பேர்தான் சென்னைக்காரர்கள் !! 92% பேர் சென்னைவாசிகள்தான் !! வந்தேறிகளான நாம் வந்துதான் இந்த நகரம் இவ்வளவு வளர்ந்தது என்று பிரமாதமாக வாதிட்டாலும், இவ்வளவு மோசமானதும் நம்மால்தான் என்பதை கொஞ்சம் கண்ணாடி பார்த்து ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இது சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நேரம் !!  இங்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவலத்துக்கு நாமும் ஒரு காரணம்.. இல்லை. நாம்தான் முதல் காரணம் என்று  உணர்ந்துகொள்வோம்.

ஏரியாக இருந்தால் என்ன? அதெல்லாம் பில்டர் காசுகொடுத்து அப்ரூவல் வாங்கியிருப்பார். அதனால், எப்படியாவது வீடுவாங்கவேண்டும் என்றோ, என் வீட்டு முன்னால், தண்ணீர் தேங்காமல் இருக்க மொத்தமாக சிமெண்ட் போட்டு பூசுவேன் என்றோ, குப்பையை யாருக்கும் தெரியாமல், ரோட்டில் கொட்ட நினைக்காமல், இந்த அவலமான காலகட்டத்தை முழுமையாக மனதில் வைத்துச் செயல்படுவோம். 

நாம், இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால், அக்கறை அதிகமான மனிதர்கள் இந்த நகரத்தில் இருப்பதை, அரசும் புரிந்துகொண்டு, அதற்கேற்றார்ப்போல் செயல்படும்.

இங்கு புலம்புபவர்கள்தான் அதிகம்! ஆனால்,  புரிந்து செயல்படுபவர்கள்தான் தேவை!

இந்த நகரத்தை நம்பித்தான், நாம் வந்திருக்கிறோம். இந்த நகரத்தை பயன்படுத்தித்தான் சம்பாதிக்கிறோம். ஆனால், நாந்தான் வரி கட்டுறேனே?.. நகரத்தின் தேவைகளையெல்லாம் அரசுதான் செய்யவேண்டும் என்று பேசுவதற்கு முன்னால் , நாம் வாழும் பகுதியில் இதுபோன்ற இடர் நிகழாமல் இருக்க, என்ன முயற்சி எடுத்தோம் என்று கொஞ்சம் சிந்திக்கலாம். அப்புறம் அப்படிச் சிந்திப்பவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அரசைக் கேள்வி கேட்கலாம். அப்போது சரியான பதில் கிடைக்கும்.

சென்னை ஒரு அற்புதமான நகரம்..!! அதைச் சிதைத்துவிட்டு.. அதைக்குறை சொல்வது மிகவும் வலி ஏற்படுத்துகிறது.

வாழ்ந்துகெட்ட மாளிகைக்குள் வந்ததைப்போல் உறுத்துகிறது.

இனியாவது நம்மால் இப்படி ஒரு அநியாயம் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம்.

இந்த ஊரை நேசிப்போம்.  சென்னை வாசி என்பதிலிருந்து.. சென்னைக்காரனாக முடிவெடுப்போம்!


பின் குறிப்பு : இவ்வளவு எழுதுறியே ? நீ என்ன செஞ்ச ? என்று நினைப்பவர்களுக்காக ....

இதை உணர்ந்ததால், ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, எங்கள் பகுதி மாநகராட்சி உறுப்பினரைத் தொடர்பு கொண்டு, பிரச்னை உள்ள பகுதி மனிதர்களை ஒருங்கிணைத்து, தேவைப்பட்ட உதவிகளைச் செய்துகொண்டு, அவர்களுக்கு ஏதாவது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டு,  நான் வசிக்கும் கட்டிடத்திலும் முடிந்தவரை தண்ணீர் வெளியேற வழிசெய்துவிட்டுத்தான் எழுதுகிறேன்.
நன்றி !

Saturday, May 23, 2015

அருகாமை!

தஞ்சையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது,
அவர் ஒரு ஸ்க்ரீன் பிரிண்ட்டிங் பிரஸ் வைத்திருந்தார். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்றை வாங்கி அதற்குத் தவணை முறையில் பணம் கட்டி வந்தார். அவரிடமிருந்து ஒரு மாதமாக தவணை வரவில்லை என்று வசூலிக்கும் நபர் காட்ட, அவரைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் கிளை நிர்வாகியான எனக்கு வந்துவிட்டது.

அன்று மாலை 4 மணி இருக்கும். சென்றபோது நல்ல உயரமான நபர் ஒருவர் தாடி வைத்துக்கொண்டு, பெரிய கண்களுடன் நின்றிருந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பேச ஆரம்பித்தேன். கொஞ்சம் உடம்பு சரியில்லை. இந்த வாரம் வந்துரும் . மொத்தமா குடுத்துர்றேன் கவலைப்படாதீங்க..! வேணும்னா நாளைக்கு சாயங்காலம் ஒரு தொகை வரவேண்டியிருக்கு ! அதையே தந்துர்றேன். நீங்க வாங்களேன். என்றார். சரி சார் ! என்று சொல்லிவிட்டுக் கிளம்பும்போது, அவர் மேசையில் இருந்த புத்தகங்களும், சிற்றிதழ்களும் என்னைக் கவர்ந்தன. ஏனெனில் நானும் எனது நண்பன் எழிலரசுவுடன் சேர்ந்து “விடியல்” என்ற சிற்றிதழ் நடத்திக்கொண்டிருந்தேன்.

            அந்த ஆர்வத்தில் , அவரிடம் பேச ஆரம்பித்தேன். அவரும் குழந்தை போல் இலக்கியம் குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டார். அவர் நடத்தும் பத்திரிக்கை பற்றியும் சொன்னார். பேசிவிட்டுக் கிளம்பும்போது, தெற்கு வீதியில் ஒரு கடை மாடியைச் சொல்லி, அங்குதான் இலக்கியக் கூட்டம் நடக்கும். வாங்களேன். அங்கேயே வந்து பணம் வாங்கிக்குங்க என்று சொன்னார்.

      அதேபோல் அங்கு போய்ப் பார்த்தால், நிறையப் பேர் வந்திருந்தார்கள். காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இவர் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். தாடியைத் தடவி விட்டுக்கொண்டே சட்டைப்பையிலிருந்து ஒரு கவரை எடுத்தார். பணத்தை வாங்கிக்கொண்டு நானும் ரசீது போட்டுக் கொடுத்தேன். உடனே, என்னை அந்தக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். “ஒரு சிற்றிதழ் நடத்துறார்” என்று சொல்லி ஆரம்பித்தார்.

      நிறையப் பேசினார்கள். கேட்டுக்கொண்டிருந்தேன். கடைசியில் அவரிடம் விடைபெறும்போது, நான்கைந்து புத்தகங்களை எடுத்து கையில் கொடுத்து, நிதானமா படிச்சுட்டு சொல்லுங்க! ஒருநாள் இந்தப் புத்தகத்தைப்பத்தின உங்க கருத்துக்களைப் பாத்துரலாம் என்று உற்சாகமாகச் சொல்லி வழியனுப்பினார்.

அதற்குப்பிறகு பல கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர் பெயர் தெரிந்து, அவரும் ஒரு எழுத்தாளர் என்று அறிந்து, அவரது நூல்களையே ஆழமாகப் படித்து, புரிந்துகொள்ளமுடியாமல் சில இடங்களில் தடுமாறி , “தப்பா நினைச்சுக்காதீங்க. எனக்குப் புரியலை” என்று நான் சொல்லி, அவரே அதற்கு விளக்கமும் அளித்து , ஆதுரமாகப் பேசி அனுப்புவார். இசை , கலை, இலக்கியம், வரலாறு, மராட்டிய மன்னர்கள், தஞ்சையின் பாரம்பரியம் என்று அவர் தொடாத விஷயங்களே இருக்காது. அனைத்தையும் ஆழமாக அலசுவார். துவக்க காலங்களில் நான் படித்த பின் நவீனத்துவ இலக்கியங்களை எனக்கு அறிமுகப்படுத்தியதே அவர்தான்.!

அவர் வீட்டில் ஒரு பெரிய நாய் வளர்த்துவந்தார். விபரம் தெரிந்து நான் பார்த்த முதல் மிகப்பெரிய நாய் அதுதான்.

நான் வேலையை விட்டுவிட்டு வெளிநாடு போகும்போது சொல்லிவிட்டுச் சென்றேன்.

பிறகு தொடர்பே இல்லை. சில ஆண்டுகள் கழித்து திரும்ப தஞ்சை செல்லும்போது விசாரித்தேன்.

இறந்துவிட்டார் என்றார்கள்.

அவரது நிறுவனத்தின் பெயர் GML Screen Pirinting என்று தெரியும்.

பழகத் தொடங்கி அவரை பல காலம் “GML பிரகாஷ்’ என்றுதான் நினைவு வைத்திருந்தேன்.

அவர்தான் எழுத்தாளர் “தஞ்சை பிரகாஷ்” என்று பின்னர்தான் தெரியும்.







Thursday, April 9, 2015

செம்மரச் சந்தேகங்கள் !





எத்தனையோ கேள்விகள் இடிக்கிறது !!
செம்மரக்கடத்தல் தவறுதான்… ஆனால் அது சுட்டுக்கொல்லும் அளவுக்குக் குற்றமா?

தப்பிச்செல்ல முயற்சிப்பவர்கள்… சுட்டுக்கொல்லப்படும் வரை அவ்வளவு பெரிய கட்டையை தூக்கிக்கொண்டேவா ஓடினார்கள்?

தாக்கினார்கள் என்றால், திருப்பி துப்பாக்கியால் சுடும் அளவுக்கு தூரத்தில் இருந்தார்களா? அப்படியென்றால், எதனால், எங்கு தாக்கினார்கள்...?

20 பேரும் கையில் செம்மரக்கட்டையையும் வைத்துக்கொண்டு, எதனால் தாக்கியிருக்கமுடியும்?

கீழே போட்டுவிட்டுத் தாக்கினார்கள் என்றால், ஓடும்போது சுட்டிருந்தால், அந்தக் கட்டைகள் அருகிலேயே மீண்டும் வந்து படுத்துக்கொண்டார்களா?

பிடிபட்டு தப்பிப்பவர்கள்தான் தாக்குவார்கள். மரம் கடத்தியவர்களை இன்னும் பிடிக்கவே இல்லை எனும்போது, அவர்கள் ஏன் தாக்கித் தப்பிக்கவேண்டும்.?

அதெப்படி இருபது பேரும் ஒரே வரிசையில் சுடப்பட்டார்கள்? இவர்கள் மட்டும் ஒரே வேகத்தில், சம தூரங்களில் ஓடிக்கொண்டிருந்தார்களா? 

சுட்டது எத்தனை காவலர்கள்? அவர்கள் ஓடிய அனைவரையுமே குறிபார்த்துச் சுடும் அளவுக்கு அப்பாடக்கர்களா?

ஒரு குற்றம் நடந்தால், அதைச் செய்யத்தூண்டியவருக்கு(த்தான்) தண்டனை தரவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அப்படி இருக்கும்போது, இவர்கள் நேரடியாக செம்மரத்தை வெட்டி, ஏற்றுமதி செய்ப்வர்களா? அல்லது, இவர்களை இப்படி வெட்டிவரச்சொன்ன முதலாளி யார்?

அந்த முதலாளியைக் காப்பற்றத்தான், ஒரு தடயமும் சாட்சியாகக் கூட பிடிபட்டுவிடக்கூடாது என்று குற்றம் செய்ததாகச் சொல்லப்படும் தொழிலாளர்கள் சுடப்பட்டார்களா?

இயற்கை வளம் சுரண்டப்பட்டுவிடக்கூடாது என்பதில்… அவ்வ்வ்வளவு அக்கறை நிறைந்தவர்களா அரசும், வனக்காவலர்களும்? அப்புறம் ஏன், மத்தியப்பிரதேசம் , சத்தீஸ்கர் போன்ற பல மாநிலங்களில் வனக்காவலர்களே , பழங்குடி மக்களை வைத்து பல இயற்கைப் பொருட்களைக் கடத்துகிறார்கள்?

செம்மரக்கடத்தலில் அவர்களுக்கும் பங்கிருப்பதாக பல ஆண்டுகளாக ஆந்திர வனத்துறை மீது பல்வேறு தெலுங்கு ஊடகங்கள் சொல்லிவருவது சரிதானோ?

கேள்விகேட்க ஆளில்லையென்றால், நாங்கள் காவலர்களாக இருக்க மாட்டோம். யாரையோ காக்க, யாரை வேண்டுமானாலும் போட்டுத்தள்ளுவோம் என்பதுதான் ஆந்திர வனத்துறையின் சட்டமா?

மனித உரிமை … மனித உரிமை என்று கதறிக்கொண்டிருக்கும் தேசத்தில், மனித உயிர்கள் துச்சமாவதுதான் நமது நாகரீக வளர்ச்சியா?

இயற்கையைக் காக்கிறேன் என்று போலியாகச் சொல்லிக்கொண்டு, மனிதனைப் பலிகொடுக்கத்தான், மனிதக்காவலர்களை நாம் வளர்த்துக்கொண்டிருக்கிறோமா?
சட்டம் தன் கடமையை இப்படித்தான் செய்யுமா?

அய்யா… நான் தமிழன் என்று கொதிக்கவில்லை.. இந்தியன் என்று கூவவில்லை., ஏழைப்பங்காளன் என்று எழுந்திருக்கவில்லை. மனிதன் என்றுதான் மருகிக்கொண்டிருக்கிறேன். சக மனிதனுக்கு இப்படி நடந்தது பதைக்காதா?

இந்தக் கட்டையைக் கொண்டு சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்தால்தான் அடுத்த வேளை சோற்றுக்கு கொஞ்சமாவது காசு கிடைக்கும். கிராமத்தில் விட்டுவந்த மனைவி குழந்தைகள் முகத்தைப்பார்க்கலாம் என்று – செய்வது தவறு என்று தெரிந்தும் – உயிர்வாழத் தவறு செய்தவர்களின் உயிரைப் பறித்தது எந்த விதத்தில் நியாயம்…?

எவனோ ஒரு செம்மரக்கடத்தல் சாம்ராஜ்ய அதிபனைக் காக்க – தன் அதிகாரிகளின் ஆணையைத் தீர்க்க – சட்டத்துக்கு முன் நிறுத்தியிருக்கவேண்டியவர்களை , கண்ணுக்கு முன் அப்பாவி என்று தெரிந்தும் சுட்டுக்கொன்றுவிட்டு, அன்றிலிருந்து, மனசாட்சி உறுத்தியே அச்சத்தில் வாழப்போகிற ஏதோ ஒரு காவலன் எழுதப்போகும் சுயசரிதை மட்டும்தான் நடந்த தவறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருமா?

அதுவரை நாமும் சொரணை இன்றிக் காத்திருப்போம்.

மனிதம் வாழ்க !

Thursday, August 21, 2014

மருத்துவ சோதனை !!

நீயா ? நானா? வில் ஒரு நடந்த மருத்துவர்களின் பரிசோதனை பற்றிய விவாதத்தில்.. ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொள்ளவே முடியவில்லை...

மருத்துவர்களைப்பார்த்து கோபி கேட்டார்....

நீங்கள் ஏன் மருத்துவ சீட்டுகளை அதிகரிக்க விரும்பவில்லை ? ஏன் அதிகரிக்கவில்லை? ஏன் டிமாண்டை ஏற்படுத்துகிறீர்கள்? என்று !!

என் நினைவு சரி என்றால்... மருத்துவக்கல்லூரி இடங்களை அதிகப்படுத்தச்சொல்லி, 7 ஆண்டுகளுக்கு முன்னால், மருத்துவ மாணவர்கள் போராடினார்கள்..

அதுவே போகட்டும்.. எனக்கு ஒரு சந்தேகம்..!!

எஞ்சினியர்கள்தான்..எஞ்சினியரிங் காலேஜ் சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு?

வக்கீல்கள்தான்.. 
சட்டக்கல்லூரி சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு ?

எத்தனைபேர் கல்லூரியில் படிக்கணும்கிறதை... மாணவனே நிர்ணயிக்கிறானா என்ன?

இதைத்தான் நம்ம ஊரில் ..

போறபோக்கில் போட்டுவிட்டுப் போறதுன்னு சொல்லுவாங்க !!

கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்..!!

சரி.. மருத்துவர்களுக்கு வருவோம்…


எனக்குத் தெரிந்து மிக நல்ல மருத்துவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சென்னை அரசு மருத்துவமனையிலேயே பொதுமக்களிடம் கனிவாகப் பேசும் மருத்துவர்களைப் பார்த்திருக்கிறேன். ஏன்..? நண்பர் மருத்துவர் புருனோ பற்றியும் அவரது துறை சார்ந்த நிபுணத்துவம் பற்றியும் அவர் துறையின் மேலதிகாரிகள் அவர் அளவுக்கு திறமையான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வெளியில் இல்லை என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இன்னும் 20 முதல் 50 ரூபாய் வரை ஆலோசனைக் கட்டணம் பெற்றுக்கொண்டு சிறப்பாக மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நோய்ப் பரிசோதனைக் கூடங்களில்... இரண்டு வகை!
ஒன்று.. பரிசோதனைக்கு டெக்னீஷியன்கள் மட்டும் கொண்டு இயங்கும்

இன்னொன்றில்.. பரிசோதனை மருத்துவர் (Pathologist) கொண்டு இயங்கும்.

முதலாவதில்தான், பெரிய தவறுகளுக்கான சாத்தியங்கள் அதிகம்.

இரண்டாவதில் ... தவறுகளுக்கான சாத்தியம் குறைவு.

குறிப்பாக..
சென்னையின் பிரதான பகுதியில் ஒரு பரிசோதனை நிலையம் நடத்திவரும் ஒரு பேத்தாலஜி மருத்துவர் தனது மேலாண்மைத் திறனை வளர்த்துக்கொள்ள என்னை அணுகினார்.

அவர் முதலில் தன் கொள்கையாகச் சொன்ன ஒரே விஷயம்...

நான் மற்ற மருத்துவர்களின் பரிந்துரையால்தான் அதிக சோதனை நடத்தமுடியும். ஆனால், அவர்களுக்கு நான் கட்டிங் கொடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறார்கள். 

ஆனால், நான் எந்த டாக்டருக்கும், நோயாளியின் பரிசோதனைக்காக கட்டிங் கொடுப்பதில்லை என்று உறுதியாக இருக்கிறேன். எந்த டாக்டர் கட்டிங் வாங்காமல் எங்களைப் பரிந்துரை செய்கிறார்களோ அந்த ஆர்டர் போதும். ”

டாக்டர்களுக்குக் கட்டிங் கொடுப்பதை விட, நேரடியாக பொதுமக்களிடம் , பரிசோதனைக்குச் சரியான தொகையை வசூலிப்பதுதான் தனக்கு தர்மம் என்று உறுதியாகச் செயல்படுகிறார். 

அவருக்கு ஆலோசகனாக இருப்பதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது.
ஆனால், இப்படிப்பட்டவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவித்தாலே போதும்...!!

தவறானவர்களைக் குறைகண்டு பூதாகரப்படுத்துவது ஒருவிதம் என்றாலும்... சரியானவர்களை நிறைய அடையாளம் காட்டுவதுதான் நேர்மறைச் சிந்தனையாக உணர்கிறேன்.

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...