தீவிரவாத(த்துக்கு) மருத்துவம் - 4
வகை
நடப்பு
தீவிரவாதத்தின் ஆணிவேர் தனிமனிதன் தான் !
உலகம் , நாடு, அரசு எல்லாவற்றின் நடவடிக்கையிலும் ஒரு தனி மனிதனின் ஆசையும்,வக்கிரமும், ஆதிக்கவெறியும், தன்முனைப்பும், சினமும் கட்டாயம் வெளிப்பட்டுவிடுகிறது.
எங்கோ ஒரு மனிதனுக்கு நேர்ந்த அவமானமோ, அநீதியோ அவனைப் பொங்கவைத்து , அவனது தனிக்கோபம் சமூகத்தின்மீது காட்டப்பட்டு ஒரு பாவமும் அறியாத மனிதர்களையும் பலிவாங்கிவிடுகிறது.
இது இப்போது மட்டும் நடக்கும் செயல் அல்ல.! தன் கணவன் அநியாயமாக (அவன் மிகவும் யோக்கியனாக இல்லாதபோதும்) கொல்லப்பட்டதை எதிர்த்து ஒரு தனி ஆளாக ஒரு நகரையே எரித்த முதல் தீவிரவாதி, கண்ணகிதான் ! அவளைத்தான் நாம் பத்தினித்தெய்வம் என்று கொண்டாடுகிறோம்.
ஆனால் என்ன ஒரு ஆச்சர்யமெனில் , காப்பியத்தில் மன்னனையே தட்டிக்கேட்ட பெண் இருந்த இந்த தேசத்தில்தான் என்னைச்சுற்றி என்ன நடந்தாலும் பரவாயில்லை. என் வேலையைப்பார்த்துக்கொண்டு போகிறேன் என்று கொஞ்சம் கூட சொரணை இல்லாத புண்ணியவான்களின் எண்ணிக்கை பன்மடங்காக இருக்கிறது.
தன் வீட்டுக்குப்பைகளை எந்தப்பொறுப்பும் இல்லாமல் சாலையோரத்தில் வீசிவிட்டுப்போகும் மனிதர்களின் செயலில் இருப்பது எந்தவித மிதவாதம்?
என்பெயரை ஏன் கருத்துக்கணிப்பில் குறைத்து மதிப்பிட்டீர்கள் என்று வெறிகொண்டு, தன் கூட்டத்தை ஏவிவிட்டு சொந்தக்காரன் நிறுவனத்திலேயே மூன்று பேரை பலியிட்டது எந்தவித அஹிம்ஸாவாதம்? ஒரு தனிமனிதனின் அப்பட்டமான தன்முனைப்பு வெறி!
கையூட்டு கொடுத்தால் போதும் காரியம் சாதித்துவிடலாம் என்ற நப்பாசையில் சட்டப்பூர்வமாக எந்த ஒரு செயலையும் செய்யாமல் திமிராகத்திரியும் நமக்குள் எத்தனைபேர் மிதவாதிகள்?
லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் இந்தக்காரியத்தைச்செய்வேன் என்று , - அரசுப்பணியில் இருக்கும் மமதையில்- வெறிபிடித்து
அலையும் அதிகாரியை எந்த வித காந்தியவாதி என்பது?
தான் வேகமாகப்போனால் போதும் , எனக்கு மட்டும் போக்குவரத்து விதிகள் கிடையாது என்று விருட்டென்று வண்டியோட்டி, தான் இறந்து அல்லது தன்னால் பயந்தவர்களை இறக்கவைக்கும் தனிமனிதர்களிடம் இருப்பது பயங்கரவாதம்தானே?
பின்லேடன் என்ற தனிமனிதனின் ஆதிக்க மற்றும் மத வெறிதான் இன்று அல்-கொய்தாவாக வளர்ந்து நிற்கிறது.
புஷ் என்ற தனிமனிதனின் தன்னைக்காப்பாற்றிக்கொள்ளும் பதவிவெறிதான் ஈராக் போராக வந்து நிற்கிறது.
கருணாநிதி என்ற தனிமனிதனின் சொத்து சேர்க்கும் வெறிதான் பல்வேறு அரசியல் கொலைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.
ஜெயலலிதா என்ற தனிமனிதரின் தன்முனைப்புதான் 3 கல்லூரி மாணவிகளின் மரணமாக மாறி இருக்கிறது. (பல்வேறு ஆசிட் வீச்சுகள், செருப்படிகளும் அடக்கம்)
மோடி என்ற தனிமனிதனின் மத மற்றும் பதவி வெறிதான் குஜராத்தை கலவர பூமியாக்கி இருக்கிறது.
ராஜபக்ஷே என்ற தனிமனிதனின் அரசியல் காழ்ப்புணர்ச்சி மிகுந்த இனவெறிதான் ஈழத்தில் தமிழர்களை இழக்கவைக்கிறது.
எல்லா அழிவுகளுக்குள்ளும் காரணத்தை நோண்டிக்கொண்டே சென்றால் தனிமனிதன் தான் அப்பட்டமாக வந்து நிற்பான்.
பத்துபேராகத்திட்டமிட்டாலும், மனிதவெடிகுண்டாகச் செயல்படும் எல்லோருமே தனிமனிதர்கள் தானே?
திரைப்படங்களில் வரும் கதாநாயகர்கள் தனிமனிதனாக எல்லா கெட்டவர்களையும் போட்டுத்தள்ளுவதை நாம் மிகவும் விரும்புகிறோம். அதே அளவு தனிமனிதனாக நாம் எந்த அளவுக்கு நல்லவர்களாக, தெளிவானவர்களாக, நியாயத்தை நிலைநாட்டுபவர்களாக இருக்கிறோம்.?
ஒருபக்கம் தனிமனிதனின் வெறியால் பல்வேறு தவறுகள் நடக்கின்றன !
இன்னொருபுறம் தனிமனிதனின் எதையும் கண்டுகொள்ளாத மெத்தனத்தால் பலப்பல தவறுகள் நடக்கின்றன..!
இதில் மிகப்பெரிய ஆபத்து என்னவெனில், எதையும் கண்டுகொள்ளாத மெத்தனவாதிகளால்தான் , வெறிபிடித்த தனிமனிதர்கள் அழிவுகளை ஏற்படுத்துகிறார்கள்!
ஆக...எல்லாத் தீவிரவாதத்துக்கும் அடிப்படை - தனிமனிதன் தான்! அவனது எந்த குணம் இவ்வளவுக்கும் காரணம்?
(தொடரும்)





4 மறுமொழிகள்:
ம் கரிக்டாதான் தெரியுது!
வாங்க சிவா..!
ரொம்ப நன்றிப்பா!
//இன்னொருபுறம் தனிமனிதனின் எதையும் கண்டுகொள்ளாத மெத்தனத்தால் பலப்பல தவறுகள் நடக்கின்றன..!
இதில் மிகப்பெரிய ஆபத்து என்னவெனில், எதையும் கண்டுகொள்ளாத மெத்தனவாதிகளால்தான் , வெறிபிடித்த தனிமனிதர்கள் அழிவுகளை ஏற்படுத்துகிறார்கள்!//
உண்மை உண்மை - என்ன செய்வது - மெத்தனம் பொது மக்களிடம் இருக்கத்தான் செய்யும் - மீற இயலாதல்லவா - மெத்தனத்தை அழிக்க - பொதுமக்களை அழைக்க ஒரூவன் வர வேண்டும்
மெத்தனம் அரசிடம் - அதிகார வர்க்கத்தினரிடம் இருக்கக் கூடாது.
வாங்க சீனா சார்!
ஆமா..நீங்க சொல்றதுதான் சரி!
Post a Comment