Saturday, November 26, 2011

ட்விட்டுரை





பல்வேறு காலகட்டங்களில் நான் ட்விட்டிய உரைகளின் தொகுப்பு 


தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் டைப் செய்து , அதைப்படிக்கும்போது கண் கன்பியூஸ் ஆகுது. ! அடித்தவர் கையை கடித்துவிடலாம்போல் உள்ளது

காந்தி எவ்வளவு பணம் சம்பாதித்தார் என்று யாருக்கும் தெரியாது.ஆனால் நாம் சம்பாதிக்கும் எல்லா பணத்திலும் காந்திதான் இருக்கிறார். சுரேகாத்துவம்!


சும்மா இருக்கும்போது அயன் பண்ணியிருக்கலாமுல்ல? - தங்கமணி! அப்ப அயன் பண்ணினா நான் எப்ப சும்மா இருக்குறது? - #அடி தாங்கலை!


என்னது? முகப்புத்தகத்தில் அவர் பெயர் ஹாரிஸ் ஜெயராஜ் நாடார்ன்னு இருக்கு!! இது வேறயா? #கலைஞனுக்கும் ஜாதி உண்டு!


அடுத்த பிறவியில் புரோட்டா செய்யத்தெரிந்த பெண்ணை மணக்கவேண்டும். புதல்வனின் புரோட்டா வெறிக்கு........முடியலை!


பெரிய கடைகள் புறக்கணித்து...சிறிய கடையொன்றில் துணிகள் அள்ளினோம். உபசரிச்சு மகிழ்ந்தார் வியாபாரி! தி நகரில் மரியாதை தெருவில் திரிகிறது.


காசும், கண்ணியமும் கொடுத்தால், கடைச்சரக்கு வீட்டுக்கு வரும்.. பிரம்மாண்டமாய்களில்...!


இளைய தலைமுறை படிக்கட்டும்னு அய்யா நினைச்சார்..இல்லை.. மொதல்ல படுக்கட்டும்னு அம்மா முடிவெடுத்திருக்காங்க! #இனிமே ஓட்டுப் போடுவ?


நல்லவேளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பாலெல்லாம் லிட்டர் கணக்கில் விக்கலை! இல்லைன்னா திருக்குறள் இன்னிக்கு என்னா விலை விக்கும்?


நம்மை ஏதோ காமக்கொடூரன்போல் பாவித்து ஒரு பாதுகாப்புக்காக என்றெண்ணிஅண்ணாஎன்று அழைப்பவர்களை எப்படிக் கொன்றால் தகும்?


கடினமாக உழையுங்கள். ஆனால், குடும்பம், நட்பு ஆகியவற்றுக்கு நேரம் ஒதுக்குங்கள். செத்தால் எவனும் நமது PPT நினைவு கொள்வதில்லை.


பிச்சை: ஒருரூவா குடுங்க சாமி! ஆசாமி: நாளைக்குத் தரேன்! பிச்சை: இப்புடீ சொல்லி சொல்லியே இந்த ஏரியாவில் எனக்கு லட்சரூபாய்க்கிட்ட வரணும்!


மாயாவதி, மம்தா, ஜெயலலிதா, சோனியா! இவ்வளவு பேரும் பண்றதைப் பாத்துட்டும்... இன்னும் தாய் நாடுன்னு சொல்லி கன்னத்துல வேற போட்டுக்குறோம்.

நாலாய்ப் பிரித்த மாநிலத்தில், மற்ற மூன்றிலும் என் சிலை ஆளும் - யாரு? யாரோ!!


இலவசமா கிடைக்கிற மிக்ஸி, கிரைண்டரை அம்மா வூட்டுல குடுத்து அஞ்சு வருஷ பஸ் பாஸ் தரச்சொல்லி கேக்கலாமா?


எங்க அப்பா இப்புடி அடிச்சு வளத்திருந்தாருன்னா, இப்புடி இந்த சர்தார்ஜிசளுப்புன்னு இழுத்திருப்பானா? - #யாரு? யாரோ!

திரையுலக வெற்றியை நினைத்தால் பெருமையில் நெஞ்சம் விம்முகிறது # லத்திகா 175வது நாள்!

இனிமே பவர் கட் பத்தி பேசுவ? இதுவரை செலவழிச்ச யூனிட்டுக்கு முதல்ல பணம் சம்பாதிக்கிற வழியப்பாரு! அடுத்தவாரம் இருக்குடீ ஆப்பு! #யாரு
யாரோ!


அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்வாழ்க! அப்ப அண்ணா!? போடா வெண்ணை! சமச்சீரை நசுக்கினப்பவே மாத்தியாச்சே ! தெரியாதா? #யாரு? யாரோ!


இனி தமிழில் புது வார்த்தைகள் உருவாகும். ட்விதை, ட்விறுகதை, ட்விச்சுவை, ட்விட்டூழியம், ட்விட்டுரை,..இன்னபிற..!


அப்பா! இன்னிக்கு கிருஷ்ணர் பாப்பா வருவராமே? எந்த ஜட்டி போட்டுக்கிட்டு வருவார்? என் பொம்மையை பிடுங்கிக்க மாட்டாரே? - சின்ன தேவதை!!


மரியாதையா சீக்கிரம் ரெடியாகுறீங்களா இல்லையா? - வரலட்சுமி நோம்பு மரியாதை!


ஆட்டாம்புழுக்கை போல் ஒரு நாடு ஆட்டம்போடுகிறது. கூட்டணி கொள்ளை காக்க தமிழன் வெட்டுப்பட்ட ஆடாகிறான்! #tnfisherman


திருப்பதியில் எங்களுடன் வரிசையில் வந்த ஆள்..பாவம்! பரம ஏழையாம். 2000 கோடி ரூபாய்தான் வருட வியாபாரம் என்று 8000 டாலர் உண்டியலில் போட்டார்.


வானத்துக்கூரையில பொத்தல் யாரு போட்டுவச்சா? வெளிச்சமெல்லாம் வழியுதுங்க! விண்மீனாப் பொழியுதுங்க!


ட்விட்டுதல் ட்வீட்டர்க்கு அழகு அன்றில் ஃபாலோயர் பத்துக்கும் கீழ்வரும்.


நின்னு சம்பாதிச்ச பாலாஜிய விட, படுத்து சம்பாதிச்ச பத்மநாபந்தான் கிங்கு! அதுனால வேலைக்குப்போகச்சொல்லாத! படுத்திருக்கேன்! #கொய்யால

அலைவரிசைத்தொழில் - கலைஞர் ராசா, கொலைவரிசைத்தொழில்- இலைங்கை ராசா! - இரு அரசும் நட்புகொள்ளக் கூசா!#tnfisherman


மாட்டுப்பொங்கலும்...மாடில்லாமல் கழிந்தது...! இனிவரும் காலத்தில் தைப்பொங்கல், பொங்கலில்லாமலும் கழியும்!


சட்டைப்பையில் கனமில்லாமல், புத்தகக்காட்சி போகும்போது, மற்றவர்களை கையில் புத்தகக்கனம் பார்த்து....மனம் கனக்கிறது!


கட்டெறும்பை நசுக்கினா, அது அடுத்த ஜென்மத்தில் நம்பளை நசுக்குமாம்! டேய்! போன ஜென்மத்தில் நான் எறும்பு! அது என்னை நசுக்கினுச்சு தெரியுமில்ல?


நான் சோகமாக இருக்கும்போது பாடத்தொடங்குவேன். சுற்றியிருப்பவர்கள் சோகமாகிவிடுவார்கள் #புலம்பல்

எப்போதும் கையில் ஒரு சுத்தியோடே திரிந்துகொண்டு இருந்தால், சுற்றி இருப்பதெல்லாம் ஆணிகளாகத்தான் தெரியும்! அப்ப கையில் ஆணிகளோட திரிந்தால்?


சீக்கிரமாக எழுந்திருக்கும் பறவைக்குதான் புழு கிடைக்கும். அப்ப சீக்கிரமா எழுந்திருக்கும் புழு? கோவிந்தாவா? #தத்துவ சந்தேகம்!


புன்னகை புரியுங்கள். நாளை இதைவிட மோசமாகத்தான் இருக்கும் # புலம்பல்

சென்னை உப்பி வெடித்துவிடும் போலிருக்கிறது. திண்டிவன மனை வியாபாரிக்கு....அவர் வீட்டுமனை சென்னைக்கு மிக அருகிலாம்..!!!


இன்ஸ்பெக்டர் அய்யா! வீட்டுல பூட்டை ஒடைச்சு எடுத்துட்டுப்போயிட்டாங்க! ஒடஞ்ச பூட்டை எடுத்துட்டுப்போய் என்னய்யா பண்ணுவான்?

Thursday, November 24, 2011

பண்பலை அரசியல்





சிறிய திரைப்படங்கள் திரையரங்குகளை எட்டுவதே மிகவும் கடினமான சூழலாக இன்று இருக்கிறது. அது எல்லோராலும் பரவலாக விவாதிக்கப்பட்டாலும், சிறிய படங்கள் எனப்படும், நட்சத்திர அந்தஸ்து இல்லாதவர்கள் இயக்கியோ, நடித்தோ எடுத்த படங்கள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கின்றன. அப்படி முடித்து, வெளியிடவே முடியாத படங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மட்டும் 60 ஐத் தாண்டுகிறது. இந்த விஷயத்தில், திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் என்று பலருக்கும் பங்கு இருக்கிறது. பேசப்படும் நடிகர்கள் இருந்தால்தான் அந்தப்படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கின்றன. சிறிய படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இயலாத காரியமாகிவிட்டது. இவையெல்லாம், எல்லா ஊடகங்களும், திரைப்படத்துறையில் உள்ளவர்களும் துவைத்துத் தொங்கவிட்ட தகவல்கள்.!



இவையனைத்தையும் மீறி, பண்பலை எனப்படும் தனியார் FM வானொலிகள் சிறு படங்களுக்கு எதிராக ஒரு அரசியலைச் செய்துவருகின்றன. ஒரு படத்தின் இசை வெளியிடப்படுகிறது. அதன் பாடல்கள் நன்றாக இருந்தால், அவை வானொலியில் திரும்பத்திரும்ப ஒலிபரப்பப்படுகிறது. அதன்மூலம் அந்தப் பாடலுக்கான விற்பனை அதிகரிக்கலாம். அந்தப்பாடலை அலைபேசியின் அழைப்பு ஒலியாக பலரும் வைத்துக்கொள்ளலாம். அந்தப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரிக்கலாம்.

ஆனால், அனைத்து வானொலி நிலையங்களும், எந்தப்படத்தின் இசை வெளியிடப்பட்டாலும், எந்தவித பாரபட்சமும் இன்றி ஒலிபரப்ப முயற்சிக்கிறார்களா என்றால், அங்குதான் ஒரு புதுவித அரசியலை அவர்களும் அரங்கேற்றுகிறார்கள். ஒரு பெரிய படம், பெரிய இசையமைப்பாளரின் இசை வெளியீட்டு விழா நடந்த அன்று மாலையே அந்தப்படத்தின் பாடல்கள் அனைத்து வானொலிகளிலும் ஒலிபரப்பப்பட்டுவிடும். ஒரே நாளில் பத்துமுறை எட்டு சேனலிலும் வந்து கிழித்தெடுக்கும். ஆனால், அதுவே ஒரு சிறிய படம், புதிய இசையமைப்பாளர் என்றால் அவர்கள் ஒலிபரப்புவதே இல்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ’ அந்தப்படமெல்லாம் ரிலீஸே ஆகாது சார்!’  அல்லது ‘ படம் ரிலீஸ் ஆனவுடன் தான் பாட்டுப்போடவேண்டுமென்பது உத்தரவு!”( இது எங்கள் சென்னை அகில இந்திய வானொலிக்கும் பொருந்தும். ஆனால் அவர்கள் கொஞ்சம் பரிசீலிப்பார்கள்! ) அப்படியென்றால், இன்னும் ரிலீஸாகாத பெரிய படத்தின் பாடலை ஏன் ஒலிபரப்பினீர்கள் என்றால் ‘ஹி..ஹி..ஹி..!’ அல்லது ’அது கட்டாயம் ரிலீஸ் ஆகிடும் சார்! என்றுதான் பதில் சொல்கிறார்கள்.

இவர்கள் ஏன் இப்படி புரியாதவர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு திரைப்படத்தின் பாடல்கள் என்பது வேறு ! அதை ஆல்பம் என்கிறோம். அதாவது ஒரு படத்துக்கான பாடல்களை இசையமைப்பாளர் மூலம் வடிவமைத்து, பாடலாசிரியர் கொண்டு வார்த்தைகள் கோர்த்து, பாடகர்களை வைத்துப் பாடி அவற்றை ஒரு ஆல்பமாக்கி, இந்தப்பாடல்களுக்கான காட்சிகள் , மேற்கண்ட படத்தில் படமாக்கப்பட்டுள்ளன என்பதை அறிவிப்பதுதான் இசை வெளியீட்டுவிழா! அதாவது , தனிப்பட்ட முறையில், அதிகாரப்பூர்வமாக பாடல்கள் வெளியிடப்பட்டுவிட்டன.

அதற்கும், அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கும் சம்பந்தமே இல்லை.! இதைப்பற்றி கவலைப்படவேண்டியவை தொலைக்காட்சிகள்..! அவர்களால்தான் காட்சி இல்லாமல் பாடலை ஒளிபரப்ப முடியாது. ஆனால், சிறுபடங்களை முற்றிலும் ஓரங்கட்டும் கூட்டமாகவே தனியார் வானொலிகளும் இருக்கிறார்கள்.

80,90 களில், எனக்குத்தெரிந்து, வெளிவராத படங்களின் பாடல்கள் பல பிரபலமாகியிருக்கின்றன. ராமராஜன் நடித்து ‘காவலன்’ என்ற படம் தயாரானது. அதில்தான் பிரபலமான ‘ ஒட்டடை ஒட்டடை கம்பத்துல மாமா!’ எனத்தொடங்கும் பாடல் பதிவாகியிருந்தது. அதேபோல்…’சோலைப்பூந்தென்றலில் ஊஞ்சலாடும் செல்லப்பைங்கிளி..! இது பூவே பொன் பூவே என்ற படம் என்று நினைவு! அதனை இலங்கை வானொலி ஒரு நாளைக்கு மூன்று முறை ஒலிபரப்பி பிரபலப்படுத்தினார்கள்.‘ ‘ஒரு ஆலம்பூவு அத்திப்பூவைப்பாத்ததுண்டா! ‘ போன்ற பாடல்கள் வெளிவராத படங்களில் பிரபலமானவை! இன்னும் பல பாடல்கள் உண்டு.

இன்றும், நான் பார்த்த வகையில், இசை வெளியீட்டு விழா முடிந்து, ஆனால் படம் வெளிவராத பல பாடல்கள் மிகவும் இனிமையான இசையுடன் உள்ளன. ஆனால், அவை மக்கள் கேட்கும் அளவுக்குச் சென்றடையாமல் உள்ளன. காரணம் அவை பிரபலப்படுத்தப் படாததுதான்.!! ‘வர்ணம்’ என்றொரு படம் வந்தது. அதில் ஒரு பாடல் மிக நன்றாக இருந்தது. ஆனால், ஒரு வானொலி கூட ஒலிபரப்பவில்லை.

திரைப்படம் இல்லாமல், திரை இசை இல்லாமல் ஒரு நாள் கூட நமது பண்பலை வானொலிகள் நிகழ்ச்சிகள் நடத்த முடியாது. ஆனால், அவர்களும் பெரிய படங்கள், பெரிய இசையமைப்பாளர்கள் என்று சாய்ந்துவிட்டு, பின்னர் சிறிய படங்கள் ஏன் தோற்கின்றன? என்று கேட்டு நேயர்களை SMS செய்யச்சொல்லி, காசு பார்க்கிறார்கள்.

இந்த விவகாரத்தில், பல ரேடியோ ஜாக்கிகள் மிகப் பெரிய காரணிகள்.! அவர்கள் தாங்கள் விரும்பும் பாடல்களை ஒலிபரப்புவது…! அல்லது தங்களுக்குத் தெரிந்த பாடல்களை ஒலிபரப்புவது என்ற வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். சிறு படங்களின் பாடல்களைக் கேட்பதுகூட இல்லை. எல்லா சிறுபடங்களின் பாடல்களும் நன்றாக இருப்பதில்லை. அதில் சர்வ மொக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெரிய படங்களிலும் அது சாத்தியம்தானே! ஆனால், ஒரு சிறு படத்தின் இசை வெளியிடப்பட்டுவிட்டால், அதன் பாடல்களில் ஏதாவது நல்ல பாடல் சிக்கினால், அவற்றை ஒலிபரப்புவதால் எந்த நேயரின் காதும் கெட்டுப்போய்விடாது. இவர்களாகவே முன் முடிவு எடுத்துக்கொண்டு, பாடல்களை ஒதுக்குவது, திரை உலகின் வளரும் எத்தனையோ கலைஞர்களை தன்னால் இயன்றவரை கீழே அழுத்தும் முடிவாகத்தான் இருக்கும். 

இதற்கு பல தீர்வுகள் இருக்கின்றன. ஒரு நாளில், சிறு படங்களுக்கென்று ஒரு மணி நேரம் ஒதுக்கலாம். அதில் 5 முதல் 8 பாடல்களை ஒலிபரப்பலாம். இடையில் அந்தப்படங்களின் விளம்பரங்கள் வாங்கிக்கொள்ளலாம். அந்த படக்குழுவினரை பேட்டி எடுக்கலாம். இப்படி ஒரு படம் வர இருக்கிறது அல்லது இப்படி ஒரு படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது என்றாவது நேயர்கள் தெரிந்துகொள்வார்கள்.

என் திரையுலக நண்பர் ஒருவர் கூறுவார். ‘கட்டுச்சோத்தை பிரிச்சு வைங்க! ‘ பிடிச்சவன் தின்னுட்டுப்போறான்’ என்று! அதுபோல்,  பாடலை ஒலிபரப்பினால், பிடித்தவர்கள் மீண்டும் அழைத்துக் கேட்டுவிட்டுப் போகிறார்கள். தமிழில் நிறையப்பாடல்கள் வருவதற்கான வாய்ப்புகளும் வரும். புதிய இசையமைப்பாளர்களும் உற்சாகத்துடன் வேலை பார்ப்பார்கள்.

எல்லா அனிருத்துக்கும் 3, தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கிடைத்துவிடமாட்டார்கள். அவர்களையும் அலட்சியப்படுத்தாமல் ஆதரிக்கட்டும் நமது FM வானொலிகள்!

ஏனெனில்…எறும்புகளும் சேர்ந்ததுதான் உயிர்க்கோளம்.!

Wednesday, November 16, 2011

ஓமப்பொடி # 3



சென்ற மாதம் திரையுலகப் பிரபலங்களை , கிரண்பேடியுடன் சந்திக்கவைத்து , யதார்த்தமான நிகழ்ச்சி ஒன்று இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது.. அதன்படி, சுவாரஸ்யமான, விளையாட்டான, அழுத்தமான சில கேள்விகள் அவரிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கேட்கப்பட்டன. அவை அனைத்தையும் தொகுத்து, அன்புடன் கிரண்பேடி என்று பெயரிட்டு, ‘விஜய் டிவி’யில் இரு பாகங்களாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்தோம். அதன்படி முதல் பாகம் சென்ற ஞாயிறு (13.11.2011) அன்று ஒளிபரப்பானது. அடுத்த பாகம் வரும் ஞாயிறு (20.11.2011) அன்று காலை 9:30க்கு வருகிறது. கிரண்பேடியைப்பற்றிய வித்தியாசமான தகவல்கள் ,அவர் மூலமாகவே, கேட்கும் வாய்ப்பிருக்கிறது. பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்
அதன் முன்னோட்டம்….இதோ!

 இந்நிகழ்ச்சியின் தலைப்புக் கணிணி வரைகலையை (TITLE GRAPHICS)  நமது பதிவர் சுகுமார் சுவாமிநாதன் செய்திருக்கிறார். அவருக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.!
                           ***

 சவால் சிறுகதைப்போட்டி -2011 முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். போட்டி நடுவர்களால், என் கதைக்குக் கொடுக்கப்பட்ட விமர்சனம் கீழே!

16    கண்ணனும் கண்ணனும்    -சுரேகா   
வித்தியாசமான கதைக்களன்கதையையும் கதை போட்டியையும் இணைத்து பின்னியிருக்கிறார்ஆனால் 'கண்ணனும் கண்ணனும்' என்று ஏன் தேர்ந்தெடுத்து சென்னைக் கண்ணன், திருப்பூர் கண்ணன் என்றெல்லாம் சுற்ற வேண்டும் எனப் புரியவில்லை. கதைப் போட்டியை நன்றாகவே கிண்டல் அடித்திருந்தார். பரிசலும் ஆதியும் கவனிக்க வேண்டும்நல்ல முயற்சிஆனால் முழுமையடையவில்லை.


மிக அழகாக, நேர்மையாக விமர்சித்திருக்கும் நடுவர் குழுவுக்கு உளமார்ந்த நன்றிகள்!,

போட்டியை நடத்திய பரிசல்காரனின் உண்மையான பெயர் கிருஷ்ணகுமார்!, ஆதியின் பெயர் ஆதிமூலகிருஷ்ணன். இருவர் பெயரிலும் கிருஷ்ணன் இருப்பது ஒரு எதேச்சையான , ஆனால், அழகான ஒற்றுமை! அதைத்தான் ’கண்ணன்’ என்று எடுத்துக்கொண்டேன். அதேபோல், ஒரு கதையில், ஒரே பெயரில் கதாபாத்திரங்கள் இருப்பதும் வித்யாசமாக இருக்கட்டும் என்று நினைத்தேன்.  துப்பறிவதாகத்தான் கதை இருக்கவேண்டுமா என்று எண்ணியதின் விளைவு….. இப்படி வந்து நின்றது.!
’ஓட்டப்பந்தயத்தை வேடிக்கை பார்ப்பதை விட ஓடித் தோற்பது எவ்வளவோ மேல்’ என்ற நினைப்பில் கலந்துகொண்டதால்…...(சரி..சரி.. மீசையில் மண் ஒட்டலை..விடு! )
வெற்றிகரமாக போட்டியை நடத்திய நண்பர்கள் ஆதி மற்றும் பரிசலுக்கு வளமான வாழ்த்துக்கள்!!   
                         
                          ***

’அன்னா கரீனா’, -    டால்ஸ்டாய் - தமிழில் – தர்மராஜன். (Dharmarajan)

தமிழ் இலக்கிய வரலாறு, - டாக்டர் பூவண்ணன்

உயிர்த்தெழு! -             டாக்டர் தமிழ்நாகை

அகிலத்திற்கோர் அருட்கொடை (முகம்மது நபி) – டாக்டர் இனாயத்துல்லாஹ் சுப்ஹானி

The Descent of Man, and Selection in Relation to Sex.  – டார்வின்


இவையெல்லாம் நான் கடந்த இரண்டு மாதங்களில் படித்த புத்தகங்கள்… பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், அனைத்து புத்தகங்களின் ஆசிரியர் பெயர்களும் தமிழில் ‘டா’ என்ற எழுத்தில் துவங்குகின்றன. இதை என்னவென்பது?  ஆங்கிலத்தில் ‘D’ என்று துவங்குவதாகவும் கொள்ளலாம். முதல் புத்தகத்தை எழுதியது தர்மராஜன் எனக்கொண்டால்…!

இவற்றில், அன்னா கரீனா – காட்சிகளும், சம்பவங்களும் புனைவுடன் பிணைத்து எழுதப்பட்ட பிரபலமான கதை!

தமிழ் இலக்கிய வரலாறு – ஒரு அதிவேக ராக்கெட்டில் , தமிழ் இலக்கியங்களைச் சுற்றிய அனுபவம்.!

உயிர்த்தெழு ! – இலங்கை இனவெறியையும், போராட்ட நிலைகளையும் புகைப்படங்களுடன், வரலாறாக முன்வைக்கும் ஆவணம்.

அகிலத்திற்கோர் அருட்கொடை – முகம்மது நபி அவர்களைப் புரிந்துகொள்ள, இயல்பான நடையில் எழுதப்பட்ட சிறந்த நூல்.!

டார்வினின் புத்தகம் , மனித இன வளர்ச்சிநிலைகள், பாலினக் கவர் சாகசங்கள், அது தொடர்பான மனநிலைகள் பற்றிய அவரது 2வது நூல்..! பின்னியிருக்கிறார் மனிதர்!
                     ***

கடந்த ஆறு மாதங்களாக, என் எண்ணுக்கு வெவ்வேறு ஊர்களிலிருந்து அழைப்புகள் வருகின்றன.
‘சாமி நிகழ்ச்சி பாத்தேன்!. சாமி அப்பாயிண்ட்மெண்ட் வேணும்!’
‘இல்லீங்க அது நான் இல்லை!’
இது பொதுவான உரையாடல்… என்ன குழப்பமென்றால், ஒரு சாமியார், தனது தொலைக்காட்சி விளம்பர நிகழ்ச்சியில் தொடர்புகொள்ளச் சொல்லும் எண்ணாக , என் எண் வந்துகொண்டிருக்கிறது.

இது தொடரத்தொடர, ஒரு அழைப்பின்போது நான்..

‘சாமிக்கிட்ட எதுக்கு உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வேணும்?

’நல்லா ஜாதகம் பாப்பாரு! அதான்! – எதிர்முனை.

ஓஹோ..அவரை நேர்ல பாத்து, முதல்ல தன் செல்போன் நம்பரை ஒழுங்கா பாக்கச்சொல்லுங்க! அப்புறம் ஜாதகம் பாக்கலாம்..!!

-    கட் -

”காசு செலவழித்து, அடுத்தவர் எண்ணைப் போடும் இவர்களையெல்லாம் சீக்கிரம் கூட்டிக்கொண்டுபோய் பக்கத்துல வச்சுக்க கறம்பக்குடி பெரிய கருப்பு சாமியோவ்!!”

                    ***

Sunday, November 6, 2011

யுடான்ஸ் நன்றி




வாய்ப்பு நல்கி
வாசிக்க உள்ளங்களும் நல்கி
காய்ப்பு இல்லாத மரமாய் இருந்ததை
கல்லால் அடிக்காமல்
கனிவாய்க் கொஞ்சம் காய்க்க வைத்து,
இரண்டு மாதப் பதிவுகளை
ஏழு நாளில் போட வைத்து,
எழுதும் ஆர்வம் தூண்டிவிட்டு
எத்தனையோ பதிவருக்கு
எளியோனை அறிமுகப்படுத்தி,
என்னைக்கொஞ்சம் ஆடவைத்த
யுடான்ஸுக்கு என்
உடான்ஸ் இல்லாத நன்றி!


பெயருக்குப் பின்னால்






            பள்ளி செல்ல ஆரம்பித்து, கொஞ்சம் விபரம் தெரிந்த வயதில்,  பெயருக்குப்பின்னால் படித்த பட்டம் போட்டுக்கொள்ளும் ஆசிரியர்களைக்கண்டு, பிரமிப்பாக இருக்கும். அவர்கள் வீட்டுக்கதவில் பெயர் எழுதி, பின்னால். M.A. என்று போட்டுக்கொள்வதை மிகவும் ஆச்சர்யமாவும், மரியாதையாகவும் பார்ப்பேன்.

      நண்பர்களிடையே, ஒருவரைப்பற்றி பேசும்போது, அவரது படிப்பையும் சேர்த்துத்தான் பேசுவோம். அவுங்க மாமா இளங்கோ பி.எஸ்ஸி தெரியுமுல்ல! என்போம். அந்த இரண்டு அல்லது மூன்று எழுத்தைப்பெறுவது மிகவும் கடினம் என்று கவலைப்படுவோம். நாமெல்லாம் இப்படிப் படித்துவிடுவோமா என்று ஏங்குவோம்.

        எங்கள் பள்ளி தட்டச்சு ஆசிரியர் கன்னாபின்னாவென்று படித்து, அவர் பெயர்ப்பலகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பட்டத்தை சேர்த்துக்கொண்டே போவார்.

      ’இந்த ஆளு எப்பதான் படிக்கிறாரு? எப்படி இவ்ளோ பட்டம் வாங்கினாரு?’ என்று பேசிக்கொண்டே அவரது வீட்டைக் கடந்திருக்கிறேன்.

      என் தோழி ஒருத்திக்கு, தன் பெயருக்குப்பின்னால், ஆங்கில எழுத்துக்கள் எல்லாவற்றிலும் பட்டம் இருக்கவேண்டும் என்று வெறிகொண்டு திரிவாள். தனக்கான பெயர்ப்பலகையின் நீட்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் என்னைக் கொல்லுவாள்.
      
       சில வீடுகளின் வாசலில் பெயரை சிறியதாகப்போட்டுவிட்டு படிப்பை பெரியதாகப்போட்டிருப்பார்கள். அதிலும்.. M.Sc(Hons) என்று இருக்கும். அது என்ன துறை என்று தெரியாமல் தவித்திருக்கிறேன். ஹானர்ஸ் என்பது தனித்துறை இல்லை, அதிக மதிப்பெண்கள் எடுத்தால் கொடுப்பது என்று தெரியவந்தபோது, பிரமிப்பை விட கடுப்புதான் கிளம்பியது.

   ஒரு சில குடும்பங்களில், திருமணப்பத்திரிகையில் பெயருக்குப்பின்னால் போடுவதற்கென்று படிக்கச்சொல்லி ஆண்களைக் கல்லூரிக்கு அனுப்புவார்கள். பெண்களாக இருந்தால் தொலைதூரக் கல்வி இயக்ககத்துக்கு விண்ணப்பம் பறக்கும்.
  
  எனக்குத்தெரிந்து ஒரு அரசியல்வாதி நண்பன். கையெழுத்துப்போட்டுவிட்டு அதன் கீழ் பெயர் எழுதவேண்டிய கட்டாயம் வந்தால், பெயர்..படித்த பட்டம் இரண்டையும் எழுதுவான். ஏனென்று கேட்டால், ‘நம்பளை கைநாட்டுன்னு நினைச்சுறக்கூடாது மச்சான்’ ! என்பான்.
  
  திருமணப்பத்திரிகைகள், போஸ்டர்கள் இவற்றில் பெயருக்குப்பின்னால்,பட்டம் போடாவிட்டால்,பெரிய களேபரங்கள் நடக்கும். என் நண்பன் ஒருவனுக்கு கல்லூரி முடித்தவுடன் ஓரிரு வருடங்களில் திருமணமானது. இவன் B.E., மணமகள் B.Sc,PGDCA. கடுப்பாகிவிட்டான். தன் படிப்பைவிட அவள் படிப்புதான் பெரிதென்று மற்றவர்கள் எண்ணுவார்கள் என்று சொல்லி, அவள் படிப்பில் PGDCA வை எடுக்கச்சொன்னான். அவர்கள் வீட்டில் முடியாது என்றார்கள்.

அவன் வருங்கால மாமனார்,
காசு செலவு பண்ணி படிச்ச படிப்பை எப்படித் தம்பி போடாம விடுறது? என்று என்னிடம் புலம்பினார்.

சின்னகோடு,பெரியகோடு முறையில், நான் ஒரு யுக்தி சொன்னேன். இவன் பெயருக்குப்பின்னால் .B.E (Computer Science) என்று போட்டுவிட்டால், இவனுடையது நிறைய எழுத்துக்கள் வந்துவிடும் என்றேன். அதையே ஒத்துக்கொண்டார்கள்.

பின்னர் பத்திரிக்கை இப்படி வந்தது.

Er. சாமிநாதன் B.E (Computer Science Engineering)
கௌரி .B.Sc. PGDCA

இரு குடும்பத்தாரின் மகிழ்வுடன் திருமணம் நடந்தேறியது.

     இதற்கெல்லாம் பயந்தே, என் திருமணப்பத்திரிகையில் இருவரது படிப்பும் போடவில்லை. நம் படிப்பைப்பார்த்து யாரும் திருமணத்துக்கு வரவோ, நிராகரிக்கவோ போவதில்லை. நம் குணம், பழகும் விதம் இவை தவிர, அதிகபட்சமாக, அவர்கள் வீட்டு விழாக்களுக்கு கூப்பிட்டபோது நாம் சென்றிருக்கிறோமா என்று பார்ப்பார்கள் என்பதுதான் என் வாதம். எங்கள் வீட்டில் படிப்பு போடுவதா, வேண்டாமா என்ற பேச்சு வந்தபோதே நான் மறுத்ததால் பெயர்கள் மட்டும் தாங்கி பத்திரிகை வந்தது. என் மாமனார் வீட்டுப்பத்திரிகையில் அடம் பிடித்துப் போட்டார்கள். நான் மறுத்ததற்கு அவர்..
      படிப்பு போடவேண்டாம்னு நல்லவிதமா நீங்க நினைக்கிறீங்க! ஆனா, படிக்காத மாப்பிள்ளை போலிருக்குன்னு என் சொந்தக்காரனும், ஊர்க்காரனும் நினைப்பான் என்றார்.

      விழா போஸ்டர்கள் இன்னும் பெரும்பாடு படும். வாழ்த்துத் தெரிவிக்கும் 35 பெயர்களில் ஒருவரது படிப்பு தவறாகவோ, இல்லாமலோ வந்துவிட்டால் போஸ்டர் செலவுக்கு அவர் தரவேண்டிய பங்கு கட்!
போஸ்டரில் படிப்பைப் போடாததால், விழாவுக்கே போகாத மனிதர்களெல்லாம் உண்டு.
    அதுவும் அச்சகத்தின் கணிப்பொறியில், தட்டச்சுபவருக்கும், விழாவினருக்கும் ஏதாவது ஏடாகூடம் நடந்தவாறே இருக்கும். ஒன்று..இவரே ஏதாவது தவறு செய்திருப்பார். கமலநாதன் B.Tech என்று அடித்துவிட்டு, மற்றவர்களுக்கும் அதே எழுத்து வடிவம் வருவதற்காக காப்பி,பேஸ்ட் செய்துவிடுவார்.
     அவசரத்தில், கமலநாதன் படிப்பு, சாகக்கிடக்கும் மணமகள் பாட்டிக்கும் செல்லாயி B.Tech  - என்று வந்து நிற்கும்.  இதுவாவது பரவாயில்லை. உண்மையில் M.Com.B.Ed படித்தவரை வெறும் பெயராக விட்டுவிட்டு, நான்கு வயதாகும், மணமகனின் அக்காள் மகனுக்கு பட்டம் கொடுத்துப் பாட்டு வாங்கிய அச்சகங்களைத் தெரியும்.
    
    இன்னொன்று, இவர்களே தவறாக எழுதிக்கொடுத்துவிட்டு, அச்சகத்தின் மேல் குறை கூறிவிடுவார்கள். எனக்குத்தெரிந்த அச்சக உரிமையாளர் ஒருவர் படிப்பு ப்ரூஃப் பார்ப்பதை ஒரு வேலையாகச் செய்வார். 
        இவுங்க காசு குறைக்கிறதுக்கு, இதை குறையாகச் சொல்லுவாங்க! பேருக்குப்பின்னால படிப்பு போட ஆரம்பிச்சவனைக் கண்டேன்….செத்தான் என்று குமுறுவார்.

     இந்தப்பழக்கம் எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் இது நமது கௌரவ அடையாளமாக ஆகிவிட்டது. பெயருக்குப்பின்னால் படிப்பு போட்டிருப்பதை வைத்து அவரது நம்பகத்தன்மையை ஆராயாமல் ஏற்கும் கலாச்சாரம் இன்னும் குறையவில்லை. அதனால்தான் தனியார் மருத்துவமனை மருத்துவர்களில் MBBS படித்தவர் கொஞ்சமாகக் கொள்ளையடிப்பார். MD படித்தவர் அதிகமாகக் கொள்ளையடிப்பார் என்று கிராமத்தார்களே பேசும் அளவுக்கு வந்திருக்கிறது.

     பெயருக்குப்பின்னால் பட்டம் போட்டுக்கொள்ளும் பழக்கம் நம் நாட்டில் மட்டும்தான் இருக்கிறதாக நினைக்கிறேன். நான் சென்ற நாடுகளில் இதுவரை அப்படிப்பார்த்ததாக நினைவில்லை.

நம்மிடம் பழகுபவர் என்ன படித்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருப்பது தவறில்லை. அதை அவர் விசிட்டிங் கார்டில் தேடுவது ஆச்சர்யமாக இருக்கும். கேட்கும்போது, தேவை இருக்கும் இடத்தில், அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது, இன்ன படித்திருக்கிறேன் என்று சொல்வதிலோ , அச்சிட்டுக்கொடுப்பதிலோ தவறில்லை. ஆனால் பெயருக்குப்பின்னால் என்பது….

இப்போதெல்லாம், படிப்பை பெயருக்குப்பின்னால் போட்டுக்கொள்பவர்களைத்தான், நான் படிக்காதவர்களாகப் பார்க்கிறேன். படிக்கப் படிக்க, அறிவு வளரும். அறிவு வளர வளர பணிவு வளரும். பணிவு வளர்ந்தால், பெயருக்குப்பின்னால் எதுவும் போடத்தோன்றாது.

ஒரு படப்பிடிப்புக்காக பசுமையான வயல் தேவைப்பட்டது. அதன் உரிமையாளரைத்தெரிந்துகொள்ள, வயலில் நின்றிருந்த ஒரு அரையாடைப் பெரியவரை அணுகி, பேச ஆரம்பித்தோம்.

எடத்துக்காரரை ஏன் பாக்கணும்?

ஒரு படப்பிடிப்பு விசயமா?

என்ன படம்?

விளம்பரப்படம்!

”ஓ..அப்புடியா? இப்ப சம்பா போட்டிருக்கு, இன்னும் ஏழெட்டு நாளுல உரம் தெளிப்போம். நீங்க கூட்டமா வந்தீங்கன்னா உங்க மேல தெளிக்கும். ’இன்பெக்‌ஷன்’ ஆகும்!” என்றார்.

தெரிந்த ஆங்கிலத்தை அள்ளிவிடுகிறார் என்று நினைத்து, நாங்களும் ஆங்கிலம் கலந்து பேசினோம்.

அவரும் தெளிவான ஆங்கிலத்தில் பதில் சொன்னார். கொஞ்சம் ஜெர்க்கானாலும்..
”சரி! ஓனர் வீட்டைக்காட்டுங்க” என்றோம்.

”நானே வரேன்” என்று அழைத்துச்சென்றார்.

பண்ணை வீடு சுத்தமாக, தெளிவாக இருந்தது. வாசலில் பெயர் மட்டும் போட்டிருந்தது.

உள்ளே சென்றால், வரவேற்பரையில் , கோட் போட்டுக்கொண்டு எங்களுடன் வந்த பெரியவர் உரையாற்றும் புகைப்படம் பார்த்து கொஞ்சம் அதிர்ந்தோம்.

உடனே..
”நீங்கதான் ஓனரா? ஸாரி சார்! உருவம் பாத்து மதிப்பிட்டே பழகிட்டோம். மன்னிச்சுருங்க!  நீங்க நல்லா ஆங்கிலம் பேசுனீங்களே! என்ன படிச்சிருக்கீங்க?”

”சும்மா M.Sc Agri. Ph.D தான் தம்பீ!”

அடைக்கலக் காதல்




'அடைக்கலம்?'

'என்ன மாப்புள?'

'இந்தவாட்டி 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்துல ஜெயிக்கிற!'

'கண்டிப்பா! எனக்காக இல்லாட்டியும், மல்லிகாவுக்காக ஜெயிப்பேன்.'

அடைக்கலத்துக்கும் எனக்குமான உரையாடல் இப்படித்தான் தொடங்கியது அன்று!

அதேபோல், அந்த விளையாட்டுப் போட்டியில் அவன் பெயரை நான்குபேர் கொடுத்தோம். அந்த அளவுக்கு அவனது ஓட்டத்தின் மீது நம்பிக்கை!

மல்லிகாவைக் கடுமையாகக் காதலித்த அடைக்கலம், எங்களிடம் சொல்லிய கண்டிஷன் ஒன்றுதான்.!

1500 மீட்டர் போட்டியில் ஓடும்போது உற்சாகப்படுத்த மல்லிகாவும் சேர்ந்து கத்தவேண்டும். ஓடிக்கொண்டிருப்பவனிடம் , குளுக்கோஸ் பவுடர் அல்லது பாதியாக வெட்டப்பட்ட எலுமிச்சையை அடுத்தடுத்த சுற்றுக்களில் கொடுக்கவேண்டும். அது அந்த நேரத்தில் பெரிய சவாலாகத் தோன்றவில்லை.

நான் மல்லிகாவிடம் தூது போனேன். விபரம் சொன்னேன்.

’மல்லி! அடைக்கலத்துக்கு அடைக்கலம் குடேன்!’

‘இதப்பாரு பீட்டரு! அவன நான் காமெடிப் பீசாத்தான் பாக்குறேன். காதலிக்கிற அளவுக்கு அவனும் ஹீரோ இல்லை. எனக்கும் நேரமில்லை’ என்று இந்திரா நூயியின் எதிர்வீட்டுக்காரி போல் பேசினாள்.

'சரி! லவ் பண்ணவேணாம். ஒரு சக மாணவன் ஓடுறதை உற்சாகப்படுத்துறதா நெனைச்சுக்க!

'நெனச்சுக்குறதா? லேசா சிரிச்சாலே, மல்லிகாவை மடக்கிட்டேன்னு மாநாடே நடத்திருவான்.'

'இல்லப்பா! நான் பாத்துக்குறேன். அவன் ஒரு ஓட்டப்பந்தய வீரன் ! நீ ஒரு மாணவி! அவ்வளவுதான்.. இதுக்குமேல எதுவுமே இல்லை ! போதுமா?'
அவன் காதல் எக்கேடு கெட்டால் என்ன? பரிசு கிடைத்தால், பார்ட்டி நிச்சயம் என்ற நம்பிக்கையில் அவளுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசினேன்.
அவள் எளிதில் ஒத்துக்கொள்ளவே இல்லை. 

'நம்ப காலேஜ் மானத்தை நீதான் காப்பாத்தணும்!

'ஓடுறது அவன்! நான் ஏன் காப்பாத்தணும்!'

'உனக்குத்தான் தெரியுமே! ஊக்குவிப்பவர்கள் ஊக்குவித்தால், ஊக்கு விற்பவன்கூட தேக்கு விற்பான்.!' –அவள் கவிதை அறிவில் கைவைத்தேன்.
அரைகுறை எரிச்சலுடன்…'ஸ்ஸ்சரி! அவனுக்காக இல்லை! அவன் ஜெயிக்கணும்னு நினைக்கிற உன் ஃப்ரெண்ட்ஷிப்புக்காக!' என்று முடித்தாள்.

'ரொம்ப தேங்க்ஸ்ப்பா!!' –சொல்லி மறுநிமிடம் அடைக்கலத்தைப் பார்க்க பறந்தேன்.

அடைக்கலம் ஒல்லியாக, உயரமாக, கொஞ்சம் வெளுப்பாக, ராவணன் பிருதிவிராஜ் போல் இல்லாமல், ரெயின்போ காலனி ரவிகிருஷ்ணா போல் இருப்பான். மல்லிகா குள்ளமென்றாலும், இருக்கும் உடையை அழகாக அணிந்து வந்து, அலைபாயுதே ஷாலினி போல் இல்லாமல், அஞ்சாதே  விஜயலட்சுமி போல் இருப்பாள்.

இருவருக்கும், ஒரு சாதாரண குடும்பப்பின்னணிதான்! அடைக்கலத்துக்கு , படிப்பைவிட ஓட்டம் நன்றாக வரும் என்பதால், பள்ளியிலிருந்து ஓட்டப்பந்தயங்களில் முதல் பரிசு வென்று வருகிறான். மல்லிகா, நன்கு படிப்பாள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவாள். நல்ல பெண்!

அடைக்கலத்திடம் விபரம் சொன்னவுடன், துள்ளினான். என்னைத் தூக்க முயன்று,  இருமுறை கீழே போட்டான்.

‘அடச்சீ! இப்ப எதுக்கு இப்புடிக் குதிக்கிற? நீ நல்லா ஓடணும்னு ஒத்துக்கிட்டிருக்கா!’

'அதில்ல மச்சி அவளுக்குள்ளயும் லவ் இருக்கு! அதான் லேசா வெளிய காட்டுறா!'
'அது என்ன கருமாந்திரமோ? நீ உன் ஓட்டத்திறமையை வெளில காட்டு!

சரி மச்சி! நாளைக்குக் காலைலேருந்து ப்ராக்டிஸ் பண்ணுறேன்.

போட்டிகள் நடக்க ஆரம்பித்தன. 1500 மீட்டர், ஏழரை சுற்றுக்கள்.!
     மல்லிகா ,கொஞ்சம் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு அழகாக உடையணிந்து, மிகவும் அழகான முகத்துடன் வந்திருந்தாள். கூடியிருந்தவர்கள் எல்லோரும் அவளை ஒருமுறை திரும்பிப்பார்த்தார்கள். அவளைத் தாஜா செய்து, வேறு சில தோழிகளுடன் மைதானத்தின், ஒரு இடத்தில் நிற்க வைத்து நாங்களும் அருகில், நின்றுகொண்டோம். வாய் நிறையச் சிரிப்புடன் அடைக்கலம் தன் 7ம் எண் பனியனை, ரேமண்ட் கோட்டைச் சரிசெய்யும் லாவகத்துடன் இழுத்துவிட்டுக்கொண்டு, எங்கள் பகுதியையே பார்த்துக்கொண்டு நின்றான்.

ஓட ஆரம்பித்தான். மைதானத்தின் எந்தப்பகுதியில் ஓடினாலும், எங்களை…இல்லை..இல்லை…மல்லிகாவைப் பார்த்துக்கொண்டே ஓடினான்.. 

நாங்களும் ‘அடைக்கலம்’ அடைக்கலம், அடைக்க்க்க்கலம்..! அன்று அதிர அதிரக் கத்தினோம்.  அவன் எங்கள் பகுதியைக் கடக்கும்போது, அடைக்கலம்…என்று ஆரம்பித்துவிட்டு நாங்கள் நிறுத்தி…மல்லிகா குரல் மட்டும் அவனுக்குக் கேட்குமாறு பார்த்துக்கொண்டோம். படுவேகமாக ஓடினான்.
      மல்லிகா கையில் பாதி எலுமிச்சையைக் கொடுத்தேன். அவன் அருகில் வரும்போது நீட்டு! அவனே வந்து வாங்கிக்கொள்வான் என்று சொல்லியிருந்தேன். அவளும் மில்லிமீட்டர் புன்னகையுடன் மைதானம் நோக்கி நீட்டினாள். எதிர்பார்த்துக்காத்திருந்தவன் கையை நீட்டிக்கொண்டே, டைட்டானிக் டி காப்ரியோ போல் ஓடி வந்தான். அவள் கையிலிருந்து வாங்கும்போது, கண்மூடித்திறந்தான். அடுத்த சுற்றில், மல்லிகாவின் புன்னகையின் நீளம் செண்ட்டி மீட்டரானது. மீண்டும் உற்சாகக் கத்தல்!
     கடைசிச்சுற்றுகளில், எங்கள் கத்தல் அதிகமானது! அதுவும் மல்லிகா, வீறுகொண்டுக் கத்தினாள்.
‘அடைக்கலம்…அப்..அப்! அடைக்கலம்! அப்..அப்! அடைக்க்க்கலம்ம்…அப்..அப்!
     மைதானத்தின் எதிர்ப்பகுதியில் அவன் வரும்போதே, எலுமிச்சை நீட்டினாள். குளுக்கோஸை அள்ளிக்கொடுத்தாள். அங்கு கடந்துசெல்லும் வேறு வீரர்களும் வாங்கிச் சென்றார்கள்.  நாங்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடைக்கலம் ஒரு மாயமான் போல் ஓடிக்கொண்டிருந்தான்.

இவ்வளவு முயற்சிக்குப்பின்னும், அடைக்கலம் இரண்டாவதுதான் வந்தான். தன் கடமை முடிந்ததுபோல், மல்லிகா, கூட்டத்திலிருந்து நகர ஆரம்பித்தாள்.

வெற்றிபெற்றவர்களை 1,2,3 என்ற படிகளில் நிற்கவைத்தாரகள். முதல் பரிசு 11ம் எண், இரண்டு 7, மூன்று 23 என்று நின்றார்கள்.
அறிவிப்பு ஆரம்பித்தது.

1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வென்றவர்கள் விபரம்.
முதல் பரிசு கே. அடைக்கல ராஜ்
இரண்டாம் பரிசு எஸ்.அடைக்கலம்.
மூன்றாம் பரிசு பி.அடைக்கல ஜான்ஸன்.

லவ் பண்ணுங்க பாஸு ! கூட ஓடறவனையும் சேத்து ஜெயிக்கவைக்கலாம்.!


இரண்டாவதாக வந்தாலும், காதல் போதையில், அடைக்கலத்தின் வசனம் இது!!

Wednesday, November 2, 2011

தொலையாமல் பேசுவோம்








இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்நாளின் ஒரு கணிசமான பகுதி தொலைபேசியில் போயிடுது! நமக்கு வரும் அழைப்புகளானாலும் சரி, நாம் அழைக்கும் ஆட்களானாலும் சரி! பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருக்கோம். இது எந்த அளவுக்கு நம்முடைய நேரத்தை சாப்பிடுதுன்னு யாருக்கும் தெரிவதில்லை. தெரிஞ்சாலும் நாம் அலட்டிக்கிறதில்லை

நாம் இன்னிக்கு சக மனிதர்களிடம் நேரா நாலு வார்த்தை பேசுவதைவிட, செல்பெசியில் அடுத்த முனையில் இருப்பவர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே பேசுறோம். அது நம்முடன் இருக்கும் குடும்ப நபர்கள், நண்பர்களை எரிச்சல் படுத்தும்கிறதுதான் உண்மை! ஆனா அதையும் மீறி தொலைபேசுவதையே தொழிலாக வச்சிக்கிட்டிருந்தா ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வீட்டில் இருப்பவர்கள் கிச்சனிலிருந்து, ஹாலில் இருக்கும் நமக்கு போன் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மொக்கச்சாமி ஒரு டாக்டரைப்பாக்க அவர் கிளினிக்குக்கு போனாரு!
டாக்டர்! எனக்கு….  னு ஆரம்பிக்கும்போது , 
டாக்டருக்கு ஒரு போன் வந்து பேச ஆரம்பிக்கிறாரு! மொக்கச்சாமியும் காத்திருந்தாரு! டாக்டர் போனை வைக்கவும்…
      டாக்டர்! எனக்கு தினமும்  கிறார்..!
மறுபடியும் டாக்டருக்குப் போன்… அவர் பேசுறாரு! முடிக்கிறாரு! இப்பவும் மொக்கச்சாமி,
      டாக்டர்! எனக்கு தினமும் சாயந்திரமானா
மீண்டும் டாக்டருக்கு போன்…அவரும் மொக்கச்சாமியைப்பாத்துக்கிட்டே போன் பேசி முடிக்க… மொக்கச்சாமி எழுந்திருக்கிறாரு!
      உடனே டாக்டர்..!
      என்ன மிஸ்டர் மொக்கச்சாமி! வந்தீங்க ஒண்ணுமே சொல்லாம போறீங்கன்னாரு!
      மொக்கச்சாமி சொன்னாரு!
      இல்ல டாக்டர்! வெளில போய் உங்களுக்கு போன் பண்றேன்! அப்பதான் நான் சொல்லவந்ததை முழுசா சொல்லமுடியும்போலன்னாரு!

       நம்மிடையேயும், டாக்டர் மாதிரி ஆட்கள் நிறையபேர் இருக்கோம் ! எல்லாரும் நமக்கு முன்னால் இருக்கும் ஆட்களை விட, போனில் பேசுபவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்.

      நாலு நண்பர்கள் ஒரு இடத்தில் சந்திச்சுக்கிட்டா, அவர்களுக்குள் பேசிக்கிறதை விட, அவர்களுக்கு வரும் செல் அழைப்புகளில் பேசுறதுதான் அதிகம்! அதுக்கு எதுக்கு சந்திக்கணும்?

      செல்போன் நாம கண்டுபிடிச்ச கருவி! அது நம் வசதிக்குத்தானே தவிர, வருத்தத்துக்காக இல்லை! அதை மனசில் வச்சுக்கிட்டு அந்தப் பொருளை நாம் பயன்படுத்தத்தொடங்கணும்!

 எல்லா இடங்களிலும் அலறுகிற மாதிரி ஒரு பாட்டை அழைப்புமணியா வச்சுக்கக்கூடாது. குறிப்பா மருத்துவமனைக்குள்ள அமைதியா இருக்கும்போது திடீர்னு ‘நாக்க முக்கா..நாக்க முக்கா’  னா கடுப்பாகும். சத்தம் வராத சைலண்ட் மோடில், வைப்ரேஷன் எனப்படும் உதறும் நிலையில் வச்சிருந்தா , அழைப்பு வருவது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். யாரையும் தொந்தரவு பண்ணாது.

யாராவது உங்களிடம் நேராகப் பேசிக்கிட்டிருக்கும்போது, உங்கள் போனை நோண்டிக்கொண்டிருக்கக்கூடாது. அது அவர்களுக்கு உங்களைப்பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இவர் நம்ப பேச்சை கவனிக்கலை என்று எண்ணவைக்கும். நேராக ஒருவரிடம் பேசும்போது, போனை பையில் வைத்துக்கொள்வதுதான் நலம்.

காலர் ட்யூன் எனப்படும், உங்களை அழைத்தால் , அழைப்பவருக்குக் கேட்கும் பாடல் வைப்பது ஒரு சிறந்த பண்பாகப் பார்க்கப்படுறதில்லை! நீங்க உங்களுக்குப்பிடித்த பாடலை வைக்கிறீங்க!  ஆனால் கேட்பது எதிராளி! இது , தனக்குப்பிடித்த உணவை, அடுத்தவர் வாயில் திணிப்பதற்குச்சமம்தான். அப்படியே அது நல்ல பாட்டா இருந்தாலும், அதை யாராலும் முழுசா கேட்கமுடியாது! டயலர் ட்யூன்ங்கிறது செல்பேசி நிறுவனங்கள் நம்மகிட்ட  காசு பிடுங்க ஏற்படுத்திய யுக்தி!

ஒருவரை நீங்க அழைக்கிறீங்க! அவர்கள் உங்கள் அழைப்பை எடுக்காம கட் செய்யுறாங்க! அவுங்களுக்கு நம்ப மேல் ஏதாவது கோபமா இருக்குமோ? வேற எதாவது பிரச்னையோ? என்று மனசைப்போட்டு உழட்டிக்கிட்டு மீண்டும் மீண்டும் அவர்களுக்கு போன் செஞ்சுக்கிட்டே இருந்தா, அதுதான் மிகப்பெரிய எரிச்சலூட்டும் விஷயம். ஒருவர் உங்கள் அழைப்பை நிராகரிச்சா, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு அவருக்கு அழைக்காமல் இருக்கலாம். அல்லது நீங்கள் ப்ரீயா இருக்கும்போது அழைக்கவும் என்று குறுஞ்செய்தி அனுப்பலாம். அதுதான் நல்ல பழக்கம்!

மிகப்பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைச்சா, அவர்களின் எண்களை வைத்துக்கொண்டிருக்கும்போது கவனம் அதிகம் வேணும். நாம் சும்மா இருக்கும்போது அவரை அழைச்சு எரிச்சலூட்டக்கூடாது. அப்புறம்..எப்படி இருக்கீங்க? சும்மாதான் கூப்பிட்டேன் என்று சொதப்பக்கூடாது. ஏதாவது தகவல் இருந்தால் மட்டுமே கூப்பிடணும். அவர் வேலையில் இருக்கார் என்று தெரிஞ்சால் அதற்கேற்றார்போல் பேச்சை கட் செய்யனும். அதுதான் உண்மையிலேயே அவர்களது நட்பை பலப்படுத்தும்.

முக்கியமானவர்களுக்கு அழைப்பதற்குமுன்னால், அவர்களை அழைக்கலாமா னு ஒரு குறுஞ்செய்து அனுப்பிட்டு காத்திருந்தால், உங்கள் இந்த நல்ல செயலுக்காகவே அவரே உடனடியா உஙகளைக்கூப்பிட்டு பேசிடுவார்!

நாம் முக்கிய வேலையில் இருக்கும்போதும், வாகனம் ஓட்டிக்கிட்டிருக்கும்போதும் யார் அழைத்தாலும் எடுக்காதீங்க! பிறகு அழைத்த நபர்களுக்கு கூப்பிட்டு பேசுங்க! அதேபோல், மிஸ்டு கால் விடுவது ஒரு மிகப்பெரிய தவறு!

ஒரு செல்போன் பேச்சு வாக்குவாதமா மாறும்போது, நீங்க இருக்கும் இடத்தை கவனிச்சுப்பாத்துக்குங்க! ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பேசிக்கிட்டு குடும்ப விவகாரங்களை சத்தமா பேசுறது, கேக்குறவங்களுக்கு சுவாரஸ்யமான கிசுகிசு அல்லது உங்களைப்பற்றின அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் முயற்சியா மாறிடும்.

அதேமாதிரி, ‘அந்த பச்சை பீரோவில் மேல்தட்டுல நகையெல்லாம் வச்சிருக்கல்ல,! அங்கதான் இந்த ப்ரீமியம் ஸ்லிப்பும் வச்சிருக்கேன்.!

நாளைக்கு மத்தியானம் குடும்பத்தோட ஊருக்குப்போறேன் மாப்ள! வரதுக்கு நாலு நாளாகும்! வந்தவுடனே பேசலாம்’னு பொது இடங்கள்ல பேசறது, திருடுறவங்களுக்கு செலவில்லாம நீங்க கொடுக்குற க்ளூ!

இத்தனைக்கும் மேல, செல்பேசியில் பதிஞ்சு வச்சிருக்கும் எல்லா எண்களையும் ஒரு நோட்டில் எழுதிவைக்கலாம். கம்ப்யூட்டரில் போனை இணைச்சு எண்களை ஏத்தி வச்சுக்கலாம். இது இரண்டில் எது செய்யாமல் விட்டாலும், செல்பேசி தொலைஞ்சு போனாலோ, பழுதா போனாலோ மொத்தமா எல்லா எண்களையும் இழந்துட்டு அம்போன்னு நிக்கவேண்டியதுதான். அந்தத்தருணம் பெரிய மன உளைச்சலை உண்டுபண்ணும்.

பொது இடங்களில் கேமரா செல்லில் படங்கள் எடுப்பதை தவிர்க்கணும். இதனால் ஏகப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. அதேபோல், நம் வீட்டுப்பெண்களின் படங்களை செல்பேசியில் வைத்திருப்பது ஆபத்தானது. நம்ம செல்தானே என்று நினைப்போம். ப்ளூடூத் மூலமாகவும், பழுது பார்க்கும் இடத்திலும் அந்தப்படங்கள் பரவி, தவறு நிகழ்வதற்கான சாத்தியங்கள் ஏராளம்.

ஒரு நாளில், அதிக நேரத்தை செல்பேசுவதில் செலவழிப்பதை தவிர்க்கணும். மாசத்துக்கு ஒருமுறை ஒருநாள் முழுக்க, செல்பேசி பயன்படுத்தாம இருக்கலாம்.

ஒருவரிடம் பேசுறதுக்கு முன்னால், என்னென்ன பேசப்ப்போறோம்னு குறிப்பெடுத்துவச்சுக்கலாம். அதுமட்டும் பேசிட்டு முடிச்சுக்கலாம். இது உங்கள் நேரத்தையும், அடுத்தவுங்க நேரத்தையும் சேமிக்கும். குறிப்பிட்ட இடங்களில் போன் வந்தாலும் எடுக்காமல் இருப்பதுதான் நல்லது. கோவில்கள், மேடைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் ,கல்லூரிகள் இங்கெல்லாம் செல்போனை தேவையில்லாமல் பயன்படுத்தவே கூடாது.

நண்பர்களிடம் வெட்டிப்பேச்சு பேச , உங்கள் இருவருக்கும் உகந்த நேரத்தை தேர்ந்தெடுத்து பேசுறதுதான் அந்த வெட்டிப்பேச்சைக்கூட சுவையா வச்சிருக்கும். 

செல்பேசிங்கிற ஒரு அற்புதமான கருவியை நல்லபடியா பயன்படுத்தினா, வாழ்நாள் முழுக்க நட்பு , உறவுகளை தொலைக்காமல் பேசலாம்! அதுக்குள்ளயே தொலையாமலும் பேசலாம்.!


பி.கு : எனது ‘நீங்கதான் சாவி’ புத்தகத்திலிருந்து....

நன்றி : நாகரத்னா பதிப்பகம்.   


இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...