Showing posts with label கவிக்கதை. Show all posts
Showing posts with label கவிக்கதை. Show all posts

Monday, March 31, 2014

ஊடலே யுத்த காரணி




அலங்கோலமாய்க்கிடக்கும் வீட்டில்
இருவரும் வேலைசெல்லும் பரபரப்பில்!
அமீபாவாய் ஆரம்பித்த வார்த்தைகள்
அனகோண்டாவாக மாற...
ஆனந்துக்கும் , அகிலாவுக்கும்
ஆரம்பமானது சண்டை..!

அடிப்படைக்காரணம்.?
நேரமாகிவிட்டது இன்னும்
காலுறையைக்காணவில்லையாம்!
யாருக்கு பொறுப்பு என்று
பாப்பையா இல்லா பட்டிமன்றம்!

தடித்த வார்த்தைகளை
தவ்விப் பிடித்துக் கொண்டு
தகராறை முற்றவிட்டு
கணவனும் மனைவியும்
கால்சென்ட்டர் கிளம்புகிறார்கள் !

நிறுவனத்தில் நுழைந்து
தன் இருக்கைவந்து
' தலை பேசியை ' மாட்டிக்கொண்டு
அழைப்புக்காய் காத்திருக்கிறான்.!

'என்னமாய் பேசிவிட்டாள் !'
துடிக்கிறது உதடுகள்..
முதல் அழைப்பு வந்ததுமே
பதில்சொல்ல விழையும் முன்'
கேட்பவனின் கேள்வியில்
கடுகளவு கோபம்!
'உன் நிறுவன மடிக்கணிணியில்
இப்படி ஒரு பிரச்சனை!'
என்னவென்று விளக்கவேண்டிய
இவன் பதிலும் இனிமையில்லை.!

இவன் பொறுமையெல்லாம்
எப்போதோ போய்விட்டது!
அதை எடுத்து மடித்துக்கொண்டு
அவள் காலை சென்றுவிட்டாள்

இது தெரியா எதிராளி
எதிர்க்கேள்வி கேட்டுவைக்க
எரிந்து விழுந்து முழங்குகிறான்..
"என்னய்யா ஆட்கள் நீங்கள்?
இது கூடத்தெரியாமல்?
என் உயிரை வாங்குகிறீர்?"

பேச்சுவார்த்தை தடிக்கிறது.
அவன் பேச
இவன் பேச
ஆத்திரம் அதிகம் பேச
மொத்ததில் அவ்வழைப்பு
மூர்க்கமாய் முடிகிறது !

முடிந்த அழைப்புக்குப்பின்
முகம்தாங்கி சிந்தித்து
எவனோ ஒருவன்
இன்றுவந்து
என் வாயில் சிக்கினானே
என்னவெல்லாம் பேசிவிட்டேன்
என்று எண்ணி மாய்ந்து போனான்!

அது...
வேறொரு நாடு!
அதிபர் மாளிகையின் அவசரக்கூட்டம்!
இராணுவத்தளபதி
அவர்தன் செயலரை
அச் செய்தி தயாரா?
என்று அவசரமாய் கேட்டுவைக்க
'அய்யா ! அத்தகவலெல்லாம்
இந்த மடிக்கணிணியில் போட்டு
மறக்காமல் எடுத்து வைத்தேன்'!

அந்தக் கணிணியிலே
ஏதோ கோளாறு!
கோளாறு சரிசெய்யும்
நிறுவனத்தை தொடர்பு கொண்டால்
மரியாதை இல்லாமல்
ஒரு மனிதன் பேசுகிறான்..!"
என்று கூறி வருந்தி நிற்க,

'அதுவெல்லாம் தெரியாது.
எனக்குடனே சரியாகி
கூட்டத்தில் காட்டவேண்டும்.!
அதிபர் முன்னிலையில்
என் கவுரவம் சரிந்துவிடும்.
ஏதாவது செய்து
சரியாகக் கொணருங்கள்!
என்றந்தத் தளபதியும்
எடுத்தெரிந்து பேசிவிட..

நிறுவனத்தை தொடர்புகொள்ள
நேரமில்லை செயலருக்கு,
அலுவலகத்தில் வேலைபார்க்கும்
ஆண்டனியைக்கூப்பிட்டு
காகிதத்தின் குறிப்புகளை
அவசரப்படியெடுத்து
அனுப்பிவிட்டார்
தளபதிக்கு!

தவறான தகவலென்றே
தெரியாமல் தளபதியும்
அதிபரிடம் எடுத்துவைக்க..!
அவர் தந்த விபரப்படி
அயல்நாட்டின் மீது
அபாண்டம் ஏறிநிற்க

அதிபரும்;
"எடுக்கிறேன் பார் நடவடிக்கை !"
என்றுலகில் சீறிவைக்க

தொடங்கியது யுத்தம்!
யுத்ததில் பல நாடும்
தன்படையை அனுப்பிவைக்க,
உலகமே இருதரப்பாய்
உடைந்து நிற்கிறது.

போர்க்களம் கண்ட நாட்டில்
சீறிப்பாயும் குண்டுகளை
சி என் என் காட்டும்போது

அத்தனை செய்திகளையும்
அகிலாவின்
அரவணைப்பில்
தொலைக்காட்சியில்
இரசிப்பது....

நமது  

ஆனந்த்.!!!!      

Monday, December 1, 2008

இப்படியும் நடக்கலாம் ...!


அது ஒரு
தொடர்வண்டி நிலையம்!
அவன் எங்கோ போகவேண்டும்
அவளும் வந்திருந்தாள் வழியனுப்ப!

திருமணம் ஆன புதிது!
விட்டுச்செல்ல மனமில்லை!
விலகி இருக்கவும் திறனில்லை!
கண்கள் கலங்கவும்,
கைகள் நடுங்கவும்,
ஒருவரை ஒருவர் 
உயிராய் உருகி
ஒன்றிப்போய் பார்க்க்கிறார்கள்.
அந்தச்சிறு அணைப்பிலேயே
அழுத்தம் கொடுத்து
சொல்லுகிறான்.
கவலைப்படாதே!
நிறைய நாட்களில்லை!
சீக்கிரம் வந்துவிடுவேன்.!

நீங்கள் செல்வதே
எனக்கு நரகம்தான்!
அப்புறம் என்ன 
கொஞ்சம் ,நிறைய ?
கண்ணீர் உகுத்து
கரைகிறாள் அவள்!

வண்டி புறப்படும்
நேரம் வர
மனமின்றி அவனும்
ஏறி விட
புறப்பட்ட வண்டியையே
நீர் படரப் பார்க்கிறாள்!

அவ்விடத்திலேயே நின்று
ஆசுவாசப்படுத்த,
வண்டியும் சென்றுவிட..
அதிசயமாய் எதிரில்
பெட்டியுடன் அவன்!

ஓடிப்போய் முத்துகிறாள்!
என்னவனே!
இவ்வளவு காதலா?
என்னைவிட மனமிலையா?
நான் என்ன தவம் செய்தேன்?
இப்படி நீ இருப்பதால்தான்
இதயம் முழுதும் நிறைகின்றாய் !

இறுக்கமான முகத்துடன்
அவன் சொன்னான்..!

அதெல்லாம் சரி!
வண்டியின் டிக்கெட்டை
உன் பைக்குள் வைத்திருக்கிறாய் !
இனியெப்படி போவது?



Wednesday, October 1, 2008

அவனைக் கடந்த சவீதாக்கள்




சவீதா  - 1


அவன்...
மிகச்சரியான
வயதில்
அந்த இணைய நிலையத்தை
நடத்தும்
நண்பருக்கு உதவ
தினசரி செல்ல ,
அங்கு வந்த அவளுக்கு
மின்னஞ்சல் பார்ப்பதற்கு
இவனும் அன்பாய் 
உதவப்போக
மின்னஞ்சலுடன் சேர்த்து
அவனையும் பார்க்க
ஆரம்பித்தாள் அவள்!


ஒருநாள் பேச ஆரம்பித்தார்கள்!
தன் தந்தையின் மறுமணமும்
தாயாரின் சிரமங்களும்
தனக்குள் ஒரு வெறியை
தாமாக ஊட்டியதை
கவலையுடன் சொன்னாள் அவள்!
அவளது லட்சியமே
மாவட்ட ஆட்சித்தலைவியாய்
மதிப்பாக வலம்வருவதுதான்!
அதற்கான முயற்சிகள்தான்
இணையம் தேடும் காரணமும்.!

அவனுக்கு அவளைவிட
அவளது லட்சியத்தைப்பிடித்துவிட்டது.
வாழ்வில் அனைத்து சுகமிருந்தும்
சோம்பித்திரிபவர் மத்தியிலே
காப்பாற்ற மனிதரின்றி
கவலைகொண்ட குடும்பத்திலே
கலெக்டராகவேண்டுமென்ற
கனவுகாணும் இவளை
காதலித்தால் என்னவென்று
மனதுக்குள் நினைத்துவைத்தான்.

அவளுக்கும் இவன்மேல்
ஒருவித அபிமானம் 
இயல்பாக வந்ததால்
அவனைவிட்டு தனக்கு
பாடங்கள் சொல்லித்தர
பணிவாகக்கேட்டுக்கொண்டாள்
இவளது லட்சியத்தை
இமயமாய் ரசித்தவனுக்கு
அதற்கான உதவி செய்ய
வாய்ப்பொன்று கிடைத்ததானால்
பூரித்துப் பொங்கிப்போனான்.

இவனது பாடத்தையும்
இவனையும் சேர்த்து
கவனித்த அவளுக்கு
இவன்கொண்ட காதலும் புரிந்தே போனது.
அவளுக்குள்ளும் அவ்வெண்ணம்
அகண்டு போய் நின்றதனால்
அவளாகக் கேட்டுவிட்டாள்.
'என்னைத்திருமணம் செய்துகொள்வாயா?'

'இதற்குத்தானடீ இத்தனை நாளாய்க்
காத்திருந்தேன் என்றுதான் பதில் சொன்னான்.
அன்பும் அக்கறையும் 
அழகாகக் கலந்துவைத்து
ஆழமாகக்காதலித்தார்கள்.
அவள் பேசினாள்.
அவன் பேசினான்.
அவர்கள் பேசினார்கள்
காதல் பேசியது.

கொஞ்சம் அதிக நேரம் பேசினாலும்
அவனுக்குள் அலாரம் அடித்து
அவளைப்போய் படிக்கச்சொல்வான்.

அந்த ஆண்டின் முதன்மைத்தேர்வில்
அவளுக்குக்கிடைத்தது தோல்வி!
அதற்கான அடிப்படைக்காரணம்
அவனுக்குத்தெரிந்தது அப்பட்டமாய்!
இவர்களது காதலால் அவள் 
செலவழித்த நேரம்..!

அவளிடம் தெளிவாகச்சொன்னான்.
உனக்கு முக்கியம் உன் லட்சியம்
என்னிடம் பேச வாழ்க்கையே உள்ளது.
தொலைபேசலை குறைத்துக்கொள்வோம்.
என்னைக்கூட விட்டுவிடு
குறிக்கோளை எட்டிவிடு! 
சொன்னால் அவள் கேட்கவில்லை!
தொல்லை தர ஆரம்பித்தாள்.
எந்தப்படிப்பை நேசித்தாளோ
அதனை வெறுக்கத்தொடங்கிவிட்டாள்
அவனுக்கோ காதல்மீது
பயமே வந்து சென்றது!
அவளுடைய அழைப்புகளை
நிராகரிக்க ஆரம்பித்தான்.!

அவளுக்குக்கோபம் அதிகமாக வந்தது.
நான் என்ன அலைகிறேனா?
என் லட்சியம் பற்றி எனக்குத்தெரியும்!
உன் லட்சியம் புரிந்துவிட்டது.
என்னை விட உனக்கு
என் பதவிதான் கண்!
அதனால்தான் நீ 
அதை அடையத் தூண்டுகிறாய்!

என்றெல்லாம் ஏளனமாய்
எடுத்தெரிந்து பேசிவிட்டு
இனிமே உன் சகவாசம்
எனக்குத்தேவையில்லை!
என்னால் உலகம் மெச்ச
உயர்வாக வரமுடியும்.
அந்த நாளில் உனக்கு
அவமானங்கள் தருகிறேன்.
என்று சொல்லி ஆத்திரமாய்
அவனைவிட்டுச்சென்றுவிட்டாள்.

அந்தக்காதலுக்கு
அன்று அஸ்தமன தினம்!
ஆனால் ஆச்சர்யம்
அன்றுதான் காதலர் தினம்!

அவனுக்குள் அடுக்கடுக்காய்
சங்கடங்கள் தோன்றினாலும்
ஒரு பெண்ணின் 
வீழ்ச்சிக்கு நாம் காரணம் இல்லையென்று
சந்தோஷமாய் நினைத்துக்கொண்டு
வாழ்க்கை ஓட்டத்தில்
கரைந்துவிட்டான்.

என்றாவது ஒருநாள்
அவளுக்குத்தெரியவரும்!
வெற்றிபெற்ற அவளுக்கு
பின்னணியாய் இருந்துவைத்து
இடையிலே வந்தவன்
இடையிலேயே சென்றவன்
எரியும் லட்சிய வெறிக்கு
கொஞ்சம் எண்ணெய் 
ஊற்றிச்சென்றானென்று !

இன்றுவரை இருவரும்
இயல்பாக வாழ்கிறார்கள்.
அவனும் ஒரு பதவியிலே
அழகு வாழ்க்கை வாழ்கிறான்.
அவன் தன்னை ஒதுக்கினானென்று
இன்றுவரை நினைத்துக்கொண்டு
அவளும் இங்கு வாழ்கிறாள்
ஆனால் அவள் சாதித்துவிட்டாள்
நீண்ட நாள் போராட்டத்தில்
அவள் இன்று
ஆட்சித்தலைவி!

அதற்காக அவள் படும்
மகிழ்ச்சி குறைவாகும் !
அவன் மகிழ்ச்சி ஒப்பிட்டால்!
அப்பாடி!
ஒருவருக்கு 
உதவி தர இயலாவிடினும்
இடையூராய் இல்லாமல்
போனோமே என்று
இன்றுவரை மகிழ்ந்திருக்கிறான்.!

அடுத்த சவீதா அவனுக்காக
அங்கும் வந்து காத்திருக்கிறாள்!

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...