Showing posts with label தத்துவம் மாதிரி. Show all posts
Showing posts with label தத்துவம் மாதிரி. Show all posts

Monday, July 7, 2014

தொலையாமல் பேசுவோம்!




இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்நாளின் ஒரு கணிசமான பகுதி தொலைபேசியில் போயிடுது! நமக்கு வரும் அழைப்புகளானாலும் சரி, நாம் அழைக்கும் ஆட்களானாலும் சரி! பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருக்கோம். இது எந்த அளவுக்கு நம்முடைய நேரத்தை சாப்பிடுதுன்னு யாருக்கும் தெரிவதில்லை. தெரிஞ்சாலும் நாம் அலட்டிக்கிறதில்லை

நாம் இன்னிக்கு சக மனிதர்களிடம் நேரா நாலு வார்த்தை பேசுவதைவிட, செல்பேசியில், எதிர்முனையில் இருப்பவர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே பேசுறோம். அது நம்முடன் இருக்கும் குடும்ப நபர்கள், நண்பர்களை எரிச்சல் படுத்தும்கிறதுதான் உண்மை! ஆனா அதையும் மீறி தொலைபேசுவதையே தொழிலாக வச்சிக்கிட்டிருந்தா ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வீட்டில் இருப்பவர்கள் கிச்சனிலிருந்து, ஹாலில் இருக்கும் நமக்கு போன் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மொக்கச்சாமி ஒரு டாக்டரைப்பாக்க அவர் கிளினிக்குக்கு போனாரு!
டாக்டர்எனக்கு….  னு ஆரம்பிக்கும்போது , 
டாக்டருக்கு ஒரு போன் வந்து பேச ஆரம்பிக்கிறாரு! மொக்கச்சாமியும் காத்திருந்தாரு! டாக்டர் போனை வைக்கவும்…
      டாக்டர்எனக்கு தினமும்  கிறார்..!
மறுபடியும் டாக்டருக்குப் போன்… அவர் பேசுறாரு! முடிக்கிறாரு! இப்பவும் மொக்கச்சாமி,
      டாக்டர்எனக்கு தினமும் சாயந்திரமானா
மீண்டும் டாக்டருக்கு போன்…அவரும் மொக்கச்சாமியைப்பாத்துக்கிட்டே போன் பேசி முடிக்க… மொக்கச்சாமி எழுந்திருக்கிறாரு!
      உடனே டாக்டர்..!
      என்ன மிஸ்டர் மொக்கச்சாமிவந்தீங்க ஒண்ணுமே சொல்லாம போறீங்கன்னாரு!
      மொக்கச்சாமி சொன்னாரு!
      இல்ல டாக்டர்வெளில போய் உங்களுக்கு போன் பண்றேன்அப்பதான் நான் சொல்லவந்ததை முழுசா சொல்லமுடியும்போலன்னாரு!

நம்மிடையேயும், டாக்டர் மாதிரி ஆட்கள் நிறையபேர் இருக்கோம் ! எல்லாரும் நமக்கு முன்னால் இருக்கும் ஆட்களை விட, போனில் பேசுபவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்.

      நாலு நண்பர்கள் ஒரு இடத்தில் சந்திச்சுக்கிட்டா, அவர்களுக்குள் பேசிக்கிறதை விட, அவர்களுக்கு வரும் செல் அழைப்புகளில் பேசுறதுதான் அதிகம்! அதுக்கு எதுக்கு சந்திக்கணும்?

      செல்போன் நாம கண்டுபிடிச்ச கருவி! அது நம் வசதிக்குத்தானே தவிர, வருத்தத்துக்காக இல்லை! அதை மனசில் வச்சுக்கிட்டு அந்தப் பொருளை நாம் பயன்படுத்தத்தொடங்கணும்!

எல்லா இடங்களிலும் அலறுகிற மாதிரி ஒரு பாட்டை அழைப்புமணியா வச்சுக்கக்கூடாது. குறிப்பா மருத்துவமனைக்குள்ள அமைதியா இருக்கும்போது திடீர்னு ‘அடிடா அவளை..ஒதைடா அவளை’  னா கடுப்பாகும். சத்தம் வராத சைலண்ட் மோடில், வைப்ரேஷன் எனப்படும் உதறும் நிலையில் வச்சிருந்தா , அழைப்பு வருவது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். யாரையும் தொந்தரவு பண்ணாது.

யாராவது உங்களிடம் நேராகப் பேசிக்கிட்டிருக்கும்போது, உங்கள் போனை நோண்டிக்கொண்டிருக்கக்கூடாது. அது அவர்களுக்கு உங்களைப்பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இவர் நம்ப பேச்சை கவனிக்கலை என்று எண்ணவைக்கும். நேராக ஒருவரிடம் பேசும்போது, போனை பையில் வைத்துக்கொள்வதுதான் நலம்.

காலர் ட்யூன் எனப்படும், உங்களை அழைத்தால் , அழைப்பவருக்குக் கேட்கும் பாடல் வைப்பது ஒரு சிறந்த பண்பாகப் பார்க்கப்படுறதில்லை! நீங்க உங்களுக்குப்பிடித்த பாடலை வைக்கிறீங்க!  ஆனால் கேட்பது எதிராளி! இது , தனக்குப்பிடித்த உணவை, அடுத்தவர் வாயில் திணிப்பதற்குச்சமம்தான். அப்படியே அது நல்ல பாட்டா இருந்தாலும், அதை யாராலும் முழுசா கேட்கமுடியாது! டயலர் ட்யூன்ங்கிறது செல்பேசி நிறுவனங்கள் நம்மகிட்ட  காசு பிடுங்க ஏற்படுத்திய யுக்தி!

ஒருவரை நீங்க அழைக்கிறீங்க! அவர்கள் உங்கள் அழைப்பை எடுக்காம கட் செய்யுறாங்க! அவுங்களுக்கு நம்ப மேல் ஏதாவது கோபமா இருக்குமோ? வேற எதாவது பிரச்னையோ? என்று மனசைப்போட்டு உழட்டிக்கிட்டு மீண்டும் மீண்டும் அவர்களுக்கு போன் செஞ்சுக்கிட்டே இருந்தா, அதுதான் மிகப்பெரிய எரிச்சலூட்டும் விஷயம். ஒருவர் உங்கள் அழைப்பை நிராகரிச்சா, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு அவருக்கு அழைக்காமல் இருக்கலாம். அல்லது நீங்கள் ப்ரீயா இருக்கும்போது அழைக்கவும் என்று குறுஞ்செய்தி அனுப்பலாம். அதுதான் நல்ல பழக்கம்!

மிகப்பெரிய, பிரபலமான மனிதர்களின் தொடர்பு கிடைச்சா, அவர்களின் எண்களை வைத்துக்கொண்டிருக்கும்போது கவனம் அதிகம் வேணும். நாம் சும்மா இருக்கும்போது அவரை அழைச்சு எரிச்சலூட்டக்கூடாது. அப்புறம்..எப்படி இருக்கீங்க? சும்மாதான் கூப்பிட்டேன் என்று சொதப்பக்கூடாது. ஏதாவது தகவல் இருந்தால் மட்டுமே கூப்பிடணும். அவர் வேலையில் இருக்கார் என்று தெரிஞ்சால் அதற்கேற்றார்போல் பேச்சை கட் செய்யனும். அதுதான் உண்மையிலேயே அவர்களது நட்பை பலப்படுத்தும்.

முக்கியமானவர்களுக்கு அழைப்பதற்குமுன்னால், அவர்களை அழைக்கலாமா னு ஒரு குறுஞ்செய்து அனுப்பிட்டு காத்திருந்தால், உங்கள் இந்த நல்ல செயலுக்காகவே அவரே உடனடியா உஙகளைக்கூப்பிட்டு பேசிடுவார்!

நாம் முக்கிய வேலையில் இருக்கும்போதும், வாகனம் ஓட்டிக்கிட்டிருக்கும்போதும் யார் அழைத்தாலும் எடுக்காதீங்க! பிறகு அழைத்த நபர்களுக்கு கூப்பிட்டு பேசுங்க! அதேபோல், மிஸ்டு கால் விடுவது ஒரு மிகப்பெரிய தவறு!

ஒரு செல்போன் பேச்சு வாக்குவாதமா மாறும்போது, நீங்க இருக்கும் இடத்தை கவனிச்சுப்பாத்துக்குங்க! ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பேசிக்கிட்டு குடும்ப விவகாரங்களை சத்தமா பேசுறது, கேக்குறவங்களுக்கு சுவாரஸ்யமான கிசுகிசு அல்லது உங்களைப்பற்றின அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் முயற்சியா மாறிடும்.

அதேமாதிரி, ‘அந்த பச்சை பீரோவில் மேல்தட்டுல நகையெல்லாம் வச்சிருக்கல்ல,! அங்கதான் இந்த ப்ரீமியம் ஸ்லிப்பும் வச்சிருக்கேன்.!

நாளைக்கு மத்தியானம் குடும்பத்தோட ஊருக்குப்போறேன் மாப்ள! வரதுக்கு நாலு நாளாகும்! வந்தவுடனே பேசலாம்’னு பொது இடங்கள்ல பேசறது, திருடுறவங்களுக்கு செலவில்லாம நீங்க கொடுக்குற க்ளூ!

இத்தனைக்கும் மேல, செல்பேசியில் பதிஞ்சு வச்சிருக்கும் எல்லா எண்களையும் ஒரு நோட்டில் எழுதிவைக்கலாம். கம்ப்யூட்டரில் போனை இணைச்சு எண்களை ஏத்தி வச்சுக்கலாம். இது இரண்டில் எது செய்யாமல் விட்டாலும், செல்பேசி தொலைஞ்சு போனாலோ, பழுதா போனாலோ மொத்தமா எல்லா எண்களையும் இழந்துட்டு அம்போன்னு நிக்கவேண்டியதுதான்.

பொது இடங்களில் கேமரா செல்லில் படங்கள் எடுப்பதை தவிர்க்கணும். இதனால் ஏகப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. அதேபோல், நம் வீட்டுப்பெண்களின் படங்களை செல்பேசியில் வைத்திருப்பது அவ்வளவு நல்லதில்லை. நம்ம செல்தானே என்று நினைப்போம். ப்ளூடூத் மூலமாகவும், பழுது பார்க்கும் இடத்திலும் அந்தப்படங்கள் பரவுவதற்கான சாத்தியங்கள் ஏராளம்.

ஒரு நாளில், அதிக நேரத்தை செல்பேசுவதில் செலவழிப்பதை தவிர்க்கணும். மாசத்துக்கு ஒருமுறை ஒருநாள் முழுக்க, செல்பேசி பயன்படுத்தாம இருக்கலாம்.

ஒருவரிடம் பேசுறதுக்கு முன்னால், என்னென்ன பேசப்ப்போறோம்னு குறிப்பெடுத்துவச்சுக்கலாம். அதுமட்டும் பேசிட்டு முடிச்சுக்கலாம். இது உங்கள் நேரத்தையும், அடுத்தவுங்க நேரத்தையும் சேமிக்கும். குறிப்பிட்ட இடங்களில் போன் வந்தாலும் எடுக்காமல் இருப்பதுதான் நல்லது. கோவில்கள், மேடைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் ,கல்லூரிகள் இங்கெல்லாம் செல்போனை தேவையில்லாமல் பயன்படுத்தவே கூடாது.
நண்பர்களிடம் வெட்டிப்பேச்சு பேச , உங்கள் இருவருக்கும் உகந்த நேரத்தை தேர்ந்தெடுத்து பேசுறதுதான் அந்த வெட்டிப்பேச்சைக்கூட சுவையா வச்சிருக்கும். 

செல்பேசிங்கிற ஒரு அற்புதமான கருவியை நல்லபடியா பயன்படுத்தினா, வாழ்நாள் முழுக்க நட்பு , உறவுகளை தொலைக்காமல் பேசலாம்! அதுக்குள்ளயே தொலையாமலும் பேசலாம்.!


Thursday, August 29, 2013

புறம் ஒழிஞ்சாத்தான் அகத்துக்கு நல்லது..!


ஒருத்தர் , நமக்கு நேரா நம்மளை உயர்வா பேசிட்டு, அடுத்தவுங்ககிட்ட நம்மளைப்பத்தி இழிவா பேசுறது நமக்கு என்னிக்குமே பிடிக்காது. ஆனா அதை நம்ம பண்ணினா ரசிச்சு பண்ணுவோம். ஏன்னா புறம் சொல்றதுங்கறது நமக்குள்ள ஊறிப்போச்சு!

திருக்குர்ரான் சொல்லுது ! ஒருவனைப்பற்றி புறம் கூறுதல் தன்னுடைய சகோதரனுடைய மாமிசத்தை சாப்பிடுவதற்குச்சமம். !

அந்த அளவுக்கு அதில் என்ன கெடுதல் இருக்கமுடியும்?
இது சாதாரண விஷயமில்லை. நம்மை படுகுழில தள்ளிடும். புறம் கூறும் மனப்பான்மை உள்ளவுங்க வெற்றிக்கோட்டை தொடவே முடியாது.

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.

முகத்திற்கு முகம், இரக்கமே இல்லாமல், நாம் கடுஞ் சொற்களைக் கூறினாலும், கூறலாம். ஆனால், கண் எதிரே, ஆள் இல்லாத பொழுது, ஒருவரைப் பற்றி மட்டும், இழிவாகப் பேசுதல் கூடாதுன்னு வள்ளுவரே சொல்றார்.

மொக்கச்சாமி ஒரு விமானத்துல போய்க்கிட்டிருந்தார். அப்ப அவர் சீட்டுக்குப்பக்கத்துல, ஒருத்தர் சாதாரணமா உக்காந்திருந்தார். அவர்க்கிட்ட மொக்கச்சாமி மெதுவா பேச்சுக்குடுத்தார். இவரு தன்னைப்பத்தி ரொம்ப பெருமையா பீத்திக்கிட்டார். போகப்போக பக்கத்தில் உள்ளவர் வியக்கற மாதிரி நான் அப்படியாக்கும், இப்படியாக்கும்ன்னெல்லாம் சொல்ல ஆரம்பிச்சார். அவரும் பேசாம கேட்டுக்கிட்டிருந்தார். இந்த ப்ளைட்ட ஓட்டுற கேப்டன் கூட நம்ம பயதான்.! ரொம்ப நாளா என்னை கெஞ்சி கேட்டுக்கிட்டதால ஏறினேன். பஸ்ட் கிளாஸ்லதான் உக்காரணும்னு ஒரே அடம்.! நாந்தான் அதெல்லாம் வேணாம்ப்பா உனக்கு வேலை போயிடும்னு சொல்லி அடக்கிவச்சேன். பள்ளிக்கூடம் படிக்கிறப்ப 10 மார்க் கூட வாங்காத பயலெல்லாம் இன்னிக்கு கேப்டன்! அவனுக்கு சைக்கிளே சரியா ஓட்டத்தெரியாது! இப்ப ப்ளைட் ஓட்டுறான்னு அந்த விமானத்தோட கேப்டனை எல்லாம் வம்புக்கு இழுத்து பேசிக்கிட்டிருந்தாரு..அப்பன்னு பாத்து ஒரு ஏர் ஹோஸ்டஸ் வந்து, சார்..! ன்னாங்க! தன்னைத்தான் கூப்புடறார்ன்னு நினைச்சு, எஸ் ன்னாரு மொக்கச்சாமி! அவுங்க அவருக்கு பக்கத்துல இருக்குறவரைக்கூப்பிட்டு...சார் ! உங்க கேப்டன் ரூம் க்ளீன் பண்ணியாச்சு ! உங்க கேபினுக்கு போலாம் ன்னாங்க! அப்பதான் தெரிஞ்சுது! அவர்தான் அந்த விமானத்தோட கேப்டன்னு! கேப்டனும் மொக்கச்சாமிய மொறச்சு பாத்தாரு ! உடனே மொக்கச்சாமி அலட்டிக்காம அவர்க்கிட்ட சொன்னாரு! அடடா..! நான் ப்ளேன் மாறி ஏறிட்டேன் போல!
என்ன ஒரு சமாளிபிகேஷன்

இந்த மாதிரி ஆட்களை நீங்க எல்லாருமே சந்திச்சிருப்பீங்க! இதுக்கான அடிப்படைக்காரணம், தன்னைப்பத்தி புகழ்ந்துக்க விஷயமில்லாதபோது, அடுத்தவங்களைப்பத்தி இகழ்ந்தா சந்தோஷமா இருக்குறதுதான் காரணம்! அது மூலமா.. நான் ரொம்ப நல்லவன்னு சொல்லி அடுத்தவரைக் கவரும் முயற்சி! ஆனா அதோட முடிவு தோல்விதான்கிறதுதான் சோகமான விஷயம்!

ஒருவர் இருக்கும்போது அவரைப்பத்தி என்ன பேசுவோமோ அதையே அவர் இல்லாதபோதும் பேசிட்டா பிரச்னையே இல்லை! ஏன்னா இல்லாதபோது பேசின குறை, அவருக்கு தெரியவரும் புள்ளியில்தான் நாம் சக மனிதனின் நம்பிக்கையை நமக்கே தெரியாமல் இழக்க ஆரம்பிக்கிறோம்
பெரிய பெரிய நிறுவனங்கள்ல எல்லாம், எவ்வளவு பெரிய திறமைசாலியா இருந்தாலும், இந்த மாதிரி புறம் சொல்லும் குணமுள்ளவுங்களை வெளில அனுப்பிடுவாங்க..! ஏன்னா புறம் கூறும் நபர்களாலத்தான் ஒரு நல்ல நிறுவனம் அழிஞ்சு போகும்ன்னு அவுங்களுக்கு தெரியும்.

பாட்சா படத்துல தேவன் நக்மாவோட அப்பாவா வருவாரு! அவர்தான் பாட்சாவான ரஜினிக்கிட்ட நல்லவர் மாதிரி நடிச்சு, அவரைப்பத்தி ரகுவரன்கிட்ட புறம் சொல்லி ஏமாத்தப்பாப்பாரு! அதைக்கண்டுபிடிச்சு ரஜினி தப்பிச்சுடுவாரு...அதே சமயம் கூட இருந்தே ஏமாத்தின தேவன் தான் தன் குடும்பத்தை கொன்னதுன்னு தெரிய வ்ந்ததும் ரகுவரனே , தேடிவந்து தேவனை கொன்னுடுவாரு! இதுதான் புறம் கூறுபவர்களோட நிலமை!

இந்த குணத்தை விரட்ட , முடிஞ்சவரைக்கும் ,அடுத்தவுங்களை குறை சொல்லாம இருக்கலாம். அப்படி சொல்றதா இருந்தா அவுங்க முன்னாடியே சொல்லிடலாம். அதை விட்டுட்டு, கோழைத்தனமா பின்னாடி போய் அவுங்களைப்பத்தி சொன்னா, அதை ரகசியமாவே சொன்னாலும் அது ஒரு நாள் வெளில வந்து நமக்கு அவமானமா போயிடும்.

வெளிவராமல் போன ஜக்குபாய் பட போஸ்டரில் ஒரு வாசகம் இருக்கும்...இறைவா! நண்பர்களிடமிருந்து என்னைக்காப்பாற்று! எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்! இதைவிட அழகா புறம் கூறும் நண்பர்கள் பத்தி எப்படி சொல்லமுடியும்?

ஏன்னா நமக்காக பிறரைப்பத்தி குறை சொல்பவர்கள் ! பிறருக்காக நம்மைப்பற்றியும் கட்டாயம் குறை கூறுவார்கள். இந்த நினைப்பு எப்பவும் இருந்தா போதும். நாமும் அடுத்தவுங்களைப்பத்தி பின்னால் பேசமாட்டோம். அடுத்தவுங்களும் நம்மகிட்ட பிறரைப்பத்தி சொல்ல பயப்படுவாங்க!
அதையும் மீறி சொன்னா ஒரே ஒரு தடவை இப்படி சொல்லிப்பாருங்க! " இப்படித்தானே மத்தவுங்ககிட்ட என்னப்பத்தி சொல்லுவீங்க"? அதுக்கப்புறம் புறம்கூறும் வாசனையே உங்க பக்கம் அடிக்காது.

எல்லாரையும் அகம் மகிழ பாராட்டி பழகிட்டா புறத்துக்கு வேலையே இருக்காது.

இப்ப புறம் மட்டுமில்ல..அகம் மகிழ்ந்தும் கூறுகிறேன். வாழ்த்துக்கள்!


நீங்கதான் சாவி - புத்தகத்திலிருந்து...!!





Sunday, June 30, 2013

அவளின்றி அணுவும்...







மனைவி என்ற பெண்ணை நேசிக்க பல்வேறு தருணங்கள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொண்டால்.. ஆனந்தம் நிச்சயம்!

உங்களுக்கான காஃபியை அருந்திப்பார்க்கும்போது நேசியுங்கள்...அது உங்களுக்கு பிடிக்கும்படி இருக்கிறதா என்று சுவை பார்க்கிறாள் என்று அர்த்தம்..

உங்களை சாமி கும்பிட வலியுறுத்தும்போது நேசியுங்கள். அவளுக்கு நீங்கள் கிடைத்ததுபோல், உங்களுக்கும் புண்ணியமும், சொர்க்கமும் ஒருசேரக் கிடைக்கட்டும் என்று எண்ணுகிறாள் என்று அர்த்தம்.

உங்களை, குழந்தைகளுடன் விளையாடச் சொல்லும்போது நேசியுங்கள்… பிள்ளைகள் தன்னை மட்டுமல்ல..! அப்பாவையும் அதிகம் உணரட்டும் என்று எண்ணுகிறாள் என்று அர்த்தம்..

அவள் உங்களைக் கண்டு பொறாமைப் படும்போது நேசியுங்கள். இரகசியமாக உங்களை தேர்ந்தெடுத்ததை நினைத்துப் பெருமைப்படுகிறாள் என்றுதான் அர்த்தம்…

அவளது சில சிறு செயல்கள் உங்களுக்கு எரிச்சலூட்டும்போதும் நேசியுங்கள். அந்தச் செயல்களை நீங்களும் சில நேரங்களில் செய்திருப்பீர்கள்.அதனை அவள் சுட்டுவதில்லை.

அவளது சமையல் ருசிக்கவில்லையென்றால் நேசியுங்கள்.. அவள் நன்கு சமைக்க முயற்சிக்கிறாள் என்று அர்த்தம்.

அவள் காலையில் அலங்கோலமாக இருக்கும்போது நேசியுங்கள். உங்களுக்கான வேலைகளை முடித்துவிட்டுத்தான் தன்னை அழகுபடுத்திக்கொள்ளப் போகிறாள் என்று அர்த்தம்

குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய உங்களை உதவச்சொல்லும்போது நேசியுங்கள். அவள் , உங்களையும் அந்தக் குடும்பத்தின் நெருக்கத்தில் பங்கெடுக்க வைக்கிறாள் என்று அர்த்தம்.

நான் குண்டாக இருக்கிறேனா என்று கேட்டாள் என்றால், அழகாக இருக்கிறாய் என்று சொல்லி நேசியுங்கள். உங்கள் ஆதுரமான வார்த்தைகளை எதிர்பார்க்கிறாள் என்று அர்த்தம்.

அவள் அழகுபடுத்திக்கொள்ள நேரம் எடுக்கும்போது நேசியுங்கள். உங்கள் மனைவி அழகு என்று பொதுவில் காட்டிக்கொள்ள சிரத்தை எடுக்கிறாள் என்று அர்த்தம்.

அவள் ஒன்றுமில்லாததற்கெல்லாம் அழும்போது நேசியுங்கள். வேறு எதுவும் கேட்காமல், ”எல்லாம் சரியாகிவிடும்” என்ற உங்கள் ஒற்றைச் சொல்லை எதிர்பார்க்கிறாள் என்று அர்த்தம்.

எப்படிக் கார் , பைக் ஓட்டவேண்டுமென்று உங்களுக்கு அவள் ஆலோசனை சொல்லும்போது நேசியுங்கள். உங்கள் பாதுகாப்பின்மீது அக்கறையாய் இருக்கிறாள் என்று அர்த்தம்.

அவள் உங்களிடம் வாக்குவாதம் செய்யும்போது நேசியுங்கள். இருவருக்கும் நல்லது நடக்கவேண்டுமென்று பேசுகிறாள் என்று அர்த்தம்.

இதைப் படித்துவிட்டு, உங்களைப்பார்த்து அவள் காட்டும் முகபாவத்தையும் நேசியுங்கள். உங்களை அவள் கணித்து வைத்திருக்கிறாள் என்று அர்த்தம்.

அவளை அப்படியே நேசியுங்கள். அவள் உங்களுக்கானவள் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் தேவையில்லை..!!

அவள் உங்களில் ஒரு பாகம்..உங்கள் வீட்டு ராணி!


- நன்றி : விஜி ராம். - ஆங்கில மொழியில் - முகப்புத்தகத்தில்!

Friday, February 1, 2013

அசைபோடுதல் ஆனந்தம்










பழமையை அசைபோடும் சுகம் தனிதான். அதுதான் நம்மை எப்போதும் உயிர்ப்புடனும் , ஒருவித மகிழ்ச்சியை ஊற்றெடுக்க வைத்துக்கொண்டும் இருக்கிறது என்று நான் உளமாற நம்புகிறேன்.

வட்டியும் முதலும் என்று தலைப்பிட்டு , ஆனந்தவிகடனில், ராஜுமுருகன் எழுதிவரும் கட்டுரைகள் பலரது உள்ளம் கவர்ந்தவை. அவை அனைத்துமே அவரது அழகான அசைபோடல்கள். அந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது, அதுபோன்று நமக்கும் நடந்த நிகழ்வுகளை உள்ளம் கவனித்துப்பார்க்கிறது. அதனால்தான் நம்மைப்போன்றே இவருக்கும் நிகழ்ந்திருக்கிறது என்று சிலாகித்து அந்தக் கட்டுரைகளை விரும்பிப்படித்துக்கொண்டிருக்கிறோம்.

அதில் அவர் எழுதும் பாணியும் மிகவும் அழகாகவும், இயல்பாகவும் இருப்பதால் எல்லோருக்கும் அவரையும் சேர்த்துப் பிடிக்க ஆரம்பித்துவிடுவதில் ஐயம் இல்லை. அதனை மீறி நான் உட்பட பலர் அவரிடம் அன்பு செலுத்தத் தொடங்கிவிடுகிறோம். ஏனெனில் தன் நிறை குறைகளை வெளிப்படையாகக் கூறும் குணம் அவருக்கு இயல்பாக வாய்த்திருக்கிறது. அத்தகைய மனிதர்களை குறைகளுடன் ஏற்றுக்கொள்வதுதான் அன்பு என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்வது இயல்பாகிவிடுகிறது.

அசைபோடல் ஒரு அற்புதமான விஷயம். நாம் பார்த்து, கவனித்து, கேட்டு, உணர்ந்து, பழகி வந்த பல்வேறு அனுபவங்கள் ஒவ்வொரு விதமான அசைபோடலுக்குள்ளும் இருத்திப் பார்க்கும்போது ஒரு இனம்புரியாத நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

இதுபோன்று யாரெல்லாம் அசைபோடுவதில் ஆர்வம் காட்டி எழுதுகிறார்களோ அவர்களெல்லாம் மிகவும் கொண்டாடப்பட்ட எழுத்தாளர்களாக இருந்திருக்கிறார்கள். டால்ஸ்டாய் தொடங்கி, நமது எஸ்.ரா வரையில் அவர்களது பயணங்களும், பாதைகளும் தந்த அனுபவங்கள் நம்மிடையே எழுத்துக்களாக வந்து பல்வேறு பாராட்டுக்களையும் அவர்களிடையே நமக்கிருக்கும் நெருக்கத்தையும் உணரவைத்திருக்கின்றன. ‘துணையெழுத்து’ தொகுப்பில் ஒரு சாவிக்கூடை பற்றி வரும். அப்போது அனிச்சையாக நம் வாழ்வில் நாம் அதைப் பார்த்திருக்கிறோமா என்றும் அது தொடர்பான நிகழ்வுகளிலும் என் மனம் லயிக்க ஆரம்பித்துவிட்டது.

நான் கணிப்பொறி நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தபோது, கானாடுகாத்தானில் ஒரு பெரியவர் தனது வீட்டில் கணிப்பொறி பழுது நீக்க அழைத்திருந்தார். அவர்கள் வீட்டின் வாசலிலிருந்து கொல்லைப்பக்கத்தை அடைய ஆட்டோ வைத்துத்தான் செல்லவேண்டும் என்ற அளவுக்கு நீளம்..! ஒருமுறை நான் சென்றபோது எஸ்.ரா கூறியிருந்ததைப் போன்று ஒரு கூடை நிறைய சாவிகளை வைத்துக்கொண்டு ஏதோ தேடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் ஒரு வீட்டுக்கு இவ்வளவு சாவிகள் இருக்கமுடியும் என்ற ஆச்சரியம் எனக்கு வந்தது.

அப்போது அவர் அதன் பின்னணியை விரிவாக்கினார். அவரது மகன் ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஆரம்பிக்க இருப்பதாகவும் அதற்காக ஒரு தனியார் முதலீட்டு நிறுவனத்தில் 50 லட்சம் ரூபாய் கடன் கேட்கப்போனபோது, பிணையாக அவர்களது வீட்டுப்பத்திரத்தை கேட்டிருக்கிறார்கள். அது தொடர்பாக விட்டுப்போன சில ஆவணங்களைத் தேட சில அறைகளைத் திறந்து பார்க்கவேண்டியிருப்பதால், அந்தச் சாவிக்கூடையை நோண்டிக்கொண்டிருந்தார்.

அடுத்தமுறை நான் சென்றபோது, அவராகவே ஆரம்பித்தார்.

தம்பீ! ஒரு பெரிய விஷயம் நடந்துச்சே! தெரியுமா?

என்ன சார்? சொல்லுங்க!

அன்னிக்கு அந்த சாவிக்கூடையை நோண்டிக்கிட்டிருந்தேன்ல, அப்போ அதன் அடியில மூணு மோதிரம் கெடந்துச்சு.. ! எல்லாமே தங்க மோதிரம்..! உடனே அதை நல்லா சுத்தப்படுத்தி, நான், என் மனைவி, என் மகன் ஆளுக்கு ஒண்ணா போட்டுக்கிட்டோம். 
நாங்க தேடின பத்திர பேப்பரும் கிடைச்சுருச்சு..! அதை எடுத்துக்கிட்டு அந்த ஃபைனான்ஸியர்க்கிட்ட என் பையன் போக, அவர் இவன் கையில் இருந்த மோதிரத்தைப் பார்த்து , கழட்டித் தரச்சொல்லிக் கேட்டிருக்கார். என் மகனும் கொடுக்க, அதை கூர்ந்து பார்த்துட்டு,
இந்த ஒரு மோதிரம் போதும். ஏன்னா, இதுல ஒரிஜினல் கனக புஷ்பராகம் பதிச்சிருக்கு!  ஒரு கோடி மதிப்பிருக்கும். இது உங்ககிட்ட இருக்குன்னு தெரிஞ்சிருந்தா, பத்திரமே கேட்டிருக்கமாட்டேனே?  
என்று சொல்லி உடனடியாக 50 லட்சத்துக்கு செக் குடுத்துட்டாரு! இதுமாதிரி எத்தனை புதையலை எங்க பாட்டன்,பூட்டன் இந்தவீட்டில் வச்சிட்டுப் போயிருக்கானோ?  என்று சந்தோஷித்தார்.
சாவிக்கூடை பற்றிப் படித்தபோது இந்த சம்பவம்தான் என் நினைவுக்கு வந்தது. படிக்கும் விஷயத்துடன் தான் சந்தித்த, அனுபவித்த சம்பவங்களை பொருத்திப்பார்க்கும் மனோபாவம்தான் அசைபோடல்களை உச்சம் தொட வைக்கிறது.

எனக்குத் தெரிந்து பல அசைபோடும் மனிதர்களை நானே வலியச் சென்று சந்திப்பேன். அவர்களது அனுபவங்களை அவர்கள் சிலாகித்துச் சொல்லும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோஷத்தை உள்ளக் கேமராவில் பதிவு செய்வதற்காகவே நிறைய முறை சென்றிருக்கிறேன். மேலும் பல்வேறு சிறப்பான அனுபவங்கள் நாம் புத்தகங்களில் கூடப் படிக்க இயலாது.

எழுத்தாளர் திரு.தருமராஜன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு தகவலைச் சொன்னார். அவரைப்பற்றிச் சொல்லவேண்டுமானால், டால்ஸ்டாய் மேல் பற்றுக்கொண்டு ரஷ்யாவிற்கே சென்று அங்கு பல ஆண்டுகள் தங்கி , வேலை பார்த்து வந்தவர். டால்ஸ்டாயின் படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்ததில் இவருக்கு முதல் மற்றும் முக்கியப் பங்கு உண்டு. அவரது அனுபவத்தில் ரயில்கள் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது ரஷ்யாவின் இருப்புப் பாதை மட்டும் கொஞ்சம் அகலம் அதிகம் என்றும், அதனால், வேறு எந்த நாட்டிலிருந்தும் ரஷ்யாவுக்குள் ஒரே ரயிலில் போகமுடியாது. இது அவர்களது பாதுகாப்பு உணர்வைக் காட்டுவதாக உள்ளது என்றார். அது எனக்கு மிகவும் புதிய தகவல். டால்ஸ்டாய் அமர்ந்து இறந்த இடத்தில் அதிக நேரம் சென்று இருந்துவிட்டு வந்ததாக அவர் சொன்னபோது அவர் கண்ணில் கண்ட உணர்வை என்னால் விவரிக்கவே இயலாது.

பல்வேறு நபர்கள் ‘நாங்கள்லாம் அந்தக்காலத்துல’ என்று துவங்கும்போது பலர் பின்னங்கால் பிடறியில் இடிக்க ஓடிவிடுவார்கள். ஆனால், உண்மையில் பல்வேறு அனுபவங்கள் அசைபோடுதலாக வரும்போது அது தரும் ஆனந்தம் அலாதியானதுதான். ஆட்டோகிராப் படத்தை நாம் கொண்டாடியதற்குக் காரணம் அதன் அசைபோடலில் நம்மையும் இணைத்துப் பார்த்ததுதானே?

இதைப்படித்துவிட்டு என் தோழி ஒருத்தி கட்டாயம் ஃபோன் செய்வாள்!

அசைபோடுதல் ஆனந்தம்கிற…? ஆனா நான் அசைபோட்டா மட்டும் திட்டுற?

அவளுக்கு இப்போதே பதிலிடுகிறேன்.

லூஸு! நான் சொல்றது மனசு செய்யுறது…நீ சொல்றது மாடு செய்யுறது!



Monday, October 29, 2012

பண குணம்



பணம்..நம் அன்றாடத்தேவைகள் மட்டுமன்றி, நம் வாழ்க்கையையே நிர்ணயிப்பதாக அமைந்துவிட்டது. அதை வைத்து மனிதர்களுக்குள் வரும் பிரச்னை கொஞ்ச நஞ்சமல்ல.!

ஒருவரது அடிப்படை குணத்தை, அவர் பணத்தைக் கையாளும் தன்மையையும் வைத்துத்தான் நாம் எடைபோடுகிறோம். அதுவும் அவர் எப்படி தனக்கான கொடுக்கல் வாங்கல்களைச் செய்கிறார் என்பதை வைத்து அவரது குணாதிசயத்தை நிர்ணயிக்கிறோம். உண்மையில், பண குணம்தான் எல்லோரையும் பற்றி நமக்கு உலகுக்கு எடுத்துரைக்கிறது.

இதில் அடிப்படையாக இரண்டு விதம்..

கொடுப்பவர்,- 50 பைசா பிச்சை கொடுப்பவரிலிருந்து, அரை லட்சம் அவசரத்தேவைக்குக் கொடுப்பவர் வரை அனைவரும் கொடுப்பவரே!

 வாங்குபவர்..!! -கடையில் சாக்லெட் வாங்குவதிலிருந்து, கால் கோடி கடன் வாங்குவது வரை – அனைவரும் வாங்குபவரே..!

இருவருக்குமிடையேயான உறவில்தான் ஒருவருடைய பணகுணம் நிர்ணயிக்கப்படுகிறது.

நம்மில் எத்தனையோ நண்பர்கள், உறவினர்களுடன் பல்வேறு காலகட்டங்களில் செலவுகளைப் பகிர்ந்துகொள்ளும் நிலை வரும். அது ஒரு உணவகத்தில் சாப்பிடும்போது இருக்கலாம். மொத்தமாக ஐந்தாறு குடும்பங்கள் ஒரு பிரயாணம் செய்யும்போது இருக்கலாம். இன்னும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் வெவ்வேறு தளத்தில் உள்ள ஒரு குழுவாகச் செல்லும் மனிதர்கள் தங்கள் செலவுகளைப் பகிர்ந்துகொள்வார்கள்.

இதிலும், ஒரு சில மனிதர்கள் உண்டு.

ஒரு கூட்டத்தில் எல்லோரும் செலவழிக்கட்டும். நாம் பேசாமல் இருப்போம். நமக்கான செலவு என்ன பெரியதாக ஆகிவிடப்போகிறது? அப்படியே ஆனாலும் வலுவாக இருப்பவன் செலவழிக்கட்டுமே என்று இருப்பார்கள். அதில் அதிகமாகச் செலவழிப்பவர் பைசா சுத்தமாக கணக்கும் கேட்கமுடியாது. திரும்ப வாங்கவும் கூசும். ஆனால், தனக்காகத்தானே செலவழித்தார்கள் என்று எண்ணி அந்த ஆளே தானாகத் தந்திருக்கவேண்டும் அதுவும் நடக்காது.

இதுவாவது பரவாயில்லை.

ஒருவருக்கு கஷ்டமான நேரத்தில் உதவுகிறேன் என்று தன்னிடமிருக்கும் கொஞ்சம் தொகையைக் கொடுத்துவிட்டு, அதே தொகை தனக்குத் தேவைப்படும்போது பிறரிடம் கையேந்தும் நிலையும் சிலருக்கு ஏற்படும். இதற்குக் காரணம். அந்த உதவியை அடைந்தவர், முன்னவரின் துன்பத்தைப்பற்றியே கவலைப்படாததும். இவரிடம் நிறைய காசு இருக்கும். நம்மிடம் திரும்ப வாங்கத்தான் நடிக்கிறார் என்று எண்ணி அவர் திரும்பக்கொடுக்கும் ஒரே விஷயம் டிமிக்கிதான்.!

எந்த ஒரு சூழலிலும் தன்னிடம் , திரும்பக்கொடுப்பதற்கு இப்போது பணம் இல்லை, குறிப்பிட்ட நாளுக்குள் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லும் நேர்மையான மனநிலை வந்தால்தான், அவரைப்பற்றிய பணகுணம் நல்லவிதமாக அமைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்றும்.. பல்வேறு பொய்க்காரணங்களிலும் தன் தரத்தை தாழ்த்திக்கொள்பவர்களின் பணகுணம் அவர்களைப் பற்றிய மோசமான அபிப்பிராயத்தை விதைத்துவிடுகிறது.

ஒருவரிடம் வாங்கும்போது இருக்கும் மனநிலை, அவருக்குக் கொடுக்கவேண்டும் எனும்போது இழுத்தடிக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி ஏற்படாமலேயே பல மனிதர்கள் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு மனிதன் தன் பணத்தை எந்த ஒரு சூழலிலும் ஏமாற்றப்பட்டோ, அநியாயமாகவோ இழக்க விரும்பாதவனாக இருந்தால் அவன் அதிகபட்சமாக அடுத்தவர் பணத்தை திரும்பக்கொடுத்துவிடுவான் எனக்கொள்க! (கேட்டால் கிடைக்கும் என்று போராடுபவர்கள் இந்த ரகம்தான்!) J


ஒரு நண்பர்கள் குழு டூர் செல்கிறதென்று வைத்துக்கொள்வோம். வண்டிக்கு பெட்ரோல் ஒரு நண்பர் போட்டிருப்பார். இறங்குமிடத்திலெல்லாம் தண்ணீர் பாட்டில், சிப்ஸ் என்று ஒரு நண்பர் வாங்கித்தள்ளிக்கொண்டிருப்பார். இடையில் உணவு சாப்பிடும்போது ஒரு நண்பர் சாப்பாட்டுக்குக் காசு கொடுப்பார். அதில் ஒருவர் மட்டும் ஒரு செலவும் செய்யாமல் வந்தால், மற்றவர்களுக்கு கொஞ்சம் வேகத்தான் செய்யும் அதே சமயம் குடும்பமாகச் செல்லும்போது, இவற்றை அனைவரும் பகிர்ந்துகொள்ளலாம் என்றுதான் முடிவெடுத்திருப்பார்கள். ஆனால் அதிலும் ஒரு குடும்பம் மட்டும் செலவே செய்யாமல் இருப்பதும் ஒருவிதமான சுயநல மனப்பான்மையே!

இது உன் பணம் என் பணம்… என் பணமும் என் பணம்! என்ற நிலை !

இது போன்ற சந்தர்ப்பங்களில், மொத்தமாகச் செலவு செய்ய ஒரு தொகையை ஒதுக்கிக்கொண்டு , எல்லாப் பொது செலவுகளையும் சேர்த்து, பின்னர் அந்தத்தொகையைப் பகிர்ந்துகொள்வதுதான் சிறப்பாக அமையும். அப்போதும் இன்னொரு பிரச்னை எழும். நான் அன்னிக்கு முட்டை தோசை சாப்பிடவே இல்லை. நானும் ஏன் அதுக்கு காசு தரணுமென்று சண்டைக்கு நிற்பார் ஒரு குடும்பத்தலைவி! இதையெல்லாம் சமாளித்து ஒரு சுற்றுலா செல்வதென்பது பெரிய காரியம்..!!

நான் வாங்குபவனாகவே இருக்கவேண்டும்.. கொடுப்பவனாக மாறமாட்டேன் என்பவர்களின் பணகுணம் அவர்களை கட்டாயம் குறைவாகவே மதிப்பிட வைத்துவிடுகிறது.

மேலும், நெருங்கிய சொந்தமாகவே இருந்தாலும், அடுத்தவர் சிரமப்படும் சூழலில், தன்னிடம் அதிகமாகப் பணம் இருந்தும் கொஞ்சம் கூடக் கொடுக்கும் மனநிலை இல்லாமல், ‘வெளியில் வேண்டுமானால் வட்டிக்கு வாங்கித்தரட்டுமா என்று கேட்டுவிட்டு,  அடுத்தவாரமே தனக்கென பத்து பவுன் அட்டிகை வாங்குபவர்கள் குணம் சொந்தத்துக்கிடையில் பல்லிளித்துவிடும். சிரமப்படும் நேரத்தில் நெருங்கிய சொந்தங்களுக்குக் கொடுப்பதும் உறவுகளை பலப்படுத்தும். அதே நேரத்தில், வாங்கியவர் கடனாக வாங்குகிறாரா, கொடையாக வாங்குகிறாரா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.!

இன்னொரு விதமான தன்மை இருக்கிறது.

எந்த ஒரு செலவாக இருந்தாலும் நான்தான் செலவழிப்பேன் என்பது… அத்தகைய மனிதர்கள் தங்கள் கருணை உள்ளத்தையோ, தங்கள் செலவழிக்கும் திறனையோ , அனைவரையும்விட தன்னிடம் அதிகப் பணம் இருக்கிறதென்று காட்டுவதற்காகவோ இதைச் செய்வார்கள்.
ஒரு உதவி என்று வரும்போது அவசரமாக ஒரு சிறு தொகையை கடனாக அவர்களிடம் பெற்றால், நியாயமாக திரும்பச்சென்று கொடுப்பவரையும் ‘வேண்டாம்’ உனக்கு நான் சும்மாத்தான் கொடுத்தேனென்று அவரைத் திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

அதேபோல், ஒரு பிரயாணத்தில், பெரும்பான்மையான செலவுகளைச் செய்வார்கள். அவருடன் பயணித்த யாராவது, தங்களுக்கான செலவைக் கொடுத்தால் திரும்ப வாங்க மாட்டார்கள். அவர்கள் நினைப்பது, நாம் மற்றவர்களுக்குச் செய்யும் செலவை திரும்ப வாங்கவேண்டியதில்லை என்பது.! இதில் பயன்பெற்ற ஒருசிலர், சரி! இந்தத் தொகை நமக்கு மிச்சம்தான் என்று நினைத்துக்கொள்வார்கள். ஆனால், அவரைப்போலவே கொடுத்துப் பழகியவர்களின் பணகுணம் அதனை ஏற்காது. அவர்கள் தனக்கான செலவை கொடுத்தே தீரவேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். இந்த முதல் மனிதர் செலவை வாங்கமாட்டார். அங்கு வேறுவிதமான வாக்குவாதம் அரங்கேறும்.

ஆனால், அத்தகைய மனிதர்கள், எதிராளியின் தன்மானத்தை உரசிப்பார்க்கிறார்கள் என்பதை எப்போதும் அறிவதில்லை.

நாம் சென்ற பிரயாணத்தில் நீங்கள் எனக்கும் சேர்த்து செலவழித்தீர்கள். எனக்கான தொகையை வாங்கிக்கொண்டால்தான் எனக்கு நிம்மதி என்று கேட்டால், ‘ உனக்கும் சேர்த்து நான் செலவழித்ததாக இருக்கட்டும்’ என்று பொருள்படும் வகையில் ‘வேண்டாம்’ என்று இவர்கள் மறுப்பது, பயனடைந்தவரை மிகவும் தாழ்வாக இவர் மதிப்பிடுவதாக அமைந்துவிடும். ‘நான் சம்பாதிக்கவில்லையா? என் செலவை பார்த்துக்கொள்ள எனக்குத்தெரியும் எனும் தன்மானம் ‘  வேறுவிதமாக வெளிப்பட்டு அது மனக்கசப்பாக மாறும் வாய்ப்பிருக்கிறது.

இத்தகைய மனிதர்கள் தங்கள் கொடுக்கும் குணத்தை கொஞ்சம் நீட்டி, தான் மட்டுமே கொடுப்பவராக இருக்கவேண்டும் என்று இறுமாப்புக் கொள்ளும்போது, இவரைப்போன்றே சிந்திக்கும் இன்னொரு மனிதரால் காயப்பட வேண்டியிருக்கிறது. இவர்கள்தான் முதலில் மற்றவர்களைக் காயப்படுத்தினார்கள் என்பதை மறந்தும் விடுகிறார்கள். மற்றவர்களை வலிய கையேந்திகளாக ஆக்குகிறார்கள் என்பதை விட்டு, தனது வள்ளல்தன்மையை நீட்டிக்கவே சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

வாங்கியே பழக்கப்பட்டவருக்கு பணத்தின் மீது இருப்பது ஈர்ப்பு – அது வெறியாக மாறி, மற்றவர் பணத்தையும் கொடுக்கவிடாமல் செய்கிறது.

கொடுத்தே பழக்கப்பட்டவருக்கு பணத்தின் மீது இருப்பது இறுமாப்பு – அது வெறியாக மாறி தன் பணத்தைக் கூட வாங்கவிடாமல் செய்கிறது.

முதல் பிரச்னையில் இரண்டு மிச்சங்கள்!
தன்னால் கொடுக்கப்படும் தொகை, திரும்பக்கிடைத்தால், பணம் மிச்சம்!
திரும்பக்கிடைக்காவிட்டால், எதிரி மிச்சம்!
கொடுத்த பணத்தைக் கேட்காவிட்டால் பணம் மிச்சம்.! கேட்டால், எதிரி மிச்சம்!

இரண்டாவது பிரச்னையிலும் இரண்டு மிச்சங்கள்!
தான் செலவழித்த தொகையை, திரும்ப வாங்கிக்கொண்டால் மரியாதை மிச்சம்…! மறுத்தால், மனக்கசப்பு மிச்சம்!
தனக்காக அடுத்தவர் செலவழித்த தொகையை திரும்பக்கொடுத்தால் மரியாதை மிச்சம்.! கொடுத்தவர் வாங்க மறுத்தால், மனக்கசப்பு மிச்சம்!

வாங்கியவர் முறையாகக் கொடுத்தால் போதும்!
கொடுத்தவர்  முறையாக வாங்கிக் கொண்டால் போதும்!

ஈர்ப்பும் இறுமாப்பும் இன்றி… நட்புடன் அணுகுவோம்..பணகுணம் மேம்படும்.!

Sunday, November 6, 2011

பெயருக்குப் பின்னால்






            பள்ளி செல்ல ஆரம்பித்து, கொஞ்சம் விபரம் தெரிந்த வயதில்,  பெயருக்குப்பின்னால் படித்த பட்டம் போட்டுக்கொள்ளும் ஆசிரியர்களைக்கண்டு, பிரமிப்பாக இருக்கும். அவர்கள் வீட்டுக்கதவில் பெயர் எழுதி, பின்னால். M.A. என்று போட்டுக்கொள்வதை மிகவும் ஆச்சர்யமாவும், மரியாதையாகவும் பார்ப்பேன்.

      நண்பர்களிடையே, ஒருவரைப்பற்றி பேசும்போது, அவரது படிப்பையும் சேர்த்துத்தான் பேசுவோம். அவுங்க மாமா இளங்கோ பி.எஸ்ஸி தெரியுமுல்ல! என்போம். அந்த இரண்டு அல்லது மூன்று எழுத்தைப்பெறுவது மிகவும் கடினம் என்று கவலைப்படுவோம். நாமெல்லாம் இப்படிப் படித்துவிடுவோமா என்று ஏங்குவோம்.

        எங்கள் பள்ளி தட்டச்சு ஆசிரியர் கன்னாபின்னாவென்று படித்து, அவர் பெயர்ப்பலகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பட்டத்தை சேர்த்துக்கொண்டே போவார்.

      ’இந்த ஆளு எப்பதான் படிக்கிறாரு? எப்படி இவ்ளோ பட்டம் வாங்கினாரு?’ என்று பேசிக்கொண்டே அவரது வீட்டைக் கடந்திருக்கிறேன்.

      என் தோழி ஒருத்திக்கு, தன் பெயருக்குப்பின்னால், ஆங்கில எழுத்துக்கள் எல்லாவற்றிலும் பட்டம் இருக்கவேண்டும் என்று வெறிகொண்டு திரிவாள். தனக்கான பெயர்ப்பலகையின் நீட்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் என்னைக் கொல்லுவாள்.
      
       சில வீடுகளின் வாசலில் பெயரை சிறியதாகப்போட்டுவிட்டு படிப்பை பெரியதாகப்போட்டிருப்பார்கள். அதிலும்.. M.Sc(Hons) என்று இருக்கும். அது என்ன துறை என்று தெரியாமல் தவித்திருக்கிறேன். ஹானர்ஸ் என்பது தனித்துறை இல்லை, அதிக மதிப்பெண்கள் எடுத்தால் கொடுப்பது என்று தெரியவந்தபோது, பிரமிப்பை விட கடுப்புதான் கிளம்பியது.

   ஒரு சில குடும்பங்களில், திருமணப்பத்திரிகையில் பெயருக்குப்பின்னால் போடுவதற்கென்று படிக்கச்சொல்லி ஆண்களைக் கல்லூரிக்கு அனுப்புவார்கள். பெண்களாக இருந்தால் தொலைதூரக் கல்வி இயக்ககத்துக்கு விண்ணப்பம் பறக்கும்.
  
  எனக்குத்தெரிந்து ஒரு அரசியல்வாதி நண்பன். கையெழுத்துப்போட்டுவிட்டு அதன் கீழ் பெயர் எழுதவேண்டிய கட்டாயம் வந்தால், பெயர்..படித்த பட்டம் இரண்டையும் எழுதுவான். ஏனென்று கேட்டால், ‘நம்பளை கைநாட்டுன்னு நினைச்சுறக்கூடாது மச்சான்’ ! என்பான்.
  
  திருமணப்பத்திரிகைகள், போஸ்டர்கள் இவற்றில் பெயருக்குப்பின்னால்,பட்டம் போடாவிட்டால்,பெரிய களேபரங்கள் நடக்கும். என் நண்பன் ஒருவனுக்கு கல்லூரி முடித்தவுடன் ஓரிரு வருடங்களில் திருமணமானது. இவன் B.E., மணமகள் B.Sc,PGDCA. கடுப்பாகிவிட்டான். தன் படிப்பைவிட அவள் படிப்புதான் பெரிதென்று மற்றவர்கள் எண்ணுவார்கள் என்று சொல்லி, அவள் படிப்பில் PGDCA வை எடுக்கச்சொன்னான். அவர்கள் வீட்டில் முடியாது என்றார்கள்.

அவன் வருங்கால மாமனார்,
காசு செலவு பண்ணி படிச்ச படிப்பை எப்படித் தம்பி போடாம விடுறது? என்று என்னிடம் புலம்பினார்.

சின்னகோடு,பெரியகோடு முறையில், நான் ஒரு யுக்தி சொன்னேன். இவன் பெயருக்குப்பின்னால் .B.E (Computer Science) என்று போட்டுவிட்டால், இவனுடையது நிறைய எழுத்துக்கள் வந்துவிடும் என்றேன். அதையே ஒத்துக்கொண்டார்கள்.

பின்னர் பத்திரிக்கை இப்படி வந்தது.

Er. சாமிநாதன் B.E (Computer Science Engineering)
கௌரி .B.Sc. PGDCA

இரு குடும்பத்தாரின் மகிழ்வுடன் திருமணம் நடந்தேறியது.

     இதற்கெல்லாம் பயந்தே, என் திருமணப்பத்திரிகையில் இருவரது படிப்பும் போடவில்லை. நம் படிப்பைப்பார்த்து யாரும் திருமணத்துக்கு வரவோ, நிராகரிக்கவோ போவதில்லை. நம் குணம், பழகும் விதம் இவை தவிர, அதிகபட்சமாக, அவர்கள் வீட்டு விழாக்களுக்கு கூப்பிட்டபோது நாம் சென்றிருக்கிறோமா என்று பார்ப்பார்கள் என்பதுதான் என் வாதம். எங்கள் வீட்டில் படிப்பு போடுவதா, வேண்டாமா என்ற பேச்சு வந்தபோதே நான் மறுத்ததால் பெயர்கள் மட்டும் தாங்கி பத்திரிகை வந்தது. என் மாமனார் வீட்டுப்பத்திரிகையில் அடம் பிடித்துப் போட்டார்கள். நான் மறுத்ததற்கு அவர்..
      படிப்பு போடவேண்டாம்னு நல்லவிதமா நீங்க நினைக்கிறீங்க! ஆனா, படிக்காத மாப்பிள்ளை போலிருக்குன்னு என் சொந்தக்காரனும், ஊர்க்காரனும் நினைப்பான் என்றார்.

      விழா போஸ்டர்கள் இன்னும் பெரும்பாடு படும். வாழ்த்துத் தெரிவிக்கும் 35 பெயர்களில் ஒருவரது படிப்பு தவறாகவோ, இல்லாமலோ வந்துவிட்டால் போஸ்டர் செலவுக்கு அவர் தரவேண்டிய பங்கு கட்!
போஸ்டரில் படிப்பைப் போடாததால், விழாவுக்கே போகாத மனிதர்களெல்லாம் உண்டு.
    அதுவும் அச்சகத்தின் கணிப்பொறியில், தட்டச்சுபவருக்கும், விழாவினருக்கும் ஏதாவது ஏடாகூடம் நடந்தவாறே இருக்கும். ஒன்று..இவரே ஏதாவது தவறு செய்திருப்பார். கமலநாதன் B.Tech என்று அடித்துவிட்டு, மற்றவர்களுக்கும் அதே எழுத்து வடிவம் வருவதற்காக காப்பி,பேஸ்ட் செய்துவிடுவார்.
     அவசரத்தில், கமலநாதன் படிப்பு, சாகக்கிடக்கும் மணமகள் பாட்டிக்கும் செல்லாயி B.Tech  - என்று வந்து நிற்கும்.  இதுவாவது பரவாயில்லை. உண்மையில் M.Com.B.Ed படித்தவரை வெறும் பெயராக விட்டுவிட்டு, நான்கு வயதாகும், மணமகனின் அக்காள் மகனுக்கு பட்டம் கொடுத்துப் பாட்டு வாங்கிய அச்சகங்களைத் தெரியும்.
    
    இன்னொன்று, இவர்களே தவறாக எழுதிக்கொடுத்துவிட்டு, அச்சகத்தின் மேல் குறை கூறிவிடுவார்கள். எனக்குத்தெரிந்த அச்சக உரிமையாளர் ஒருவர் படிப்பு ப்ரூஃப் பார்ப்பதை ஒரு வேலையாகச் செய்வார். 
        இவுங்க காசு குறைக்கிறதுக்கு, இதை குறையாகச் சொல்லுவாங்க! பேருக்குப்பின்னால படிப்பு போட ஆரம்பிச்சவனைக் கண்டேன்….செத்தான் என்று குமுறுவார்.

     இந்தப்பழக்கம் எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் இது நமது கௌரவ அடையாளமாக ஆகிவிட்டது. பெயருக்குப்பின்னால் படிப்பு போட்டிருப்பதை வைத்து அவரது நம்பகத்தன்மையை ஆராயாமல் ஏற்கும் கலாச்சாரம் இன்னும் குறையவில்லை. அதனால்தான் தனியார் மருத்துவமனை மருத்துவர்களில் MBBS படித்தவர் கொஞ்சமாகக் கொள்ளையடிப்பார். MD படித்தவர் அதிகமாகக் கொள்ளையடிப்பார் என்று கிராமத்தார்களே பேசும் அளவுக்கு வந்திருக்கிறது.

     பெயருக்குப்பின்னால் பட்டம் போட்டுக்கொள்ளும் பழக்கம் நம் நாட்டில் மட்டும்தான் இருக்கிறதாக நினைக்கிறேன். நான் சென்ற நாடுகளில் இதுவரை அப்படிப்பார்த்ததாக நினைவில்லை.

நம்மிடம் பழகுபவர் என்ன படித்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருப்பது தவறில்லை. அதை அவர் விசிட்டிங் கார்டில் தேடுவது ஆச்சர்யமாக இருக்கும். கேட்கும்போது, தேவை இருக்கும் இடத்தில், அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது, இன்ன படித்திருக்கிறேன் என்று சொல்வதிலோ , அச்சிட்டுக்கொடுப்பதிலோ தவறில்லை. ஆனால் பெயருக்குப்பின்னால் என்பது….

இப்போதெல்லாம், படிப்பை பெயருக்குப்பின்னால் போட்டுக்கொள்பவர்களைத்தான், நான் படிக்காதவர்களாகப் பார்க்கிறேன். படிக்கப் படிக்க, அறிவு வளரும். அறிவு வளர வளர பணிவு வளரும். பணிவு வளர்ந்தால், பெயருக்குப்பின்னால் எதுவும் போடத்தோன்றாது.

ஒரு படப்பிடிப்புக்காக பசுமையான வயல் தேவைப்பட்டது. அதன் உரிமையாளரைத்தெரிந்துகொள்ள, வயலில் நின்றிருந்த ஒரு அரையாடைப் பெரியவரை அணுகி, பேச ஆரம்பித்தோம்.

எடத்துக்காரரை ஏன் பாக்கணும்?

ஒரு படப்பிடிப்பு விசயமா?

என்ன படம்?

விளம்பரப்படம்!

”ஓ..அப்புடியா? இப்ப சம்பா போட்டிருக்கு, இன்னும் ஏழெட்டு நாளுல உரம் தெளிப்போம். நீங்க கூட்டமா வந்தீங்கன்னா உங்க மேல தெளிக்கும். ’இன்பெக்‌ஷன்’ ஆகும்!” என்றார்.

தெரிந்த ஆங்கிலத்தை அள்ளிவிடுகிறார் என்று நினைத்து, நாங்களும் ஆங்கிலம் கலந்து பேசினோம்.

அவரும் தெளிவான ஆங்கிலத்தில் பதில் சொன்னார். கொஞ்சம் ஜெர்க்கானாலும்..
”சரி! ஓனர் வீட்டைக்காட்டுங்க” என்றோம்.

”நானே வரேன்” என்று அழைத்துச்சென்றார்.

பண்ணை வீடு சுத்தமாக, தெளிவாக இருந்தது. வாசலில் பெயர் மட்டும் போட்டிருந்தது.

உள்ளே சென்றால், வரவேற்பரையில் , கோட் போட்டுக்கொண்டு எங்களுடன் வந்த பெரியவர் உரையாற்றும் புகைப்படம் பார்த்து கொஞ்சம் அதிர்ந்தோம்.

உடனே..
”நீங்கதான் ஓனரா? ஸாரி சார்! உருவம் பாத்து மதிப்பிட்டே பழகிட்டோம். மன்னிச்சுருங்க!  நீங்க நல்லா ஆங்கிலம் பேசுனீங்களே! என்ன படிச்சிருக்கீங்க?”

”சும்மா M.Sc Agri. Ph.D தான் தம்பீ!”

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...