Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Sunday, June 5, 2016

இறைவி - எண்ணங்கள் எனது !











 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது. விமர்சனம் என்பது, ஒரு திரை ஆர்வலன், சினிமா ரசிகனின் பொதுக்கருத்தாக எழுதுவது ! ஆகவே, இதனை ஒரு தனிநபர் பின்னூட்டமாக நினைத்துக்கொண்டால் நன்று!

இறைவி பற்றி எழுதவேண்டும் என்று இரவு முழுவதும் யோசித்த எண்ணங்கள் எழுத்துவடிவம் பெறுவதற்குள் சிந்தனை வேகமெடுத்து எங்கெங்கோ பயணித்து முட்டி நின்று, முன்னோக்கிச் சென்று அலைக்கழிக்கிறது.


கார்த்திக் சுப்புராஜ் ! இவ்வளவு யோசிக்கும் இயக்குனரை வணங்கிவிட்டுத்தான் துவங்கவேண்டும். பெண்களை நேசிக்கும், மதிக்கும் அனைவருக்கும் , நேசிக்காத, நேசிக்கமுடியாத, மதிக்காதவர்கள் மூலமாக கதை சொல்லியிருக்கிறார்.


ஆண் – நெடில்..  பெண்- குறிலை எப்படி நினைத்துக்கொண்டிருக்கிறோம். அல்லது.. நினைத்துக்கொண்டிருக்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வைத்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய சிறையில் ஆயுள்தண்டனைக் கைதிகளுக்கு உளவியல் பயிற்சியளிக்கச் சென்றிருந்தபோது, நிதானம் இழந்ததால், அவர்கள் இழந்தவற்றைச் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

”அன்னிக்கு மழை சார்..! பொண்டாட்டி ஃபோன் பண்ணி, சூடா இட்லி செஞ்சுருக்கேன். பிள்ளைங்க காத்திருக்கு! சீக்கிரம் வந்துருங்கன்னா! சரின்னு சொல்லிட்டு, வண்டியை எடுத்தேன். எனக்கு 40ஆயிரம் தரவேண்டியவன் வேகமா முன்னாடி போனான். ரொம்ப நாளா டபாய்ச்சிக்கிட்டிருந்தான். உடனே அவன் பின்னாடியே போனேன். வீட்டுக்குள் போய் கதவைச் சாத்தினான். உடனே போய் கதவைத் தட்டுறேன். அவன் பொண்டாட்டி வந்து, “அவர் வீட்டில் இல்லைங்கிறா!” மரியாதையா இப்போ வெளிய வரச்சொல்லுங்கிறேன். ஆம்பிளை இல்லாத வீட்டில் தகராறு பண்றியான்னு கேட்டுட்டு பட்டுன்னு கதவைச் சாத்திட்டா! எனக்கு “சுர்”ருன்னு ஏறிடுச்சு! பக்கத்தில் கிடந்த கடப்பாரையை எடுத்து கதவைக் கொத்தினேன். ரெண்டாவது கொத்துக்கு கொஞ்சம் பின்னாடி போய்ட்டு வேகமா வந்தேன்.. அந்த கிறுக்கன் கதவைத் திறந்துட்டான். கடப்பாரை நேரா நெஞ்சுல ஏறிடிச்சு! அவன் போய்ட்டான். நான் வந்துட்டேன்! ஆனா.. என் பொண்டாட்டி ”யாரைப்பத்தியுமே யோசிக்காம அப்படி என்னய்யா கோபத்தைக்கண்ட?”ன்னு கேட்டுட்டுப் போய்ட்டா! அதுக்கப்புறம் என்னைப் பாக்கவே வரலை! 4 வருஷம் ஆச்சு என்றார்.

இப்படி ஒருவர் இல்லை… ஆத்திரத்தில் ஒரு விநாடியில் குற்றம் செய்துவிட்டு, அதனால், குடும்பம் பாதிக்கப்பட்டவர்கள், மனைவியை இழந்தவர்கள், குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட மனைவிகள், வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தும் பெண்கள், கொலை செய்தவர்கள் வீட்டிலேயே வேலை பார்க்கும் சகோதரிகள் என்று பல்வேறு கதைகள்! அன்று அவர்களுக்கு மன அழுத்தம் போக்கச் சென்ற நான், மன அழுத்தத்துடன் வெளிவந்தேன் என்பதுதான் உண்மை. ! திரும்ப வரும்போது, காரில் தெரியாமல் இடித்த ஆட்டோக்காரரிடம் சினேகமாகப் புன்னகைத்ததுதான் என்னுள் ஏற்பட்ட மாற்றம்!

அப்படி ஒரு மாற்றத்தை,  ஆ- நெடில்களிடம் ஒரு மைக்ரோ மீட்டர் அளவுக்காவது இறைவி ஏற்படுத்தியிருக்கும்.

கனியிருப்பக் காய் கவராததால்..படத்தில் சிலாகிக்க நிறைய இருப்பதாகவே உணர்கிறேன். அடிப்படையில் பெண்களைப் பார்த்தாலே நமக்குப் பிடிக்கும். ஆனால், அவர்களை மதித்தால்தான் அவர்களுக்குப் பிடிக்கும். அதைச் செய்யச்சொல்லி ஆண்கள் வழியே வெளிவந்திருக்கிறாள் இறைவி!

     வடிவுக்கரசி ! அவர் , தன் சொந்தங்கள் முன் அவமானப்படுத்தியதைச் சொல்லி வருந்திவிட்டு, கடைசியில் அவர் கண்ணாடியை எடுத்துவைக்கச் சொல்லும் அக்கறை கலந்த நிதானம்தான் – இறைத்தன்மை!

    யாழினி ! சொல்லச் சொல்ல குடிக்கிறான் என்று தெரிந்தும், ஏதோ ஒரு நப்பாசையில், அவனது அப்பா, அம்மாவுக்கும் சேவைகள் செய்துவிட்டு, தன் நேரத்தை குழந்தைக்காகச் செலவழித்து, சொந்தக் கனவுகளைப்புதைத்த நிதானம்தான் – இறைத்தன்மை

    மலர் !  காமம் தேவைப்பட்டது – காதலும் உண்டு! ஆனால், இவனுடன் வாழத்துவங்கினால், சராசரியாக முன் வாழ்க்கைபற்றி கேட்டு ஏதாவது பிரச்னை வந்துவிட்டால்? அவன் புதிய வாழ்க்கை துவங்கட்டும்! நம் பேர் கெட்டதாகவே இருக்கட்டும்! – நம் ஆசைக்கு முடிவெடுத்தால், பின்னர் அவன் குடும்பம் அவனை ஒதுக்க வாய்ப்பிருக்கிறது என்று ஒதுங்கும் நிதானம்தான் – இறைத்தன்மை!

    பொன்னி ! – நிறையக் கனவுகளுடன் ஆரம்பித்தோம். சொதப்புகிறது. ஆனால், அதற்காக விட்டுவிடக்கூடாது. அவனுக்கு பிரச்னை வரும் இடத்திலிருந்து விலகச் சொல்வோம். காதலிக்கிறேன் என்று இன்னொருவன் சொல்கிறான். அது நம் விருப்பமாக இருக்கலாம். ஆனால், இதை நம்பிச்சென்றால், நம்மை நம்புபவன், குழந்தை என்னாவது? விலகிச்செல்வோம். விருப்பம் புதைப்போம்! கணவனாக வந்த ஆணை, சரிப்படுத்தி, கனவு வாழ்க்கையை முயல்வோம் என்று நம்பி நம்பி நொந்து போனாலும், அதற்காக யாரையும் குறைசொல்லிச் சீறாத நிதானம்தான் – இறைத்தன்மை!

    ஆணுடன் சேர்ந்து வாழ்ந்தே ஆகவேண்டும் என்று வலியுறுத்துவதை விட… இதோ பார்! அவளால் தனியாக இன்னும் சிறப்பாக வாழமுடியும். மலர் மாதிரி வாழ்ந்தா, எவ்வளவு வேகமா மழைல நனைஞ்சுகிட்டே பைக்கை எடுத்துக்கிட்டு போற,.. அப்படித்தான் போவ! உன்னை ஒரு இடத்தில் சரியாகப் பயணிக்க வைக்க, அவள் அறுத்துக்கொண்டு போகாமல் இருக்கிறாள் என்று சொல்லியிருக்கிறது இறைவி!

    ராதாரவியின் குற்ற உணர்ச்சி, - வித்தையில் சிறந்தவர், ஆனால் வீட்டில் சரியில்லாமல்தான் இருந்திருக்கிறார். அது அவள் நோயில் படுத்தபின் உணர்ந்து பயனில்லை.

    எஸ் ஜே சூர்யாவின் திசைமாற்றம் – நல்ல படம் எடுத்து, வெளிவராததால், குடிப்பேன். குடும்பம் பற்றிக் கவலை இல்லை!

    விஜய் சேதுபதியின் ஆவேசம் – நல்லவந்தான்.. ஆனா கோவக்காரன்! அதுதான் மூன்று குடும்பங்களைச் சிதைக்கும் ஆயுதம்!

    ஜெகன் – தேவைக்காக சட்டத்தையும், ஒழுக்கத்தையும் மீறலாம் என்ற தைரியம்! இது பெண்ணிடம் இல்லை என்பதை, அவர் வாயாலேயே சொல்லவைத்த அழுத்தம்!


        சித்தப்பா -( சீனு)  அனைவரது தவறுகளையும் ஏற்றுத் தாண்டிச் சென்று, நிதானமாக அனைத்தையும் அணுகும் ஒரே ஆண்! எல்லா ஆணும் மோசமில்லை என்பதற்கான ஒரு சோறு!
    மற்றபடி நிறையக் குறியீடுகள் !!

மைக்கேல், அருள் இருவருக்குமே பெண் குழந்தைகள்தான் ! – பொம்பளப்புள்ள இருந்தும் இப்படி பொறுப்பில்லாம இருக்கானே? என்று சொல்லவைக்கும் யதார்த்தம்!

மழையில் நனைவதைப்பற்றி கவலைப்படாமல், ஆண்கள் நனைவதும்…   நனைந்தால் நனைந்துவிடுவோமே என்று பெண்கள் ஒதுங்குவதும்!  இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், ஆண் – ஆசைப்பட்டு நனையவில்லை..!! பெண் ஆசைப்பட்டும் நனைய இயலவில்லை!

கோபம் – அவளுக்கு வந்தால், குடும்பத்துக்குக்கேடு ! அவனுக்கு வந்தால் வீரம் ! இதுதான் பிரச்னை! (அவன் சொல்லாமல் கொள்ளாமல் கொலை செய்யலாம். அவள் வீட்டை விட்டுப் போகக்கூடாது) அதனை சித்தி கதாபாத்திரம் மூலம் ஒற்றை வரியில் சொல்லியிருப்பது.!

யாழினி, மலர், பொன்னி என்று தமிழ்ப்பெயர்கள் வைத்து, இது தமிழ்ச் சமூகத்தில் இந்தப்பெயர் மூலமாகவே நாம் அவர்கள் நடத்தையை நிர்ணயிப்பதைக் கடந்திருப்பது!

அற்புதமாக, கோடிக்கணக்கில் விலைபோகும் பெண் தெய்வச் சிலையை வடிக்கத்தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு, தன் வீட்டில் இருக்கும் பெண்களின் மதிப்புத் தெரியவில்லை. இன்னொருவன் களவாடும்போது ஆத்திரம் வருகிறது. சீண்டுவாரற்றுக் கிடக்கும்போது சோகம் வருகிறது. திருவிழாச் சமயத்தில் ஞானம் வருகிறது.

கொலை செய்யப்பட்ட தயாரிப்பாளரின் மனைவி, அவர் என்ன வாங்கியிருக்கார், எவ்வளவு கடன் இருக்குன்னே தெரியாது. இப்போதான் சொத்தெல்லாம் வித்தோம் , படம்தான் மிச்சம் என்று சொல்லி, படத்தை விற்கும் நிதானம்! இதை அந்த ஆள் செய்திருந்தால் ?

மருத்துவமனையில், நர்ஸ் மூன்று முறை அமைதியாக இருக்கச்சொல்லி கெஞ்சிவிட்டு, நான்காவதுமுறை கொஞ்சம் குரல் உயர்த்தியதும், நோயாளியின் கணவரான பெரியவர் (ராதாரவி) இன்னும் அதிகமாகச் சத்தம்போட, ஒன்றுமே சொல்லாமல் திரும்பச் செல்லும் நடையில் தெரியும் இயலாமையைச் சொல்லியிருப்பது! ( இந்த இடத்தில் ஆண் இருந்தால் என்ன செய்திருப்பான் என்று கொஞ்சம் ஓட்டிப்பார்த்தால்.. அந்த இயலாமை இன்னும் ஆழமாகத் தெரியும்)

இதில்.. கடைசியில் எஸ் ஜே சூர்யாவின் கடைசி நிதானம் மூலம், யாழினிக்கு ஏதாவது நன்மை நடந்துவிடும் என்ற நம்பிக்கையை விதைத்து, அவனிடம் கடைசியாக இறைத்தன்மை புகுந்ததை சொல்லியிருப்பதுதான் நிறைவு!

தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக அவள் நம்மை நிதானிக்கச் செய்கிறாள். நாம்தான் அவளை நிதானமிழக்க வைக்கிறோம் என்று கதைச் சூழல் மூலம் வெளிப்படுத்தியிருப்பதுதான் கார்த்திக் சுப்புராஜ் படைப்பின் அழுத்தம்!

மற்றபடி… ஒரு திரைப்படத்துக்கான அம்சங்களான, திரைக்கதை, இசை , ஒளிப்பதிவு, படத்தொகுப்பு இவற்றைப்பற்றிப் பேச அறிவைப்பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இந்தப்படத்தை நான் உணர்வைப் பயன்படுத்திப் பார்த்ததால், அதனை லூசில் விட்டுவிட்டேன்.


எனக்கு பாகற்காய் பொறியல் பிடித்திருக்கிறது. அவ்வளவுதான் !

Thursday, November 15, 2012

துப்பாக்கி








       தீபாவளி வெளியீடு என்றவுடன், கிராமத்தில்தான் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்தாயிற்று..!! அங்குதான், இரசிகர்களின் உண்மையான உணர்வுகள் தெரியவரும்.

     அதேபோல் தியேட்டருக்குள் நுழையும்போதே ஆர்ப்பாட்டம்..!! விஜயின் அறிமுகக்காட்சியில் ஐந்து நிமிடங்கள் அனைத்து இரசிகர்களும் ஸ்டாண்டிங் ஓவேஷன் கொடுத்தார்கள்.
    
    முழுக்க முழுக்க முருகதாஸ் படமாக எடுக்க , விஜய் ஒத்துக்கொண்டிருக்கிறார் என்பது தெரிய ஆரம்பித்தது. மிகவும் அடக்கி வாசித்து, தனக்கான இடத்தை மிகவும் அழுத்த்தமாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

       சமூகத்தில் சாதாரண மனிதர்களாக இருப்பவர்கள், தீவிரவாதிகளின் மூளைச் சலவையால், மனம் மாறி, அவர்கள் சொல்வதைச் செய்யும்படி தயார் செய்யப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் சமூகத்தில், அவரவர் வேலைகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தலைவனிடமிருந்து கட்டளை வரும்போது (குண்டு வைப்பது) அதை நிறைவேற்றுகிறார்கள். இவர்களுக்கு SLEEPER CELLS என்று பெயர்.!!

   அந்தவகை மனிதர்களின் வேரைக் கண்டுபிடித்து, அதனை அழிப்பதுதான் படத்தின் மையக் கரு! அதாவது, யார் கட்டளை இடுகிறார்களோ அவர்களை அழித்துவிட்டால், தனக்கான கட்டளைக்காக காத்திருந்தே, silent cell கள், தங்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப்போய்விடுவார்கள் என்பதுதான் நோக்கம்..!!

    அப்படி ஒரு Sleeper Cell மனிதன் தன் வேலையை செய்துவிட்டுச் செல்லும்போது, எதேச்சையாக, இராணுவத்திலிருந்து, மும்பைக்கு விடுமுறைக்கு வந்த விஜய், தன் போலீஸ் நண்பன் சத்யனுடன் பஸ்ஸில் செல்ல நேர்கிறது. அங்கு ஒருவரது பர்ஸ் அடிக்கப்பட, அனைவரையும் சோதிக்க விழைகிறார்கள். இதில் அச்சப்பட்ட அந்த Sleeper Cell, ஓட ஆரம்பிக்க, அவனை விஜய் விரட்டிப்பிடிக்க,  அப்போது பஸ்ஸில் குண்டு வெடிக்கிறது. அதற்குள் அவனும் தப்ப முயற்சித்து ஓட, விஜய் துரத்த ஆரம்பிக்கிறார். படம் தடதடத்து வேகமெடுக்கும் இடம் இதுதான்..!!

     அவனைப் பிடித்து அவர் போலீஸில் கொடுக்க, அவன் அடுத்த நாளே தப்பிவிக்கப் படுகிறான். அதனை சத்யன் விஜயிடம் மிகவும் பதட்டத்துடன் சொல்ல, மிகவும் நிதானமாக விஜய், தனது வீட்டின் மாடியறைக்கு வருகிறார். அங்கு அந்த ஆள் அவராலேயே கட்டிவைக்கப்பட்டிருக்கிறான்.
அங்கிருந்து, பலப்பல சாகசங்கள்.. அத்தனையும் வீரமும், விவேகமும் சரிசமமாய்க் கலந்தவை..!! தனது ஆழ்ந்த புத்திசாலித்தனத்தால் ஒவ்வொரு கண்ணியாகக் கண்டுபிடித்து, அவர்களுக்குக் கட்டளையிடும் தலைவனை வெளிவர வைத்து, பல்வேறு பூனை, எலி விளையாட்டுகளுக்குப் பிறகு, ‘சஸ்பென்ஸுலேயே சாவுடா!’ என்று சொல்லி அவனைச் சுட்டுத்தள்ளுகிறார்.

     படம் முழுக்க, சாகசங்கள், அதுவும் இயக்குநர் முருகதாஸுக்கு மூளையில்தான் உடலே செய்திருக்கிறார்கள் என்பதைப்போல் விளையாடியிருக்கிறார் மனிதர்..!! (நண்பர் என்பதையும் மீறி உண்மையிலேயே நிறைய நுணுக்கமாகச் சிந்தித்திருப்பதால், இந்தப் பாராட்டு!)

     அதுவும் 12 பேர் பிரித்து ஒவ்வொருவராகப் பின் தொடரும் இடங்கள், சாத்தியங்களை மீறி அற்புதமான திரைக்கதையால் நம்பவைத்துவிடுகிறது. அதுவும் அந்த ஒரே வினாடியில் அனைவரும் வெவ்வேறு இடங்களில் சுடும்போது, ஒரு ’வாவ்’ நம் வாய் வழியே இயல்பாக வந்துசெல்கிறது. அந்த நேரத்தில், துப்பாக்கிச் சத்தத்தை விட விசில் சத்தம் அதிகம் கேட்டது.

  சந்தோஷ் சிவன் இந்தப்படத்தின் மூன்றாவது ஹீரோ எனும் அளவுக்கு கலக்கியிருக்கிறார். சேஸிங் காட்சிகளாகட்டும், பாடல்களாகட்டும், விஜயை சமீபகாலத்தில் இவ்வளவு அழகாக யாரும் காட்டவில்லை என்று நினைக்கிறேன். சூரியனுக்கு எதற்கு டார்ச்…?

  விஜய்…! அந்த அழுத்தமும், லேசான குறும்பும் இப்போதுதான் சரியான கலவையாய் வெளிவந்திருக்கிறது. தன் தங்கையிடம் மிகச்சாதாரணமாய் ‘உயிர் போயிருக்கும்’ என்று சொல்லும்போது – இராணுவ வீரனின் உயிர் பற்றிய எண்ணம் அப்படியே பார்க்கமுடிகிறது. அவரது அழுத்தமான பார்வையையும், இரண்டு வார்த்தை பதில்களையும் பார்த்து, இரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் கும்மாளமிடுகிறார்கள். அதுவும் இடைவேளையில் ‘ஐ அம் வெய்ட்டிங்’ என்று சொன்னதற்கு.. இரண்டு நிமிடம் தொடர்ந்து கூச்சலும், விசிலும் பறந்தது. படம் முடியும்போது, ‘ இதுமாதிரியே நடி தலைவா! ’ என்று உளம் நிறைந்து கோரிக்கை வைக்கிறார்கள். 

      கண்ணுக்கு மை அழகு.! மை என்றால் காஜல்..!!  கண்ணுக்கு அழகாக வருகிறார். பேசுகிறார். ஆடுகிறார். நிறைய காஃபி சாப்பிடுகிறார். ஆனால், அவர்தான் கதையின் முக்கிய ஓட்டத்தை மாற்றுகிறார் என்பது சிறப்பு..!! அவர் சத்யனின் பைக் சாவியை எடுத்துச் செல்லாவிட்டால், விஜய் பஸ்ஸில் செல்லவேண்டிய அவசியமே இருந்திருக்காது.




ஏ.ஆர்.முருகதாஸ்… ரமணாவிலிருந்து எனது உள்ளம் கவர்ந்தவர்..விஜயகாந்துக்கு ஒரு வாழ்நாள் சாதனைப் படத்தை அளித்தவர். விஜய்க்கும் அது பொருந்தும்படிச் செய்திருக்கிறார். படம் பார்த்து முடித்தவுடன் குறுஞ்செய்தியில் வாழ்த்திவிட்டேன். அன்பான நண்பர்!, பணிவான மனிதர்..!  நிதானமாக அடி எடுத்துவைக்கிறார். அடுத்த பிரம்மாண்டத்துக்குத் தகுதியானவர் என்று நிரூபித்திருக்கிறார்.

    துப்பாக்கி என்ற பெயர் மட்டுமல்ல..!! சிறப்பான திரைக்கதை, வேகம் நிறை காட்சிகள் மூலம் தீபாவளி ரிலீஸுக்குத் தகுதியான படமாய் அமைந்துவிட்டது.

Tuesday, August 21, 2012

தலைவா, வா! - விமர்சனம்





    தலைவா, வா! என்கிற தலைமைப் பண்புகள் பற்றியதொரு புத்தகத்தை நண்பர் சுரேகா அவர்கள் அண்மையில் எழுதி உள்ளதாகக் கூறி எனக்கொரு பிரதி அன்புப்பரிசாக அளித்தார்.

    மதி நிலையம் பதிப்பித்துள்ள இந்த புத்தகம் ரூ.80 மதிப்பு என்றாலும் ரூ.8000 மதிப்பு பெற்று, பயிலரங்கங்களில் பெறக்கூடிய அறிவினை வழங்கும் ஒன்று என்று படிக்கத் தொடங்கியவுடன் புரியவில்லை.

   'பார்க்கலாம் என்று எடுப்பீர்கள். படித்துமுடித்துத்தான் எழுவீர்கள்' என்று நூலாசிரியரே வக்குமூலம் சொல்லிய்ருந்தாலும்..எனது கருத்து வேறு. ஏனெனில் இது ஒன்று சுவாரஸ்யமான காதல், சமூக நூல் அல்ல!

   நாம் பார்ப்பது சில படமாக இருக்கும். வெகுசில பாடமாக இருக்கும். ‘அபியும் நானும்’ படம் போல!

   நாம் கேட்பது சில பாட்டாக மட்டும் இருக்கும். சில..வெகுசில மீண்டும் மீண்டும் கேட்டு பிரமிக்க வைத்து மனதில் ஓடும் மந்திரமாக மாறும். ‘ ’உயிரும் நீயே உடலும் நீயே’ போல.!

சில புத்தகங்களை படித்து ரசிக்கலாம். ரசித்துப் படிக்கலாம் (யவன ராணி) 
சில புத்தகங்களை படிக்கலாம். படித்துப் பாதுகாக்கலாம்.(பொன்னியின் செல்வன் போல, மிஸ்டர் வேதாந்தம் போல )
சில புத்தகங்களை ரசித்துப் படித்து மகிழலாம் (வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை கவிதை நூல் போல)
சில புத்தகங்களில் மெய் மறந்து போகலாம். ( பாலகுமாரன் நூல்கள்)
சில புத்தகங்கள் நம்மை ஆச்சர்யத்தில் வீழ்த்தும். (தலைமைச் செயலகம் – சுஜாதா)

சில புத்தகங்கள் படித்து குறிப்புகளாக நாம் பயன்படுத்தலாம். (லேனா தமிழ்வாணனின் ஒருபக்கக் கட்டுரைகள்.)

ஆனால்.. தலைவா,வா! எனும் இந்தப் புத்தகம்
-படித்து ரசிக்கவோ,
படித்து பாதுகாக்கவோ,
படித்து மகிழவோ,
படித்து மெய்சிலிர்க்கவோ,
படித்து முடித்து தூக்கி வைத்துவிடவோ
படித்து முடித்து ஆச்சர்யப்படவோ
அல்ல.!


இது-
படித்து
மீண்டும் படித்து,
புரிந்து தெளிந்து,
புரிந்து கொண்டதை பயிற்சி செய்து,
பயிற்சி செய்து பயனடைந்து,
பயனடைந்த ஆனந்தத்தில் பிறருக்கு பரிந்துரைக்கவும்
படித்துப் புரிந்து பயனடைந்து பின் பிறரோடு அந்த அறிவைப் பகிர்ந்துகொள்ளவும்
பிறருக்கு வாங்கிப் பரிசளிக்கவும்
அவ்வப்போது எடுத்துப் பார்த்து தெளிவு (Clarify) செய்துகொள்ளவும் (Confirm)
இந்நூலில் சொல்லப்பட்டுள்ள நிர்வாக யுக்திகளைப் பின்பற்றி பயன்பெறவும் (Confirm , Adapt & Apply) வழிகாட்டுகிற ஒரு ‘வாழ்க்கைக் கையேடு’ எனலாம். (குறிப்பாக பன்னாட்டு சிந்தனைகளை இந்நாட்டு வழியில் எடுத்துச் சொல்கிறது)


   விக்னேஷோடு (இந்த நூலில் வரும் கதாநாயகன் 1) படிப்பவரும், சந்திரமௌலி சாரிடம் (கதாநாயகன் 2) குருப்பயிற்சியில் இணைகிறார்கள் என்பதுதான் படிப்பவர் உணராத உண்மை.
குருப்பயிற்சி முடிந்தவுடன் விக்னேஷ் மட்டுமல்ல.. அவனோடு (இந்நூலில்) சேர்ந்து சக பணியாளர்களும் குருப்பெயர்ச்சியால் அடுத்த நிலைக்கு முன்னேறுகிறார்கள். உணர்ந்துகொள்ளவேண்டிய உண்மை என்னவென்றால், இப்புத்தகம் படிப்பவரும் தலைமைப் பண்புகள் மேம்பட்டு ‘குருப்பயிற்சியும், குருப்பெயர்ச்சியும்’ அடைகிறார்கள்.

   One on One Coaching பற்றிய இந்த புத்தகம் படிப்பவரும் Just For Rs.80/-க்கு ‘ Mentoring & Coaching’  பயிற்சியை சான்றிதழின்றி செய்து முடிக்கிறார்கள் என்பது மிகையல்ல!

   இந்த புத்தகம் படிக்கும்போது நண்பர் சுரேகாவின் நூல் இது என்ற உணர்வு மாறி ‘ அட! சுரேகா, எவ்வளவு அழகாக, தெளிவாக, சுலபமாக நிர்வாக யுக்திகளை, கோட்பாடுகளை, செயல்திட்டங்களை முன் வைக்கிறார். GREAT!  என்று இந்த அட்டைப்பட காலி நாற்காலியில் அவரை உட்கார வைத்து ‘Thank you my coach’ என்று சொல்லவைத்துவிட்டது.

  Friendly வாத்தியார் சுரேகாவிற்கு சுற்றிப்போடவேண்டும். ! அறிவு தானமிட்டவர்!

   நூல்களுக்கு ஒரு சாபம் உண்டு! அதன் விலை என்பது Paper & Printing Cost in terms of ‘FORMS’ or No. of Pages என்பதுதான் அது! உண்மையில் உள்ளே உள்ள Contents minimum விலை ரூ.8000/- (Minimum) மதிப்புள்ளது. அந்த விஷயங்களைப் படித்து புரிந்து, பயன்பாடாக மாற்றினால் நாம் பெறும் மதிப்பு ரூ.80,000 to 80 லட்சம்.!  உண்மை…! வெறும் புகழ்ச்சி அல்ல!

   அரிதாக வெளிவரும் இத்தகைய புத்தகங்கள் குறைந்தபட்சம் லட்சம் பிரதிகளை விற்பனையில் எட்டவேண்டும். ஒரு ஆயிரம் பேராவது வெற்றியாளராக மாறவேண்டும். Thank you Surekaa Sir ! வயதில் மூத்தவன் என்பதால் வாழ்த்துகிறேன். வாழ்க!

   இந்த நூல் பற்றி..இது என் மதிப்புரை.. வாழ்த்துரை..புகழுரை..அல்ல! பயன்பாடு அடைந்த ஒருவரின் நெஞ்சார்ந்த நன்றியுரை..!

பணிவன்புடன்
பால சாண்டில்யன்




டாக்டர். பாலசாண்டில்யன் M.S. M.S. Ph.D
Thought Leader / Transformation Coach / Consultant / Psychologist
CEO – Vision Unlimited – www.visionunlimited.in







Friday, July 13, 2012

பில்லா 2 – முதல் காட்சி!





திடீரென்று அதிகாலை 7 மணி ஷோ பார்க்கும் வாய்ப்பு… ! கிளம்பு!…ஓடு…! பட்டாசை வேடிக்கை பார்..! பாலாபிஷேகத்தை போட்டோ எடு! ரசிகர்களின் ஆர்வம் கவனி! அவர்களின் சந்தோஷத்தை இரசி! என்று குதூகலமாக விடிந்தது இன்றைய காலை!
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளவன் என்பதால், ஜாலியாகச் சென்று அமர்ந்தேன்.
ஹிந்தியிலிருந்து, தமிழுக்கு சூப்பர் ஸ்டாராக வந்து, மீண்டும் தமிழில் அஜீத்தால் மெருகேற்றப்பட்டு, பலமுறை கல்லா கட்டியவன் தான் இந்த பில்லா! இதுவரை, அந்த பில்லா எவ்வளவு மோசமானவன்…அவன் இறந்தபின் மற்றவர்களைப் பிடிக்க போலீஸ் என்ன யுக்தியைக் கையாணடது என்றுதான் பார்த்திருக்கிறோம்.
ஆனால்..யார் இந்த பில்லா? இவன் எங்கிருந்து வந்தான்? அவன் என்னன்னவெல்லாம் செய்து இவ்வளவு பெரிய டான் ஆனான்.. என்று பின்னோக்கிச் சென்றிருக்கும் கதைதான் இந்த பில்லா2 . டெக்னிக்கலி ஸ்பீக்கிங் இதற்கு பில்லா0 என்றோ பில்லா-1 (மைனஸ் ஒன்று) என்றோதான் பெயர் வைத்திருக்கவேண்டும். J
முதல் காட்சியின், முதல் ஃப்ரேமிலேயே அஜீத் வந்துவிடுகிறார்.( என் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் கைகளை விரித்துக்கொண்டு ‘தல’ என்று கத்திக்கொண்டு திரையை நோக்கி ஓட எத்தனித்தான்) முட்டி போட்டுக்கொண்டு கத்துகிறார். கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு அவரைக் கொலை செய்ய முயற்சிக்கும் நான்குபேரிடம் , கத்திவிட்டு அவர்களைத் துவம்சம் செய்கிறார். அதில் ஒருவனை நோக்கி துப்பாக்கியை எடுத்துச் சுடுகிறார். திரை உடைகிறது… பெயர்கள்…!
பெயர் போடும்போதே கதை ஆரம்பித்துவிடுகிறது… இலங்கையில் ஒரு குடும்பம்..அதில் ஒரு சிறுவனும், சிறுமியும்… அந்தக்குடும்பம் எப்படி பிரிகிறது. சிறுவன் எப்படி வளர்கிறான். என்னன்ன சிறு குற்றங்கள் செய்கிறான் என்று புகைப்படமாக விரிகிறது.
இலங்கை அகதியாக இந்தியா வந்து சேரும் டேவிட் பில்லா… முகாமில் தவறு செய்யும் போலீஸ் அதிகாரியைத் தட்டிக்கேட்பதில் ஆரம்பித்து, வைர வியாபாரம் செய்யும் சைவ ஹோட்டல் முதலாளியிடம் சேர்ந்து, தொழிலை விருத்தி செய்ய போதைப்பொருள் வியாபாரத்துக்காக, அங்கிருந்து கோவா அப்பாஸியிடம் சென்று, ஜார்ஜியாவில் இருக்கும் இன்னொரு ஆயுத வியாபாரி டிமிட்ரியைப் பகைத்துக்கொண்டு, அப்பாஸியைத் தீர்த்துக்கட்டி, தன் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து தன்னைக்காத்துக்கொண்டு, மிகப்பெரிய டானாக ஆவதுதான் கதை!
இதற்கிடையில் பில்லாவின் அக்கா சென்னையில் இருப்பதும், அவரது மகள் பில்லாவை ரசிப்பதும், பில்லா அவளை தன் பாதுகாப்பில் வைத்திருப்பதும், அவளை எதிரிகள் கொல்வதும் தனி!
அப்பாஸியின் ஆளை, பில்லா கரெக்ட் செய்து வைத்திருந்து, அவள் இன்னொருவனிடம் கரெக்ட் ஆகியிருப்பது அடுத்த தனி!

அஜீத்..அஜீத்…அஜீத்…!! இந்த ஒரு தனிமனிதனை லட்சக்கணக்கான இளைஞர்கள் வெறிபிடித்து ஆராதிக்கிறார்கள் என்றால் , அதற்குக் காரணம், அவரது தன்னம்பிக்கையும், எந்த ஒரு திரையுலகப் பின்னணியும் இல்லாமல் முன் இடத்தைப் பிடித்ததுமாகத்தான் இருக்கும். அவரது குரல் கேட்கும்போதெல்லாம், தியேட்டர் அலறுகிறது..!! அவர் எது செய்தாலும் ஆர்ப்பரிக்கிறது. அதனாலோ என்னவோ, நமக்கும் அஜீத்தைப் பிடிக்கிறது.
படம் முழுமையும் அஜீத் ஆக்கிரமிக்கிறார். அனேகமாக அவர் இல்லாத காட்சிகளை விரல் விடாமலேயே எண்ணிவிடலாம். அவர் பேசும் வசனங்களை ஒரு A4 காகிதத்தில் எழுதிவிடலாம். (அப்படியும், மீதம் இடம் இருக்கும் என்பது தனிச்செய்தி!) அனேகமாக திரு.இரா.முருகன், ஒரு வாரத்தில் மொத்த வசனத்தையும் எழுதிக் கொடுத்திருப்பார்.
கதாநாயகிகள் என்று யாருமில்லை…!! இருவருமே டுபாக்கூர்தான்…!! அதுவும் புருனா அப்துல்லாவுக்கு பதிலாக.. நமது புருனோவும் , அப்துல்லாவும் நடித்திருந்தாலாவது சுவாரஸ்யமாக இருந்திருக்கும்..!
காமெடி! – பில்லா போன்ற ஒரு சீரியஸ்ஸ்ஸ்ஸான கதையில் எதிர்பார்ப்பதுதான் காமெடி! என்று இயக்குநர் சிரிக்காமல் சிந்தித்திருப்பார் போல..! எல்லோரும் சிரிக்க அவகாசமில்லாமல், பெரிய கடுப்புடனேயே அலைகிறார்கள்.  அட..நம்ம ரேணிகுண்டா காமெடியன் கூட , வில்லனாகத்தான் நடந்துகொள்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் உழைத்திருக்கிறார். வினாடிக்கு வினாடி பின்னியிருக்கிறார். ஆங்கிலப்படத்துக்கு இணையான ஒளியமைப்புகளும், நிறச் சேர்க்கையும் பார்க்க பிரம்மாண்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது.
இசை..யுவன் சங்கர் ராஜாவாம்..!! ஏதோ மூட் அவுட்டில் இருந்திருப்பார் போல! ‘பில்லா -1’ன்  ஹார்ட் டிஸ்கை நேராக இதில் கனெக்ட் செய்து……….
மிகவும் சுயநலமான ஒரு தனி மனிதன் எவ்வளவு தவறுகளை வேண்டுமானாலும் செய்வான் என்று சொல்லப்படுகிறது. இப்போது ஹீரோ, நல்லவனாக இருந்தே ஆகவேண்டும் என்ற நியதி உடைக்கப்பட்டிருப்பதால், ‘மங்காத்தா’ பாணி இதிலும் கையாளப்பட்டிருக்கிறது. நடிப்பது அஜீத் என்பதால் அவர் பாத்திரத்தை ஹீரோ என்று எடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால், பில்லான்னு ஒருத்தன் இருந்தான்..அவன் என்னன்ன செஞ்சான்னா..என்று சொல்வதாக நினைத்துக்கொள்ளலாம்.
பில்லாவின் நோக்கமோ, அவன் இவ்வளவு கொடூரமான குற்றங்களைச் செய்பவனாக ஆவதற்கான பின்புலமோ, சொல்லப்படவே இல்லை.! அதுவும்..ஒரு இலங்கை அகதி, இந்தியாவில் வந்து, இவ்வளவு பெரிய டானாக ஆகிறான் என்று சொல்வது இலங்கைத்தமிழர்களை இன்னும் கவலைக்குரியதாக ஆக்கும் என்றும் இயக்குநர் சிந்திக்கவில்லை. சரி..! அப்படி ஆகிறான் என்றால் அவனுக்கு யார் எதிரி என்பதும் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அவ்வளவு போலீஸ்களைக் கொன்ற இந்த அகதிகளை அப்படியே சும்மா விட்டுவிட்டார்களா? பெரிய வில்லனாகக் கருதப்படும் டிமிட்ரியின் ஆயுதக்கிடங்கையும் நாசம் செய்துவிட்டால், எங்கு போய் அவர் ஆயுதம் செய்து டானாவது…? இப்படியெல்லாம் கேள்வியெழாமல் இருந்தால், இரசித்துப் பார்க்கலாம்.
அஜீத் ஒருவர் கிடைத்துவிட்டார். பில்லா என்ற பெயர் கிடைத்திருக்கிறது. ஸ்டைலிஷான மேக்கிங்கில் பின்னிவிடலாம் என்று விளையாடியிருக்கிறார்கள்.  மற்றபடி திரைக்கதையில் கொஞ்சம் யோசித்திருந்திருக்கலாம். Super Grey finishing ல் முழுப்படத்தையும் காட்டுவதால், நாம் கதையைப் பற்றி சிந்திக்கமாட்டோம் என்று நினைத்திருப்பார்கள்
. பாவம் அஜீத் இரசிகர்கள்.! இரண்டாம் பாதிக்குப் பின் பெரிய சத்தமே காணவில்லை. அமைதியாகப் படம் பார்த்தார்கள். படம் முடிந்தபின்னரே ஒரு பெரிய ஆரவாரம் வந்தது. ஆனால், அவர்கள் ஏமாற்றப்பட்டவர்களாகவே உணர்ந்திருக்கிறார்கள். கொஞ்சம் நாயகன், புதுப்பேட்டை, ஹிந்தி சர்தார்..போன்ற படங்களைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது.
இந்தப் படத்துக்காக ஜார்ஜியா லொக்கேஷன்களை ஒருங்கிணைத்தபோது நானும் அருகில் இருந்தேன். அந்த நாட்டில், இராணுவமே படப்பிடிப்புக்கு ஹெலிகாப்டர் தந்து உதவியது. இப்படி ஒரு லொக்கேஷன் இருக்கிறது என்று தயாரிப்பாளருக்கு அறிமுகப்படுத்தியது ஒருங்கிணைப்பாளர் மனோஜ் கிருஷ்ணாதான்! அந்தப்பகுதிகள் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக, ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. ஆனால் லொக்கேஷன் மட்டுமே கதை இல்லையே?
மொத்தத்தில்…என்னைப் பொறுத்தவரை..
யாரோ பில்லா செய்யும் அத்துனை செயல்களையும், அவன் போக்கிலேயே பார்க்கத் தயார் என்றால்..ஒன்றும் பிரச்னை இல்லை!
இல்லை..எனக்கு கதை சொல்லணும்.. அந்தக்கதையில் ஒரு பிரச்னை இருக்கணும். அதை கதாநாயகன் எப்படி தீர்க்கப்போறானோன்னு தோணனும். அதைத்தீர்க்கும்போது வரும் தடைகளை எப்படி எதிர்கொள்றான்னு இருக்கணும். அப்புறம் வெற்றிகரமா இந்த பிரச்னைலேருந்து அவன் வெளில வந்தான்னு இருக்கணும் என்று திரைக்கதை ரீதியாகச் சிந்தித்தால்…. வீட்டில் குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள்.
நான் எப்போதும், எனக்கு நல்லது என்று தோன்றும் படங்களைப் பற்றித்தான் எழுதுவேன். தவறாகத் தெரிந்தால், கனியிருப்பக் காய் ஏன் கவர்வானேன் என்று எழுதவே மாட்டேன்…
எவ்வளவோ சிரமப்பட்டு எடுத்த படத்தை 650 வார்த்தைகளில் குறை சொல்லக்கூடாதுதான்..! ஆனால், அந்த உழைப்புக்கு நேர்மை என்பது, நம்பி வரும் இரசிகனை திருப்திப்படுத்துவதுதானே? மேலும்.. நான் ஈ என்ற படத்தைப் பார்த்துவிட்டு ‘பில்லா’வைப் பார்த்தால்.. பக்கத்துவீட்டுப்புள்ள என்னமா சாதிக்குது? நம்ம புள்ளை இன்னும் இப்படியே இருக்கேன்னு ரெண்டு சாத்து சாத்தத் தோன்றுவதாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.

பில்லா – 68 கோடி இருந்தால் படமெடுக்கலாம். 120 ரூபாய் இருந்தால் படம் பார்க்கலாம். J




Monday, February 27, 2012

இப்படியாக ஒரு திரைப்பார்வை - ஏழாம் அறிவு







ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு,  விமர்சனங்கள் என்ற ஒரு சிந்தனையை எழுத்தாகவோ, பேச்சாகவோ நாம் ஒவ்வொரு படம் வெளியானபோதும் செய்துவருகிறோம்.

இதில் இரசிகனின் கண்ணோட்டத்தில் நன்றாக இருக்கிறது அல்லது.. இல்லை என்று ஒரே வார்த்தையில் முடிக்கப்படுவது உண்டு. தனது திரைப்பட ரசனையின் எல்லையை விரிவுபடுத்தியதால், அதன் நீள அகலங்களை சிலர் ஆய்வதும் உண்டு. திரைப்பட விமர்சனம் என்பதை இரசித்துச் செய்பவர்கள் ஒருபுறமும் ,தான் பார்த்ததை அப்படியே எழுதுபவர்கள் மறுபுறமும் உண்டு.

அத்தகைய விமர்சனங்கள் , படம் வெளிவந்து முதல் வாரத்தில் வந்துவிடுகின்றன. அதைப்பார்ப்பதா வேண்டாமா என்று வாசகனை முடிவெடுக்கவும் வைக்கின்றன.

விமர்சனங்களுக்கு இன்னொரு கோணம் ஏற்படவேண்டும் என்பது எனது அடிப்படை நோக்கம். அதைப் படம் வெளிவந்த உடன் செய்யாமல், சிறிது நாட்கள் கழித்து செய்து பார்த்தால் என்ன என்று நினைத்திருக்கிறேன். நாம் வாசித்த புத்தகங்களைப் பற்றி  விமர்சிக்கும்போது, அது வெளியான கால தேச வர்த்தமானங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. ஆனால், அது திரைப்படத்துக்கு அப்படியே பொருந்தாது எனினும், ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனையை உருவாக்க காரணியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

முதலில்...


ஏழாம் அறிவு




சீனாவுக்குச் செல்லும் பல்லவ மன்னன் அங்கு அவர்களது தற்காப்புக் கலைகளின் மஹா குரு போதிதர்மனாக ஆகிறான். அவன் கற்றுக்கொடுத்த வித்தைகளை வைத்தே இந்தியாவை அந்த நாடு நோண்டப்பார்த்தால் என்ன ஆகும்? … தமிழகத்தில் அதே குருவின் வம்சத்தில் ஒருவன் அதை முறியடித்தால் எப்படி இருக்கும்? என்ற What If… அணுகுமுறைதான் இந்தக் கதை…!!


அதன் நிறை குறைகள் பலவிதங்களில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால்.. என்ன செய்திருந்தால் இன்னும் சுவைபட இருந்திருக்கும் என்பதுதான் இந்த அலசல்..! கதையின் மூலமும், அது சார்ந்த விஷயங்களும் சிதைக்கப்படாமல் எப்படி மாற்றமுடியும் என்று சிந்தித்ததின் விளைவுதான் இது..!!


பல்லவ மன்னன் விஷயங்கள் காட்டப்படுகிறது. (சீனர்கள் நமக்கு எதிராகப் பயன்படுத்தினால்…என்று சொல்லும் அந்தப்பகுதி மட்டும் இல்லாமல்) அவரது வம்சாவளி DNA மூலம் மீண்டும் போதி தர்மனைக் கொண்டுவரலாம் என்று அது முடியும்போது ,அதை டாக்குமெண்ட்ரியாக எடுத்த ஸ்ருதி ஹாசன் தனது ப்ரொஃபஸரிடம் போட்டுக்காட்டுகிறாள். அந்த ஆள் ஒரு மெயில் அடிக்கிறான்.

சீனாவில்..அந்த மெயில் திறக்கப்படுகிறது. மீட்டிங் நடக்கிறது. அவர்கள் ஒரு ஸ்ருதியைக் கொன்று அவள் ஆராய்ச்சியைக் குலைக்கவும், இந்தியாவில் கிருமிகளைப் பரப்பவும் நோக்கு வர்ம, குங்ஃபூ விற்பன்னனை அனுப்புகிறார்கள். அவனும் இந்தியா வந்து இறங்குகிறான்.

ஸ்ருதி காஞ்சிபுரம் போய் பல்லவ வம்சாவளி குடும்பங்களைச் சந்திக்கிறாள். அவர்களில் ஒருவரது வீட்டில் கிடைத்த முடி மூலம், போதிவர்மனின் DNA ஒத்துப்போன சூர்யாவின் போட்டோவைப் பார்க்கிறாள். அவன் எங்கே என்று கேட்டால், சர்க்கஸில் இருக்கிறான் என்கிறார்கள். சர்க்கஸ் விளம்பரத்துக்காக சூர்யா சாலையில் ஆடி அறிமுகமாகிறார்.

சென்னை வந்து இறங்கிய டாங் லீ… நாய்க்கு ஊசி போடுகிறான்.

ஸ்ருதி, சர்க்கஸுக்கு வந்து சூர்யாவை சந்திக்கிறார். சூர்யா, ஸ்ருதியைக் கண்டவுடன் காதல் வயப்படுகிறார். அதை நண்பர்களும் ஆதரிக்கிறார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில், ஸ்ருதி சொல்ல வருவதையே சூர்யா கண்டுகொள்வதில்லை.

டாங் லீயால் கொல்லப்பட்டவர்கள் பற்றிய விசாரணை தொடங்குகிறது. அவனைப் போலீசார் தேட ஆரம்பிக்கிறார்கள்.

சூர்யா தன் காதலை ஸ்ருதியிடம் சொல்கிறார். அதை அவர் மறுத்து, அவரது முன்னோர் பற்றி சொல்லி தான் பல நாள் சொல்ல வந்த நோக்கம் பற்றிச் சொல்கிறார். சூர்யா அதற்கு ஒத்துழைக்க ஆரம்பிக்கிறார். ஸ்ருதிக்கும் சூர்யாவின் மேல் காதல் வருகிறது.

டாங் லீ ஸ்ருதியைத் தேடி வரும் இடங்களிலெல்லாம் அவள் மிஸ் ஆகிறாள். அவள் ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்தில் போதிதர்மனின் வாரிசையும் கண்டுபிடித்துவிட்டாள் என்று ப்ரொஃபசரிடம் சொல்கிறாள். அவரும் விசுவாசமாக சீனாவுக்கு தகவல் கொடுக்கிறார்.

டாங் லீ ஸ்ருதியைத்தேடி வந்தபோது தானாகவே சுட்டுக்கொண்டு இறந்தவர்கள் பற்றி, சிசிடிவி வீடியோ மூலம் பார்த்து போலீஸிடம் ஸ்ருதி அந்த வித்தை நோக்கு வர்மம் என்று விளக்குகிறாள். மீடியா அலறுகிறது.

      தனது தகவல்கள் எப்படி வெளிச்சென்றது என்று ஸ்ருதி கவலைப்பட, சூர்யா ப்ரொஃபஸர் மேல் சந்தேகம் கொள்கிறார். அதே போல், ப்ரொஃபஸரின் தகிடுதித்தம் கண்டுபிடிக்கப்படுகிறது. இடையில் டாங் லீயிடம் மாட்டும் சூழலில் அவன் கண்ணில் படாமல், ஆனால் அவனால் பார்க்கப்பட்டவர்களால் இருவரும் தாக்கப்படுகிறார்கள்.

      டாங் லீ கண்ணில் படாமல் ஒரு இடத்தில் வைத்து, ஸ்ருதி, சூர்யாவுக்கு மரபணு ஊட்டம் செய்ய முயற்சிக்கிறாள். அவளைத் தேடும் முயற்சியில் வில்லன் அவளது நண்பர்களைக் கொல்கிறான். போலீஸ் அவனைத் துரத்த, அவன் பல்வேறு சாகசங்கள் செய்து போலீஸிடமிருந்து தப்பிக்கிறான்.

      கடைசியில், ஆய்வுக்கூடத்திலிருந்து சூர்யாவை , ஸ்ருதி மீட்டுச்செல்லும்போது அவருக்கு நினைவு திரும்புகிறது. என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள், டாங் லீ குறுக்கிடுகிறான். அவன் கண்ணில் முதலில் சூர்யா படுகிறான். அவனிடம் நோக்கு வர்மம் பலிக்கவில்லை. ஸ்ருதி கண்ணில் படுகிறாள். அவளைப் பார்க்கிறான். இப்போது ஸ்ருதி , சூர்யாவைக் கொல்லத் துரத்துகிறாள். சூர்யா தன்னையும் காத்துக்கொண்டு டாங் லீயையும் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்ருதியுடன் சண்டை போடுகிறான். அப்போது அவனுக்கு நோக்கு வர்மம் வேலை செய்ய ஆரம்பித்து, அவளை சாந்தமாக்குகிறான். பின்னர் டாங் லீயுடன் சண்டை போட்டு முடிக்கிறான்.

      இப்படி இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று எண்ணியதன் விளைவு..இந்தப்பதிவாக வந்திருக்கிறது. இன்னும் சில படங்களை இப்படி விமர்சிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.!

ஒரு படைப்பாளியின் படைப்பை, அவரது படைப்பாகவே வைத்திருந்து சிறு மாற்றங்களைச் செய்து பார்ப்பதுதான் இதன் நோக்கம்..! அவர் படத்தை என் படமாக்கும் முயற்சி அல்ல..!! விமர்சனத்தையும் விமர்சனம் பண்ணுவேன்னு யாராவது கோதாவில் இறங்கினால்…வுடு ஜூட்..!!






Thursday, January 5, 2012

அழிக்கப்பிறந்தவன் - இப்படியா பண்றது?




      யுவகிருஷ்ணாவின் அழிக்கப்பிறந்தவன் நாவல் நேற்று மாலை ’உ’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டவுடன் உடனே படிக்கவேண்டுமென்ற ஆவல் எனக்கிருந்தது. ஏனெனில், அவரது வலைப்பூவில் முதல் 6 அத்தியாயங்களை எழுதியிருந்தார். அந்த சுவாரஸ்யம் என்னை, புதிதாக வாங்கிய சட்டையை உடனே அணிய ஆர்வம் காட்டும் சிறுவனைப்போல் ஆக்கியிருந்தது. அதற்கேற்றார்ப்போல் இரவே எனக்கு வானொலி ஒலிபரப்பு இருந்தது. அது இரவு 11 மணிமுதல் அதிகாலை 3 மணிவரை இருக்கும். அந்த நான்கு மணி நேரங்களும், திரைப்படப்பாடல்களை ஒரு சிறு முன் ஜோடனையுடன் ஒலிபரப்புவது என் வழக்கம்.!

       பாடல்களை வரிசையாக முன்னரே எடுத்துவைத்துவிட்டால், பின்னர் ஒவ்வொரு பாடலுக்கிடையிலும் பேசினால்மட்டும் போதும். ஆக..ஒவ்வொரு பாடல் இடைவெளியிலும் ‘அழிக்கப்பிறந்தவனைப் படித்துவிடலாம் என்று எடுத்துச்சென்றேன்.
     ஏற்கனவே படித்த ஆறு அத்தியாயங்களிலும் வேறு ஏதாவது சேர்த்திருக்கிறாரா என்ற ஐயம் இருந்ததால், முதலிலிருந்து ஆரம்பித்தேன். 

     இயக்குநர் ஷங்கரின் ‘நண்பன்’ படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. ஆனால் அதன் திருட்டு டிவிடி 15 நாட்களுக்கு முன்னரே பஜாரில் வந்துவிட்டதாக ஒரு தகவல். உடனே ஷங்கர் , கமிஷ்னரை வந்து சந்தித்து விபரம் சொல்கிறார். அதை ரகசியமாக விசாரிக்க ஆரம்பிக்கிறார் கமிஷ்னர்.
     அதேசமயத்தில், சென்னை பர்மா பஜாரின் மிகப்பெரிய வியாபாரியான வாப்பா கொலைசெய்யப்படுகிறார். தொடர்ச்சியாக பஜாரின் சிலர் கொல்லப்படுகிறார்கள்.
     இந்த கேஸும், நண்பன் பட திருட்டு டிவிடி கேஸும் வெவ்வேறானதா, அல்லது ஒன்றுதானா என்பதை சுவாரஸ்யமான சம்பவங்களால், விறுவிறுப்பாக கதையை நகர்த்தி, ஒரு அட்டகாசமான க்ரைம் த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார் யுவகிருஷ்ணா.! அனேகமாய் ஷங்கர் சாருக்குக் கூட இந்தப் புத்தகம் கூடியவிரைவில் சென்று சேரும்!

     என் மூளை முழுவீச்சில் இயங்கியது நேற்றாகத்தான் இருக்கும் ஐந்து நிமிடத்துக்கொருமுறை அறிவிப்பு…மீண்டும் கதை.. ,மீண்டும் அறிவிப்பு..கதை..விரட்டி விரட்டிப் படித்துவிட்டுத்தான் ஓய்ந்தேன். இப்படியா பண்றது?...மனுஷன் கிறுக்குப் பிடிச்சுப் படிச்சு கெறங்கிப்போனேன் மக்கா!

     நாங்கள் சினிமாவில் பேசிக்கொள்ளும் வார்த்தை..டீட்டெய்லிங்..! ஒரு கதைப்பின்னணியை எடுத்துக்கொண்டால், அதன் நுணுக்கங்களைக் காட்சிகளில் வைக்கவேண்டும்.போகிறபோக்கில் அது வந்து செல்லவேண்டும். அப்போதுதான் காட்சியின் சுவாரஸ்யம் அதிகரிக்கும். அதேபோல், பாலகுமாரன், சுஜாதா ஆகியோரது நாவல்களில் ஒரு துறையின் பின்னணி  இருந்தால், அதன் நுணுக்கங்கள் கதையில் நிரவலாகத் தூவப்பட்டிருக்கும் அதேபோல், இந்த நாவலில், பர்மா பஜாரின் தொழில் விபரங்களை மிகவும் ஆழமாகச் சொல்லியிருக்கிறார் யுவகிருஷ்ணா! இதற்கும் மேல், இன்னும் ஆழமாகச் சொன்னால், கண்டிப்பாக பஜார் வியாபாரிகளுக்கே பிரச்னை வரக்கூடிய அளவு கத்திமேல் நடப்பு! அதுவும் அந்த மீன் பிடிக்கப்போதல், கரைக்குக் கொண்டுவரும் தந்திரம் என்று உண்மையில் பஜார் சென்று விபரம் விசாரித்திருக்கிறார்.

     இதில் விஜய்ஷங்கர் என்றொரு பாத்திரம் வருகிறது. அனேகமாய் விஜயும் ஷங்கரும் இணைந்த படத்திற்கான கதைக்கள அடிப்படை  என்பதால் அந்தப் பெயர் வைத்திருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். அந்தக் கதாபாத்திரச் சித்தரிப்பும் மிகவும் அருமை.! அதுவும் அவன் ஊரிலுள்ள சொத்தெல்லாம் விற்று படம் விநியோகிக்க வந்து, ஒரு சந்தர்ப்பத்தில், புரோக்கர் முருகன்  அவனுக்கு போன் செய்யும்போது உண்மையில் என் சொத்தே போகும் நிலைபோலப் பதறினேன்.

     கதையின், நடை நம்மை உள்ளிழுத்துக்கொள்ள பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. விலைமாது வரும் காட்சிகளிலும் அத்துமீறாமல் அடுத்த காட்சிக்குத்தாவும் சந்தர்ப்பங்களில் கதையின் போக்கில் நம்மை கவனப்படுத்தி விளையாடுகிறார் யுவா!  மிகச் சாதாரணமான வார்த்தைகள். சம்பவங்களின் அனாயாசமான வேகம்.! ஏதோ ஒரு இடத்தில் இது உண்மையிலேயே நடந்துகொண்டிருக்கிறதோ என்று எண்ணவைக்கும் காட்சிக்கோர்வைகள் என நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ் நாவலைப் படித்த உணர்வு எழுந்தது.

    தலைப்புதான் அழிக்கப்பிறந்தவன்...!! ஆனால்..கதை ஆளப்பிறந்ததாகத் தான் இருக்கிறது.

    ஒரு மசாலாப்படத்துக்குரிய அனைத்து அம்சங்கள் இருந்தாலும், அது எல்லோருக்கும் பிடித்திருக்கவேண்டும். அப்போதுதான் அது வெற்றிப்படம்! அப்படிப்பட்ட வெற்றிப்படம் பார்த்த திருப்தி தனிதான்..!!

அந்தவகையில்…..இது சூப்பர் டூப்பர் வெற்றிப்படம்!!


வெளியீடு - உ பதிப்பகம்
விலை - ரூ. 50.00
புத்தகக் கண்காட்சியில் கடை எண்; 334 டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும்.



Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு

    


      பிரம்மாண்டமான எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்த ஏழாம் அறிவு , தமிழர்களின் பெருமையை உலகத்துக்குப் பறைசாற்றும் படைப்பாக வெளிவந்திருக்கிறது.
1600 ஆண்டுகளுக்கு முன், காஞ்சியை ஆண்ட பல்லவ வம்ச போதிவர்மன் (சூர்யா) , ராஜமாதாவின் உத்தரவுப்படி சீனாவுக்குச் செல்கிறான். அங்கு ஒரு கிராமத்தில் ஏற்பட்ட கொடிய நோயைத் தன் மூலிகை மருத்துவத்தால் தீர்க்கிறான். அதன் சூட்சுமத்தை சீன மருத்துவர்களுக்குக் கற்றும் கொடுக்கிறான். மேலும், சீன மக்களை எதிரிகளிடமிருந்து காத்து, தற்காப்புக்கலைகளை போதிக்கிறான். அவர்களால் போற்றப்பட்டு தாமோ என்று அழைக்கப்படும் குருவாகிறான். இந்தியா திரும்ப நினைக்கும்போது, சீனர்களின் ஆசைப்படி, அவர்கள் கொடுத்த நஞ்சு கலந்த உணவை உண்டு அங்கேயே அடக்கம் செய்யப்படுகிறான்.
         
        கதை நிகழ்காலத்துக்கு வருகிறது.

       அர்விந்த் என்ற சர்க்கஸ் கலைஞனாக சூர்யா! அங்கு குரங்கு கேட்டு வரும் மரபணு அறிவியல் மாணவி சுபா (ஸ்ருதி)வைக் கண்டு மயங்கி,  அவளைச்சுற்ற ஆரம்பித்து, சில சுவாரஸ்ய கலாட்டாக்களுக்குப்பிறகு தன் காதல் சொல்ல, அவள் மறுக்கிறாள்.
      சீனா, இந்தியாவில் ஆபரேஷன் ரெட் என்ற ஒரு தாக்குதலை திட்டமிடுகிறது. அதற்காக அவர்கள் நியமிக்கும் ஆள், டாங்.லீ.(ஜானி). அவன்மூலம் இந்தியாவில் 1600 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் வந்த கொடிய நோய்க்கிருமியை ஒரு நாய் மூலம் பரப்பி, இந்தியா கைபிசைந்து நிற்கும்போது, அதற்கான மருந்தைக் கொடுத்து,  பதிலாக சீனா கேட்பதை இந்தியாவைச் செய்யவைக்கலாம் என்பதுதான் திட்டம். மேலும், இந்த மூலிகை ரகசியம் தெரிந்த, ஒரே ஆளான போதி தர்மரின் டி என் ஏ பற்றி ஆராய்ச்சி செய்து மீண்டும் அவரது வம்சாவளி மூலம்  போதி தர்மரை கொண்டுவரும் முயற்சியில் இருக்கும் ஸ்ருதியைக் கொல்லும் பணியும் டாங் லீக்குத் தரப்படுகிறது.
    
   போதிவர்மரின் வாரிசான அரவிந்தை , சுபா நீண்ட நாட்களாக திட்டமிட்டு பின் தொடர்ந்து, அவனது டி என் ஏவை எடுத்து ஆராய முயற்சிப்பது அவனுக்குத் தெரியவருகிறது. இது பற்றி அவன் சுபாவிடம் கேட்க, அவள் கூறும் தகவல்களில் பற்றிக்கொள்கிறது பரம்பரை டி என் ஏவுக்கும், அதை பலி வாங்க நினைக்கும் சீன டாங்குக்குமான பகை!

    டாங்கின் மிகப்பெரும் சக்தி என்ன? அரவிந்த்துக்கு போதி தர்மரின் ஆற்றல் வருவது எப்படி? போன்ற சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளுடன்,  அறிவியல் கலந்து அழைத்துச்செல்கிறது மீதிக்கதை.!

    
     தமிழன் கற்றுக்கொடுத்த வித்தையை , தமிழனுக்கு எதிராகவே பயன்படுத்தினால் என்ன ஆகும்? என்பதுதான் அடிநாதம். அது மிகச்சிறிய முடிச்சில் ஆரம்பித்து, பிரம்மாண்டத்தைத்தொடுகிறது.

அதையும் மீறி, நம் தேசத்தின் அறிவியல் என்பது வாழ்வு சார்ந்தது. அதை நாம் காரணமே இல்லாமல் புறக்கணித்து இன்று வெளிநாடுகளில் கையேந்துகிறோம் என்று கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் இயல்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்!
ஒரு புராணக்கதையுடன் , நிகழ்காலத்தைப் புனையும்போது ஒரு சமூகக்காரணம் இருந்தால்தான் வெற்றிபெறும் என்பது திரை நியதி! அதை தெளிவாகப் பயன்படுத்தியிருக்கிறார். இயக்குநரின் பெயர் போடும்போது எழுந்த கைதட்டல் மற்றும் விசில் ஒலியே அவரைப்பற்றிய எதிர்பார்ப்பின் வெற்றி!
ஷாவ்லின் கோவில் வரலாறு, குங்பூவில் சூறாவளி உருவாக்கும் முறை, பல்லவ, சீன கால உடைகளில் கவனம், போதிதர்மனின் குதிரைப்பயண நிலப்பரப்புகள் என பார்த்துப் பார்த்து செய்த குழு முயற்சியைப் பாராட்டவேண்டும்.
எல்லாக் கொலைகளையும் காட்டிக்கொண்டிருக்காமல், சிறு சிறு சுவாரஸ்யங்களில் புரியவைத்திருக்கிறார் இயக்குநர். கால்டாக்சி அலுவலகத்திலிருந்து கடலை தின்றுகொண்டே படியிறங்கி வருவது, பாலத்தில் அனைவரும் ஒருபக்கம் ஓடிப்போய் எட்டிப்பார்ப்பது என தமிழ் ரசிகனை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.


போதிதர்மனான சூர்யாவை சீன மக்கள் எதிரியாகப் பார்க்கும்போது, ஒரு தீர்க்கமான புன்னகையுடன் குதிரையைப்பிடித்துக்கொண்டு வெளியேறும் காட்சியில், அவமானப்படும்போது இருக்கவேண்டிய அமைதியைக் கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார் சூர்யா!.. தமிழ், வீரம், துரோகம் பற்றிப்பேசும்போது காட்டும் உணர்ச்சிகளில் நடிப்பா, உண்மையா என்று இனம் காணமுடியவில்லை. சூர்யாவுக்கு அழுத்தமான வாய்ப்பு! அவரது அறுபது வயதுக்குப் பின்னும் பேரன்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம்.!
வித்தியாசமான குரல் வளத்துடன், நல்ல தமிழ்பேசும் நாயகியாக ஸ்ருதிஹாசன்! காட்சிப்பொருளாக வராமல் நன்றாகவே நடித்திருக்கிறார். அவர் தன் அப்பா பற்றி சொல்லும்போது தியேட்டரில் மிகப்பெரிய ஆரவாரம்.! அவர் கூறுவது வேறு! ஆனாலும் ஆடியன்ஸ் கமல், கமல் என்று கத்தாமல் அந்தக்காட்சி முடியவில்லை.
படத்தின் அடுத்த ஹீரோ...வில்லனான ஜானி! சிறு கண்ணில் சீற்றம் காட்டி, தன் வித்தையை வெளிப்படுத்துவதில் பின்னுகிறார். ஒவ்வொருவராகப் பார்த்து அடிக்க அனுப்பும் காட்சியில் அவருக்கும் கைதட்டல் அள்ளுகிறது.
அந்தச் சாக்கடை அள்ளும் தொழிலாளியும், பை வைத்த பெண்ணும் குங்பூ சண்டை போடும்போது அதகளப்படுத்தியிருக்கிறார்கள்.
இன்னும் ஒரு ஹீரோவைப்பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன்.! விளையாடியிருக்கிறார் மனிதர். ! ஒரு தவம்போல் சண்டைக்காட்சி அமைத்திருப்பது தெரிகிறது. தமிழ்ப்படத்துக்கு இது மிகவும் புதிது. அந்நியனின் கராத்தேவும், 7ம் அறிவின் குங்பூவும் முழுக்க வேறு விதமாகத் தெரியவைத்திருக்கிறார்.
இசையில் கொஞ்சம் கஜினி வாசனை! அதுவும் உன்னித்துப்பார்த்தால்(கேட்டால்)தான் தெரியும். நிறைய போலீஸைக் கொன்றவனை போலீஸ் தேடவே இல்லையா? நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விஞ்ஞானியை மாணவி ஏன் அரசிடம் ஒப்படைக்கவில்லை? சர்க்கஸ் கலைஞர் பாதிப் படத்துக்குப்பின் ஏன் வேலைக்கே போவதில்லை? இடையில் ஏற்பட்ட கொலைகள் மற்றும் டாங் லீ பற்றி ஏதாவது விசாரணைக் காட்சிகள் இருந்திருக்க வேண்டாமா? என சிறு சிறு கேள்விகள் எழுந்தாலும், சுவாரஸ்யமான திரைக்கதை தலையைத் தடவிக் கூட்டிச்செல்கிறது.


ஒரு முழுமையான பொழுதுபோக்குச் சித்திரத்தில் , அறிவியலும், அறிவுரையும் சுவாரஸ்யத்துடன் மிகச்சரியாகக் கலந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. 
எதிர்பார்ப்பில்லாமல் போனால் ஒரு வித்தியாசமான புனைவுடன் கூடிய பொழுதுபோக்குப்படம் பரிமாறப்படுகிறது.

Tuesday, July 5, 2011

உங்க அப்பாதான் கிழவன்! - Buddha Hoga Tera Baap..!






           தொலைக்காட்சிகளில் பார்த்த ட்ரெய்லரும், ராம் கோபால் வர்மாவே பொறாமைப்பட்டு, பூரி ஜெகன்னாத்தைப் பாராட்டி ட்வீட்டியிருந்ததும் படத்தின்மேல் ஒரு ஆர்வத்தைத்தூண்டியிருந்தது.


              பார்த்தே ஆகவேண்டும் என்ற வெறியைத்தூண்டியதற்கு இன்னும் ஒரு காரணம் இருந்தது. – அமிதாப் பச்சன்!


      ப்ரகாஷ் ராஜ் ஒரு லோக்கல் தாதா!  வெடிகுண்டுகளை பொது இடங்களில் வைத்து இன்பம் காண்பவர்! ஒரு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில், குற்றவாளியை மோப்பம் பிடித்து, ப்ரகாஷ் ராஜின் அடியாளை கைது செய்கிறார் போலீஸ் அஸிஸ்டெண்ட் கமிஷ்னர் சோனு சூட்! மிகவும் நேர்மையான அதிகாரியாக இருப்பதால், இரண்டு மாதத்துக்குள் மொத்த நகரத்தின் தாதா சாக்கடையையும் சுத்தம் செய்துவிடுவேன் என்று பேட்டி கொடுக்கிறார்.


      தன் ஆளை கைது செய்தது இல்லாமல், தன்னையும் நெருங்கி பிரச்னை செய்துவிடுவாரோ என்று கொதித்து, சோனுவைக் கொல்ல ஒரு ஆளை ஏற்பாடு செய்யுமாறு பணிக்கிறார் ப்ரகாஷ்ராஜ்.! அவர்களும் சோனுவைக்கொல்ல ஒரு சிறந்த ஆளை ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறுகிறார்கள்.


      வந்து இறங்குகிறார் அமிதாப்! ஒரு பக்கா பழைய தாதா! ஏர்ப்போர்ட்டில் இறங்கும் காட்சியிலேயே அதகளத்தை ஆரம்பிக்கிறார். வரிசைல நில்லுங்க என்று போலீஸ்காரர் சொல்ல, ’நான் நிக்கிற இடத்தில் வரிசை ஆரம்பிக்கும்’ என்று சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது பச்சனின் பஞ்ச்!!


      ஒரு காபி ஷாப்பில் சார்மி, தான் மேட்ரிமனி சைட்டில் பார்த்த ஒருவனைச் சந்திக்க வர, அவன் உனக்கு செட்டாக மாட்டான் என்று உசுப்பேற்றுவதில் ஆரம்பிக்கிறது அமிதாப் – சார்மி நட்பு! தனது தோழியான மினிஷாவிடமும் அமிதாப்பை அறிமுகப்படுத்துகிறார்.


      கல்லூரிக்காலத்திலிருந்து மினிஷா லம்பாவை ஒருதலையாகக் காதலித்து வருகிறார் அஸிஸ்டெண்ட் கமிஷ்னர் சோனு சூட்…! இவர்களுக்கிடையே அமிதாப் அறிமுகமாகி, காதலை கனியச்செய்கிறார்., இந்நிலையில், போலிஸ் ஸ்டேஷன் வாசலிலேயே நிற்கும் ஜீப்பில் ஒரு பாமை வெடிக்க வைத்து, சோனுவை எச்சரிக்கிறார் அமிதாப்.!


           ஒரு கோவில் விழாவில் சோனு, தனது தாய் ஹேமமாலினியுடன் வந்து காரில் இறங்குகிறார். அப்போது அவரைச்சுட – ப்ரகாஷ்ராஜால் நியமிக்கப்பட்டு - காத்திருக்கும் கொலையாளியை காத்திருந்து சுட்டுவிட்டு, தான் யாரென்ற முடிச்சை அவிழ்க்கிறார் அமிதாப்!

அவர் சோனுவின் அப்பா! – இடைவேளை!


       சோனு குழந்தையாக இருக்கும்போதே ஹேமமாலினி- அமிதாப் பிரிந்துவிடுகிறார்கள். தன் மகனுக்கு ஒரு ஆபத்து என்று வரும்போது அவனைக்காப்பாற்ற வந்திருக்கிறார் அமிதாப்!

              பின்னர் ப்ரகாஷ்ராஜ் கூட்டத்துக்குள் நுழைந்து, சோனுவைக்கொல்ல அவர்கள் போடும் திட்டங்களை முறியடித்து, அனைவரையும் போட்டுத்தள்ளி...

 சுபம்!



 

அமிதாப் – தெய்வமே! என்று காலில் விழுந்துவிடலாம். அந்த அளவுக்கு நக்கலும் நையாண்டியும் விளையாடுகிறது. ஆக்ரோஷத்தில் அந்தக்கால அமிதாப் ஆடித்தீர்க்கிறார்.






ப்ரகாஷ் ராஜ் – இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு, கலக்கியிருக்கிறார் மனிதர்! வில்லனுக்கான ஆத்திரமும், அவசரமும்…..சூப்பர்! அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில்…’கண் கலங்க…..’ அப்ப போலீஸே வரலை! அத்தனை பேரையும் நீதான் சுட்ட…!. “ என்று கூறி முடித்து அழ ஆரம்பிக்கையில் அப்ளாஸை அள்ளுகிறார். ஹிந்தி வில்லன்களே …உஷார்!!





சோனு சூட் – அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சரியாகச் செய்திருக்கிறார். ஆனால் ரொமான்ஸுக்குக்கூட சிரிக்கமாட்டேன் என்று இருப்பது இடிக்கிறது. டைரக்டர் அப்படி எதிர்பார்த்திருப்பாரோ?






சார்மி – ரவீணா டேன்டன் – முறையே மகள் – அம்மா கேரக்டர்…கலக்கியிருக்கிறார்கள். படத்தின் நகைச்சுவைக்கு குத்தகை! அதுவும் ரவீணாவின் முகச்சுழிப்புகள் – பின்றீங்க மேடம்!



ஹேமமாலினி – அமைதியான அம்மா! பெரிதாக வேலை இல்லை! கொடுத்த வேலைக்கு பங்கமுமில்லை!






படத்தின் முடிவில்… அமிதாப்புக்கு சமர்ப்பணம் என்று போடுகிறார்கள்.

பூரி ஜெகன்னாத் ஒரு மிகச்சிற்ந்த பொழுதுபோக்குப் படத்தை கொடுத்திருக்கிறார். 

அமிதாப்புக்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்.




பெங்களூரில் சென்ற வேலை முடிந்தவுடன் ஞாயிறு இரவுக்காட்சியாக கொரமங்களா பி வி ஆரில் ஸ்க்ரீன் 7ல் பார்த்தேன். 9:25க்கு ஷோ என்று கூறி ..சரியாக வினாடி சுத்தமாக படம் போட்டார்கள். என்ன….? டிக்கெட்தான் 240 ரூபாய்!! ஆனால் அந்த மொத்த மாலும் படுசுத்தமாக இருக்கிறது.


இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...